வெள்ளி, 27 ஜூலை, 2018

மறைந்துவிட்ட சொல் வடிவங்கள் - நம்புதல் சொல் வடிவம்.

இறையுண்மை ஒப்பி ஒழுகுவோர் கெடுவதில்லை என்பது மறைகளின் தீர்ப்பு என்பர். உண்மைதான். அதற்குப் பலன் இருப்பதால்.

ஒருவர் இறைவன் உள்ளான் என்னும்போது நம்புவதென்பது நாமும் அக்கருத்தினுக்கு உடன்படுவதாகும்.  உடன்படவே,  அவர் கருத்து நம் கருத்தாகி விடுகிறது.  நம்பவில்லை என்றால் அவர் கருத்து அவருடன்; நம் கருத்து நம்முடன் இருந்துவிடும்.

அவர் கருத்து நம் கருத்தாகவே அது  நம்புவதாகிறது.  அதாவது நம் கருத்தாகிறது. நாம் என்பது பன்மை.  இது தன்மைப் பன்மையாகும்.

அவர் கருத்து - நம் கருத்து.  இதில் நம் என்ற சொல் எடுத்துக்கொள்ளப்படுகின்றது.

நம் >  நம்பு > நம்புதல்.

நம்புதலாவது நம் கருத்தாதல்.

நம் என்பது பன்மை வேற்றுமை வடிவாயினும் அது பு என்னும் வினையாக்க விகுதிபெற்று  நம்பு என்றானபின் அது பன்மையாய் நீடிக்கவில்லை. வெறுமனே ஒரு வினைச்சொல்லாக்கம் பெறுகின்றதென்பதை அறிக.

நாம் என்னும் எழுவாய் வடிவம் நம் என்று வேற்றுமை வடிவம் கொள்ளுதல்போல்  நான் என்னும் சொல் இன்றைய மொழிநிலையில் என் என்று வேற்றுமை வடிவு கொள்கின்றது.

நான் என் தொலைந்த பணப்பையைக் கண்டுபிடித்துவிட்டேன்.

நான் -  என்.   இது  நாம் - நம் என்பதிலிருந்து வடிவவேறுபாடு உடையதாய் இருப்பதை அறியவும்.

நாம் > நம் என்பதுபோல் நான் > நன் என்றன்றோ வருதல் வேண்டும்?  அப்படி வரவில்லையாதலின் முறைமாறியுள்ளது.

என் என்று வருவதாயின் அதன் எழுவாய் வடிவம் ஏன் என்றிருத்தல் வேண்டும்.  ஆனால் இந்த ஏன் என்பது இன்னும் வாழ்வுடையதாய் உள்ளது.
வந்தேன் என்பதில் ஏன் பின்னொட்டாய் உள்ளது காண்க.

எனவே: 

நான் > நன்;   ஏன் > என்.  நிரல்பொருத்தம் உள்ள வடிவங்கள்.

நன் என்ற வேற்றுமை வடிவமும் ஏன் என்ற வினாவல்லாத எழுவாய் வடிவமும் மொழிவரலாற்றின் வெள்ள ஓட்டத்தில் ஒழிந்துபோயின,

நான் ஒரு வண்டி வைத்துள்ளேன்;
அது நன் வண்டி என்பதே  பழங்காலத் தமிழ் என்பதை ஆய்வின்மூலம் மீட்டுருவாக்கம் செய்யலாம் என்பதை அறிக.

நான்  - நன் ;  ஏன் - என் என்பன முறையே எழுவாய் மற்றும் வேற்றுமை வடிவங்கள்.

நம்+பு > நம்பு என்பதில் பு இணைத்து வினைப்படுத்தியதுபோலவே   நன்+பு = நன்பு என்று வினைப்படுத்தி.  அது பின் நம்பு என்று திரிந்தது  எனினும் அதுவும் ஏற்புடைத்தே என்று கருதுக.

இவை மறைந்துபோன சொற்களாதலின் மீட்டுருவாக்கலாமே அன்றி நூல்களில் காணவியலா எனல்  அறிந்துகொள்வோம். இவற்றிற் சில ஆய்வு முடிவுகள் ஏனைத் தமிழறிஞர் ஆய்வுகளுடன் இயைபு உடையவாகும்,


கருத்துகள் இல்லை: