புதன், 16 ஜூன், 2021

என்னை நோய்வராமல் காப்பாற்று

( ஒரு பற்றன் அம்மனிடம் வேண்டுவது.  இங்குக்

கடைக்கணித்தல் என்ற பதம் பயன்பாடு காண்கிறது). 


அம்மா-க  டைக்கணிப்பாய் அணைத்துக்கொள் என்னை;

ஆண்டருளே நோயினின்றே அகலவெனை வைப்பாய்!

இம்மா-நி லத்தவர்கள் தும்முதல்செய்    கின்றார்

இருமுகிறார் ஈயென்ன சளியைவழிக் கின்றார்

சும்மாவே  வீட்டினிலே வைகுதலைச் செய்யார்

சுற்றிவரு கின்றவரைச் சுருட்டியிருத் திட்டால்

எம்மாநோய் என்றிடிலும் எனையணுகல் மேவா(து)

இதைஎனக்கு  நயந்திடுவாய் இடறலறச் செய்யே.


அரும்பொருள்:

அம்மா கடைக்கணிப்பாய் -  அம்மா கடைக்கண் பார்ப்பாய்

அகலவெனை -  அகல என்னை

இம்மா நிலத்தவர் -  நாட்டினர்

ஈ என்ன -  ஈ என்ற ஒலியுடன்,

வைகுதல் - தங்குதல் ஓரிடத்து;

சுருட்டி இருத்திட்டால் -- சுருட்டி இருத்து,   இட்டால்

எம்மா நோய் -  எவ்வளவு பெரிய நோய்

நயப்பதிலே -  தருவதிலே.

இடறலற -  நான்  இடறுதல் இல்லாமல்.

கருத்துகள் இல்லை: