திங்கள், 2 நவம்பர், 2020

சாமந்தன் - புணரியல் விளக்கம்.

 நிலைமொழியும் வருமொழியும் இணைகின்ற போது, சொற்கள் எவ்வாறு மாறும் என்பதற்குப் புணரியல் ( சொற்புணர்ச்சி இலக்கணம்) சில விதிகளைத் தருகிறது. ஆயினும் இதிற்சொல்லப்படும் இலக்கணம்,  ஒரு வாக்கியத்தில் அல்லது கவிதை வரியில் இரண்டு முழுச்சொற்கள் இணைதற்கான இலக்கணமே ஆகும்.  ஒரு சொல்லை அமைக்கும்போது அதில் நிலைமொழி - வருமொழிகள் இல்லை. எடுத்துக்காட்டாக,  என்று என்பது என்+து என்ற இரண்டும் சேர்ந்தமைந்த சொல்லாகும்.  இவற்றுள் என் என்பது நிலைமொழியும் அன்று; து என்பது வருமொழியும் அன்று. எனவே சொல்லமைப்பில் வேறுபட்டு இணைதல் நிகழும்.  எடுத்துக்காட்டாக:

என் + து =  என்று ( தமிழில்)

என் + து =  எந்து   ( மலையாளம்).

தமிழிலும் இவ்வாறு சொற்கள் அமையும்.  உதாரணமாக:

முன் + தி  =  முந்தி

பின் + தி =  பிந்தி.

ஆசிரியர் சிலர் இவற்றையும் காட்டுவர்:

மன் + திரம் =  மந்திரம்.  

தன் + திரம் = தந்திரம்.

இங்குத் திரம் என்பது  திறம் என்பதன் திரிபு.  இது விகுதியாய்ப் பயன்பட்டது.  இறைவன்முன் வைக்கப்படும் ஒரு வேண்டுதலை  ஓதுவதன் மூலம் நிலைபெறுவித்தலே மந்திரம் என்பது.  மன்னுதல் -  நிலைபெறுவித்தல். தன் சொந்தத் திறமே தந்திரம் என்பது.  மந்திரம் என்ற சொல்லை அமைக்கக் காரணமாகியது ஓதுவோன் அதனை வேட்போன் ஆகியோரின் நம்பிக்கையாகும்.  

மன் என்ற அடியிலிருந்தே மனிதன்  ( மன்+ இது + அன் ). மாந்தன் ( மன்> மான்; மான்+ து +அன்),  மன்+ தி > மந்தி முதலிய சொற்களும் அமைந்தன.  மாந்தன், மந்தி முதலியவை, மான்றன், மன்றி என்று அமையவில்லை. மாறாக, பல்> பன் > பன்றி (பன்+தி) என்று அமைந்தாலும்,  பல் > பன் > பன்னி என்ற சொல்லும் வழக்கில் உள்ளது.  வென்றி என்ற சொல்,  வெல் > வென்> வென்றி,  வெல்+தி : வெற்றி என்று இருவகையில் வருமெனினும் வெந்தி என்று வரவில்லை.

இனிச் சாமந்தன் என்ற சொல் காண்போம்.

சாமந்தன் என்போன் சார்பாக ஓரிடத்தை ஆள்பவன்.  இது:

சா : சார்பாய்,

மன் - ஒரு மன்னனின் கீழ்

தன் - தன் ஆளுகையை மேற்கொள்பவன்.  அல்லது சார்பு மன்னன்.

இங்கு,  சார்மன்னன் என்று சிந்தித்து சாமன்னன் என்று அமைத்திருக்கலாம். அப்படியானால் செத்துப்போகும் மன்னன் என்று அமங்கலப் பொருள் தோன்றுமாகலின், அதை மாற்ற ஒரு து இடையில் வந்தது.

சார் + மன் + து + அன் ,  இதில் ர் என்பதை விலக்க, சாமந்தன் என்று அமைந்தது புனைந்தோன் திறனே.

இது சாமன்றன் என்று அமையவில்லை. 

இடைநிற்கும் ரகர ஒற்று மறைதற்கு எ-டு:  சேர்+ மி > சேமித்தல்.

(சேர் + ம் + இ ).

இவ்வாறு ஓர் உத்தியைக் கையாண்டுள்ளனர்.


மெய்ப்பு பின்



 

கருத்துகள் இல்லை: