புதன், 17 ஏப்ரல், 2019

கண்டித்தல் துண்டித்தல்

தலையில் துண்டு கட்டிக்கொள்வது சிலரிடத்துக் காணப்படுகிறது. மலேசியா இந்தியா முதலிய நாடுகளில் காணலாம்.

துண்டு என்பது  துண்+து,
இதில் ஈற்றுத்  து என்பது விகுதி.
ஒரு நீளமான நெசவிலிருந்து துணிக்கப்பட்ட அல்லது வெட்டப்பட்டதுதான்
துண்டு. பிறபொருளெனினும் இஃதொக்கும்.  எடுத்துக்காட்டு: மரத்துண்டு.

துணி என்பதும் ( க்ளோத் ) துணிக்கப்பட்டதனால் வந்த பெயரே.

அடிச்சொல் துண்.
துண்+ இ=  துணி.

வீடு கட்டுகையில் நெடுஞ்சுவர் எழுப்புவதுடன், இடையில் உள்ள மாடித்தரை அல்லது  உத்தரங்கள் முதலியவை விழாமல் இருக்கத் தூண் வைக்கப்படுகிறது. தூண்கள் கற்றூண், இருப்புத் தூண் என வகைபல.  இவை சுவர்போல் அடைத்த நெடியனவாய் இல்லாமல் மரங்கள் போல் மேல் கூரை அல்லது தரையினைத் தாங்கி நிற்கும்.

பண்டை மனிதன் தூண்கள் அமைக்கக் கற்றுக்கொண்டது மரங்களைப் பார்த்துத்தான்.  மரங்கள்மேல் வீடுகட்டி வாழ்ந்தவன் மனிதன்.

துண் என்ற அடியிலிருந்தே தூண் என்பதும் வந்தது.

துண் > தூண். (  முதனிலை திரிந்த பெயர்)

தூணுக்கு  ஸ்தம்பம் என்பர்.   தானே அல்லது தனியே தனியே நிற்பதுதான் தூண்.   ஆகையால்  தன்> தன்பு அம் > தம்பம் > ஸ்தம்பம் ஆனது.  பு அம் விகுதிகள்.  ஸ் என்பது தலைமெருகு.  திறம் > ஸ்திரம் என்பதுபோல.  ர- ற
மாற்றீடுகள்.

ஒ.நோ:  பின் > பின் + பு + அம் = பின்பம் > பிம்பம், ( பின் தோன்று நிழல்).

துண்டு என்ற சொல்லினடி  துண் > துணி என்றும் பின் துணித்தல் என்றும் ஆனது.  துண்டு ஆக்குதல் என்பதற்கு  துண்டு > துண்டித்தல் என்று சொல் அமைந்தது.

ஆனால் கண்டித்தல் என்பது  கடிதல் (  சினந்துகொள்ளுதல் )  என்பதன் இடைமிகை ஆகும்.   கடு>  கடி> கடிதல்.  கடுமையாக நடந்துகொள்ளுதல், 

கடி> கண்டி > கண்டித்தல்,  கண்டனை  கண்டனம்  ( அனம் அனை விகுதிகள்).
கண்டி என்ற சொல்லில் 0ணகர ஒற்றுத் தோன்றியது.

கண்டு என்பது ஒரு துண்டு என்று பொருள்படும்,  பூச்சி கடித்துக் கண்டு கண்டாகத் தடித்திருக்கிறது என்ற வழக்கை நோக்குக.  நூல்கண்டு என்ற வழக்கையும் காண்க.

எனவே கண்டு > கண்டித்தல் என்ற விளக்கம் அத்துணைப் பொருத்தமன்று,

அறிஞர் சிலரும் இதை விளக்கியதுண்டு.

தட்டச்சுத் திருத்தங்கள்  பின்.





செவ்வாய், 16 ஏப்ரல், 2019

விகுதிப்பொருத்தம்.

ஒரு புதிய சொல்லைப் படைப்பதென்றால் பல திறமைகள் தேவைப்படுகின்றன.  தகுதியுடைய ஒரு பகுதியை ( நிலைக்கூறு ஆவதைத்  ) தெரிந்தெடுப்பது மட்டுமின்றி,  விகுதி என்னும் வருகூறும் பொருத்தமாக இருத்தல் இன்றியமையாதது என்று அறியவேண்டும்.

இதனைச் சேனை என்ற சொல்லின்மூலமாக விளக்கலாம்.

பலர்  சேர்ந்து செல்வதே சேனை.  சேமிப்பு என்ற சொல்லில் எப்படி சேர் என்பதன் இறுதி ரகர ஒற்று மறைந்து சேர்மிப்பு என்பது சேமிப்பு என்று ஆனதோ அப்படியே சேர்நை என்று வரவேண்டியது சேர்னை > சேனை என்றானது.  நகர வருக்கம்  0னகர வருக்கமாக மாறுதலுடையது என்பதைக் குறித்துக்கொள்ளுங்கள்.  அண்மைய எடுத்துக்காட்டு ஒன்று:

ஓட்டுநர் >  ஓட்டுனர் ( நகரம் 0னகர மானது )
இயக்குநர் > இயக்குனர்.(மேற்படியே)

சேனை என்ற சொல்லைப் படைப்பதன் முன் மனிதனின் மூளையில் உருவான அடிப்படைக் கருத்து:  சேர்ந்து அனைவரும் செல்வது என்பதே.

இதன் பகுதிகளை மட்டும் எடுத்து:

சேர் + அனை >  சேரனை >  சேனை.  அல்லது  சே+னை.>  சேனை.

அனைவரும் பாடுவது பஜனை.

பாடு+ அனை > படனை > பஜனை. இங்கு முதலெழுத்தைக் குறுக்கிப் பாடு என்பதில் உள்ள சொல்லும் பொருளும் மறைக்கப்பட்டது.

இதுபோலும் குறுகிய இன்னொரு சொல்:  தோண்டு > தொண்டை.
காண் > கண்.

பெயர் நீண்டு வினையாதலும் கொள்ளப்படும்.

அனை என்பதே விகுதியாக்கப்பட்டு, பின் அகரம் களையப்பட்டு  0னை மட்டுமே தேய்ந்த விகுதியாய் நின்றது.

ஐகார இறுதி பிற பேச்சுக்களில்  ஆகாரமாக மாறும்.  சேனை> சேனா.

சோடனை என்னும் சொல்லும் இங்கனமே  வேண்டிய இடங்களிலெல்லாம் சோடித்தல் என்ற பொருள்வர,  சோடி+ அனை =  சோடனை என்றானது. வேண்டிய  அனைத்தையும் அழகுபடுத்தல். அனைத்தும் சோடித்தல். அழகற்ற அனைத்தையும் அழகுபடுத்தாவிடில் சோடனையில் புண்ணியமில்லை என்பதை உணரவேண்டும்.  இச்சொல்லுக்கும் அனை என்ற விகுதி பொருத்தமே.

கொள்வனை கொடுப்பனை என்ற  சொற்களில் மணமக்கள் சார்பினர் தங்கள் தங்கள் உறவினர்களையும் ஏற்றுக்கொள்ளுதலால் அனைவரும் உட்படுத்தப்படுகின்றனர் என்பதையும் கவனிக்கவும்.

இவை "அனை" என்ற விகுதி பொருந்திய சொற்களாம்,

எழுத்துப்பிழைகள் பின் திருத்தப்பெறும்.

ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

தென்சீனக் கடல்: ( ஹாங்காங் சுற்றுலா)


தென்சீனக் கடலோரம் தெவிட்டாத அழகே
கண்சொன்ன படிகேட்டு நுகர்ந்தின்பம்  பழகே.

வெள்ளி, 12 ஏப்ரல், 2019

வாதி பிரதிவாதி

இன்று வாதி பிரதிவாதி என்ற சொற்புழக்கங்களை உணர்ந்து இன்புறுவோம்.

பிரதி என்ற சொல்லைக் கண்டு மிரளவேண்டியதில்லை.

இதைப் படி என்ற சொல்லின் திரிபு என்று கூறிய அறிஞரும் உளர்.  ஒன்றுபோல் படிந்துள்ள இன்னொரு பொருள்தான் படி.  இதை ஏன் படி என்று கூறுகிறோம் என்றால் அது "படி" அமைந்துள்ளது. அதாவது எது முன் கண்டோமோ அதன் படியாகவே அல்லது படியே அமைந்துள்ளது.  நூற்படி என்றால் ஒரு நூலின் மாதிரியாகவே அமைந்துள்ள இன்னொன்று.  இதை ஆங்கிலத்தில் காப்பி என்று சொல்வார்கள். குடிக்கும் காபியை காபி என்று எழுதுவது நன்று.  அதைக் காப்பி என்று எழுதுவது அவ்வளவு பொருத்தமென்று சொல்ல மாட்டேன்.  காபி என்றொரு இராகமும் உண்டு. இனிய இந்த இராகம் நீங்கள் கேட்டிருக்கலாம்.

படி என்ற சொல்லே பிரதி என்று திரிந்தது என்பர்.   ப > ப்ர.  டி > தி  எனவே ப்ரதி > பிரதி ஆயிற்று.   ஆகவே தொலைப்படி  என்பது தொலைப்பிரதி என்று வரும்.

படி என்பது படு என்ற சொல்லினின்று திரிந்தது ஆகும்.  கொஞ்சம் மாவை எடுத்துத் தூவுங்கள். அந்த மாவு காற்றின் வேகத்துக்கு ஏற்பத் தரையில் போய்ப் படுத்துக்கொள்ளும். மாவு தரையில் படும், அப்புறம் படுக்கும்:  படுத்துக் கொள்ளும்.   படு > படுதல்;  படு> படுத்தல்.  தன்வினை பிறவினை வடிவங்கள். இவ்வாறு மனிதன் தரையுடன் ஒட்டிக்கிடப்பதுபோல் மாவும் ஒட்டிக் கிடத்தலால் படு > படி > படிதல் ஆனது. படி > படிவு > படிவம்.   படிந்தபடியே அமைவது படிவம்.  இது திரிந்து வடிவம் என்றும் ஆவதானது பகர வகரப் போலி என்பது இலக்கணமாகும்.  படம் என்பது படியாக ஒன்றன் படியே அமைந்தது  என்று உணர்க.

ஒன்று இன்னொன்றில் போய்ப் பட்டுக்கொண்டது என்றால் மாட்டிக் கொண்டது என்று பொருள்.  படை என்ற சொல்லும் ஒரு சார்பு வீரர்கள் இன்னொரு சார்பு வீரர்களுடன் போய் அடித்துக்கொள்ளும் செயலில் மாட்டிக் கொண்டவர்களைக் குறிப்பது என்பதை எளிதின் உணரலாம்.   படு > படை ஆகும்.  படு என்பது பலபொருள் ஒருசொல்.   அதாவது பல அர்த்தங்களைத் தரும் ஒற்றைச் சொல் ஆகும். இனிப் படுதா என்பது ஒரு பொருளை மூட இன்னொன்று அதன்மேல் முழுதும் படும்படியாக போர்த்தபடுவதற்குப் பயன்படும் இரட்டுவகை .  இரட்டு என்பது ஒற்றை இழையாக இல்லாமல் இரட்டை இழையாக நூற்கப்பட்ட கடினவகைப் போர்வை.  போர்வை என்பது மனிதன்மேல் போர்த்துவதற்கும் ஏனைப் பொருள்கள் மேல் போர்த்துவதற்கும் பயன்படுவது. தரையில் விரிப்பதும் தரையைப் போர்த்துவதே ஆகும். ஒன்றில் படும்படியாகத் தரப்படும் கடிய நெயவு வகையே படுதா.  படும்படி தா என்பதே இதன் அமைப்பு,   வாய்தா என்பதும் இப்படி அமைந்ததே.  வருவாயில் ஒருபகுதி தா என்பது வாய்தா ஆனது.  இதில் வரு என்பது தொகுந்து நிற்கின்றது.  முதற்குறைச் சொல். தா என்ற ஏவல் வினை இங்கு முதனிலைத் தொழிற்பெயராய் நிற்கின்றது.   ஆனால் மாதா என்ற சொல் இப்படி அமையவில்லை.  மா:  அம்மா என்பதன் முதற்குறை.  தா என்பது தாய் என்ற சொல்லின் கடைக்குறை. இது மா+ தா >  மாதா ஆனது. இது ஒரு பகவொட்டுச் சொல். ( போர்ட்மென்டோ)  ஆகும்.

வாதி என்பது உண்மையில் வகுந்து அல்லது பகுந்து அல்லது பிரிந்து நிற்பவன்.  வகு >வகுதி > வாதி.   இது  பகுதி > பாதி என்பதுபோலும் சொல் அமைப்பு ஆகும். வாதம் செய்தலின் வாதி என்பதும் பொருந்துவதால் இது ஓர் இருபிறப்பி ஆகும்.  பிரதிவாதி என்பவன் அவனின் பிரிந்துநின்று வேறாகப் பேசுவோன் ஆகும். பிரிதுவாதி என்ற பதத்தை எளிதில் புரிந்துகொள்வதானால் அதைப் பிரிந்து வாதி என்று சொல்லிப் பார்த்து உணரலாம். இது படி என்ற பிரதி அன்று.  பிரிதல் அடிப்படையில் பிரி.> பிரிது > பிரிதுவாதி > பிரதிவாதி என்று மருவியதை உணர்க. பிரிது என்பது பிரிந்து என்பதன் இடைக்குறை என்று இலக்கணம் கூறுக.  பிறிது என்பது பிரிது என்று மாற்றி எழுதப்பெற்றது என்று கொள்ளினும் ஆகும்.  பிரி, பிற, பிறிது என்பவெல்லால் பில் என்ற ஒரே அடியில் பிறந்த பல்வேறு வடிவங்கள் ஆதலின் இவற்றுள் யான் காணும் ஓர் வேறுபாடு இலதாதல் உணர்க. பிறத்தல் என்ற சொல்லும் ஒன்று ( தாய்) இன்னொன்று ( பிள்ளை) -  பிற (பிறிது )  ஒன்று ஆவதே ஆகுமென்பதையும் காண்பீர். (பிற என்பது பெயராம்போது பன்மை வடிவம்).

கடலோர உலா

குளிர்ந்த காற்று வீசும் ஹாங்காங் கடலோரம்





ஹாங்காங் நகர் வலம்.

உலவு தொறுநகர் நயம்காண்பீர் ----  இந்த
உலகினில் அழகிது நகர்ஹாங்காங்!
வலம்வர வண்ணமும் பலதந்தே  ---- பெறும்
வாழ்வை விளக்கிய ஒளிகாண்பீர்.




வியாழன், 11 ஏப்ரல், 2019

தக்கசிறு நாய்க்குட்டி வைத்துக்கொள்ளும்;



வெளி நாட்  டிலே  ஒரு வேலை கிடைத்து
வீடொன்றும் கிடைத்திட்ட போதினிலே
தனியா  ளாய்இருக்க வேண்டாமையா
தக்கசிறு நாய்க்குட்டி வைத்துக்கொள்ளும்;
தனிமை எனவொரு துன்பமுண்டே
தடுத்ததை இன்பமாய் மாற்றிக்கொள்வீர்
நனி யது வீட்டுக்குள் ஓடியாடி
நாளினைப் போக்கிடும் நலமே செய்யும்.

இந்தப் படத்துக்கு ஒரு விளக்கம் எழுத  எண்ணினேம்
அது ஒரு கவிதைபோல் வந்துவிட்டது. படத்தையும்
வரிகளையும் நுகர்ந்து மகிழ்வீர் .

திங்கள், 8 ஏப்ரல், 2019

அகிலமும் கைலாசமும்

தமிழ்மொழியை முற்றுமறிதல் என்பது முடியாத வேலை என்று  சொல்லலாம். எங்கெங்கு சென்று கற்றாலும் எல்லாமறிதல் இயலாமையினால். நாலுபேர் கூடி நன்மொழிகள் பேசிவிட்டுக் கலைந்து போவது வேறு.  மொழியறிதல் என்பது வேறு.

இல்லென்ற சொல்லொன்று உள்ளதே அது எங்கெங்கெல்லாம் உள்ளதென்பதை இப்போது கண்டு மகிழ முனைவோம்.  ஆயினும் எத்துணை முயன்றாலும் நாம் ஒன்றிரண்டை அறிந்துகொண்டால் அதுவே பேருவகை தருவதென்றுணர்வீராக.

அகிலம் என்ற சொல்லின் இடையில் இல் உள்ளது.

இல் என்பது இடம் என்று பொருள்படுவது.  இஃது இகரச் சுட்டடிச் சொல்.   இ என்பதிலிருந்து இல் தோன்றியது.   இல் எனின் இங்குள்ளது என்பது பொருள். இங்குள்ளது இடம்.  அதுதான் இங்கிருபதனைத்துக்கும் அடிப்படை. இடம் இல்லாமல் பொருளில்லை.

கண்ணில் இருப்பதென்ன என்ற வாக்கியத்தில் இல் என்பது இடப்பொருள் சுட்டும் உருபாக வருகிறது.   இடம் என்பதே இதன் அர்த்தம் என்பது விரிக்க வேண்டாதது.

அகிலம் என்ற சொல்லில்:

அ + கு + இல் + அம்  என்ற துண்டுகள் உள்ளன.  சொல்லின் இடையில் இல் இருப்பதை உணரலாம். 

அ =  அங்கு.
கு =  சேர்விடம் குறிக்கும் சிறுசொல். இது உருபாகவும் வரும்.  அவளுக்கு இவளுக்கு என்று சொல்லி அறிக.
இல் = இடம்.
அம் = விகுதி.   இந்த விகுதி அமைவு என்ற சொல்லின் அடிச்சொல் ஆகும்.

இதை இப்போது வாக்கியமாக மாற்றினால்:

" (இங்கிருந்து  )  அங்கு சென்று சேர்ந்தால் அதனில் உள்ள இட அமைப்பு"

என்றாகும்.  அங்கு என்பது தொடுவானாக இருக்கலாம்.  இது எல்லாம்
"அகிலம்."

அகிலம் என்ற சொல்லை அமைத்த அந்த இருண்ட காலத்துத் தமிழன் வானூர்தியிலோ துணைக்கோளத்திலோ பறந்து  பார்த்தானில்லை. இவையெல்லாம் அவனுக்குத் தெரியாதவை. அவனறிந்த மாத்திரத்தில் அவன்
சொல்லை அமைத்து விட்டுப் போயிருக்கிறான். சுழியனைப் பிட்டுப் பார்த்து உள்ளே சருக்கரையும் பயறும் இருப்பன கண்டு அறிந்ததுபோலுமே இச்சொல்லை நாமறிந்து கொள்கிறோம்.

அகலம் என்ற சொல்லும் இதுபோல் அமைந்ததே.  அ+ கு+  அல் + அம் = அகலம்.  அங்குபோய்ச் சேர்வது மட்டுமின்றி அவ்வெல்லையும் அல்லாத விரிவுடையது  என்று சொல்லிமுடித்து அமைந்ததே இச்சொல்.

உலகம் விரிந்தது ஆதலின் விரிவு குறிக்கும் அகலமென்னும் சொல்லினின்று அகிலம் என்னும் சொல் அரும்பியிருத்தல் கூடுமாதலின் இஃது  ( அகிலம் ) இருபிறப்பி ஆகும்.  அகலக் கருத்தே அகிலச் சொல்லுக்கு ஆக்கம் தந்திருக்கலாம்.  அல் என்பது இல் ஆனது. ஒன்றைப் பார்த்து இன்னொன்று அமைத்தல்.

இல் என்பதையும்   (  இடம் )   அல் என்பதையும்  ( அல்லாதது )  கொண்டு இவ்வளவு திறம்படச்  சொற்களை அமைத்துள்ளான் பண்டைத் தமிழன்.  காட்டிலும் மலைகளிலும் அருவி அருகினிலும் கடல் அருகினிலும் சுற்றித் திரிந்து  சிறுசிறு சொற்களைக் கொண்டு உரையாடிய அந்தக் காலத்துத் தமிழன் அவன். அவனையும் அவனமைத்த சொற்களையும் அறிய நீங்கள் உங்கள் இற்றை  நாகரிகத் துணைகளைக் களைந்துவிட்டு வெகுதொலைவு  காலச் சாலையில் பின்னோக்கிப் பயணிக்க வேண்டுமென்பதை மறவாதீர்.

அகல்+தல் = அகலுதல் என்ற வினையும் அதிலிருந்து அமைந்தது.  அகல்+ தல் = அகறல் என்று வருதலும் அமையும்.

தீவு என்பது நாற்புறம் நீர் சூழ்ந்து நிலத்தொடர்பு முற்றத் தீர்ந்த நிலத்துண்டு. தீர்வு> தீவு என்பதை அறிவுறுத்தினோம்.  தீராத தொடர்பு நிலம்  தீவு+ அகம் + அல் + -பு + அம் என்ற பல துண்டுகள் கூடிய சொல்லே தீபகற்பம்.   தீவக அற்பம் > தீபகற்பம்.  வகர பகரப் போலி.  இதில் அல் என்ற அன்மைச் சொல் பயன்பாடு கண்டுள்ளமை காண்க. தீவு என்ற சொல் தீவகம் என்றும் வரும்.  நிலத்துண்டின் அகத்தே தொடர்பு ஏதுமின்றி  அமைந்தது என்று பொருள். அகம் என்ற சொல் புனைந்து அதனால் வந்த சொல்லூதியம் சொற்பமே ஆகும். பெரிய பொருள்மாற்ற மெதுவும் ஏற்பட்டுவிடவில்லை. தீவற்பம் என்று அமைத்திருக்கலாம். தீபகற்பம் என்பது சற்று இனிதாய் உள்ளது.

கைலாசம் என்ற சொல்லிலும் கை + இல் + ஆய + அம் என்று இல் என்ற இடப்பொருள் வந்திருப்பது காண்க.  பக்கத்தில் சிவனாருக்கு இல்லாமாக அமைந்தவிடம் என்று பொருள்.  கை=  பக்கம்;  இல் = இடம்;  ஆய்  = ஆகிய. அம் = அமைப்பு, அல்லது விகுதி.   அந்தக்கையில் இந்தக்கையில் என்ற தொடர்களில் கை என்பது பக்கப்  பொருளை உணர்த்தும்.  ஆய > ஆச.

இனி இல் என்ற இடப்பொருள் அமைந்த சொற்கள் எங்கெங்கு விரவியுள்ளன என்பதைத் தேடிக் கண்டுபிடியுங்கள்.


புதன், 3 ஏப்ரல், 2019

கலியாணம் விவாகம் ரத்து

இன்று வீடு என்ற சொல்லுக்கும் அகம் என்ற சொல்லுக்கும் ஒரு ஒப்பீடு எழுதலாம் என்று எண்ணினாலும் கல்யாணம் என்ற சொல் வந்து குறுக்கிட்டு என்னை எழுதென்றது. அதற்கு ஒப்பி இச்சொல்லைப் பற்றி இன்று சிந்திக்கின்றோம். ஒப்பீட்டு ஆய்வை இன்னொரு நாளில் கவனிப்போம்.

கல்யாணம் என்பது உண்மையில் கலியாணமே ஆகும். இதற்குக் காரணம் கல்லுக்கும் கல்யாணத்துக்கும் ஒரு தொடர்பும் இல்லை. ஆனால் இச்சொல் பல இந்திய மொழிகளில் வழங்கி வருகிறது. அங்கெல்லாம் அது கல் என்றுதான் தொடங்குகிறது. நாம் கலியில் தொடங்குவதானது பிற மொழி வழக்குகளுக்கெல்லாம் இசையாமல் நம்மைக் கல்லாக்கிக் கொண்டு தொடங்குவதுபோலச் சிலரால் உணரப்படுதலும் இயல்பே ஆகும்.

தமிழ்ச்சொற்கள் பிற மாநிலங்கட்குச் செல்லுங்கால் இவ்வாறு சுருக்கப்படுதல் இயல்பு. கைலாசம் என்பதை கைலாஷ் என்றுதான் பிற மொழிகள் சுருக்கும். சுருங்கிய நிலையில் வந்து சேர்ந்த சொற்களை விரித்துப் பலுக்குதலும் காணப்படுவதே. எடுத்துக்காட்டு: ப்ரட் என்ற ஆங்கிலச் சொல் பிரட்டு என்று தமிழரிடை மாறுவது காண்க. எக் (முட்டை) என்பது எக்கு என்று ஒலிப்புறுகிறது. இதை நாம் மறந்துவிடவில்லை.

கல்யாணம் கலியாணம் என்பவற்றை விளக்கி யாம் எழுதியது
இப்போது கிட்டவில்லை.

இப்போது புதிதாகவே சிந்திப்போம்.

சங்க காலத்தின் பின்பு பெண்கள்மேல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆண்கள் பலர் ஏமாற்றிவிட்டு ஓடிவிடுதல் கூடுதலாக நிகழ்ந்தமையால் இவை விதிக்கப்படவேண்டி நேர்ந்தது.
கலி என்பது மகிழ்ச்சி என்று பொருள்படும். ஆணுடன் பழக அனுமதி பெறும் சடங்கே கலி + ஆண் + அம் ஆகும். சிற்றூரார் இன்றும் கலியாணம் என்றே சொல்வர். ஆணுடன் சேரும் நிகழ்வு என்பதே கலியாணம் என்பதன் பொருள். ஆண் என்பது யாண் என்று வருவது யகர உடம்படு மெய். அம் விகுதியாகும், இவ்வாறு அறியவே இது தமிழ்ச்சொல் ஆகிறது.

வாழ்க்கை விழுமிய நிலையை அடையத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது பண்டைத் தமிழர் கொள்கை. இதனடிப்படையில் எழுந்தது விவாகம் என்ற சொல்: வி+ வா + ஆகு + அம் : விவாகம், விழுமிய வாழ்வு ஆகும் தொடக்கச் சடங்கு. இது ஒரு சொற்சுருக்கப் புனைவு ஆகும். இரத்து என்பது இறத்து: இறு+ + து: இறத்து > இரத்து > ரத்து, இறுதல்: முடிதல்; இறுதி என்ற சொல்லும் இதில் வந்ததே. ஆக விவாக ரத்து என்பதை உணர்ந்து கொண்டீர்கள்.


செவ்வாய், 2 ஏப்ரல், 2019

சேனை

சேனை என்னும் சொல் முன்னர் விளக்கப்பட்டது.  அதை இங்குக் காணலாம்:


https://sivamaalaa.blogspot.com/2018/06/blog-post_20.html

 சேனை என்பது பல்வேறு பொருளுடைய சொல் என்பது இங்குத் தெளிவாக உள்ளது.

ஐயப்பாடுகள் யாவையேனும் இல்லாவிடின்  உங்கள் சிறுசேனைகளையும் கூட்டிவைத்துச் சொல்லிக்கொடுக்கலாம்.

சிறு சேனைகள் :  உங்கள் குழந்தைகள்.

சிறிசேனா என்பவர் இலங்கை அதிபர்.   அவர்பெயரும் இச்சொல்லுடன் தொடர்புபட்டிருப்பது மகிழ்வு தருவதே.

வீதியில் போய்வந்து கொண்டிருப்பவர்களும் சேனை எனப்படுவர்.  பலர் சேர்ந்த கூட்டமே சேனை.

சேர் >  சேர்நர்  .  சேர்நன்.

சேர்ந + ஐ =  சேர்நை >  சேனை.  என்று இலக்கணப்படி செல்லும்போதும் இதை இப்படி அமைக்க ஒரு கருத்து வாக்கியம் உதவி இருக்கக் கூடுமென்பதையும் மறுத்தற்கில்லை.

விளக்கம்:

வாக்கியம்:  அனைவரும் சேர்ந்து  செல்கிறார்கள்.

சேர்  ( சேர்ந்து )
அனை  (அனைவரும்  )

சேர் + அனை  =  சே +னை  =   சேனை என்று அழகாக சொல் வடிந்து வருகிறது.
என்றாலும் தமிழிலக்கண மரபு நோக்கி  சேர்ந் + ஐ  என்று சொல்வதும் பின் ரகர ஒற்று  கெடுதலும் ஐ கார விகுதி காட்டுதலும் பொருத்தமாக இருக்கும்.

இதனைப் பஜனை என்ற சொல்லுடன் ஒப்புவைக்கலாம்.

பாடு + அனைவரும்.
அனைவரும் பாடுவதுதான் பஜனை.  வேறு என்ன பஜனை.  சில மாதிரி பாட்டுக்களைத்தாம்  பாடுவார்கள். இது பாடல் தேர்வு முறையன்றி இதனால் ஒன்றும் சொல் அமையவில்லை.

டகர வருக்கத்துக்கு ஜ, ஷ முதலியன மாற்றீடாக வரும்.

பாடு + அனை >  பாஜ் + அனை >  பஜனை.

நெடில் குறில் குறுக்கம்.  பாடனை > படனை > பஜனை.
அனைவரும் என்பதில் அனை என்பதை விகுதியாக்குதல்.

அயற்சொற்களும் இப்படிக் குறுகும்:

ராஜா >>  ரஜினி. ( பெண் ).  ரா> ர.    அப்புறம் ஜ்+ இன் + இ.

தோண்டு > தொண்டை.  தோண்டியதுபோல் உள்ள உணவு மூச்சுக் குழல்.
தோ > தொ குறுக்கம்.

பாடனை(வரும்)  என்பது குறுகி பஜனை என்று வந்தாலும் சேனை என்பது குறுக வழியில்லை.  குறுகிச் செனை என்பது நன்றாக இல்லை.

அறிந்து மகிழ்வீர்.





  
 

ஞாயிறு, 31 மார்ச், 2019

ரொக்கமும் ரோடாவும் (ரோதையும்)

இன்று "ரொக்கம்"  சொல் எங்ஙனம் அமைந்தது என்பதைப் பார்ப்போம்.

இச்சொல் உரு + ஒக்கு + அம் என்ற மூன்று துண்டுகளில் சேர்க்கை ஆகும்.

இதில் உரு என்ற சொல் மதிப்பின் உருவை முன்வைக்கிறது.  இது வெளி உருவோ "வெற்றுரு"வோ அன்று.  இதை இப்போது விரித்து அறிந்துகொள்வோம்.

ஒரு மாணவன்  தன் பாடங்களைப் படிக்காமல் ஆடிக்கொண்டும் அலைந்துகொண்டு மிருக்கின்றான் என்று வைத்துக்கொள்வோம்.  ஊரார் இவன் உருப்பட மாட்டான்  என்று குறிப்பிடுவார்கள்.  முன்னரே அவன் நல்ல உருவத்துடன் தானே இருக்கிறான்,  இனி என்ன உருப்படுவது? உருப்படுவதற்கு ஒன்றுமில்லை.  உலகில் உள்ள அனைத்துக் காணத்தக்க பொருள்களும் ஒவ்வொன்றும்  ஓர் உருவில்தான் உள்ளன. புதிதான ஓர் உரு ஏற்படப்போவதில்லை.  அப்படியானால் உருப்படுதல் அல்லது உருவு கொள்ளுதல் என்பதன் பொருள் என்ன?

பண்டமாற்று விற்பனை பொருள்தரவு  வரவு முதலியவற்றில் பொருள் ஒவ்வொன்றுக்கும் ஓர் உரு இருக்கின்றது.  இவ்வுரு கண்காணாத உரு ஆகும்.   இந்த ஆட்டுக்கு ஐம்பது வெள்ளி விலை என்றால் அது ஓர் உரு,  சடப்பொருள் கொள்ளும் உருவன்று;  மதிப்புரு ஆகும்.   ஐம்பது வெள்ளி என்பது ஆட்டுக்கு ஈடாக வைக்கப்படுகின்றது.  அத்தகைய மதிப்பீட்டினால்தான் வணிகம் நடைபெறுகின்றது.  ஆட்டுக்கு உரு உள்ளது;  மதிப்புக்கு ஓர் உருத்தந்து அதனை ஆட்டுக்கு ஈடாக வைத்து  விற்பனை அல்லது வாங்குதல் செய்ய வேண்டும்.   ரொக்கம் என்ற சொல்லில் முன்னிற்கும் நிலைமொழி அல்லது நிலைப்பகவு:  மதிப்புருவே  என்று உணர்தல் வேண்டும்.

மனிதர்களுகும் ஓர் உரு உள்ளது.  இதை இமேஜ் என்ற ஆங்கிலச் சொல்லும் ஒருவாறு உணர்த்தவல்லது.   உண்மையில் விற்பனைப் பொருள்களில் அல்லது பண்டங்களில்இது  மதிப்பு உரு  ஆகும்.

உரு ஒக்க வேண்டும் அல்லது பண்டமாற்றுக்கு மதிப்பு ஒப்புமை வேண்டும். இதையே விலை என்று சொல்கின்றோம்.  ஒக்குதலாவது ஒத்திருத்தல்.  ஊரில் எங்கு பார்த்தாலும் ஆட்டுக்குட்டிகளாக இருந்தால் ஆட்டு விலை வீழ்ச்சி அடைந்துவிடும்.  எவ்வளவுக்கு  எவ்வளவு ஆடு தேடப்படும் பொருளாகவும் எளிதில் கிட்டாத பொருளாகவும் உள்ளதோ, அவ்வளவுக்கு அவ்வளவு அது  விலையாக்கம் பெறும். அப்போது பெறும் பணமே ரொக்கம் ஆகும்.  இது பின் பணத்தாள்களின் சேர்க்கை அல்லது கட்டினைக் குறித்தது இயற்கையான அடைவே ஆகும்.

உரு ஒக்கு அம் என்பது பொருள்மதிப்பு ஒக்கும் அமைப்பே ஆகும்.  விலை ஐம்பது உரூபாயாக இருந்தால் உரொக்கம் என்பது அதைக் குறித்துப் பணத்தின் கட்டினைக் குறிக்க வழங்கிற்று.

உரு ஒக்கு என்பன சொல்பகவுகள் அல்லது துண்டுகள். அம் என்பது ஈண்டு விகுதி எனக் கொள்க.

நாளடைவில் இச்சொல் தன் தலையிழந்து,  அரங்க சாமி ரங்க சாமி ஆனது போல  உரொக்கத்திலிருந்து ரொக்கமாயிற்று.
 ஆகவே இங்கு உரு என்பது மனக்காட்சி  ஆனது. மதிப்பீடு என்றும் கொள்க.

பின்னாளில் இது  காசோலையாக இல்லாமல் பணத்தாள்களாக இருத்தல் என்ற பொருளைத் தழுவியது. இதை ஆங்கிலத்தில் "கேஷ்" என்பர்.  ஆயின் "கேஷ்" என்பதோ காசு என்பதன் திரிபு ஆகும். காசினெட்டு என்ற மலையாள வழக்கும்  "காஷியுனட்"  என்று திரிந்தது காண்க.


அதனுடன் இன்று ரோடா அல்லது ரோதை என்பதையும் நுணுக்கி அறிவோம்.

உருண்டு ஓடுவது ரோதை அல்லது ரோடா.

இது எப்படி அமைந்தது என்றால்:

உருள் + ஓடா.
=  ரு + ஓடா    ( உகரமும் ளகர ஒற்றும் கெட்டன).
=  ரோடா.

இது அருமையாய் அமைந்த சொல்.  எடுத்தெறிந்தது இரண்டு எழுத்துக்களைத்தாம்,. ஒரு புதிய சொல் கிடைத்துவிட்டது.

ஆ என்பது ஒரு சொல்லிறுதி.    எடுத்துக்காட்டு:  வில் > விலா ( வில்போல் வளைந்த எலும்புள்ள பகுதி ).  பல் > பலா ( பல பழங்கள்  பதிவான ஒரு பொதிவினைக் காய்க்கும் மரம் ). உல் > உலா  ( வளைந்து செல்லும் பயணம்).
கடு > கடா:  ( கடுமை சார்ந்த மாட்டுவகை, ஆண்மாடு;  கேள்வி).

இர் > இரா (  இரவு)  ( ஆ விகுதி).
இர் > இருள்  (  உள் விகுதி)

உல் > உரு> உருள் > உருளை   ( வளைவு).

ரோட்டா, ரோட்டேட் முதலிய இந்தோ ஐரோப்பியச் சொற்கள் திராவிட மூலத்தன.

அமைதியுடன் ஆய்ந்தமைக்கு நன்றி..

பிழைகள் புகின் செப்பம் பெறும். 
ஒரு சில தட்டச்சுப் பிழைகள் திருத்தம் பெற்றன: 2.4.2019










சனி, 30 மார்ச், 2019

பீடம் என்பது

வரிசையாய்ப் பல வந்து முன் நிற்கின்றன சொற்கள் என்றாலும் எல்லாவற்றையும் எழுதிவிட முடிவதில்லை. இன்று ஒன்றை மட்டும்
கவனிப்போம்.   இச்சொல் பீடம் என்பது.

இதன் முந்து   அடியாய் இருப்பது பீடு என்னும் சொல்லாகும்;

பீடு என்பது பெருமை என்று பொருள்படும்.

பழங்கால மனிதனுக்கு மேடு, பள்ளம்,. உயரம், தாழ்வு என்பன போன்ற கருத்துக்களே பல சொற்களைப் படைக்க உதவின. மலை, மடுவு போன்ற
இயற்கை நில அமைவுகளும் இவ்வாறு உதவின.

பிடுதல் என்ற சொல்லே பீடு என்பதன் முன் உள்ளது ஆகும். தரை நிலையிலிருந்து பிடப்பட்டு அல்லது வேறுபாடுற்று உயரமாய்க் காணப்படும்  உயர்நிலம் பீடு > பீடம் ஆனது.   பீடு என்பது பிடு என்றதில் விளைந்த முதனிலை திரிந்து  நீண்ட தொழிற்பெயர் ஆகும்.

பிள் என்பது இதன் மூல அடி.  பிள் > பிளவு.  பிள் > பிடு என்று திரியும். இது சுள் > சுடு, பள் > படு என்பன போன்றவையே.   பள்: >பள்ளம்;  பள் > படு> படுகை என்பன அறிக.

தரையின் மட்டத்திலிருந்து பிளவு பட்டு மேலெழுந்து  பீடம் அமைகிறது. இஃது இயற்கையில் அமைந்தாலும் மனிதனால் அமைப்புற்றாலும்  சொல்லமைப்பில் ஒரு வேறுபாடில்லை.

பிடு என்பது கையால் பிடுவது மட்டுமின்றித் தானே பிடுதலுண்டதையும் குறிக்கும் என்பதறிக.

பெருமை குறிக்கும் பீடு என்ற சொல்லும் இயற்கை அமைப்புகளிலிருந்து உருவான கருத்தே ஆகும்.

பீடம் என்பது பிடு+ அம் என,  நேரடியாகவும் காட்டப்பெறுதல் கூடும்.  முதனிலை நீண்டு அம் விகுதி பெற்ற தொழிற்பெயர் என்று அறிக.

பீடம் என்ற உயர்தரை அல்லது நிலம்  பல வேறு சொற்களிலும் கலந்து வரும்.
எடுத்துக்காட்டு:  தலைமைப் பீடம்.  பீடாதிபதி.  (பீட  அதிபதி).

ஆனால் பீடி என்ற சொல் தொடர்புடையதன்று:  பிடி> பீடி.  புகைப் பிடிப்பதற்காவது.

அறிவோம் மகிழ்வோம்.

செவ்வாய், 26 மார்ச், 2019

சொப்பன வாழ்வு

உறக்கத்தின்போது கனாக்கண்டு நல்லபடியாக ஒலிப்புறாத சொற்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையே சொப்பனம் ஆகும்.

கருத்து:  சொற்களைப் பன்னுதல்.
பன்னுதலாவது பலமுறை  நன்`கு ஒலிக்காமல் வாய் அசைவுறல்.

பல் > பன் (லகர 0னகரத் திரிபு).  ( பல தடவை என்னும் அடிப்படைக் கருத்து)
பன் > பன்னு:  வினைச்சொல் ஆக்கம்.
பன்னுதல் :  தொழிற்பெயர்.

இன்று உள்ள பொருள்:

கனவு,  குறைச் சொல்லொலிக் கனா.

சொல்+ பன்னு + அம் > சொற்ப(ன்)னம் (  இடைக்குறை:ன்  )>  சொற்பனம் > சொப்பனம்

இங்கும் விளக்கம் சிறிது உள்ளது.

.https://sivamaalaa.blogspot.com/2017/06/blog-post_27.html


இதன் அடிப்படைப் பொருள் சொற்களைப் பன்னுதல் என்பதே ஆதலின், இன்று இதன் பொருள் மாறிவிட்ட நிலையில் இது திரிசொல்லாகும்.

சொல்லிலும் திரிபு; பொருளிலும் திரிபு.

இத் திரிசொல்லைப் பயன்படுத்திப் பாபநாசம் சிவன் எழுதிய:

" சொப்பன வாழ்வில் மகிழ்ந்து
சுப்ரமண்ய  சாமி உனை மறந்தார்!  ---  அந்தோ
அற் பப் பணப் பேய் பிடித்து  அறிவிழந்து
அற்பர்களைப்  புகழ்வார்."

இங்கு  சொற்பன, அற்பப்பண என்ற எதுகைகள் மிக நன்று.

நாவால் பொய்மொழிவார் ---- தனுதுவாழ்
நாளெலாம் பாழ்செய்வார்.  ----  உன்
பாவன நாமமதை ----- ஒருபொழுதும்
பாவனை செய்தறியார்

அந்தோ விந்தை இதே -----  அறிந்தறிந்து
ஆழ் நரகில் உழல்வாரே  ---- இவர்
சிந்தை திருந்தி  உய்ய  ---- குகனே
உந்தன் திருவருள் புரியாயோ.

இந்தப் பாடலை எம்.கே  தியாகராஜ பாகவதர் ( மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராசன், இசைவலர் ) படத்தில் பாடியிருந்தார்.

இனி அந்தோ என்ற சொல்லாட்சியைப் பார்ப்போம்.

என்ன (தமிழ்)  >  எந்து  ( மலையாளம்)
வந்து (த )  .>   வன்னு  (மலை)

இவ்வாறு   0ன்ன > ந்த  மாறுதலுடைமை காணலாம்.

இதுபோலவே 

அன்னை > அன்னோ  (தாயே )  என்பது
அன்னோ > அந்தோ என்று மாறிவந்துள்ளது.

இடையில் இந்த ஒலிமாற்றினை விளைப்பது து அல்லது த் என்னும்
இடைநிலை தான்.

அன்+ ஓ = அன்னோ.  ( அன்+ஐ = அன்னை) இதைப் பின் காண்போம்.
அன்+ த் + ஓ =  அந்தோ.

இரண்டிலும் அன் என்பதே அடிச்சொல்.

அன்னில் உள்ள 0னகர ஒற்று  அம்மில் மகர ஒற்றாகும்.

ம்>ன்  போலி.   திறம் > திறன்.  அறம் > அறன்.

இவ்வாறு அறிந்து மகிழ்வீராக.




 

முல் முன் மு அடிச்சொற்கள். கு என்பது சொல்லாக்கத்தில்.

இன்று முகமென்னும் சொல்லின் அமைப்பை அறிந்தின்புறுவோம்.

இந்த அடிச்சொற்களை மனத்தில் இருத்திக்கொள்ளுங்கள்:


முல் > முன் >  மு.

இவை ஒவ்வொன்றிலிருந்தும் பல் சொற்கள் தோன்றியுள்ளன. சொல்லியலில் லகரத்தின் பிந்தியது 0னகரம் ஆகும்.  பின் 0னகரம் கெட்ட அல்லது மறைந்த நிலையில் மு என்ற எழுத்துமட்டும் நின்று ஒரு சிறு சொல்லாகிவிடுகிறது. இச்சொல் இப்போது தனியாக வழங்கவில்லை.  முழுச் சொற்களுடன் கலந்தே வரும். ஆனால் ஒரு காலத்தில் அது தனிச்சொல்லாக இருந்து அதன் தனிவழக்கை அல்லது புழக்கத்தை இழந்துவிட்டது என்பதை அறிக.இதன் விளக்கத்தை வேறொருகால் ஆய்வு செய்வோம்.

இப்போது முக்கு அல்லது முக்குதல் என்ற சொல்லைக் காணவும். இதன் பொருள் முன் கொணர்தல் என்பது;  அதுவும் உடலின்  உட்காற்றின்  மூலம் 
அழுத்தம் தந்து வெளிக்கொணர்தல் எனின் வரையறவு சரியாகவிருக்கும். இச்சொல்லில்

மு + கு என்ற இரண்டு உள்ளுறுப்புச் சொற்கள் உள்ளன.

மு:   முன் இருத்தல் என்னும் அடிப்படைக் கருத்து.
கு என்பது இன்றும் உருபாக உள்ளது.  அவனுக்கு எனின் அது வேற்றுமை உருபாக வருகிறது. இதுவே இச்சொல்லாக்கத்தில் வந்துள்ளது.

மு+ கு = முக்குதல் என்று வினைச்சொல் அமைகிறது.

கு என்பது சேர்விடம் மற்றும் சென்றடைவு குறிப்பதாகும்.

மு + கு =  மூக்கு என்ற சொல்லில் மு என்ற முன்மை குறிக்கும் சிறுசொல் முதனிலை திரிந்து  மூக்கு என்று அமைகின்றது.

மு + கு + அம் =  முகம் என்ற சொல்லில் முன் என்பது முன்பக்கத்தையும் குஎன்பது  இருப்பிடத்தையும்  அம் என்பது விகுதியாகவும் வந்து சொல்லமைவதைக் காணலாம்.

அம் என்பது விகுதி என்றோம். அது நீண்டு ஆம் என்றும் இறுதியில் விகுதியாகவே நிற்கும்.

இப்படி அமைவது தான் முகாம் என்ற சொல் ஆகும்.

மு+ கு + ஆம் =  முகாம் ஆகும்.

முகவை என்ற சொல்லில்  மு+ கு + வு + ஐ என்று  வந்து  இருவிகுதிகள் நிற்கின்றன.  இவ்விரண்டையும் ஒருவிகுதியாகக் கருதி  வை என்றும் சொல்லலாம்.  கொலை என்ற சொல் கொல் + ஐ என்று ஐ தனியாக நிற்றல் காணலாம்.

முகன் என்ற சொல்லில்  முகம் + அன் =  முக + அன் =  முகன் என்றாகி முகத்தை உடையோன் என்ற பொருள்தரும்.  எடுத்துக்காட்டு: ஆறுமுகன்.

முகி என்பது முகன் என்பதன் பெண்பாலாக வருதல் காணலாம்.

இன்னும் பல சொற்கள்  இப்பகுதியில் உள்ளன.  இன்று இத்துடன் நிறுத்துவோம்.  பின்னர் தொடர்வோம்.

நன்றி.

சனி, 23 மார்ச், 2019

தகர சகரத் திரிபுகள். இன்னொரு விளக்கம்.

தகர வருக்கம் ( அதாவது  த, தா தி.....தௌ  என  வருபவை)  சகர வருக்கமாகத்
திரியும் என்பதைப் பல முறை எடுத்துச் சொல்லியிருக்கிறோம்.  தமிழ்ச் சொல்லில் ஆர்வமுடையோர் இவற்றைச் சிக்கெனப் பிடித்து மனத்துள் இருத்திக் கொள்ளுதல் வேண்டும்.  மறக்காமலிருக்க அவ்வப்போது மீள் பார்வை செய்துகொள்ளுதல் கடனே.

இப்போது சில காண்போம்:

நீந்து >   நீஞ்சு     :  இதில் ந் என்பது ஞ் என்று திரிந்தது;  து >  சு ஆனது.

நீஞ்சு என்பது  பேச்சு வழக்கில் உலவும் வடிவம்.  திரிபுகள் எல்லாம் பேச்சு வழக்கில் வருபவை. சில ஒதுக்கமுடியாமையால் பண்டிதன்மாரால் ஏற்கப்பட்டு இலக்கணத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டன. சில ஏற்கப்பட்டு அவை திரிபு என்பது கூட மறக்கப்படலாயிற்று.

ஓர் எடுத்துக்காட்டு:

சிற்றம்பலம் >  சித்தம்பரம் >  சிதம்பரம்  ( றகர ஒற்றும் றகரமும் தகர ஒற்றாகவும் தகரமாகவும் திரிந்தன.)  ஒரு தகர ஒற்று ஒழிந்து இடைக்குறை ஆனது.  இவை எல்லாம் மறக்கப்பட்டு  சிதம்பரம் என்பது தனிச்சொல்லாய்த்
தவறுதலாகச் சிலரால் எண்ணப்பட்டது.  சிதம்பரம் என்பது ஒரு   திரிசொல். அத் திரிசொற்கு நேரான இயற்சொல்  சிற்றம்பலம்  என்பதே.    சிற்றப்பா என்பது சித்தப்பா என்றே வழக்கில் இருந்தாலும் சிதப்பா என்று இடைக்குறை ஆகவில்லை.

சிற்றம்பலம்தான் சிதம்பரம் ஆனது என்பதை மறந்துபோவது மொழிவளர்ச்சிக்கு நல்லதுதான்.  இப்படி பல்லாயிரக் கணக்கான சொற்களின் திரிபு மறக்கப்படுதலாலேதான் மொழியில் சொற்கள் பெருகி,  பொருளிலும் ஒலிப்பிலும் தடைகள் நீங்கி  வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.  சிதம்பரம் போகும் ஒருவன் சிற்றம்பலத்திலிருந்துதான் சிதம்பரம் வந்தது என்று தெரிந்து  அவனுக்கு ஆகப்போவது யாதுமில்லை என்பதையும் கருதவேண்டும். நாம் மொழியறிதலுக்காகவும் புதிய சொற்களை எப்படிப் படைத்துக் கையாள்வது என்பது பற்றியும் திறன் பெறுதற்பொருட்டு  இங்கு இதைக் கூறுகிறோம்..

ற்று என்பது த்து என்று மாறுவது எத்தனையோ பாட்டிகள் காலத்துக்கு முன்னால் உள்ள வரலாறு.

ஒன்பது வரை அறிந்த தமிழன் அதற்கடுத்த பத்தை அறிய அவனுக்கு ஒரு சொல் தேவைப்பட்டது. ஒன்று ஒன்று ஒன்று என்று எண்ணி, ஒன்பது முடிந்து பத்துக்கு வந்துவிட்டான். பத்து என்பது பலவாகிய ஒரு பெரிய எண்.

பல் > பல்து > பற்று > பத்து.

ஒன்பதினும் பன்மை உடைய எண்ணிக்கை.

அல்லது:

பல் >  (கடைக்குறைந்து ) > ப + து > பத்து எனினும் அதுவே.

பல உள்ளுறைந்த ஓர் எண்ணிக்கையே பத்து.  ஓர் எண் ஆதலின்: து என்னும் ஒருமை விகுதி கொண்டு முடிந்தது.

ஆயிரத்துக்கு வந்த போது   ஆகப் பெரியது என்று தமிழன் மனத்துள் நினைத்தான்.    ஆ =  ஆகப்,   இரு = பெரியது;  அம் =   அதுவாம் என்று சொல்லை அமைத்தான்.   ஆ+ இரு+ அம் =  ஆயிரம்.  அவன் எண்ணப் பழகிக் கொண்ட இருட்காலத்தில்   ஒன்று  - அவனுக்குச் சரி;   அதனுடன் இன்னொன்று என்றால் ஆகா,  பெரிது என்று எண்ணி,  இரு = பெரிது என்ற சொல்லைப் பயன்படுத்தினான்.   ஆயிரம் என்றால் ஆகப் பெரிய அமைப்பாகிய எண்ணிக்கை என்று வியந்து சொல்லை அமைத்துக்கொண்டான்.

இவை எல்லாம் கருத்து வளர்ச்சியையும் திரிபையும் விளக்குகின்றன.

இப்போது தகர சகர உறவுக்குச் செல்வோம்.

மிகப் பழங்காலத்தில் 0னகர ஒற்று இறுதியான ஒரு சொல் பன்மையில் வரவேண்டுமென்றால் அதை மகர ஒற்றாக முடிக்கவேண்டும்.

தன் =(  ஒருமை.)
தம் = ( பன்மை)
என் =  ( ஒருமை )
எம் = (பன்மை ).

தன் + தன் =  தம்.    இது பின் சம் என்று திரிந்தது.

இந்தோ ஐரோப்பிய மொழிகளில் கூடுதல் குறிக்கும் சம் இந்தச் தம்மின் திரிபு அன்றி வேறில்லை.

ஆகவேதான் யாம் சொல்வது:  தம் சாரமே > சம்சாரம்.    ஒரு "தன்"னுடன் சேர்ந்து தம் ஆகிப் பின் சம் ஆகின கதைதான்.  சம் என்று கூட்டல் குறிப்பதும் தன் + தன் = தம் > சம்.  ஆகவே தகர சகர உறவு புரிகிறதா?

இன்னும் :

பாய்ந்து > பாஞ்சு
ஓய்ந்து > ஓஞ்சு

என்று பல உள.  இவை மொழி கடைத் திரிபுகள்.  மொழி முதலிலும் இடையிலும் கடையிலும் இத்திரிபு வரும்.  இங்கு மொழி என்றது சொல் என்று பொருள்படும்.  வேறிடங்களில் அது பேசு> பேசை  > பாசை > பாஷை  என்றுமாகும்.  இது ஏகார ஆகாரத் திரிபு என்று வேறு ஆசிரியர்களும் விளக்கியுள்ளனர். இங்கு மொழி - பாஷை என்று அர்த்தமில்லை.  பாடை எனினும் அதே. ஆனால் பாடை என்பதற்குப் பிணப் பாடை என்று இன்னொரு பொருளும் உண்டு.

"தேவ பாடையின் இக்கதை செய்தவர்"  ( கம்பன் செய்யுள்).

சந்திப்போம்.

வெள்ளி, 22 மார்ச், 2019

இடுகைகள் சேமிப்பு - பதிவிறக்கம்.

கூகிள் + என்பதில் உள்ள நம் இடுகைகள் அனைத்தையும் வேறிடத்திற்கு
மாற்றவேண்டியுள்ள படியால் இந்த மாத இறுதியில் வேலையதிகமாய் இருக்கும். இயன்றவரை நம் நேயர்களையும் வலைப்பூவின் மூலம் சந்திக்க முயற்சி செய்வோம். இயல்வில்லை என்றால் மன்னிக்க வேண்டும்.

சிவமாலா வலைப்பூவகம் வழக்கம்போல் நேயர்களுக்குக்  கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

இறைஞ்சுதலும் இலஞ்சமும்.

இலஞ்சம் என்ற சொல்லைப் பார்ப்போம்

இதை "ரான்ஸம் "  என்ற ஆங்கிலச் சொல்லின் திரிபு
என்று சிலர் கூறியதுண்டு.  ஒருவனைப் பிடித்து
வைத்துக்கொண்டு அவனை விடுவிக்க வேண்டப்படும்
தொகையே இவ்வாங்கிலச் சொல்லால் குறிக்கப்படுகிறது.

ஆனால் தொகை தரப்படும் ஆள்கடத்தல் கைது முதலிய
 இல்லாத  நிலைமைகளே பெரும்பாலும்  இலஞ்சம் என்ற
 சொல்லால் குறிக்கப் படுகிறது.  ஆகவே ரான்சம் என்பது
இலஞ்சம் என்று  திரிந்திட வாய்ப்பில்லை. கைதானவனை
விடுவிக்கவும் சில வேளைகளில் இது நடைபெறும் என்றாலும்
இலஞ்சத்தில் ஒரு சிறு பகுதியே அதுவாகும். மேலும் ரான்சம்
என்பதில் ஆளைப் பிடித்துவைத்திருப்போர் அதிகாரம்
இல்லாதவர்கள். இதுவும் ஒரு பொருள்குறுக்கீடாகிறது.

பணம் வாங்கிக்கொண்டு இடையில் நிற்பவன் பிறருக்காக
இறைஞ்சுதல்  நாளும்  பல இடங்களில் நடைபெறுகிறது.
பெரும்பாலான பெரிய அதிகாரிகள் நேரடியாக
வாங்குவதில்லை. கீழதிகாரியே வந்து இறைஞ்சுவான்.
ஆதலின் இப்படிப் பட்டவனைக் குறிக்கவே இறைஞ்சு
 என்ற சொல்லிலிருந்து இலஞ்சம் என்ற சொல்
அமைந்திருக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.

ரகரம் றகரம் முதலியவை லகரமாகத் திரியும்.  றை என்ற
ஐகாரம் கலந்த எழுத்தும் றகரமாதல் உண்டு. இது ஐகாரக்
குறுக்கம் எனப்படும்.  அகரம் இகரம் முதலிய தலையெழுத்து
நீங்கிய சொற்களும் பல. ஆதலின் :

இறைஞ்சு  >  இலஞ்சு > இலஞ்சம் > லஞ்சம்.

என்பதே சரியானதாகும்.

இறை என்பது பணம் செலுத்துதலையும் குறிக்கும்.  இறைஞ்சு
 என்பது வேண்டிக்கொள்வதையும் குறிக்கும்.  இதுவே ஒப்புடைய மூலச்சொல் எனக் கொள்க.  பணம் செலுத்துதல், காரியம் நடை
பெற வேண்டிக்கொள்ளுதல் இரண்டும் இலஞ்சத்தின்
உள்ளமைப்புக் கருத்துகள்.

பிழைத்திருத்தம் பின்.

வியாழன், 21 மார்ச், 2019

கர்நாடகத்தில் லஞ்ச லாவண்யம் கட்டிட வீழ்ச்சி

எவனெங்கு போனாலும் என்ன காசை
என்பைக்குள் போடென்று வாங்கும் கட்சி,
கவைக்காகாக்  குற்றங்கள் பிறர்மேல் சாட்டிக்
காலத்தை வீணாக்கும் காங்கி   ஆளும்
நவைகூடும் கர்நடமே அன்றோ அங்கே
நாட்டியெழும் கட்டிடமும் வீழ்ந்த தன்றே
சுவைதேடி வாழ்கின்றார் ஆளும் மட்டும்
சொல்வதற்கும் இல்லாத துன்பம் உண்டே.

Building collapses are frequent in India. Many firms use cheap materials and bribe officials to evade regulations, while on-site safety is lax.
Read more at https://www.channelnewsasia.com/news/asia/11-dead--50-rescued-after-india-building-collapse-11366616

பொருள்:

கவைக்கு ஆகாக் குற்றங்கள் -  பயனற்ற குற்றச்சாட்டுகள்
நவை  -  தீமைகள்
கர்நடம் :  கருநாடக மாநிலம்
நாட்டி -  அடிக்கல் நாட்டியபின்
எழும் கட்டிடம் -  கட்டப்படும் கட்டிடம்
அன்றே -  அல்லவோ
சுவைதேடி -  இன்ப வாழ்க்கைக்காக 
வாழ்கின்றார் -  வாழ்கின்றவர்.

இந்தியாவில் வேலை இல்லாதவர்கள்.


நல்ல நாணயங்கள் மத்திய வங்கியால் வெளியிடப் பட்டுக்கொண்டிருக்கின்ற அதே சமயம் கள்ளப் பணமும் பிறரால் வெளியிடப்பட்டு அவையும் இந்தியாவுக்குள் நடமாட விடப்படும் அவல நிலை வெகுநாட்களாக தொடர்ந்து வந்த நிலையில்தான் தலைமை அமைச்சர் மோடி சில கள்ளப் பணத்தை மீட்டுக்கொள்ளும் நடவடிக்கையைத் தொடங்கிவைத்தார்.

மத்திய விசாரணையகம் உள்நுழைந்து பிடித்த பல இடங்களில் பெருவாரியான கள்ள நாணயம் பிடிபட்டுள்ளது.

போரென்பதைப் பலவாறு மேற்கொள்ளலாம், பெருவாரியான கள்ளப்பணம் நாட்டில் புழங்கினால் அந்நாட்டின் பொருளியல் வீழ்ச்சி அடைந்து விலைவாசி ஏற்றம் விண்ணைத்தொடும். அரசு வெளியிடும் நாணயம் செல்லாக் காசாகிவிட்டால் ஒரு போரில் தோற்றுப்போன அவ்வளவு சீரழிவையும் அது தரவல்லதாகிவிடும். பல பயங்கர வாதிகள் கள்ளப்பணத்தைக் கொண்டே இந்தியாவுக்குள் நுழைவதாகவும், இவ்வாறு கள்ளப்பணம் அச்சிடும் அச்சகங்கள் இந்தியாவுக்கு வெளியில் பல இருக்கின்றன என்றும் சொல்லப்படுகின்றது.

கள்ளப் பணத்தின்மேல் மோடி போர்தொடுத்தமையால் அவற்றைப் பயன்படுத்தி வாக்குகள் வாங்கிய எதிர்கட்சிள் பலவற்றால் சரியாகச் செயல்பட முடியவில்லை.

தமிழ் நாட்டில் பிடிபட்ட கள்ளப்பணம் பெருந்தொகை என்றும் சொல்லப்படுகின்றது. பிற மாநிலங்களிலும் இதுவே நிலை.

இது எல்லாக் கட்சிகளுக்கும் முன்னைய அரசுகளுக்கும் தெரிந்திருந்தாலும் யாரும் நடவடிக்கை எடுக்காத நிலையில்தான் மோடி நடவடிக்கை மேற்கொண்டார். கள்ளப் பணச் சம்பளம் வாங்கிக்கொண் டிருந்தவர்களுக்கு வேலையில்லாமல் போயிருக்கலாம். அது தவிர்க்கமுடியாதது.

இப்போது நிதி நல்ல நிலைமையில் உள்ளதாகவே அரசறிக்கை கூறுகிறது, இருப்பினும் எதிர்கட்சிச் சார்பான அமைப்புகள் நிதிநிலை நன்றாக இல்லையென்றும் வேலையில்லாதோர் கூடிவிட்டனர் என்றும் கூறுகின்றன. உண்மையானால் இப்படிக் கூடுவதற்கு மோடி மட்டுமே காரணம் ஆகிவிட முடியாது. ஒவ்வோராண்டும் பல்லாயிரக் கணக்கில் புதியவர்கள் வேலைச் சந்தைக்குள் வந்து சேர்கின்றனர். பள்ளி முடித்தவர்கள், முன்னர் உள்ள வேலைகளிலிருந்து நீங்கியவர்கள், ஓய்வு பெற்றவர்கள் என்று பலர் வருவர். எல்லோர்க்கும் உடனே கொடுத்துவிட மோடியாலும் முடியாது. அப்படி மோடி கொடுத்தாலும் அவர்கள் பெறும் சம்பளத்தை நாட்டிலுள்ள வரிச்செலுத்துவோரே கொடுக்கவேண்டி யிருக்கும்.

எதிர்க்கட்சிகள் வெளியிடும் மாற்று நிதி அறிக்கைகள் பொய் அடிப்படையில் புனையப்பட்டவையாகவும் இருக்கலாம். நாட்டில் எத்தனை பேருக்கு வேலை யில்லை என்று யாரும் ஊர் ஊராகப் போய்க் கணக்கெடுக்காத நிலையில் இவை எல்லாம் வெறும் மதிப்பீடுகள் தாம். உழவர்கள் மழையின்மையால் அல்லது நீர்வறட்சியால் பயிர்த்தொழிலில் ஈடுபடாத நிலையில் அவர்களும் வேலையில்லாதவர்கள் தாம். எந்த அரசினாலும் இது போலும் எல்லாவற்றையும் தீர்த்துவைக்கும் மந்திரக் கோல் எதுவும் இல்லை. இவன் வேண்டாம் என்று இன்னொரு கட்சிக்காரனை ஏற்றுக்கொண்டாலும் அவனாலும் அது முடியாத நிலைதான்.

புதிய வேலைகளை உருவாக்கினாலும் வேலை தேடுகிறவர்களுக்கும் அந்த வேலைகள் பொருந்தாதவையாக இருக்கலாம். கட்டுமானத் தொழிலில் வேலை கிடைத்து அதனால் பள்ளியை முடித்து வேலை தேடும் ஒருவனுக்கு என்ன பயன்? அவன் தேடுவது வட்டாட்சியர் வேலையாக இருக்கலாம்; கிடைப்பது மண்சுமக்கும் வேலை என்றால் எப்படி? இத்தகைய நிலைமைகள் சரியாவதற்கு வெகுநாட்கள் வேண்டுமே.

இந்தியாவில் வேலை இல்லாதவர்கள் வெளிநாடுகளுக்குப் போய் வேலை செய்வதுபோல வங்காளதேசம், நேப்பாளம், இன்னும் சுற்றுவட்டத்து நாடுகளிலிருந்து இலக்கக் கணக்கில் இந்தியாவுக்குள் வந்துள்ளனர். அவர்கள் எப்படிப் பிழைக்கின்றனர் என்று தெரியவில்லை. இதையும் கணக்கிட்டால் வேலையில்லார் தொகை பன்மடங்காகும். நேருவின் காலத்திலிருந்தே பல இந்தியர்கள் வெளிநாடுகட்குச் சென்று பிழைக்கின்றனர். வேலையின்மையை முழுமையாக எந்தப் பிரதமரும் தீர்த்துவிடவில்லை. எதிர்கட்சிகள் எப்படி இதைத் தீர்க்கப்போகின்றன என்று இதுவரை எந்தத் திட்டத்தையும் அறிவிக்கவில்லை.

அன்னிய முதலீடு இந்தியாவிற்குள் வரவேண்டுமானால் நாட்டில் ஒழுங்கும் கட்டுப்பாடும் இருக்கவேண்டும். வேலைநிறுத்தம் போராட்டங்கள் பல உள்ள இந்தியாவுக்கு முதலீடுகள் வருவது கடினம். அத்துடன் காசுமீர் பிரச்சினை வேறு மோடியின் கவனத்தை முழுமையாகப் பற்றிக்கொண்டுள்ளது.. போர் தொடங்கும் நிலையானால் வெளியார் பணம் கொண்டுவந்து போட்டுத் தொழில் தொடங்குவது குதிரைக்கொம்புதான். நாலு வருடமே ஆட்சி செய்துள்ள மோடி இதையெல்லாம் தீர்க்கவில்லை என்று சொல்வது பொருத்தமில்லை. எழுபது ஆண்டுகள் ஆண்டவர்களாலும் இதைத் தீர்க்கமுடியவில்லை.

உடனே குணப்படுத்த இயலாத நோயை நாட்படப் போராடியே கொஞ்சம் குறைக்கலாம்.

இப்போது உள்ள நிலையில் மோடியே சிறந்த தலைவர்.

ஞாயிறு, 17 மார்ச், 2019

சூத்திரம் என்ற நூற்பா,



" வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே"

என்று தொல்காப்பியர்  சூத்திரம் செய்கிறார்.

சூத்திரம் என்பது நூற்பாவைக் குறிப்பது.  சூழ் + திறம் >  சூழ்திறம் > சூத்திரம் என்று சொல்லானது,

சூழ்தல் என்பது வினைச்சொல். இது தன்வினை உரு.  இதனைப் பிறவினையாக்கினால் அது சூழ்த்தல், சூழ்த்துதல் . சூழ்வித்தல் என்று  சில மாதிரிகளில் வரவேண்டும்.  சூழ்வித்தல் என்பது வழக்கில் உள்ளது.  மற்றவை அருகின அல்லது ஒழிந்தன.  சூழ்த்து + அல் = சூழ்த்தல்.  சூழ்த்து + தல் = சூழ்த்துதல்.

திரம் என்ற இறுதிநிலை அல்லது விகுதி திறம் என்ற சொல்லின் அமைப்பு நோக்கி அமைந்தது.  எனவே திறம் > திரம் என்பது சரிதான்.  எனினும் இதை இன்னும் ஆழ்ந்து ஆய்க.

திரு > திரும்பு.
திரு > திரி   ( திரு+ இ )   ( நூல் முதலியவை திரும்பிய அல்லது திருகியவாறு
அமைந்தது திரி ).
திரு > திறம்புதல்.   ( சொல் கேளாமல் வேறுவழியில் செல்லுதல்)
திரு > திராவுதல் (  இது பேச்சுவழக்கு:  அகராதியில் இல்லை ).
திரு > திருடு  :   நேர்வழியில் வராமல் மாற்றமாய் ஒரு பொருளைப்பெறுவது.

இனியும் உள. சேர்த்துக்கொள்க.

எடுத்துக்காட்டு

மா:  அளவு.
மாத்திரம் ஓர் அளவிற்கு மேல் செல்லாமல் திரும்பிவிடுதல்.

இவ்வாறு திரும்புதல் கருத்து உடைய திரம் என்ற சொல், விகுதி ஆனபின் பிற சொற்களில் பொருள் இழந்து வெற்றுப் பின்னொட்டு ஆனது. பல விகுதிகட்குப் பொருள் இருந்திருக்கலாம்.  அவை இப்போது அறிதற்கில்லை.

உத்திரம்:  குறுக்குப் பொருத்துமரம் அல்லது சட்டம். மேல்பளுவைக் கீழ்நோக்கிப் பகிர்ந்துகொள்ளுகிறது.  திரும்புதல் கருத்து.  உ = முன் அல்லது மேல்.  திரம் : முன் பாகியின்படி.  ( பாரகிராப்)

களத்திரம் என்ற சொல்லில் களத்து + இரு + அம் =  களத்திரம்  ஆகவே  வீட்டிலிருப்பவள், மனைவி என்பது பொருள்.  களம் = வீடு குறிக்க இடப்பட்ட சொல்.  சகக்களத்தி என்பதிலும் களம் இப்பொருளதே. இதிலிருப்பது திரம் என்னும் விகுதி அன்று.

எனவே திரம் என்பது பொருளுடையதாகவும் பொருளில்லாமலும் வரும் ஒரு
விகுதியாகும்.

சூழ்தல் எனில்  ஆலோசித்தல்.  சூத்திரம் என்பது  சூழ்த்திறம்,  ஆகவே திறம்படச் சூழ்ந்து இயற்றப்பட்ட ஒரு நூற்பா என்பது பொருளாகும்.

சூழ் என்பது முதனிலைத் தொழிற்பெயர்  எனின்  சூழ்த்திரம் > சூத்திரம் என்று ழகர ஒற்று இழந்து அமையும்.   சூழ்திறம் என்ற வினைத்தொகையினின்று அமைந்ததெனின்   சூழ்திரம் ( சூழ்திறம் )  என்ற தகர ஒற்றில்லாத சொல்லில் ழகர ஒற்று கெட்டபின் தகர ஒற்று இரட்டித்துச் சூத்திரம் என்று அமையும். சூத்திரம் என்பது தமிழ்ச்சொல் என்று முடிக்க.

பிழை புகின் பின் திருத்தம்.

சனி, 16 மார்ச், 2019

முயன்றாலும் நல்லிணக்கம் வருமோ?

கொன்றுதான் கொள்கையைக் கூரிதாய்ச் செய்யவேண்டின்
என்றுதான் மாந்தனும் இப்புவி யிற்சிறந்தோன்
என்றுநாம் ஏற்றுக் கணக்கில் கொளலாகும்?
தின்றுநாள் போக்கும் விலங்கினும் கீழ்த்தரத்தோன்
என்றுதான் அன்னவனை இங்கியம்பல் கூடுமே.
இந்நாள் அறிவியலில் ஏற்றம் அடைந்தவராய்
மன்னும் மனிதப் பிறவிகட்கோ இஃதிழுக்கே
ஆகும்; சமயத் தனைவரும் ஒன்றென்று
போகும் மனநிலையில் பொய்யாப் புதுமையுடன்
ஏகும் நலம்காணும் நாளும் எதிர்வருமோ?
ஞாலம் சுழலினும் காலம் அறியாப்புன்
கோலம் பயில்வான் குறைபோக்க நாளும்
முயன்றால் முடிந்திடுமோ தான்.


பன்றி வருடமே வருக பாடல் சிலவரிகட்குப் பொருள்

பன்றி வருடமே வருக என்ற கவிதையில் சில அடிகளுக்குப் பொருள்:

"வானை முத்தமே இடும்
வரையாய் வளரரத் தினம்"

இதன் பொருள்:  ( இ-ள்). 

வளர் -    வளருகின்ற;   அரத்தினம்  -  இரத்தினமாகிய செல்வம்;
 வரையாய்  -   மலையாக அல்லது மலைபோல;
வானை முத்தமே இடும் -   வானுயர  வளர்ந்து  நிறைவு தரும்.

பொழிப்பு:   செல்வம் பன்றிவருடத்தில் வானுயர வளரும் .


"வெல்வ தெலாம் உடன் ஒன்றி
பன்றி தருவதும் நன்றி."

இ-ள்:  வெல்வ தெலாம் -   நாம் உழைத்து நமக்குக் கிடைப்பதெல்லாம் ,
உடன் ஒன்றி -  காலம் கழியாமல் ஒன்றாகச் சேர்ந்து;
பன்றி  -  சீனர்களின் இந்தப் பன்றி ஆண்டு;
தருவதும் =  நமக்குக் கொடுப்பதுவும்;
நன்றி =  நன்மையே  ஆகும். தீமை இராது என்றபடி.


"பின் நிறை உழைப்பதில் விம்மி,
பெற்றவை இல்லையே கம்மி."

இ-ள்:  பின் நிறை -  பிற்காலத்தில் முழுமையாக;
உழைப்பதில் விம்மி -    கடின உழைப்பு தன் எல்லையை எட்டி;
பெற்றவை -  அதனால் நாம் அடைந்த நன்மை;'இல்லையே
கம்மி -   குறைவே இல்லை.

இல்லையே கம்மி  என்பதைக் கம்மி இல்லையே என்று
மாற்றிப் போடுக.

இதில் குறிக்கப்பெற்ற பாடல் பிப்ரவரி 5ல் வெளியிடப்பட்டது.

நன்றி என்பதற்கு நன்மை என்பதும் பொருள்.

பிழைத்திருத்தம் பின்.

வெள்ளி, 15 மார்ச், 2019

பன்றி வருடத் தாக்குதல்கள்

பன்றி வருடத்தில் நன்று வருமென்றால் 
ஒன்று மிதுகாறும் இன்றேகாண்--- சென்றவை,
கொன்றதும் மூச்சுமே   நின்றதும் போகட்டும்,
நன்றே வருக இனி.

இந்தப் பன்றி வருடம் / ஆண்டு என்பது பல கொடூரங்களைக்
கொண்டுவந்துள்ளது. அவை உங்களுக்குத் தெரியும்.
அவற்றை வரணனை செய்தல் தவிர்ப்போம். மறப்போம்.
இல்லையென்றால் சோகத்திலிருந்து தப்பமுடியாது.
கவலையே மிஞ்சும். இனி வருவது நல்லதாகட்டும்
என்பது இப்பாடல்.

யாப்பு:  மோனைகளைக் கையாளாமல் பெரிதும்
எதுகைகளாலே ஆக்கப்பட்டுள்ளது இப்பாடல்.
எதுகைகள்:  பன்றி, நன்று, ஒன்று, இன்று,
கொன்று,  நின்று, நன்று என்பன.

இது நேரிசை வெண்பா. ஒரு சீன விளம்பரத்தைப்
பார்த்தேன். அது இது பன்றி  ஆண்டென்பதை நினைவு
படுத்தியபோது இப்பாடல் முகிழ்த்தது.  உடன்
கைப்பேசியில் பதிந்துகொண்டேன்.  வாசித்து
மகிழ்வீராக.  இவ்வாண்டில் எல்லாம் நல்லதே
 நடக்கட்டுமாக.

வருடம் சொல்லமைப்பு

வருடம் என்ற சொல்:  அறுபது ஆண்டுகளும்
மீண்டும் மீண்டும் சுற்றுச்
சுற்றாக வருபவை.  அதனால் இதன் அடிச்சொல்
வருதல் என்பதே என் ஆய்வு.  மழை குறிக்கும் வர்ஷ
என்பதும் மழை வருடத்தில் குறிப்பிட்ட மாதங்களில்
வருவதாலே வருஷ என்று அமைந்தது. இவை தமிழ்
மூலங்கள்.  ஆண்டு என்பது ஆட்சி என்பதிலிருந்து
வருகிறது.  அடிச்சொல் ஆள் என்பது;  அது ஆளுதல்.
இனி அடுத்தடுத்து வருவதால்,  அடு> அண்டு> ஆண்டு
எனினும் ஒப்புதற்குரித்தே. அதனால் ஆண்டு என்னும் சொல்
இருபிறப்பி ஆகும்.

சோகம்

சோகம் :  இது சோர்தல் அடிப்படையில் எழுந்த சொல்.
 சோர்+ கு+ அம் = சோர்கம் > சோகம். ரகர ஒற்று
கெட்டது.  ரகர ஒற்று கெடுதல் முன் இடுகைகளிலும்
விளக்கப்பட்டுள்ளது. ய ர ல வ ழ ள பெரிதும் வீழ்வன.
தேய்ந்து அழிவது தேகம்:  தேய்+கு+ அம் =  தேய்கம் > தேகம்
ஆனது காண்க.

தேள்வை (தேவை)  துளிக்கடை (துக்கடா)

ளகர ஒற்று  மற்றும் ளகர வருக்க வீழ்ச்சி:  தேள்வை > தேவை; 
துளிக்கடை > துக்கடா. (ளி).

கொடியது ஊர்ந்து நாம் அறியாமலே வந்துவிடுகிறது.
ஆகவே கொடு ஊரம் ஆகிற்று. கொடூரம்.

நன்றி.

துக்கடா எப்படி அமைந்த சொல் தெரியுமா? கச்சேரி?

துளிக்கடை என்பது துக்கடா என்று திரிந்தது,  இதற்குப் பொருள்:  கடைசித் துளி என்பதுதான்,  ( அதாவது:  கடைத்துளி)

துளிக்கடை > துக்கடா.

இத்திரிபில் ளி என்ற எழுத்துக் குறைந்து ( இடைக்குறை )  கடை என்பதில் உள்ள டை டாவாகத் திரிந்தது.

விளக்கம்:

https://sivamaalaa.blogspot.com/2014/03/blog-post_18.html


கதம் என்றால் ஒலி.

கத்து >  கது.  இடைக்குறை.
கது  > காது  ( ஒலிவாங்கி உறுப்பு).  செவி.  முதனிலைத் திரிபு.  நீட்சி.
கது > கதை > கதா.
கது >  கதம் :  எ-டு:  சங்கதம்.
கோபத்தில் ஒலி எழுப்பப்படுவது இயல்பு.  அதனால் கதம் என்பது கோபம் என்றும் பொருள்பெறும்.  இது பின்வரவுப் பொருள்.

ஒலிபெருக்கி இல்லாத பழங்காலத்தில் பாடியவர்கள் கத்திப் பாடவேண்டி இருந்தது.

கதுச்சேரி >  கச்சேரி.

இதுவும் இடைக்குறைச் சொல்லே.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

.
 

சாத்துதல் சொல்விளக்கம்.

இன்று சாத்துதல் என்ற சொல்லை நோக்கி உணர்ந்துகொள்வோம்.

இச்சொல்லுடன் தொடர்புடைய வேறு சில சொற்களைக் கண்டு அளவளாவி யுள்ளோம். மறந்திருந்தால் நினைவூட்டிக் கொள்வதில் யாதுமொரு தவறில்லை.


https://sivamaalaa.blogspot.com/2018/06/blog-post_29.html  இங்கு சாளரம் என்ற சொல்லுடனான தொடர்பு ஆய்வுபெற்றது.



htmlhttps://sivamaalaa.blogspot.com/2017/12/blog-post_19.html 
சாதுவன் முதலிய சொற்கள் இங்கு நம் கவனத்தைக் கவர்ந்துகொண்டன

https://sivamaalaa.blogspot.com/2018/10/blog-post_6.html

இதில் ஐதீகம் என்ற சொல்லினை விளக்கியுள்ளோம்.  இவ்வுரைச் செலவின்போது சாத்துதல் என்பதும் தொட்டுரைக்கப்பட்டது.  An explanation in passing. You may find it interesting.

இந்த ஐதீகம் என்பது ஐடியா, ஐடியலாஜி  என்னும் சிலவற்றுடன் பிறவித் தொடர்புற்றது ஆம்.

இனிச் சாத்துதலுக்குச் செல்வோம்.

சார்தல் வினைச்சொல்.   சார் என்பது  சார்த்து என்றாகும். இது பிறவினை வடிவம்.  இவ்வாறாம்போது    சார் என்பதில் ஈற்று ரகர ஒற்று கெட்டுவிடும்.   ஆகவே சார்த்து > சாத்து ஆகும்.

ஒரு கதவைச் சாத்துகையில்  திறந்தவாறுள்ளதைக் கொண்டுபோய்க் கதவு நிலைச் சட்டத்தில் சார்த்துகிறோம்.  ஆகவே அது சாத்துதல்.

பயன்பாட்டு வழக்கில் ஒருவனைச் சாத்து சாத்து என்று சாத்திவிட்டார்கள் என்றால்  அடிக்கும் கைகளைக் கொண்டுபோய் அவன் உடலில் சேர்த்து வலிக்கும்படி செய்தனர் என்பதே பொருள்.

உணர்பொருளைச் சார்ந்தவாறு அதன் உள்ளமைவாக இருக்கும் எதையும் அதன் சாரம் என்போம்.   இது அப்பொருளைச் சார்ந்தது என்பதே அர்த்தமாகும்.

மின்னியலில் அதைச் சார்ந்துள்ள அல்லது உள்ளுறைந்த ஆற்றலை மின்சாரம் என்றனர்.  அதாவது மின் ஆற்றல் சார்ந்தது என்பது அர்த்தமாகும்.

சார் > சாரம்.

தம்மைச் சார்ந்திருப்பவளே சம்சாரம்.  தம் > சம்.

தம்சாரம் > சம்சாரம்.  தகரம் சகரமாகும்.  யாப்பில் மோனையுமாகும்.

தூங்காதே தம்பி தூங்காதே  -
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே என்ற பாட்டில்
 தூ> சோ மோனையுமாய்   ங்  ம்  இடையின ஒன்றிவருதல் எதுகையுமாய் நிற்றல் காணலாம்.

சார் > சாரை.  பாம்பு வகையில் தன்வலிமை குறைந்த ஒரு பாம்பு.

சாரீரம் :  தொண்டையைச் சார்ந்தவாறு ஈர்க்கப்படும் ஒலி.  சார்ந்து ஈர்த்தல். 

will review for typos


.





வியாழன், 14 மார்ச், 2019

வானில் பறக்கும் ஆசை




முற்றும் துறந்த முனிவர்கூட வான்ப  றக்கிறார்
சுற்றிப் பார்க்கும் ஆவல் யார்க்கும் தீர்ந்த வாறிலை
பற்றி நின்று படமெ டுத்துப் பின்னர் வான்வெளி
உற்றுச் சென்றும் ஊர்கள் பார்த்தல் உவகையாகுமே.

செவ்வாய், 12 மார்ச், 2019

தீபகற்பம்.

தீபகற்பம் என்ற சொல்லை முன் விளக்கியிருந்தோம்.   இதன்பொருள் "தீவு அல்லாதது"   என்பதுமட்டுமே எனற்பாலதை நாம் எண்ணிப்பார்க்கவேண்டும்.  ஒரு பெருநிலத்துடன் அறவே தொடர்பு தீர்ந்தது தீவு ஆகும்,    தீர் > தீர்வு > தீவு.   இங்கு ரகர ஒற்று மறைந்துள்ளமை காணலாம்.  இதற்கோர் எடுத்துக்காட்டு:  பேத்தி என்ற சொல்.   பேர்> பேர்த்தி > பேத்தி ஆதல் காண்க.  வினைச்சொல் ஆக்கத்திலும் :  சேர் > சேர்மி > சேமி > சேமித்தல் என்று சொல்லமைதலைக் காணலாம்.  தீபகற்பம் என்பது :   தீவகம் அல்லாதது என்று பொருள் தருமாறு புனையப்பட்டுள்ளது,   தீவக(ம்) + அல் + பு+ அம்.  அதாவது தீவு அன்று என்பதுதான்.  வியக்கத்தக்க பொருண்மையை உள்ளடக்கி இஃது புனையப்படவில்லை எனினும் எளிமையான புனைவு என்று இதனை நாம் புகழலாம். இதனை முக்கரைத்தொடர் என்பதும் ஏற்புடைத்து என்பதை நாம் சுட்டிக்காட்டியுள்ளோம்.
பு  அம் என்பன இருவிகுதிகள்.   துடைப்பம் முதலிய சொற்களில் வந்துள்ளமை அறிந்தின்புறுக.   துடைத்தல்:   துடை+பு+அம்.
பெருநிலத் தொடர்பு முற்றுந்தீர்ந்த  ஒன்று தீர்வு > தீவு  ஆகும்.  ரகர ஒற்று வேறு பல சொற்களில் போல இதிலும் மறைந்தது.

 தீவகம் அல்லாத நிலம் என்று இதை வாக்கியமாக்கலாம்.  தீவு எனினும் தீவகம் எனினும் ஏறத்தாழப் பொருள் ஒன்றே.  அகமென்பது ஓர் கூடுதல் இறுதிநிலையாக வருகிறது. இதற்குப் பொருள் கூறுவதாயின் அகம் - தீவின் உட்புற நிலம் எனினும் இழுக்காது.

தீவ என்பது தீப என்று திரிந்துள்ளது.  வகர பகரப் போலி.

தீப + கற்பம்?

இதில் தீபம் ஏதுமில்லை.  தீபத்திற்குக் கற்பம் ஏதுமில்லை.  தீபத்தில் எதுவாயினும் எரிந்துவிடுமாதலின் கற்பம் தங்குவதில்லை. தீவகத்து ஒரு கற்பம் இருக்குமாயின் அதுபோலும் தூய கற்பமும் வேறில்லை என்று முழங்கலாம். இதனை இப்படிக் கற்பித்து வரைதல் ஒருவனின் கற்பனைத் திறனை விரித்துக்கொள்ளுதலாம். தீபகற்பம் என்னும் நிலம் முப்புறம் திரி எரிய ஒருபுறம் பிடி இருத்தல்போல என்றுகூட ஒப்பீடு செய்யலாம் எனினும் சொல்லமைப்பு அதுவன்று.

 இவற்றில் கிருதமொன்றும் இல்லை.  அயலென்பார் அறியார். சங்கதம் இந்தோ ஐரோப்பிய மொழியோ வெளிநாட்டு மொழியோ இல்லை என்று ஒப்பின் இச்சொல் அம்மொழிக்கும் உரித்தே ஆகும்.  ஆனால் தீபகற்பமென்பது இந்தோ ஐரோப்பியச் சொல் அன்று.

குறிப்பு:
முக்கரைத்தொடர் - பொருள்: மூன்றுபக்கம் கரைகள் ஒருபுறம் நிலத்தொடர்.



 

திங்கள், 11 மார்ச், 2019

தொந்தி.

இன்று "தொந்தி"  என்ற சொல்லைக் காண்போம்.

இச்சொல்லில் தி என்பது விகுதி  மிகுதி என்ற சொல்லில் தி விகுதி  யானதுபோல் தொந்தி என்பதிலும் தி எனல் விகுதி.

தொந்தி என்ற சொல்லில் தொம் என்பதே பகுதி அல்லது முதனிலை ஆகும்.

தொம்+ தி =  தொந்தி.

தொங்கு என்ற சொல்லை ஒப்பிடுக.

தொம் + கு =  தொங்கு.

தொந்தி என்பது தொங்குவயிறு.

தொம்பை தொம்மை தொப்பை
தொம்பைக்கூடு  தொம்பைக்கூண்டு தொம்பைமாலை முதலியவும் உள,

தொம்பை என்பது தொங்கும் பானை போன்ற வயிறு.

ஞாயிறு, 10 மார்ச், 2019

சொற்சிந்தனைகள். சித்து விளையாட்டும் சித்தரும்.


இந்தியச் சமய வரலாற்றில் இறைப்பற்று மேலீட்டால் ஒழுக்கமுடைய பெரியோர் இருவகையானோர் தோன்றினர். ஒருவகையினர் மிகப் பெரியோர் என்று எண்ணப்பட்டனர். இவர்கள் மாமுனிவர்கள். அண்டமா முனிவர்கள் என்றும் குறிக்கப்பெற்றனர். சங்கதத்தில் மகரிஷிகள் என்றும் தமிழில் பேரிருடிகள் எனவும் சொல்லப்பட்டனர். பிறவிப் பெரியோர் என்றும் சொல்லலாம். “ மக " என்பதும் " மகா" என்பதும் இவர்களுக்கு அடைமொழிகளாய் வந்தன.

இந்த மாமுனிகளுக்குக் கோட்டுக்கு இணைகோடுபோல வேறு இறைப்பற்றுச் சிந்தனையாளர்களும் தோன்றினர். மன்பதையினுள் இல்லறம் நடத்தித் திடீரென்று தோன்றிய உணர்வு வேறுபாட்டினால் அவ்வில் வாழ்வினைக் களைந்தெறிந்து துறவியானவர்கள் இவர்களிற் பெரும்பாலோர். இத்தகையோர் மாமுனிவர்கள் ஆகாவிட்டாலும் சிறுமுனிவர்கள் ஆயினர். இவர்களை மக்கள் அப்படிக் கருதியதால் சிறு என்ற சொல்லினின்றே தோன்றிய சொல்லினால் இவர்கள் சுட்டப்பட்டனர்.

சிறு + அர் = சிற்றர் > சித்தர்.

இவர்கள் மாமுனிவர்கள் போல் பெருந்தவம் இயற்றாமல் அவ்வப்போது அறிவுரைகளை நடப்பிற்கேற்பவே உதிர்த்தனர். இவை " சிந்தனை" எனப்பட்டன. இதுவும் சிறு என்பதனுடன் தொடர்புடைய அடிச்சொல்லாகிய சிந்து என்பதிலிருந்து பிறந்ததே.

சில் = சிறியது.
இதற்கு எதிர்ச்சொல் பல் என்பது.

சில் > சில; பல் > பல.
சில் என்பது உருவிற் சிறியதும் எண்ணிக்கையிற் சிறியதும் என இருவேறு விதமானவை.

இவர்கள் வியக்கும்படியான சில சொன்னோராவார்.

சில் > சின் > சிந்து. ( லகர 0னகரப் போலி )
சில்+து > சிற்று > சித்து ( திரிபு ) > சிந்து ( மெலித்தல் விகாரம்).

இவை இருபிறப்பிகள்.

சிந்து > சிந்தி > சிந்தித்தல் ( வினையாக்கம் ).
சிந்தி + அன் + = சிந்தனை. அன்: சொல்லாக்க இடைநிலை. : விகுதி.

அவ்வப்போது நிகழ்வுக்கு ஏற்ப எண்ணிச் சொல்லுதல்: சிந்தனை. சிறு சிறு மன உணர்வு வெளிப்பாடுகள்.

இப்போது இது (சிந்தனை ) தன் சிறுமைப் பொருள் இழந்துவிட்டது.

இந்தச் சிற்றர்கள் (சித்தர்கள் ) செய்த வியக்கத் தக்க செயல்கள்: கசக்கும் கரும்பை இனிக்கச் செய்வது; வாழைமட்டையில் நெருப்பு எரியவைப்பது போலும் செயல்கள்: ----- வியன்செயல்கள் ----- சித்துகள் என்றே சொல்லப்பட்டன. சிறிது நேரத்தில் கண்டு வியந்து போற்றத்தக்கவை இவையாம்.

தன்வினை தன்னைச் சுடும்
ஓட்டப்பம் வீட்டைச் சுடும்

என்று கூறிய மாத்திரத்தில் கூரைமேலெறிந்த அப்பம் தீப்பற்றி எரிகிறது. இதுவும் சித்து ஆகும். ஊர்மக்கள் இவை போல்வன சித்துவிளையாட்டு என்றனர்.

நந்த வனத்திலோர் ஆண்டி --- அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
கொண்டுவந்தானொரு தோண்டி --- அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி.

தோண்டி: தோண்டப்பட்டது போன்ற உள் குடைவான மண்பானை.

சொல்லமைப்பு முறையில் சித்தர் என்ற பெயர் எப்படி ஏற்பட்டது என்பதே விளக்கம். பின் வழக்கில் அது வேறு பொருள் எல்லைகளைத் தாண்டிச் செல்லவும் கூடும்.

சிந்து: அளவடி யல்லாத சிறிய கவி.

அறிந்து மகிழ்க.

பிழைபுகின் திருத்தம் பின்.

சனி, 9 மார்ச், 2019

மக்கள் கண்டுபிடித்த இலக்கண அமைதிகள்.

இன்று ஓர் அன்பருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன். நான் அவரைக் கேட்டது:  சாமி! எப்படி இருக்கீங்க?  என்பதுதான்,

பேச்சுத் தமிழிலும் ஒரு கவர்ச்சி இருக்கிறதன்றோ?

செந்தமிழ்:   எப்படி இருக்கிறீர்கள்?
பேச்சுத்தமிழ்:  எப்படி இருக்கீங்க?

இது ஒரு சுருக்கமாகவே தெரிகிறது.  தொகுத்தல் என்றாலும் இடைக்குறை என்றாலும் சுருக்கம்தான்.

இரு :  பகுதி.
க்:         சொற்பகுதி புணர்வில் வலி மிகுதல்.
கிறீர்கள் >  கீங்க.

இதைக் கூர்ந்து நோக்கினால் கிறீர்கள் என்பது கீங்க என்று உருமாறியது பெரிய மாற்றம்தான்.

கிறீர்கள் >  கி  ( றீர் ) க ( ள் )  >  கீக >  கீங்க.

ளகர ஒற்றுக் கெட்டது.  கள்  >  க ஆனது.

(க் +  இ )  + ( ற்  + ஈர் )  என்பவற்றிலே பெரிய மாற்றம்.

இவற்றில்  க் + ஈ இரண்டும்  இணைந்து  கீ  என்று மாறி ,   மற்ற இ, ற், ர் ஆகியவை வீழ்ந்தன.

கீ என்பது க என்ற இறுதியைச் சந்திக்க   கீக என்பது ஒரு ஙகர ஒற்றுப்பெற்றது,
ஆக கீங்க ஆனது.

ரகர ஒற்று பெரும்பாலான திரிபுகளில் ஒழிந்துவிடும்.  இங்கும் தொலைந்தது.

வருவார்கள் என்பது வருவாக என்னும் போது  ரகர ஒற்று ( ர் )  ஒழிந்தது. ளகர ஒற்றும் ஒழிந்தது.

ளகர ஒற்று மறைவது தேள்வை என்பதில் தேவை என்ற மாற்றம் ஏற்படுகையில் கண்டுகொள்க.

செய்தீக வந்தீக என்பனவும் உள்ளன. இவற்றில் ர், ள் தொலைதல்.

இடைக்குறை தொகுத்தல் முதலியவற்றைக் கண்டுபிடித்தவர்கள் மக்களே.
புலவர்கள் அல்லர் என்று அடித்துச் சொல்லலாம்.  ஆனால் தமிழிலக்கணம் இவற்றை ஏற்றுக்கொண்டுள்ளது,

திருத்தம் பின்
ஒரு பிழை திருத்தம் பெற்றது.


 

வக்கரம் வக்கிரம்

வக்கரித்தல்

வக்கரித்தல் என்ற சொல் பேச்சு வழக்கில் உள்ளதா என்று தெரியவில்லை. எங்காவது வழங்கிக்கொண்டிருக்கக் கூடும். அதன் பேச்சுவழக்கு சுருங்கிவிட்டது என்பது சரியாகவிருக்கும்.
ஆனால் அது சோதிடத்தில் (கணியக் கலையில்) வழக்குப் பெற்றுள்ளது.  சனிக்கோள் வக்கிரமாய் உள்ளது என்று சோதிடர்கள் சொல்வர்.  வக்கிரம் யாதென்று அறிவோம்.
ஒவ்வொரு கோளும்  ஒரு குறிப்பிட்ட கால அளவு ஓர் இராசி வீட்டில் தங்கும். பின் அது அடுத்த இராசி வீட்டுக்குப் போய்விடும்.  இப்படிப் போன கோள்  மீண்டும் வந்து விட்டுப்போன வீட்டில் தங்கினால் அதற்கு வக்கரித்தல் என்பர்.
வக்கரித்தலாவது திரும்பி வந்திருத்தல். வக்கரித்தல் முடிந்த பின்பு அக்கோள் மீண்டும் போய்விடும். இஃது இயற்கை நிகழ்வை ஒட்டியே சோதிடத்தில் கூறப்படுகிறது.
இச்சொல் எப்படி அமைந்தது என்பதைக் கூறுவோம்:
வரு+ கு +  அரு + இ + தல்
=வருக்கரித்தல்
=வக்கரித்தல்.
இதில் கவனிக்க வேண்டியவை:
வரு என்பது வ என்று திரியும்.    வருவான் (  எ.கா)  :  வந்தான் ( இ.கா). ரு என்னும் எழுத்து கெடும் அல்லது வீழும்.
கு என்பது சேர்விடம் குறிக்கும் இடைநிலை. இது தமிழில் ஒரு வேற்றுமை உருபுமாகும்.
அரு என்பது அருகு என்பதன் அடிச்சொல்.  அருகில்  என்ற சொல்லை நினைவு கூர்க.   அரு> அரி.   அருகில் வரல்,
 நெருங்குதல். 
ஒன்றன் அருகில் சென்று இழுத்து எடுத்தலும் அரித்தல் எனப்படும்.  செடிகொடிகளை அரித்தெடுத்தல் போல.
இங்கு அது அருகில்வரல் என்ற பொருளில் வருகிறது,
ஆகவே இதன் பொருள்  வந்து நெருங்குதல்.  அதாவது திரும்பிவந்து நெருங்குதல்.
இனி வக்கரி + அம் =  வக்கரம்.  இகரம் வினையாக்க விகுதி, கெட்டது.  அம் விகுதி புணர்த்தப்பட்டது. இது பின் வக்கிரம் என்று திரிந்தது.
சனி முதலியவை திரும்ப வந்து தொல்லை தருமாதலால் அரித்தல் என்ற வழக்குச் சொல்லாகக் கொண்டு பொருள் கூறினும் பொருந்துவதே.
வக்கரம்  என்பது பிற்காலத்து வக்ரம் என்றும் எழுதப்பெற்றது.  இது அயல் சென்றதால் ஏற்பட்ட ஒலித்திரிபு. பின் தமிழுக்குத் திரும்பி வந்த நிலையில் வக்ரம் > வக்கிரம் என்று இகரம் புகுந்து மாறிற்று.
வக்கரம் என்ற ஆதி அமைப்புச் சொல் வழக்கொழிந்தது .
இச்சொல்லுக்கு அடியாய் நின்றது வரு > வ என்பதே ஆகும்,

திருத்தம் பின்பு

வியாழன், 7 மார்ச், 2019

குடக்கு மற்றும் தொடர் கருத்துச் சொற்கள்

 குடக்கு (  குணக்கு ) என்ற பழந்தமிழ்ச் சொற்களை மீள்பார்வை கொள்வோம். இவற்றை நாம் மறந்துவிட லாகாது. இவற்றுள் குடக்கு என்பதை இன்று அறிவோம்.

குடக்கு என்பது மேற்றிசை அல்லது மேற்குத் திசையைக் குறிக்கும். இச்சொல் குடகம் என்று இன்னொரு வடிவமும் கொள்வதாம்.

குடு என்ற அடிச்சொல் வளைவு அன்ற அடிப்பொருளை உடையதாகும். ஒன்று சேர்ந்து வாழ்ந்த மக்கள் பெரும்பாலும் தாங்கள் கூடி நிற்கையில் வளைவாக நின்ற அல்லது இருந்த படியால் குடு என்ற சொல்லுக்கு சேர்ந்து இருத்தல் என்ற பொருளும் பின்னர் வந்து சேர்ந்தது, மேலும் அவர்கள் ஆதிகாலத்தில் உள்ளிருந்து வாழ்ந்த குகைகள் முதலியவையும் வளைவுகள் உள்ளவையாய் இருந்தமையும் அவர்களும் வளைந்து நெருங்கி இருந்தமையாலும் வளைவுக் கருத்தினின்றே குடு> குடி; குடு > குடும்பு; குடு> குடும்பம் என்ற சொற்களும் அமைந்தன.

ஆதி மனிதன் நேர், வளைவு, மேல், கீழ் என்றும் முன், பின் பக்கம் - இடம் வலம் என்றும் அறிந்துகொண்டு இக்கருத்துக்களினின்றே பிற கருத்துக்களையும் வளர்த்துக்கொண்டான் என்பதறிக.

பழங்காலத்தில் மேற்குத் திசையாகத் தமிழன் அறிந்துகொண்ட குடக்குத் திசையும் வளைந்த நிலப்பகுதிகளாக இருந்திருத்தல் வேண்டும். இங்கு நாம் கருதுவது கடலோரக் கரை வளைவுகள். அதனால்தான் அத்திசையை அவன் "குடக்கு" என்று குறித்தான்.

குடம் என்ற சொல்லும் அது வளைவாகச் செய்யப்பட்டமையினாலே குடு > குடு+ அம் = குடம் என்றானது. நாம் பிடிக்கும் குடையும் வளைவு உடையதாய் இருந்தமையின் குடு + = குடை என அமையலாயிற்று.

குடம்போன்ற அல்லது அதனை ஓரளவு ஒத்த உருவில் அமையும் பலாப்பழமும் குடக்கனி எனப்பட்டது.

தூணில் அமைக்கும் குடம்போலும் உறுப்பு குடத்தாடி எனப்படும், இந்த குட உருவமைப்பு கீழ் வளைவு உடையதானதால் தாடி எனப்பட்டது. தாடி என்ற சொல் அது கீழ்நோக்கி வளைந்துள்ளதைக் காட்டுகிறது. இது தாழ் + அடி என்பதாகும். தாழ் + அடு + : தாழ நோக்கி மயிர் வளர்ந்து நெஞ்சை அடுத்து இருப்பதால் அது தாழ் + அடு + . நாளடைவில் தாழடி என்பது தாடி என்று குறுகிற்று. இடையில் வரும் ழகரம் டகரமாகவோ இடைக்குறைந்தோ அமையும். எடுத்துக்காட்டுகள்:

தாழ்வு+ அணி = தாழ்வணி > தாவணி. இதில் ழகர ஒற்று நீங்கிற்று.
வாழ்+ அகு + = வாழகை > வாடகை. இடத்தில் வாழ்கூலி. இதில் அகு என்பது அகம் என்பதன் அம் விகுதி குறைந்த கடைக்குறை.

அகம் > அகை.
= அங்கு; கு= சேர்விடம். இப்படி அமைந்த சொல்லே அகமென்பது. உள் சென்று சேருமிடம் அகம். இது சுட்டடிச் சொல் அமைப்பு.

வாடகை குடக்கூலி குடிக்கூலி எனப்படுதலும் உண்டு.

சிலம்பு வளைந்ததாதலின் குடஞ்சூல் எனவும் படும்.

மடித்து இருக்க முடிந்த நம் உடம்புப் பகுதி: மடி. இது காலில் வளையத் தக்க ( மடிப்பதும் வளைவுதான் ) கால் பகுதி ஆதலின் குடங்கால் என்றும் சொல்லப்படும். குடங்காலின் வெளிப்பகுதி ( மடித்து அமர்கையில்) முழங்கால். முடங்குதலும் மடங்குதலும் ஒன்றுதான். இரண்டும் போலிகள். இவற்றுள் முடங்குதல் முந்துசொல். முடங்கால் > முழங்கால்.

ஒப்பீடு:

வாழகை > வாடகை; (> )
முடங்கால் > முழங்கால். ( > ).

சந்திப்போம்.

குறிப்பு:

முடங்குவதால் ( மடங்குவதால் )  (  முடு ) >  ( முடம் )  > முழம் என்றமைந்து ஓர் அளவையைக் குறித்தது.   முடங்கிப் போன கால் கைகள் உடையவன் முடம்> முடவன்,   அடிச்சொல்: முடு. தொடர்ந்து செல்ல இயலாத இடம்: முடுக்கு.  (மூலை முடுக்கு). அங்கு மடங்கித் திரும்புக என்பது கருத்து,

திருத்தம் பின்.
[ இணையத்தில் வாசித்தபோது இதிற்கண்ட
ஓர் எழுத்துபிழையை இப்போது கண்டுபிடிக்க இயலவில்லை.
மீண்டும் வருவோம்.]  14022022 0358