ஞாயிறு, 15 ஜூலை, 2018

குப்பைமலைக்குச் சிவப்பு விளக்கு.

எப்பக்கம் பறப்பதென்று குறிக்க -----  பறவூர்திக்
கிதமான சிவப்பொளியும் நடுவீர்!
குப்பைகளும் மலையெனவே உயர்ந்து ---- தம்
கோடுயர்ந்து நிற்பனதில் லியிலே.

ஆளுநரும் அமைச்சர்களும் இணைந்து ---அதனால்
அரியபல உரைகளுமே விளைந்து 
வாளெடுத்த மறவர்களைப் புரைய ---  பல
வாறுழந்தும் ஒருவரையும் அறியார்.


இது இந்தியத் தலைநகர் தில்லி பற்றிய பாடல்.
அங்குள்ள குப்பை மேடுகள் மலைகள்போல்
உயர்ந்துவிட்டன. இவற்றைப் பற்றிக் கவலைப்
பட்டுச் சிலர் இந்திய உச்ச நீதி மன்றம் சென்றனர்.
இன்னும் கொஞ்ச நாளில் அங்குக் குப்பைமலை
 யுச்சிகளில் சிவப்பு விளக்குகள் பொருத்தி
வானூர்திகள் இடித்துவிடாமல் வழிகாட்ட
வேண்டிவரும் என்று மன்றம் குறிப்பிட்டது.
அங்குள்ள  கெஜ்ரிவால் அரசினரால் ஒன்றும்
செய்ய இயல வில்லையாம்.  பாவம் அவர்கள்.

இவை நாட்டைக்குறிஞ்சி போலும் இராகத்துக்குப்
பொருத்தமான வரிகள். கலித்தளை வரும்படியாக
ஒவ்வொரு வரியும் எழுதப்பட்டுள்ளது. பெரும்பாலும்
சிந்துகள் வெண்பா யாப்பிலே வருவன. கலி யாப்பில்
எழுதுவதில்லை. யாம் முரண்பட்டு எழுதியுள்ளோம்.
இந்த முரண்பட்ட பாடலைச் சுவையுங்கள். முடிய
வில்லையென்றால் கடிந்துரை வரைவீர். நீங்கள்
காட்டும் காரணங்களைப் பார்க்க ஆசை.

பறவூர்தி = வானூர்தி.
பற ஊர்தி என்றால் பறக்கும் ஊர்தி:  வினைத்தொகை.
சிவப்பொளி = சிவப்புவிளக்கு.  ஆகுபெயர்.
கோடு: மலையுச்சி.
தில்லி :  டில்லி.
புரைய -  ஒக்க
உழந்தும் =  துன்புற்றும்.
வரை = எல்லை. ஒரு வரை - ஒரு எல்லை என்பதாகும்.

ஒருவரையும் என்பதற்கு ஒரு நபரையும் என்று
பொருள்கொண்டு அப்புறப்படுத்தக் " குத்தகையாளர் 
ஒருவரையும்"  என்று விரிக்கலாமோ?
யாமெழுதியது எல்லை என்ற பொருளில்தான்.

கருத்துகள் இல்லை: