திங்கள், 16 மார்ச், 2015

வடசொல் வரினும் கடிவரை கொள்ளார்

தொல்காப்பியத்தில் இடைசெருகல்கள் உள்ளன.  ஆனால்  அவை எவையெவை என அறிஞர் இன்னும் முடிவு செய்திலர். இச்செருகல்கள் தமிழுக்குப் புறம்பான கொள்கைகளுக்கு ஆதரவாக இருப்பன வாதலால்,  அறிஞர் இவ்வினையில் ஈடுபட்டிலர். எனவே  காலக் கணக்குப் போடுகையில் "வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ " என்பதுபோன்ற நூற்பாக்களை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது என்று அறிஞர் கொள்கை வகுக்கின்றனர்.  அங்ஙனமாயின் தொல்காப்பியரின் காலம் பின்னுக்குத் தள்ளப்படுகின்றது.  "வடவெழுத்து ஒரீஇ"  என்பதனால் இந் நூற்பா எழுந்த காலத்தில் வடமொழிக்கு எழுத்து ஏற்பட்டுவிட்டதென்று பொருள்.

மேலும் இந் நூற்பா  சொல், கிளவி, சொல் என்று அதே பொருள் உள்ள சொற்களை, மும்முறை பயன்படுத்தியுள்ளது.   எழுத்து என்ற சொல்லும் இரண்டு முறை வந்துள்ளது.  தொல்காப்பியரே இவ்வரிகளை வடித்திருப்பின் வேறுவிதமாகப் பாடியிருப்பாரோ என்பது ஆய்வுக்குரியது. 

வடசொல் வரவும் கடிவரை இலவே
வடவெழுத் தொரீ இய காலை யான.

அல்லது

வடசொல் வரினும் கடிவரை கொள்ளார்
வடவெழுத் தொரீ இய முடிபி லான

என்பதுபோல் வந்திருந்தால் எதுகை மோனைகள் உளவாதலுடன்,  அதேபொருட் சொற்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தல் இல்லாமல் நூற்பா இயன்றிருக்கும்.    ஆதலினாலும் இஃது ஐயத்திற்குரிய தொல்காப்பிய நூற்பா ஆகும். தொல்காப்பிய நூற்பாவெல்லாம் தொல்காப்பியர் நூற்பாவல்ல.


கருத்துகள் இல்லை: