வெள்ளி, 11 மார்ச், 2022

குறுகிப் பெயராகும் வினைகள்: மண்டை, புவி, புவனம்,

 புவி என்பது யாம் பன்முறை விளக்கிய சொல். இன்று இன்னும் இவ்வலைப்பூவிலும் விளக்குதற் குரித்தாகிறது. இவற்றுட் பல வாய்மொழியின. சில எழுத்தில் உள.

இதன் வினைச்சொல் பூத்தல். இது ஒரு பல்பொருளொரு சொல் எனினும், இங்குக் கருதுதற்குரிய பொருள் தோன்றுதலென்பதே.  பூமி தோன்றியதை நாம் பார்க்கவில்லை;  நாம் தோன்றியதையும் நாம் பார்க்கவில்லைதான் . எனினும் தோன்றினோம் என்பதைப் பல்வேறு கருத்தளவைகளாலும் கேட்பமைதியினாலும் நம்புகின்றோம்.

பூத்தல் வினை, முதலெழுத்து நெடிலில் தொடங்குகிறது. இதிலிருந்து தொழிற்பெயர் அமைகையில் பூ என்ற முதலெழுத்து குறிலாகிவிடுகிறது. ஆகவே முதனிலை குறுகித் திரிந்து பெயர் அமைகிறது என்று அறிதல் கடன். 

இலக்கண நூல்கள் இதுபோல அமைவனவற்றைத். தொழிற்பெயர் என்ற பிரிவில் அடக்கும்.  முதனிலை நீண்டு திரிந்தமைதலே இலக்கணியர் கவனத்தைப் பெரிதும் கவர்ந்தது. முதனிலை குறுகி அமைந்தன எனற்பாலன பேரளவில் அவர்கள் கவனத்தைக் கவரத் தவறினமைக்குக் காரணம் அறிய இப்போது  இயல்வில்லை. எதிர்காலத்தில் இந்நிமிர்தடை சாய்ப்புறலாம்.  ( சாய்>[ சாய்த்து இயல்வதாகி ]> சாத்தியமாகலாம்.

[தடையாக எதிர்நிற்பது ,  நிமிர்ந்து நிற்பது , சாய்க்கப்படுவதே சாய்த்தியம், சாத்தியம்.]

எனினும்,  காண் என்ற வினை, குறுகிக் கண் என்று திரிந்தமை மொழியில் தெளிவாகத் தெரிகிறது.  இதில் விகுதி அமையவில்லை .  ஆனால் சா(தல்) என்பது சவம் என்றமைந்த காலை,  அம் விகுதி பெற்றது.  தோண்டு என்பது தொண்டை என்று அமைந்த போது,  ஐ விகுதியை (ஈற்றில்) பெற்றது. தோண்டு என்பதே வினையாகலின்,  டை என்பது விகுதியன்று.  தொண்டை, தோண்டப்பெற்றது போன்ற ஓர் உறுப்பு அன்றோ?

எல்லா உறுப்புகளிலும் மாண்பு மிக்குடையது மண்டை ஆகும். இதற்குத் தலை என்பது இன்னொரு பெயர்.

மாண் - மாண்+ டை > மண்டை.   மாணுதல் - வினைச்சொல்.  சிறப்பு அடைதல் என்பது பொருள்.

இதில் நாம் சுட்டிக்காட்ட விரும்புவது யாது? அது:  மாண் என்ற நெடில் முதலாகிய சொல், டை விகுதி ஏற்க, மண் என்று திரிந்ததுதான்.  இதுபோல் திரிந்த இன்னொரு சொல்: முன் பன்முறை எடுத்துக் கூறியது போல, சா + அம் > சவம் என்பதுதான். யாவும் தமிழே என்று உவத்தல் கொள்க.

ஒரு குறள் மாண்டதமைச்சு என்று முடியும்.  மாண்டது என்றால் சிறந்தது என்று பொருள். ( செத்துப்போனது என்பதன்று).

இங்குக் கூறிய நெடில் குறிலாகித் திரிந்து பெயரான சொற்களைப் போலுமே, பூத்தல் என்பதிலிருந்து பிறந்த சொல்லாய  புவி  என்பதும்  ஆகும்.

பூ(த்தல்) > பூ + வி > புவி ஆயிற்று.

பூ + அன் + அம் >  புவனம்.  அன் என்பது இடைநிலை.

இரண்டிலும் பூத்தல் என்னும் வினை,  பு என்று குறுகியமை காண்க.

பூ + தலம் > பூதலம்.  இது இயல்பாய் அமைந்தது. இது இருபெயரொட்டு என்றோ வினைத்தொகை என்றோ கொள்ளலாம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.


கருத்துகள் இல்லை: