ஞாயிறு, 27 ஜூலை, 2014

அரியணை வேண்டாத அரிசில் கிழார்

அரிசில் கிழாருக்கு அரசன் இரும்பொறை அளிக்கவந்த பரிசிலை அவர் மறுத்து, அவனுக்கு அமைச்சராய் உதவ மட்டும் ஒப்புக்கொண்டார்.  அதுபற்றிய செய்தியைக் கவிதையாகத் தருகிறேன்.


அழகிய பத்துப் பாடல்
அரிசிலார் முடித்தார் பாடி;
இழுமெனும் இனிய ஓசை
எழில்நடை விருந்தால் வேந்தன்
முழுவதும் கவரப் பெற்று
முன்பரி  சோடு வந்தான்;
வழுவறு கோயில் சார்ந்த‌
வள்மெலாம் கொள்க என்றான்.

"காணமே ஒன்பது நூறி
னாயிரம் அரசு கட்டில்!"
யானுமை இரந்து கேட்பேன்,
யாண்டும் நீர்ஆள்வீர்!  கொள்வேன்
கூனிலா அமைச்சே மன்னா
குறையொன்றும் இல்லை என்ன,
வான்புகழ் இரும்பொறைக்கோ
வண்டமிழ் அறிஞர் வாய்த்தார்.

குறிப்புகள் :

இங்கு சொல்லப்படுவது  பதிற்றுப் பத்தில் உள்ள அரிசிலாரின் பத்துப் பாடல்கள்.
வழுவறு =  ஒரு சேதமும் அற்ற.
கோயில் -  அரண்மனை . (அது  சார்ந்த   இடங்கள் நிலங்கள்  மற்றும் அரியணை..)
வளம் எலாம் -  வளமும் எல்லாமும் 
காணமே ஒன்பது நூறி னாயிரம் = ஒன்பது இலக்கம் காணங்கள் (பொற்காசுகள்) 
அரசு கட்டில் - சிம்மாசனம்.
 இரந்து கேட்பேன், - தாழ்ந்து  பணிந்து கேட்டுக்கொள்வேன்.
கூனிலா  -  குறைவற்ற 
 என்ன =  என்று  சொல்ல. 

இரும்பொறையின் நோக்கில் அரிசிலார் பாடியவை விலைமதிப்பற்ற தமிழ்.
ஈடாக எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னான். ஆனால் இறுதியில் அரிசிலார் மூலம் தமிழையே அமைச்சாகப்  பெற்றான். இதில் பெரிய பரிசு இரும்பொறைக்குத்தான்.அன்றாட தமிழ் விருந்து  அரசியல் அறிவுரையுடன் அவன் பெற்றான். 


கருத்துகள் இல்லை: