திங்கள், 3 ஏப்ரல், 2017

ராட்டினம் என்ற சொல் அமைந்ததெவ்வாறு?

இராட்டினம் அல்லது ராட்டினம் என்ற சொல் அமைந்ததெவ்வாறு?

இவ்வியந்திரத்தை  ஏறுசுழலி என்றும் சொல்லலாம்.

இந்த "இராட்டினத்தில்" உள்ளீடாக இருப்பவை இரண்டு எளிய  சொற்கள் தாம். அவை இரு + ஆட்டு என்பன.

இன் + அம்  என்பன விகுதிகள்..  இன்  என்பது  உடைமைப் பொருளினதும்   ஆதலின் இங்கு பொருத்தமாகக் கையாளப்பட்டுள்ளது.

ஏறி அமர்ந்ததும் (அதில் இருக்கும்போது ) அது ஆட்டுகிறது. அதாவது
"விளையாட்டு" உண்டாக்குகிறது.  இச்சொல்லில் வரும் ஆட்டு என்றது "விளையாட்டு" எனற்பொருட்டு. ஆகவே இருக்கும்போது விளையாட்டு
உண்டாகும்படிச் சுழல்கிறது.

நாளடைவில் இச்சொல்லின் இகரம் கெட்டது. வெறும் ராட்டினம் ஆயிற்று.

புலவர்கள் பிற்காலத்தில் "ராட்டு" என்ற போலி முதனிலை கண்டு
மருண்டனர். பிறமொழிச்சொல்லாகவிருக்கலாம் என்று மயங்கினர்.

தமிழன் எழுத்துக்களை விழுங்கிவிடுவதைத் தமிழனே மறந்தான்.

பிற்காலத்தில் சுற்றும் வேறு சில இயந்திரங்களுக்கும் இப்பெயர்
பொருந்தியது. நூற்கும் இயந்திரம், நீரிறைப்பான் முதலியவையும்
இப்பெயர்க்குரியவாயின.

இரு என்ற இருத்தற்சொல், மிகவும் பயன்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக
இரு+ஆசு+ இ = இராசி என்பதில் "பற்றி நிற்குமிடம்" என்ற பொருளில்
சொல்லமைய, இரு என்ற சொல் உதவியுள்ளது காண்க. ஆசு எனில்
பற்றிக்கொள்ளல்.


கருத்துகள் இல்லை: