செவ்வாய், 5 ஏப்ரல், 2016

சி.போ. 8 : தவத்திற்கு ஓர் ஆசிரியன்

தம் முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்த....

------சிவ ஞான  போதம்  8. 

இது சிவஞான போதத்தின் எட்டாம் நூற்பாவினுடைய ஒரு வரியாகும்.

பற்றுடையோன் ஒருவன் சிவத்தை அடைந்து இன்புற முனைப்புடன் முயல்கின்றான். ஒரு சிறுவன் பெரிய மரத்தைச் சாய்க்க வெறுங்கைகளால் முயலுதல் போன்றதே இது. இமையத்தின் உச்சியைத் தொட ஓர் உதவியுமின்றி மலையேறுதல் போன்றதே இது.
எங்ஙனம் சாய்த்திட முடியும்?  எங்ஙனம் உச்சி தொடுதல் கூடும்?

அறியாதவனுக்கு ஒரு குரு வேண்டும். அவனுக்கு  வழிகாட்டுவதற்குத்தான்!  அந்தக் குரு இன்னொரு  அறிவனாக இருக்கலாம்.  இல்லையெனின். . அவன் எவ்வுதவியும் இல்லாவிடினும் தவத்தினில் ஈடுபடுதல் வேண்டும். உடனே ஈடுபட அத்துணை எளிதானதா அது?

அவன் தவமே அவனுக்கு முதல் குருவாகி அவனுக்கு உணர்த்துதல்
அரிதான ஒன்றே எனினும் அது இயலாத ஒன்றன்று.

தவம் என்பதுதான் யாது? உற்ற நோய் பொறுத்துக்கொள்ளுதல் ஒன்று.  எவ்வுயிர்க்கும் தீங்கு செய்யாமை மற்றொன்று. இவைதாம்
தவத்தின் இரு படிகள் ஆம். இவை இரண்டும்  ஒருங்கு இயங்கும் படிகள்.  ஒரு படியைக் கடந்தால் தவம் பயில்வோனின் கடப்பாடு முடிந்துவிடுவதில்லை. அப் படியும் தொடர  அடுத்த படியும் வந்து
சேர்ந்துகொள்கிறது. இரண்டும் இயைந்ததே தவத்தினுரு என்பார் தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார்.

இரண்டிலும்வெற்றி கண்டோன் தவத்தில் ஈடுபட்டு சிவத்தினில் மனத்தை நிலை நிறுத்த,அஃது அவனுக்கு சிவத்தைப் போதிக்கும் ஆசிரியனாகி விடுகிறது.

யாகத்தில் விலங்குகள் பலியிடப்படுதல் உண்டெனில்  அது தவத்தினோடு ஒருபடியில் நிற்றலுக்குத் தகவு உடையதன்று என்பது நாம் அறிந்துகொள்ளவேண்டும். தவமென்பது இறையுடன் தொடர்பு செயல் என்பது கண்டுகொள்க.

அத்தவமே  நன்கு இயற்றப்படின் அவனுக்கு உணர்த்தவல்லது அதுவாம் .

கருத்துகள் இல்லை: