வியாழன், 26 நவம்பர், 2020

கௌபீனம் என்ற கோவணம்.

கோவணத்தைக் கௌபீனம் என்றும் சொல்வதுண்டு. இடைச்சுற்றுக் கயிற்றில் ( அரைஞாண் ) இருபக்கலும்  கோத்து அணியப்படுவதால் அது கோவணம் எனப்பட்டது.  

கோத்தல் என்பது வினைச்சொல்.

கோ+ வ் + அணம் = கோவணம்.  வ் என்பது உடம்படுத்தும் இடைநிலை. அணம் என்பது விகுதி அல்லது இறுதிநிலை. அணி+ அம் என்பதும் அணம் ஆகும்.

சொல்லை மிகுத்து இன்னொரு சொல் படைப்பதற்கு உதவுவது விகுதி.  மிகுதி என்பது விகுதி என்றானது.  மிஞ்சு என்பது விஞ்சு ஆனதுபோலுமே இது.

கோவு + அணம் = கோவணம் எனினும் இழுக்காது.

இனிக் கௌபீனம் என்பது.

இவ்வரையுடை,  முன்னே கோத்துப் பின்பக்கமும் செல்வதால்:

கோ > கௌ.

பின்னு + அம் =  பின்+ அம் = பீனம்.

பீனம் என்பது பின்னுதல் என்ற வினைவடிவம் (பின்) முதனிலை பீன் என்று நீண்டு, அம் விகுதி பெற்று பீனம் ஆனது.

கோபீனம் > கௌபீனம்.

காக்கும் பின்னுகை என்ற பொருளில் கா+பீனம் > காபீனம்> காவுபீனம்> கௌபீனம் எனினும் இழுக்காது. காபீனம் - வினைத்தொகை.  காவுபீனம் இருதொழிற்பெயரொட்டு.


கருத்துகள் இல்லை: