செவ்வாய், 3 ஜூன், 2014

The drunken teacher...........

சாயல்குடி: ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே பள்ளி திறந்த முதல்நாளே, குடிபோதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர் மீது வெறுப்படைந்த பெற்றோர், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, புகார் கொடுத்தனர்.

சாயல்குடி அருகே பெருமாள் தலைவனேந்தலில் உள்ள ஒன்றிய துவக்கப் பள்ளியில் முதல், இரண்டாம் வகுப்பு ஆசிரியர் சாமுவேல், 48. பள்ளி துவக்க நாளான நேற்று, குடிபோதையில் பள்ளிக்கு வந்தார். பள்ளி துவங்கியதும், வகுப்பறைக்குச் செல்லாமல் பழைய கட்டடத்தில் அமர்ந்து பீடி புகைத்து, புலம்பிக்கொண்டிருந்தார். இதை பார்த்த பெற்றோர், புகார் கொடுத்தனர். ''இவர் எப்பவுமே இப்படித்தான்'' என சலித்துக்கொண்ட தலைமை ஆசிரியை, வழக்கம் போல் தனது பணிகளை கவனிக்கச் சென்று விட்டார். நாள் முழுவதும், அங்கேயே புலம்பிக்கொண்டிருந்த ஆசிரியர், பள்ளி நேரம் முடிந்ததும், வெளியே சென்று விட்டார். இவ்வளவு கூத்தும் நடந்து கொண்டிருக்க, முதல் நாள் பள்ளிக்கு ஆசை ஆசையாய் வந்த பிஞ்சு முத்துக்கள், 'மதுக்கடைகளை திறந்து விட்ட அரசை குத்தம் சொல்வதா... இல்ல... போயும், போயும் நம்ம இந்த பள்ளியில படிக்க வந்ததை குத்தம் சொல்வதா... இல்ல... இவ்வளவு காலம் இவர் மீது கல்வித்துறை நடவடிக்கை எடுக்காததை குத்தம் சொல்வதா...யாரை குத்தம் சொல்வது, என செய்வதறியாது திகைத்தனர்.

அந்த ஊரைச்சேர்ந்த கிருஷ்ணன் (பெற்றோர்) கூறுகையில்,'' பள்ளி திறந்த முதல் நாளே ஆசிரியர் போதையில் வந்து இருக்கிறார். இப்படி இருக்கும் பள்ளியில் குழந்தைகளை எப்படிசேர்க்க முடியும். இந்த பள்ளியால் எங்களுக்கு செலவில்லை என்றாலும், குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுகிறதே,'' என்றார்.

கடலாடி உதவி தொடக்கக்கல்வி அலுவலர் ரவிக்குமார் கூறுகையில், '' அவர் மீது ஏற்கனவே புகார் வந்துள்ளது. இனிமேல் இதுபோல் நடந்து கொண்டால் நடவடிக்கை எடுக்கப்படும், என, பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளேன். இப்போது அவர் மீது நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரைக்கப்படும்,'' என்றார்.


http://www.dinamalar.com/news_detail.asp?id=989719

கருத்துகள் இல்லை: