சனி, 10 ஜூலை, 2021

மழையா வெயிலா யார் தீர்மானிப்பது?

 

மழைத்தூர்ந்து நெருங்கிய மால்நிறத்தின் 

முகிற்கூட்டம்

இழைத்தார்ந்த இடுவிரை வாலெடுத்தேன் 

உலராடைகள்

நனைத்தோய்ந்து செலுமுகில் நான்படுவேன் 

அதற்கென்ன

நினைத்தோய்ந்து நிலைகொள வைத்தனைநீ   

நின்மலனே.


இதன் பொருள்

மழைத்து  ஊர்ந்து ---  மழை வருவதுபோல் சுற்றுச்சார்புகள் குளிர்ந்து,

நெருங்கிய மால் நிறத்தின் -  வானில் கிட்ட வந்த  கருநிற முடைய;

முகிற்கூட்டம் ---  மேகப்  பெருந்திரள்கள்;


இழைத்து ஆர்ந்த ----  உண்டாக்கி நிறைவுசெய்துவிட்ட;

இடு விரைவால் -  என்மேல் ஏற்படுத்திய (என் செயல்) வேகத்தால்;

எடுத்தேன் உலராடைகள்  --  ஓடி அகற்றினேன் உலர்ந்துகொண்டிருந்த ஆடைகளை;


நனைத்து ஓய்ந்து செலும் முகில் -   எடுக்காவிட்டால்  துணிகளை நனைத்துவிட்டு

சிறிது நேரத்தில் பொழிதல் ஓய்ந்து முகில் அப்பால் எங்கோ போய்விடும்;

அதற்கென்ன நான் படுவேன்  -  அந்த முகிலுக்கு என்ன நட்டம்;  அவற்றை மீண்டும்  காயவைக்க நான் அன்றோ முயற்சி மேற்கொள்ள வேண்டும்?

நினைத்து  ஓய்ந்து  -  (  எடுத்த பின்னர் ) இப்போது  இருந்து சிந்திக்குமாறு செய்து,

நிலைகொள வைத்தனை நீ  -   இறைவனே,  நீதான் தீர்மானிக்கிறாய் என்பதில்

ஒரு மாற்றமில்லை என்று நிலைநிறுத்தினாய்,

நின்மலனே -  குற்றமொன்றும் இல்லாதவனே.


நிர்மலன் -  விளக்கம்:  https://sivamaalaa.blogspot.com/2021/07/blog-post_11.html






கருத்துகள் இல்லை: