ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

சிவஞான போதத்தின் 8ம் சூத்திரm

இப்போது சிவஞான போதத்தின் எட்டாம் சூத்திரத்தையும்   சூத்திரத்தின் பொருளையும்  நோக்குவோம். பின்னர்  சற்று விரிவாக உணர்ந்து கொள்வோம்.

நூற்பா இது:

ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்து எனத்
தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்த விட்டு
அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே.

ஐம்புல வேடரின்  -   மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும்  ஐந்து புலன்களாகிய வேட்டையாடுநரின் ;

அயர்ந்தனை வளர்ந்து என    -    ஒருங்கு இணைந்த  தொடர் இயக்கத்தினால்   சொந்த வடிவத்தையும் அதன்கண் உள்ள ஆன்மாவினையும் உணராமல் மயங்கி,      என்றபடியாக ;

தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்த   -   தமது முன் நிற்கும் ஆசிரியனாய்த்  தவநிலையில் நின்று தனக்குச்  சிறப்பு  அறிவு புகட்டவே;


 விட்டு  -  அவ் அறியாமையைக் களைந்து;

அன்னியம் இன்மையின்  ---சிவம் தன்னின் வேறானது அன்றென்னும்  ஞானம்  அடைந்ததனால் ;

அரன்கழல் செலுமே.   -     சிவத்துடன் ஒன்றுபடுவதாகும். ( சிவத்தின் திருவடிகளிற்  புகும் இறுதியுறுதி அடையும்  )

சிவத்துட் செல்லும் என்பது கவி நயத்துடன்  அரன்கழல் செலுமே எனப்பட்டது.

அன்னியம் என்பது முன் இவ் வலைப்பூவில் விளக்கப்பட்டுள்ளது.  அங்குக் காண்க,  மற்றும்  https://bishyamala.wordpress.com/2016/04/04/376/  என்ற வலைப்பூவிலும்  காணலாம்.


கருத்துகள் இல்லை: