செவ்வாய், 3 மார்ச், 2015

அணிலாடு முன்றிலார் பாடியது kuRunthokai

காதலர் உழையர் ஆகப்  பெரிதுவந்து 
சாறுகொள் ஊரில்  புகல்வேன் ; மன்ற 
 அத்த  நண்ணிய  அங்குடிச் சீறூர் ;
மக்கள் போகிய அணிலாடு முன்றில்
புலம்பு இல் போலப்  புல்  என்று 
அலப்பென்  தோழி அவர் அகன்ற ஞான்றே 


அணிலாடு முன்றிலார் பாடியது.  குறுந்  41.

காதலர் உழையர் ஆகப்  பெரிதுவந்து  - காதலர் பக்கத்தில் இருக்க, மிகவும் 
மகிழ்ந்து ;
சாறுகொள் ஊரில்  புகல்வேன்  -    திருவிழாக் காலத்தில் ஊர் மகிழ்வதுபோல் நான் மகிழ்வேன் ; 
மன்ற ‍ --உறுதியாக;
அத்த நண்ணிய அங்குடிச் சீறூர்  - பாலை வனத்தில் உள்ள அழகிய சிறிய ஊர்;
(அங்குள்ள )
மக்கள் போகிய அணிலாடு முன்றில்  --  ‍‍‍வீட்டில் உள்ளோர் போயபின்பு அங்கு வந்து அணில்கள் முற்றத்தில் ஆடும்;
புலம்பு இல் போல -- தனிமையான இல்லம் 
 போல;
புல்  என்று அலப்பென்  -- பொலிவு இழந்து வருந்துவேன்;

 இது தலைவி தோழிக்குச் சொல்லியது. காதலர் பிரிந்து சென்று விட்டார்.அவர்   நீங்கிய  போது எப்படி இருந்தது எனக்கு:  வீட்டிலுள்ளோர் குடிமாறிப் போய்விட்ட சிறு குடிலில் முற்றத்தில்  ஆளில்லாத காரணத்தால் அணில்கள் வந்து அங்குமிங்கும் ஆடிக்கொண்டிருக்கின்றன;  அது தனி இல்லம் . பார்க்கப் பரிதாபமான  நிலைமை , அந்தத்  தனிக் குடிலாகிவிட்டேன். துன்பம் தாண்டவமாடு கிறது  தோழி . புல்  இறக்கம்  இழிதல் முதலியன குறிப்பது. downcast . அலப்பென்  என்பது  அலப்பேன் என்பதாம்.   ஏன்  வினா என்பாருமுளர். அலத்தல்  வருந்துதல் .    

அவர் இருந்தபோது என் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை; திரு விழாக்காலத்தில்  ஊர்`மகிழ்வதுபோல மகிழ்ந்துகொண்டல்லவா இருந்தது என் நெஞ்சகம் ? 

கருத்துகள் இல்லை: