வியாழன், 3 ஜூலை, 2014

தேகம்

தேகம்  அழிதலை உடையது என்பதில் இந்திய அறிவாளிகள் மிகுந்த கவனம் செலுத்தி வந்துள்ளனர்.தமிழ், சங்கதம் , பிற இந்திய மொழிகள் என எங்கும் இக்கருத்து பரவிக் கிடக்கிறது. நரை  திரை   பிணி,மூப்பு  என்பது யாவரும் அறிந்த கருத்தாகும். தேகமானது தேய்தலைத்  தன்  உடைமையாய்க் கொண்டுள்ளது.

இதனால்  தேய் என்ற சொல்லினின்று ஒரு சொல் படைக்கப்பெற்றது.(ஷேக்ஸ்பியரின்  கவித் துணுக்கு ஒன்று  கீழே தரப்பட்டுள்ளது . அதிலும் இக்கருத்தைக் காணலாம்.  இஃது ஓர் உலகக் கருத்தென்பதில் யாரும் வேறுபடார் .)

தேய் >  தேயம் .

தேய் என்பதினின்று அமைந்த தேயம் என்ற உடம்பு குறிக்கும் சொல் வேறு.
தேஎம் >  தேயம் > தேசம் என்று திரிந்த நாடு குறிக்கும் சொல் வேறு. இவை வேறு வேறு வீட்டுப் பிள்ளைகள்.   குழம்பாமல் இருங்கள்..

தேயம் (உடம்பு)  என்பது பின் தேகம் என்று திரிந்தது. இது பிற மொழிகளிலும் சென்று வழங்கியது.

தேகம் என்பது     அழிவுக் கருத்தினடிப்படையில், ஞானத்தில்1 எழுந்த சொல் ஆகையால், தொடக்கத்தில் தமிழ் இலக்கியங்களில் இடம் பிடித்துக்கொள்ள முடியாமல் இருந்தது என்பது தெளிவு.  கெடுகுறிச் சொல் (அபசகுனம் ) என்ற நினைப்பு. சங்க இலக்கியங்களில் உளதா? இல்லையெனில் அல்லது அருகியே வழங்கிற்று எனில், இக்கருத்து சரியானதே. பேச்சு வழக்கில் இருந்தது.

ஆனால் தேய் என்ற அடிச்சொல் இல்லாத மொழிகளில் இக்கருத்துத் தடை, மனத்தயக்கம் இல்லை. இப்போது தமிழிலும் இம் மனத்தயக்கம் இலது

இச்சொல் இருக்கு வேதத்திலும் வந்துள்ளது என்றாலும் அங்கு  இணைப்புச் சொல்லுடன் உடற்பூச்சு, கரை, சுற்றுச்சுவர் முதலிய பொருளிலும் விளங்குகின்றது. தேகதி: f. mound , bank , rampart , surrounding wall RV.   ஏனை இணைப்புகளும் உள்ளன. இங்கு சுட்டிக்காட்ட விரும்புவது, உடற்பூச்சு முதலியவை, உடலில் தேய்க்கப்படுபவை. இஃது தமிழ் அடிச்சொல்லுடன் ஒத்துப்போவதாகும்..

மரணத்தைப் பற்றி மகாகவி ஷேக்ஸ்பியர்:

......................
And All our yesterdays have lighted fools:
The way to dusty death;  Out, out brief candle;
Life's but a walking shadow; a poor player
That struts and frets his hour upon the stage;
And then is heard no more; it is a tale
Told by an idiot, full of sound and fury,
Signifying nothing.

WILLIAM SHAKESPEARE (Macbeth V.v.)

இராமலிங்க  அடிகளாரின்  பாடலில் "

"பெற்ற தாய்தனை  மக  மறந்தாலும் 
பிள்ளையைப் பெறும்  தாய்  மறந்தாலும் 
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் ...."

என்று  வரும்  வரிகளையும்  நோக்குக.    தேகம்  உயிரை இழப்பது   ஈ டற்ற  ஒரு  பெரு   
 நிகழ்வே  ஆகும். இங்ஙனம்   தேய்ந்து  அழியும்  உடல்  தேகம்  (தேயம்)  ஆயிற்று.

பொய்  ஆகிய உடலை  எப்படி   மெய்  என்பது?  காற்றடைந்த  பை  அன்றோ?
அதனால்  அதைக்   குறிக்க த்   தேகம்  என்ற சொல்   தேவை   ஆயிற்று.





-----------------------------------------------------------------------------------------------------------

1  ஞானமாவது, ஞானும் கடவுளும் வேறன்று  (வேறல்லோம் ) என்னும் கருத்து, ஞான் ‍> ஞானம்.
ஞான் = நான்,  ஞயம் > நயம் போல. ஞான் மலையாள வழக்குமாம்.

ய  -  க  திரிபு:  நிமித்தியம் >  நிமித்திகம்.

கருத்துகள் இல்லை: