புதன், 11 ஏப்ரல், 2018

சுட்டு விளக்கம் - ஏமம்

இன்று மாந்த வளர்ச்சி நூலார் கூறும் வரலாற்றுத்
தெரிவியல்(theories)களிலிருந்து 50000 ஆண்டுகட்குமுன்
எந்த மொழியும் இருந்திருக்க இயலாது என்று
சொல்லப்படுகிறது. ஆகவே அந்த 50000 ஆண்டுகட்கு
முன்னரோ சற்று பின்னரோ இருந்த மனிதன்
எத்தனை சொற்களை அறிந்திருந்திருக்க
முடியும் என்று எண்ணிப் பாருங்கள்.  அங்கே
என்பதற்கு ஆ என்று வாய்பிளந்து ஒலியெழுப்பித்
தன் கருத்தையவன் வெளியிட்டிருப்பான். அது
ஒரு சொல்லாகும்.

இப்படி நான்`கு ஐந்து சொற்களை வைத்துக்
கொண்டு அவன் வாழ்ந்து முடித்தான். அவன்
எழுத்துக்களை அறிந்திருக்கவில்லை.

அவன் வழங்கிய  ஆ ( அங்கே) என்ற சொல்
இன்னும் நம் மொழியில் உள்ளது.

மலையாளத்திலும்  ஆ ஆள் (ஆ யாள்) என்று
இன்னும் உள்ளது.

ஆ என்பதனுடன் கு என்ற சேர்விடம் குறிக்கும்
சிறு சொல் (  உருபு)   இணைந்து  ஆங்கு என்ற
சொல் அமைந்தது.  இதுவேபோல்  ஈங்கு.
ஊங்கு என்ற சொற்களும் அமைந்து சொற்கள்
பலவாகின.

அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை என்'கிறது
திருக்குறள்.  அறத்திற்கு உவ்விடத்தில் ஆக்கம்
தருவது ஒன்றும் இல்லை.  இக்கால மொழியில்
சொல்வதானால் அறத்திற்கு அப்பால் ஆக்கம்
ஒன்றும் இல்லை.  பொருள் ஒன்றுதான்
என்றாலும்,  அறத்தை விட்டால் அங்கு எங்கு
உங்கு போனாலும் ஆக்கம் இல்லை~~!!  ஆகவே
குறளை விளக்கும்கால் விட என்ற சொல்லைப்
பயன்படுத்தி உரை சொன்னாலும் சரியாக
இருக்கும்.

இதில் கவனிக்கவேண்டியது என்னவென்றால்
உப்பாலை விட அப்பால் இன்னும் தொலைவாய்ப்
போய்விட்டது.  உ எனபது முன் என்று பொருள்
தரும்.  அ என்பது படர்க்கை.

அறத்தினுக்கு இப்பால் ஆக்கம் உள்ளது.  உப்பால்
அறம் இல்லை ஆதலின் ஆக்கம் இல்லை; அப்பால்
அறம் இல்லை ஆதலின் ஆக்கம் இல்லை; எப்பாலும்
அறம் இல்லையாயின் ஆக்கம் இல்லை. எங்கெங்கெல்
லாம் அறம் உண்டோ அங்கெங்கெல்லாம் ஆக்கம்
இருந்தே ஆகும்.  இப்படி விரித்து நோக்கின், இப்பால்
உப்பால் அப்பால் எப்பால் என்பது புரிந்துவிடும்.  இது
புரிந்துகொள்ளத் தரப்படும் விளக்கம்.

இனி விட என்ற சொல்லைப் பயன்படுத்தி:

அறத்தை விட ( இங்கு விட்டுவிட்டால்),   உங்கு அங்கு
எங்கும் ஆக்கம் இல்லை!!

In terms of place, bring along your "aRam" everywhere; if not
there is no benefit. Primitive people expressed things in terms
of situations and places. This concept is still discernable in our
language.

ஆ ஊ ஈ  என்பன முச்சுட்டுக்கள்; இவை பல
சொற்களுக்கு மூலமாகுபவை ஆகும்,

இவை பின் அ,  இ. உ என்று குறுகிவிட்டன.
இப்படி நெடில் குறுகுவதென்பது பலகாலும்
நிகழ்ந்துள்ளது ஆகும். ஏ என்பது ஒரு வினாவாகி
சுட்டுப்போன்ற ஒரு தகுதியுடையதானது. அதுவும்
வேண்டியாங்கு எ என்று குறுகி  நின்றது.

இப்போது இதை நோக்குங்கள். ஒரு துன்பமென்பது
எங்கிருந்தாவது வரும்.  எங்கு என்று சொல்லவிய
லாதது ஆகும். அதற்கு ஆதிமனிதன் பாதுகாப்பு
மேற்கொள்ளவேண்டியிருந்தது.  எங்கிருந்தோ இங்கு
வந்தது என்பதைக் குறிக்க ஏ இ என்றான்.  அதற்கு
அவனுக்குப் பாதுகாப்பு தேவைப்பட்டது; விழிப்பு
தேவைப்பட்டது.   அதை ஏ இம் என்றான்.  அது
ஏம்  ஆகி,  ஏமம் ஆகி, பாதுகாவல் என்ற பொருளை
அடைந்தது. எங்கிருந்தோ வருவதைத் தடுக்கும்
நடவடிக்கையால் உண்டாவதே ஏமம் ஆகும்.

ஏம் என்பது மிகப் பழைய சொல். எகர வினாவாகிய
சுட்டுப்போலியால் அதை விளக்கவியலும்.

அடுத்துச் சந்தித்து அளவளாவுவோம்.



கருத்துகள் இல்லை: