புதன், 21 செப்டம்பர், 2016

மார்க்கம் - சொல்லமைப்பு

நீங்கள்  திருச்செந்தூருக்குச் செல்வதற்கு ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்  என்று முயல்கிறீர்கள். நீங்கள் கண்டுபிடிக்கும் எந்த வழியும் திருச்செந்தூரில் முடிவதாக இருக்கவேண்டும். அல்லது அங்கிருந்து வெளியேற நினைக்கிறீர்கள்.  நீங்கள் கண்டுபிடிப்பது அங்கிருந்து தொடங்குவதாகவே இருக்கவேண்டும், இங்ஙனம் அங்கு முடிகின்ற அல்லது தொடங்குகின்ற நிலையில் இல்லாத எதுவும் திருச்செந்தூருக்கு மார்க்கமாக ‍ அதாவது வழியாக இருக்க இயலாது.

இதைச் சுருக்கிச் சொன்னால், திருச்செந்தூரை மருவாத எதுவும் திருச்செந்தூருக்கு மார்க்கம் ஆகாது.  நீங்கள் செல்வது வான மார்க்கமாக இருந்தாலும், கடல் மார்க்கமாக இருந்தாலும் தரை மார்க்கமாக இருந்தாலும் அந்நகரை மருவாத, மருவிச்செல்லாத எதுவும் அங்கு செல்ல‌
மார்க்கம் ஆகாது.

ஆகவே மருவுதல்  கருத்திலிருந்து  மார்க்கம் என்ற சொல் பிறந்தது.  கொஞ்சம் சிந்தித்தாலே  தெரிவது  இதுவாகும்.

இந்தத் திரிபுகளை பாருங்கள்:

கரு > கார்      (கார் மேகம் ,  காரத் திகை . கார்  முகில் )
வரு >  வார்.    ( வாரான்,  வாருமே , வாரீர் ,   வாரம்  மீண்டும் மீண்டும் வரும் கிழமைகள் )
இரு >  ஈர்   ( ஈராயிரம் )
இழு > இரு > ஈர் >  ஈரத்தல்  (  ஈரல் )   (இருதயம் என்பதும்  ஈரத்தல் அடிப்படையானது ) 

இதன்படியே  மரு  மார் என்று திரியும்.
 மார் + கு+  அம்   =  மார்க்கம் .

செல்வதற்கு  அல்லது  நீங்குவதற்கு  மருவுதலைச்  செய்வது  மார்க்கம் ( அல்லது வழி )

வழிந்து  செல்வது வழி .  இந்தச் சொல்  நீரினோடு  தொடர்புள்ள சொல்.
மார்க்கம் என்பது  தழுவுதல்  தொடர்புடையது..

சொல்லமைப்பு

கருத்துகள் இல்லை: