செவ்வாய், 27 மார்ச், 2018

நஞ்சை புஞ்சை தஞ்சை இன்னும் சில



சில திரிபுகளை இன்று மறுபார்வை செய்வோம்

செய் என்ற சொல் வினையாகவரும்போது  செய்தலைக் குறிக்கும். அது பெயர்ச்சொல்லாக வரும்போது நிலம் என்றும் பொருள்படும்.
எடுத்துக்காட்டுகள்.

நன்செய் :  இது திரிந்து நஞ்சை என்றாகும்.

புன்செய் :  இது திரிந்து புஞ்செய் என்றாகும்.

இத்தகைய திரிபுகளைப் பெருவாரியாகக் காணமுடிவதில்லை.  மொழியில் சிலவே கிட்டுகின்றன. நீங்களும் தேடிப் பாருங்கள்.

சோழன் கரிகால் வளவன் காவிரியினைச்  செம்மைப் படுத்தி மக்களுக்கு நீர் கிடைக்கும்படியான வளத்தை உண்டாக்கிய பின் சோழ நாட்டில் பல பகுதிகள் செழுமை பெற்றன.  வரண்ட பூமி தண்மை பெற்று  விவசாய மென்னும் விழுமிய வாழ்வுக்கான சா(ய்)த்தியம் உண்டாயிற்று.1

தஞ்சையென்னும் நகரும் அதன் பெயரைப் பெற்றதென்று தெரிகிறது.  ஆனால் அப்போதே பெயர் அமைந்ததா அல்லது பின்பா என்பது ஆய்வுக்குரியது.

தஞ்சை என்னும் பெயர்:
தண்+ செய் =  தஞ்சை.

தண்மையான நிலங்களை உடைய இடம்.

0னகர 0ணகரங்கள்  ஓரினத்தவை.

விஞ்சுதல் என்பது மிஞ்சுதல் என்றுமாகும்.   குவி என்பது குமி என்றும் அமையும்.    அம்மை என்பது அவ்வை என்றுமாகும்.  இவையெல்லாம் மகர வகர எழுத்துப் பரிமாற்றங்கள்.  இத்தகு மாற்றத்தினைப் போலி என்றும் கூறுப.

இதன்படியே வல்>வன்> வன்சி>  வஞ்சி எனற்பாலது மஞ்சி என்று வந்து, வலிமை என்றும் பொருள்தரும்.
வஞ்சி என்ற சொல்லும் போருக்குச் சென்று வலிமை காட்டுதல் குறிக்கும்.  சற்றுக் கடின ஒலிகளை யுடைய பாவாகிய வஞ்சிப்பாவையும் குறிக்கும். அடிப்படைப் பொருள் வலிமை என்பது (வல்>வன்).  பெண்ணைக் குறிக்கும் வஞ்சி என்பது வலிமையுடைய பெண் என்பதையே குறிக்கும் எனினும் அப்பொருள் நாளடைவில் மறைந்து பொதுப்பொருளில் சொல் வழங்கிற்று என்று அறிக.
இது இங்கு காட்டப்பெறுவதற்குக் காரணம்,  0ன்சி என்ற எழுத்துச்சேர்க்கை ஞ்சி எனவாகும் என்பதே.

செய்கை > சைகை.  (கைச்செய்கை).
செய்தன்னியம் > சைதன்னியம்.

https://sivamaalaa.blogspot.com/ 


அறிந்து மகிழ்க.

பிழைத்திருத்தம் பின்பு. 

---------------------------------


அடிக்குறிப்பு: 

1. விவசாயம்(acronym) இது ஒரு முற்கூட்டுச் சொல்:  வி = விழுமிய; வ = வாழ்வு;
சா = சார்ந்த;  அம்: இது சொல்லாக்க விகுதி.  வ  என்பது வாழ்வு ,   வா என்பதை வ  என்று  குறுக்கிய  உத்தி;  வழுத்து, வாழ்த்து என்று நடைபெறும் சொற்களில்  வாழ் என்பது வழு என்றும் குறுகுமென்பது அறிக. தமிழ்மொழியில் இத்தகு வசதி கிட்டுவதால், வ: என்பதை வாழ்வு குறிக்க நிறுத்தியது பொருத்தமான புனைவுதான்.

இன்னோர் எடுத்துக்காட்டு: கபோதி.  கண்போன திக்கற்றவன் என்பது சொல்லமைப்பின்போது நின்ற பொருள்.  இப்போது போதி - போதமுடையான், க = கழிந்த, கடைகெட்ட என்று இணைக்கும்படியான பொருள் மாற்றம் உண்டாகிவிட்டது.

விவாகம் என்பது மற்றுமொன்று.  விழுமிய; வா = வாழ்வுக்கு; ஆ = ஆகும்;  (  நெறி )  அம் விகுதி.

முற்கூட்டுச்  சொல் :  முதலெழுத்துக்களைக் கூட்டி  அமைக்கப்பட்ட சொல் .  

இப்படியெல்லாம் சொல்லமைத்தவர்களைப் பாராட்டுங்கள். 

28.3.2018
 

கருத்துகள் இல்லை: