ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

94‍ஐ எட்டிய பூரணவடிவு அம்மையார் மறைந்தார்

94‍ஐ எட்டிய பூரணவடிவு அம்மையார் மறைந்தார்.  (சிங்கப்பூர் 6.4.2017)

இக்காலத்தில் ஒரு நல்ல வயதை எட்டுமுன்னரே மறைந்துவிடுவோர்
பலராவர். மேலும், நோய்களின் எண்ணிக்கையும் மிகுந்தள்ளது. இந்த நிலையில், பழங்கால முறைப்படிச் சத்துணவை உண்டு  உடலை நன்கு நலம் பேணி, நீண்ட நாள் வாழ்ந்துள்ளார் பூரணவடிவு அம்மையார்.

இவருக்கு ஏழு பிள்ளைகள். ஆண்கள் ஐவர்; பெண்கள் இருவர் ஆவர்.

இட்டிலி, வடை, சிலவகை அப்பங்கள், உளுந்துக் கஞ்சி என்று
செய்து உண்பதுடன் பிறருக்கும் கொடுப்பவர்.  அன்பு  கெழுமிய உள்ளம் படைத்தவர் .

இவர் உடற்பயிற்சி ஏதும் செய்ததாகத் தெரியவில்லை. பெரும்பாலும்
சமையல் வேலைதான். இறுதி நாட்களில், பணிப்பெண் உதவியை
ஏற்றுக்கொண்டார்.

பின்னாட்களில் இனிப்பு நீர் நோய் ஏற்பட்டு, கட்டுக்குள் இருந்ததாகக்
கேள்வி. இப்போது மாரடைப்பு ஏற்பட்டு   மறைந்துவிட்டார்.

இவருடைய மகன்களில் ஒருவர், முருகையன். முரு ஆட்டோ ட்ரேடிங்
(முரு உந்து வணிகம்)  என்ற நிலையத்தை நடத்திவருகிறார். சிங்கப்பூரில் உந்து வண்டி வணிகம் செய்பவர் இந்தியருள்   இவர் ஒருவரே.   இந்தியர் பிறரை இத்துறையில் காணமுடியவில்லை .

அன்புடையோரும் ஆதரவாளரும் பெருந்திரளாக வந்திருந்து அம்மையாரை
வழியனுப்பி வைத்தனர்.

பூரணவடிவு அம்மையார் ஆன்மா சாந்தி அடைய நாம் இறைவனை
வேண்டிக்கொள்வோமாக.

நாரணன் சிவனொடு வீறுடை அம்மனின் நல்லருள் பெற்றுயர்ந்த‌
பூரண வடிவெனும் பொற்பெயர் பூண்டவர் புன்னகை என்றுமுள்ளார்;
ஊருணத் தந்து தான்பிற குண்பவர் உள்ளில் விரிந்த அன்பு;
வேறுல கெய்தினர் வேண்டுவம் சாந்தியை விழைவம் அவர்பெறவே.





கருத்துகள் இல்லை: