வியாழன், 17 ஜூன், 2021

சமத்கிருதத்தில் தமிழ்ச் சுட்டடிச் சொற்கள்.

 தமிழில் பெரும்பாலான சொற்கள் சுட்டடியில் தோன்றியவை எனபதில் ஆய்வுவல்லோர் வேறுபடவில்லை.  நம் இடுகைகளில் சுட்டடிச் சொற்கள் மூலமாக வரும்போதெல்லாம் அவ்வுண்மையைச் சுட்டிக்காட்டத் தவறுவதில்லை,  நீங்கள் அறிந்த ஒன்றிரண்டு சொற்கள் தவிர.  தமிழினோடு பலவகைகளில் ஒத்தியங்கும் சமத்கிருதத்தில் சுட்டடிச் சொற்களின் ஆட்சி தெளிவாகவே முன் நிற்கின்றது.

அ, இ, உ என்பவை சுட்டெழுத்துக்கள்.  அஃறிணை ஒருமையில் இவற்றோடு து விகுதி இணைக்கப்படும்.  மூன்று சுட்டுக்களுக்கும்,  அது, இது, உது என்று வரும். பன்மையில்  அவை, இவை, உவை என்று வரும்.

 பிறைக்கு முன்னுள்ள நிலவு  உவா எனப்படுகிறது. இதுவும் ஒரு சுட்டடிச் சொல்லே ஆகும். அதுவே அமாவாசை என்று சொல்கிறோம்.  பின்னரே நிலவு படிப்படியாக வளர்ந்து இறுதியில் முழு நிலவாகிறது.  அமாவாசை என்பதன் முழுவிளக்கம் இங்கு உள்ளது.  அதைச் சொடுக்கி வாசிக்கலாம்.

அமாவாசை  https://sivamaalaa.blogspot.com/2016/01/blog-post_24.html

பேச்சுச் சொல்  https://sivamaalaa.blogspot.com/2018/04/blog-post_17.html

இப்போது எப்படி சுட்டுச்சொல் சங்கதத்தில் வருகிறது என்று பார்ப்போம்.

நந்தனுதே

ஜிஷ்ணுனுதே

பூரிக்ருதே

ஷைலஸுதே

இவ்வாறு வருவனவற்றை : (விளிவடிவம் )  எ-டு:  நந்தன்+உதே  என்று பிரிக்கலாம்.  பிறவும் அத்தகையனவே. வேறு முடிபுகளும் உள.

உது என்ற சொல்  ஏகாரம் பெற்று உதே என்று வந்தது.  அம்மொழிப் புலவர் இவ்வாறு பிரித்துக்காண்பதில்லை. உண்மை உணர்த்திச் சுட்டடிகள் அங்கும் புகுந்துள்ளன என்று அறிவுறுத்த இவ்வாறு காட்டினோம்.

தமிழ்ப்பேச்சிலும் இது உது என்னும் சுட்டுச்சொற்களைக் கேட்கலாம். 

"யாரோட கைக்குட்டை?"

" இது  ங்கொப்பனுது"  என்ற பதிலை நோக்குங்கள்.

உகரச் சுட்டு முன் என்றும் பின் என்றும் இரு பக்கங்களையும் குறிக்கவரும். "ஊழையும் உப்பக்கம் காண்பர்" என்ற திருக்குறள் தொடரில் அது பின்பக்கம் குறித்தது.  உவா என்ற சொல்கூட, அமாவாசையைக் குறிக்கிறதா அல்லது முழுநிலவைக் குறிக்கிறதா என்பதை இடன் கண்டு அறியவேண்டும்.   இடம்= இடன்.  பகு+ அம் = பக்கம் என்றும் பகம் என்றும் இருவகையிலும் வரும்.  தகு+ அ = தக்க என்பதுபோல் இரட்டிக்கும் என்றும் அறிந்துகொள்க.  தகு+ அ > தக என்பதுமாம்.  இவை புணரியலுள் கூறப்படும் நிலைமொழி வருமொழிப் புணர்ச்சிகள் அல்ல.  ஈற்று அகரம் வருமொழியன்று. இவண் மொழி என்பது முழுச்சொல். இதை உணரவேண்டும்.

அறிக மகிழ்க.


மெய்ப்பு பின்னர்/

கருத்துகள் இல்லை: