புதன், 23 பிப்ரவரி, 2022

செடிகள்மேல் வந்த ஆசை.

 நீரில்லா இடத்தினிலே தாகம் போல----ஆசை

நெஞ்சமதில் சிங்கப்பூர் மக்கள் கொண்டார்

பாரெங்கும்   செடிப்பசுமை மாணும்  முன்னால்---சிங்கை

பகருமொரு பசுநகராம்   பாதை கண்டார்.


வீதிகளில்  தெருவோரம் ஊர்தி  செல்லும்  ----- நடு

விரிவாகு  எனவெங்கும்  பசுமை யாக்கி, 

யாதுமொரு  வெற்றிடமும் இல்லா வண்ணம் ---செடிகள்

எழுமரங்கள் கொடிகளிவை வளர்த்தி வென்றார்.


குப்பைகொட்டும் வழித்துளையே என்ற போதும் ---  மக்கள்

கூட்டெனவே அரசுடனே  ஒத்தி சைந்து, 

சப்பைநிலை போலியங்கிச்  சார்ந்து நின்றார் ---  செடிகள்

சட்டிகளில் கொடிகளென எட்டி   னார்கள்.


தாகம்:   தவி+ அம் > தாவம் > தாபம் > தாகம். (போலித்திரிபு)

தாகம் தவிக்கிறது என்பது  பேச்சில் பயன்பாடு.

ஆசை - ஒரு பொருளின் அணுக்கத்தினால் மனத்துள் அசைவு உண்டாதல்.

அசை >  ஆசை (முதனிலை நீண்டு திரிந்த தொழிற்பெயர்)

இதுபோல் திரிந்த இன்னொன்று:  சுடு >  சூடு.

நடுவிரிவாகு:  சாலையின் நடுவில் அமைந்துள்ள விரிந்த ஒரு வாகு.

இந்த வாகிலும் செடி புல் முதலியவை நடப்பட்டுள்ளன.

மாணும் - சிறக்கும்

பசுநகர் -  பசுமை நகர்

பகரும் - எடுத்துரைக்கும். ( தகுதியான என்று பொருள்).

குப்பை வழித்துளை - ரப்பிஷ் சூட் என்னும் குப்பைக்கிடங்கு.

கூட்டெனவே -  அரசுடன் ஒத்துழைத்தவாறு.

எட்டினார்கள் - அடைந்தார்கள்.




 

 இங்குச் சில சட்டிச் செடிகள் உள்ளன.  ஒன்றில் விதைகள் தூவி உள்ளனர்





கருத்துகள் இல்லை: