ஞாயிறு, 13 ஜூலை, 2014

சகுனம்.

மனிதனுக்கு மரணம் என்று ஒன்றில்லா திருந்திருப்பின்,  பிணம் தூக்குவோர், புதைப்போர், எரிப்போர் எல்லாம் தோன்றியிருக்க மாட்டார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அது மட்டுமா? மதங்கள், சாத்திரங்கள், சோதிடம், சகுனம் என்று பலவும் தோன்றியிருக்க மாட்டா என்பது மாந்தவளர்ச்சி நூலார் (anthropologist)  நமக்கு அறிவுறுத்திய உண்மையாகும்.

நன்மையே என்றும் வேண்டும். தீமையே நமை அண்டுதல் கூடாது, சாவு தீமை; நோய் தீமை, இன்னும் எத்தனை எத்தனையோ! அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ, பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ, இன்னும் எத்தனை எத்தனை சென்மமோ என்பதுபோன்ற பட்டினத்தடிகளின் பாடல், மரணம் இல்லையென்றால், பாடப்பெற்றிருக்க முடியாதல்லவா?

ஆமாம். இப்போது சகுனம் என்ற சொல்லைப் பார்க்கலாம்,

தோழி ஒருத்தி இறந்துவிட்டால், அவள் போய்விட்டாள் என்பது ஒரு கவலை; இனி வரமாட்டாள் என்பது இன்னொரு கவலை; எனக்கும் இப்படி நேருமோ என்பது இனியும் ஒரு கவலை; எப்போது அது வருமென்பது மேலும் ஒரு கவலை; நடப்பிலேயே அதை அறிந்துகொள்ள வழியுளதா என்பது அடுத்து நிற்கும் க்வலை. எங்கேயாவது ஒரு பல்லி கில்லி சொல்லாதா என்பது தொடர்ந்து வரும் கவலை.  பல்லி சொல்லிவிட்டது, எனக்கு விளங்க வில்லை, யாராவது தெரிந்தவர்கள் சொல்ல மாட்டார்களா என்பது அதை ஒட்டிவரும் கவலை.

சாவு+அன்+அம் > ( சாவனம் ) > சவனம் > சவுனம் > சகுனம்.1

சாவனம் என்ற இடைவடிவம் ஒழிந்தது. சா என்பது ச என்று குறுகிவிட்டது. மேலும் அறிய, முன் வந்த சவம் என்ற இடுகையைப் படித்தறியுங்கள்.
சாவனம் மட்டுமின்றி, மக்கள் நாவில் இன்றும் தவழும் ஏனை வடிவங்களும் மேலே தரப்பட்டுள்ளன.

சவனம் சகுனம் என்ற சொற்கள் ‍  எந்த மொழிக்காரர்கள் வேண்டுமானாலும்
எடுத்துக்கொள்ளட்டுமே. உலக சேவையில் அது இருக்கட்டும்.

சாவைப் பற்றி மட்டும் சொன்ன பல்லி, இப்போது முன்னேறி குதிரைப் பந்தயம், எண் பந்தயம் என்றெல்லாம் அறிந்து சொல்லத் தொடங்கிவிட்டபடியால், சாவு என்று தொடங்கிய சொல், சவத்துப்போய் சகரக் குறுக்கம் பெற்று சவனம் > சகுனம் என்றானது, வேண்டியதொரு மாற்றமே.
போராட்டம் இல்லாமலே கிட்டிய பரிசல்லவா இந்தத் திரிபு!


notes:

சிலர் சகுணம்  என்று எழுதுகின்றனர். Publication (2002) by Rajan Bndgs  12 Barracks Rd, Seven Wells, Chennai, 600 001  

கருத்துகள் இல்லை: