வெள்ளி, 2 ஜூலை, 2021

சோடு, சோடனை, சோடித்தல்.

 சோடு என்பது தமிழில் இணை என்று பொருள்படுகிறது.  உயரம், உடல்வாகு முதலியவற்றில் பெரிதும் வேறுபடாத இருவர்,  "(இருவரும்) ஒரு சோட்டு ஆள் " என்று குறிக்கப்படுவதையும் கேள்விப்பட்டிருப்பீர்கள்.  மூலச்சொல்லின் பொருண்மையால்  மட்டுமின்றிக் காலணிகளும் எப்போதும் இணையாகவன்றிப் பயனின்மையால்,  இது இரண்டு என்ற பொருளினைக் காட்டுகிறது.. 

தெய்வச்சிலைகள் பெரும்பாலும் இணையாகவே அலங்காரம் பெற்றுப் பற்றரின்முன் வைக்கப்படுவன.  இதனால் சோடனை  ( சோடு+அன் + ஐ)  என்ற கவின்பாடு அறிவிக்கும் சொல் அமைந்தது..  சோடு> சோடித்தல் என்ற வினைச்சொல்லும் அமைந்தது.

இதன் மூலச்சொல்  ஓடு என்பது.  ஓடு என்பது உடன் என்று பொருள்பட்டு ஒரு பொருளோடு இன்னொன்று,  ஒருவரோடு இன்னொருவர் என்று இரண்டு என்ற பொருளை வெளிப்படுத்துவது ஆகும்.  அகர வருக்கத்துத் தொடக்கமுடைய சொற்களில் பல சகர வருக்கமாக ஆகிவிடுதல் போல்,  ஓடு என்பது சோடு என்று திரிந்தது.   ஆனால் பொருளில் பெரிதும் வேறுபடவில்லை.  சோடனை சோடித்தல் என்பவற்றிலே அச்சொல் ( சோடு) சற்று விரிவுற்றது.

ஓடு > சோடு.

இது திரிபில்  அமணர் >  சமணர் போல்வது. இவ்வாறு திரிந்த இன்னொரு சொல் அடுதல்,  அடு > அட்டி> சட்டியென்பதும் அன்னது  ஆம்.  அடுதலாவது, சமைத்தல்.

இணையாக அணியப்படும் பாதுகையும்  பல வேளைகளில் அலங்காரங்கள் உடையனவாய் உள்ளபடியால்  சோடனை சோடித்தல் முதலிய சொற்கள் பொருள்விரிவு அடைந்தமையில் வியப்பில்லை. கால்களும் அணிபெறுவன.


இதில் இன்னும் சிலவுள எனினும் பின்னர் உரையாடுவோம்.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்


கருத்துகள் இல்லை: