புதன், 4 ஏப்ரல், 2018

நஞ்சு

பண்டைத் தமிழ் மக்கள் சொற்களை மிக்க அருமையாக
அமைத்துள்ளனர். அமைத்தனர் என்பதைவிட ஒலிகள்
எழுப்புவதன் மூலம் கருத்தறிவிக்கப் பல வேளைகளில்
சொற்களைஇயல்பாக அமையவிட்டனர்  என்பதே
உண்மை.  புலவர் அல்லது மொழியறிஞர் அமைத்தவை
சிலவே.

அஃறிணை, ஒழிபு என்பவை போலும் சில புலவர்
அமைத்தன எனலாம். ஆனால் ஒழிவு, பொம்மை
என்பன போலும் பல மக்கள் அமைத்தவை.

பொய்யான உடல் என்று பொருள்படும் "பொய்ம்மெய்"
என்பது போலும் சில நாளடைவில் பயன்பாட்டினால்
தேய்வுற்றுப் "பொம்மை" என்று மறுதோற்றம் உற்றது.
இத்திரிபுகளால் சொற்களின் தொகை பல்கிற்று.
வேய்ந்தன் (முடி சூடிக்கொண்டவன்)  என்பது மாறி
வேந்தன் என்று புத்துருக் கண்டது.

கெட்டதையும் நல்லதாகவே கொள்ளும் பரந்த உள்ளம்
தமிழர்களுக்கிருந்தது. நச்சுப் பாம்பினை நல்ல பாம்பு
என்றனர். சிலர் இதுபோலும் உயிரிகளைத் தொழவும்
தொடங்கினர். அதிலிருந்தும் அருளாற்றல் வெளிப்
படுமாறு கண்டனர். தின்னவரும்புலி தன்னையும்
அன்னை பராசக்தியின் வடிவாய்க் கொண்டனர்.

தமிழ்மொழிச் சொற்களில் அவர்கள் பண்பாட்டின்
தோற்றம் கண்டு இன்புறலாம்.

நஞ்சினை நன் ( நல் ) என்றே தொடங்கினர்.  அதன்
தலை " நல் "  (  நன் )  ஆனது.  நஞ்சும் ஒரு நன்மையைச்
சுரக்கும்.   சு என்பதை விகுதியாய்ச் சேர்த்தனர். பொருளற்ற
விகுதியாகவும் கொள்ளலாம்; சுரத்தல் ( ஊறி வெளிவரல்)
குறிப்பாகவும் எடுத்து அமைதி காணலாம்.

நச்சுப்பாம்பு என்று சொல்ல நினைத்தாலும் அந்த நச்சு
என்ற சொல்லிலும் நன்மை தொனிக்க அமைத்த அரிய
பண்பாட்டுக் கூறு தமிழருடையதாகும்.

விடப்பாம்பை ஓர் ஓலைப் பெட்டிக்குள் அடைத்துக்
குற்றவாளி அதற்குள் கையைவிட பாம்பு அவன்
தேகத்தினுள் நஞ்சை விட அவன் உயிரை விட
இப் பல விடுதல்களால் அரசு அவன் உடலை
உறவினரிடம் விடலானது..   விட விட விட விட
நிகழ்ந்ததனால் அது விடமாகி,   பின் ஒருவாறு
மெருகூட்டப்பட்டு விஷம் என்று மறு தோற்றம்
கண்டது. இங்ஙனம் தந்த தண்டனை
நிறைவேறுவதும் சில வேளைகளில் நடந்தன.

இப்படியான சிந்தனை மெல்லழகே தமிழின்
உள்ளழகு ஆகும்.

இனிப் பாஷாணம் என்ற சொல் அமைப்பினை
யும் கண்டு தேனருந்தத் தவறாதீர்.

https://sivamaalaa.blogspot.sg/2012/07/blog-post_23.html

பின்னர் செப்பம் செய்யப்படும்

கருத்துகள் இல்லை: