சனி, 7 மே, 2016

சி போதம் பா 10. முன்பார்வை.

இது சிவஞான போதத்தின் 10‍வது பாடல்.

அவன் தானே ஆகிய அந் நெறி
ஏகன் ஆகி இறைபணி நிற்க‌
மல மாயை தன்னொடு வல்வினை இன்றே

என்பது பாடல்.

அவன் தான்  என்பன விளக்கம்.

இப்பாடலின் அவன் என்றது இறைவனை.  அவன் ஒருவனே. அவன்
இறைவன்.  ஒருமை ஆதலின் ஒருமைக்குரிய அன் விகுதி கொண்டு
கூறப்படுகிறது.  அஃதன்றி  அவன் ஆணுமில்லை; பெண்ணுமில்லை. அவனுக்குப் பால்  (ஆண்/ பெண் வேறுபாடு) இலது. அன் விகுதி வரக்காரணம் மொழிமரபு.


தான் எனறு அடுத்து ஓதியது  ஆன்மாவை. மனிதர் பலர் இருப்பினும் ஒன்றின் மேற்பட்ட பல இருப்பினும்,  ஒவ்வோர் ஆன்மாவும் இறையுடன் தனித்தனியே கவரப்படுவது ஆகும்.  ஒவ்வோர் ஆணியையும் காந்தம் தனித்தனி கவர்வது போன்றதே இது. தனி என்ற ஒரு பிரிவு தவிர, இறைக்கும் ஆன்மாவுக்கும்  வேறு பிரிவினை இல்லை. வேறு அடையாளங்களும் இல்லை.
அவன் என்னும் இறைக்கு வேறு அடையாளம் இலதுபோல, தான் என்னும் ஆன்மாவுக்கும் வேறு அடையாளமோ குறிப்போ இலது. வேறு அடையாளங்கள் எவையானாலும் அவை இந்த அவன்‍  தான்
உறவில் கண்டுகொள்ளப்படாதவை.  எனவே சிவ ஞானத்தில் அவனும் தானுமே.  ஞானம் என்பதில் அவன் ‍ ஞான் ( அவன், தான்). உண்மையில் அவன் என்பது அன்,  இது ஆண்பாலில் விகுதியாய் வரும்.  இதன் பாலியன்மை மாறவே, அன் எனற்பாலது  அம் என்பது ஆகும்.  ஆகவே ஞான் + அம்  =  ஞானம் ஆகின்றது. உலகிலும் அப்பாலும் ஞானும் அம்மும் ( அவனும்)  அன்றி வேறில்லை. இதுவே உண்மை.

சி போதம் பா 10. முன்பார்வை.-  அடுத்த இடுகையில் தொடரும்.


கருத்துகள் இல்லை: