புதன், 16 ஜூன், 2021

எழுத்து மொழியும் பேச்சு மொழியும்

 சமஸ்கிருதம் போலும் மொழிகளில்  பேச்சுமொழி என்று ஒன்று தனியாக இல்லை.  பேசுவதாய் இருந்தால் எழுத்தில் எப்படி இருக்கின்றதோ, அதேபடிதான் பேசவேண்டும்.  சிதைத்துப்பேசினால் அது வழுவென்று ஒதுக்கப்படும்.  ஆனால் தமிழிலே  பேச்சுமொழி  தனியாக இலங்குகின்றது.  சென்ற நூற்றாண்டிலும் அதற்கு முன் வாழ்ந்தவர்களும் இதைக் கொச்சை என்றனர்.  

 ஆட்டின்மேல் அடிக்கும் நாற்றத்தைக் கொச்சைநாற்றம் என்பதிலிருந்து கொச்சை என்பதன் உண்மைப் பொருளைக் கண்டுகொள்ளலாம்.   கொச்சு என்பது குழந்தை என்னும் பொருளதும்  ஆகும். ( குழந்தையை நல்லபடியாக குளிப்பாட்டி உரிய நறுமாவு பூசி உடுப்பிட்டுத் தொட்டிலில் கிடத்தினாலே ஏற்க இயலும் என்பதும் கருத்தாகலாம்).  கொச்சை என்பது இடக்கர் அன்று. (கெட்ட வார்த்தைகள் அல்ல ).

கொச்சை என்றால் திருத்தமற்ற பேச்சு என்று பொருள். திருத்தமின்மை என்று நினைத்ததால்  அது இழிதக்கது என்று முடிவு செய்தனர். இதற்கு மொழிநுல் அடிப்படை ஒன்றுமில்லை.  கோடிக்கணக்கான மக்கள் பேசும் ஒரு மொழியை எப்படி இழிதக்கது என்று இவர்கள் மிகு துணிகரமாகச் சொன்னார்கள் என்பது ஒரு புதிராக உள்ளது.  இதற்கு ஒரு காரணம் சொல்லவேண்டுமென்றால்  தாங்கள் பள்ளிக்கூடத்தில் படித்த சொல்வடிவங்கட்கு இப்பேச்சுச் சொல் வடிவங்கள் வேறாக இருந்தன என்பதுதான்.   ஆனால் வேறாக இருந்ததும் எழுத்துமுறைக்குள் அடங்காமையும் ஒன்று இழிதக்கது என்று முடிவுசெய்யப் போதுமான காரணங்கள் ஆகமாட்டா.

உலகில் வரிவடிவம் இல்லாத மொழிகளும் இருக்கின்றன.  அதாவது அவை ஒலிவடிவில் மட்டுமே உள்ளன.  ஒரு மொழி ஒலிவடிவில் மட்டும் இருப்பதில் இருக்கும் இழிவுதான் என்ன?  மலாய் ஒலிவடிவில் அருமையாக இயங்கும் மொழி. பின்னர் எழுதிவைக்க நேர்ந்ததால்,   உரோமன் எழுத்துக்களையும்  அரபி எழுத்துக்களையும் (ஜாவி)  பயன்படுத்தி வரிவடிவாக்கினர்.  மலேசியாவில் அது அரசு மொழியாக உயர்ந்த தகுதியில் கோலோச்சுகிறது.. உயர்வு இழிவு என்பதெல்லாம் ஒரு மனிதனின்  எண்ணத்தளவிலானது;  வேர்ப்படையற்ற வெறுமை  உடையதுதான்.  " தூர் இற்று இன்று அன்ன தகைத்து  ( நாலடியார்  138)"  என்று அதை வருணிக்கவேண்டும்.   இற்று - துருப்பிடித்தது ஆகி;   இன்று -   இல்லையான ;  அன்ன - அதுபோல்;  தகைத்து - தன்மையை உடையது .  

சில சிறந்த தமிழாசான்களும் இத்தகு கருத்தினை உடையவர்களாய் இருந்தனர். அவர்கள் காலத்தில்  அது ஏற்றுக்கொள்ளப்பட்டது.  ஆனால் இன்று அக்கருத்து ஏற்புக்குரித்தன்று  என்பது தெளிவு. 

மக்கள்மொழி என்பது மக்களாட்சியின் ஓரமைப்பு  ஆகும்.  அம்மொழியில் பேசிக் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டுதான்  மக்கள் எதையும் தீர்மானிக்கின்றனர் என்பதால் அதை இழிவென்று சொல்வது மக்களாட்சிமைக்கு ( ஜனநாயகத்துக்கு) ஒத்துவராத கருத்தாகும்.  அத்தகு கருத்துகள் கொண்டிருத்தல் ஒரு காலவழுவாகும்.

மலையாளமொழி முழுமையாக அப்போதிருந்த   அவ்விடத்துப் பேச்சுமொழியை அடிப்படையாகக் கொண்டு எழுந்ததாகும்.   பேச்சுமொழியின் அழகில் மனத்தைப் பறிகொடுத்த எழுத்தச்சன் என்னும் புலவனால் வெற்றிப்பின்னணியுடன் முன் கொணர்ந்து அது  நிறுவப்பட்டது என்பதை மறுத்தற்கில்லை.  எழுத்துமொழியை  அடிப்படையாகக் கொண்டு பேச்சுமொழியில் அது தவறு, இது தவறு என்று சொல்லிக்கொண்டிருந்த புலவர்களை அவன் அப்பால் கடத்திவிட்டான்.  பையவே காணின், இது ஒரு பசும் புரட்சியே  ஆனது.

தமிழின் இனமொழிகள் தனிநாயகிகளாக மலர்ந்ததும் இவ்வாறுதான்.

எனவே அறிவுடைப் புலவன் என்போன்,  எழுத்துமொழியை அதிலுள்ள எழிலுக்கும் இயைபுக்கும் போற்றுவான்.  பேச்சுமொழியை  அதிலுள்ள எழிலுக்கும் பயன்பாட்டுக்கும் தலைமேற்கொள்வான்.  பயன் தெரிவோன் இரண்டனுக்கும் உள்ள தொடர்பினையும்  அறிவான். ஒன்று மற்றொன்றுக்கு உதவியதும் காண்பான்.  ஒலிகள் இயற்கையில் உள்ளன.  தெளிந்த அறிவினோன்  நாய் குரைப்பதும் பறவையின் பாட்டும் ஒன்றென்றே தரம் காண்பான்.  இவையனைத்தும் இறைவன் ஏற்றுக்கொண்ட அல்லது தந்துதவிய ஒலிகள்  அல்லது இயற்கை ஒலிகள். இவற்றுக்கு இழிவில்லை.  அழிவுமில்லையென்னலாம் -  உலகு அழிகாலம் உண்டேல் அது நிகழும்வரை. உம்மையும் கடந்து காலம் வருமட்டும் அழிவின்றி நிற்கும் எதையும் இழிவென்று உரைக்க எமக்கும் உமக்கும் நிற்புணர்வும்1 இல்லை. 

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.


குறிப்பு:

1    நிற்புணர்வு >  நிற்புணர் >  நிபுணர் > [ நிபுணத்துவம். ]  (நிலையை உணர்கின்ற தன்மை.)

கருத்துகள் இல்லை: