வியாழன், 19 ஏப்ரல், 2018

திறம்பட அமைந்தது கருணைச் சொல்.

நீ சொல்கின்ற  துயர  நிகழ்வினைக் கேட்டால் என்
உள்ளம் கரைகின்றது.
இது இரும்பு போன்றது.  எதற்கும் கரையாது. உன்
கதைக்குக் கரைந்துவிட்டது.

இப்போது "கரை" என்ற சொல்லைக் கவனிப்போம்.
கரை என்பது ஒரு வினைச்சொல். நிகழும் ஒன்றினைக்
குறிக்கிறது.  ஆகவே வினைச்சொல்.

நாம் சந்திக்கும் வினைச்சொற்கள் பல்வேறு வகையில்
முடிகின்றன:

சொல்:  இது லகர ஒற்றில் முடிந்தது.
கேள்:  இது ளகர ஒற்றில் முடிந்தது.
கரை:  இது ஐகாரம் கொண்டு முடிந்தது.  இதன் பகுதி
               கண்டறியத் தக்க வகையில் கர்  என்பதாக
              இருக்கும்.
               கரைதல்:  சொல்லுதல்,  மனம் இளகுதல்,
                ஒலி எழுப்புதல்,  அழுதல், இன்னும்
              பல பொருள் உள்ளன.

கர் என்பது அடி ஆதலின் கர்ச்சித்தல், கருச்சித்தல்
என்பனவும் ஒலி எழுப்புதலைக் குறிக்கின்றன.

ரகர ஒற்றில் முடிவது லகர ஒற்றாகவும் முடியும்.
இது பல உலக மொழிகளில் கண்டறியப்பட்ட உண்மை.

கல் > கலுழ் > கலுழ்தல்;  (ஒலித்தல்)
கர் >  கரை > கரைதல்.  (ஓலித்தல்.)

மனம் இரங்கினாலும் ஒலி செய்வான்;
மனம் வெகுண்டாலும் ஒலி செய்வான்.

ஒலி செய்யாமல் இருந்தால்தான் இயல்பின்மை;
ஒலித்தால் இயல்பு.

இவை நிற்க.

கர் என்ற  அடிச்சொல்லைப் போட்டுக்கொள்ளுங்கள்.
கரைந்துருகும் நெஞ்சு உள்ளே திடமாக இருப்பதில்லை.
அது நைந்து போய்விடுகிறது.

கர் + உள் + நை.

உள் நை =  உணை.

கர் + உணை =  கருணை.

நை >  நெய்.

நெய்யும் உருகுவதுதான்.

நெய்தல் = இரங்குதல்.    நிகண்டு பார்த்து உறுதிசெய்க.

கர் உள் நை;  கர் உள் நெய் :  எல்லாம் வேறல்ல அக்கா!
ஓன்றேதாம்.

நெய்தலில் வாசிக்கும் பண்டைப் பறைகூட "நெய்தற்பறை";
அது சாப்பறை.  அது இரங்கி அடிக்கும் பறை; மனம்
இரங்கி வாசிக்கும் பறை.

மனம் உருகி இணைவதும் நெய்தான்:  நெய் என்றால் நேசம்;
நெய் > நெய்+அம் = நேயம் (முதனிலை நீண்டு விகுதி பெற்றது)
திரிந்து:  நேசம் ஆனது.

கரைந்து போகும் கரை நிலங்களை நெய்தல் என்றதும்
பொருத்தமே.

கர்+ உள் + நை (  நெய் )   =  கருணை.

கரைந்து உள்ளுருகும் தன்மை.

திறம்பட அமைந்த சொல்.

Note: Pl be cautious of the dots appearing and disappearing
in the text. The virus has apparently taken on a new
dimension. Sometimes the dots appear on the screen and
vice versa.


கருத்துகள் இல்லை: