திங்கள், 14 ஜூன், 2021

காண்தருவம் காந்தருவம் (மணம்)

தொடங்குரை:

 தமிழ்மொழியானது  மிக்க நெடுங்காலம் பேச்சுமொழியாக இருந்துள்ளது. இன்றும் இலக்கிய வழக்கில் உள்ள சொற்களுக்குப் பேச்சு மொழியிலிருந்து தொடர்பும் பொருளும் கிட்டுகின்றன.  இது தமிழின் சிறப்புகளில் ஒன்றாகும். தமிழ்ச்சொல்லின் பொருளைத் தீர அறிந்துகொள்ள அதன் உலக வழக்கினை ஆராய்தல் பேருதவியாக உள்ளது.  

உலக வழக்கின் திறம்:

இதற்கு ஓர் எடுத்துக்காட்டினைக் கூறலாம்.  தமிழ் என்று ழகரத்தை நாவினால் உளைப்பதற்கு இயலாத படிப்பறிவில்லாதவன் ஒருவன்,  தமில் என்று சொல்கிறான்.  அவனுக்கு ழ் என்ற எழுத்தை  நாவேற்றுதற்கு இயலவில்லை.  இந்தச் சொல்லை மூலமாக எடுத்துக்கொண்டு, அறிஞர் கமில் சுவலபெல்,  தம் + இல்  மொழி என்று மேற்கொண்டு,  இல்லத்து வழங்கிய மொழி என்பதே அப்பெயரின் அர்த்தம் என்று முடிவு செய்கிறார்.   

தமிழர்கள்  றகரம் இரட்டித்து  வருதலைத்  முறையாகப் பலுக்கினார்களில்லை. சிற்றம்பலத்தைச் சித்தம்பரம் என்று உச்சரித்தே, இடைக்குறைத்துச் சிதம்பரம் என்று ஊர்ப்பெயர் ஆக்கினர் என்று சொல்லின் செல்வர்  ரா. பி. சேதுப்பிள்ளை முடிக்கிறார்.   சிதம்பரம் என்னும் சொல் வழக்கிலிருந்தே நாம் அறிந்துகொள்ளுமாறு வரலாறு அமைந்துள்ளது காணலாம்.

தொல்காப்பியர் வழக்கு செய்யுள் இரண்டையும் ஆய்ந்தார்.  வழக்கு இரண்டு வகைப்படும். உலக வழக்கு, செய்யுள் வழக்கு என.  எனவே பேச்சு மொழியை உள்ளடக்கியதே உலக வழக்கு. அதை முற்றிலும் விலக்கிவிட்டு ஆய்வு செய்கிறோம் என்று சொல்லுதல் அறியாமையிற் பெரிதென்பதை  நுட்பமாக அறிந்துகொள்ளலாம்.

தமிழுலகின் விரிவு

தொல்காப்பியர் காலத்தில் கவிஞர்கள் பாவலர்கள் பலர் இருந்திருப்பர். தன் சிற்றூரில் வாழும் ஒரு கவிஞன் ஒரு பாடலை இயற்றி,  உழுதுகொண்டிருக்கும் போதோ வண்டி ஓட்டும்போதோ பாடலாம்.  அதை வெளிப்படுத்தி உலகினர் சுவைக்கும்படி செய்வதற்கு இருந்த வசதிகள் மிகவும் குறைவு.  அவன்றன் ஊராட்சியாளன் பாப்பற்றனாய் இருந்தால்  அவன் சமைத்துண்ணக் கொஞ்சம் நெல் ஈந்து புரப்பான் (ஆதரிப்பான்). அவனைவிடப் பெரிய நிலக்கிழானைத் தேடிப் போகவேண்டும்.  அப்போது ஒருவேளை ஒரு வாரத்துக்கு உள்ள உணவு கிடைக்கும்.  "உலக வழக்கு என்பதை பாவலர்களையே குறித்தது, மக்களைக் குறிக்கவில்லை"  எனின், ஊருக்கு ஒருவனாக இருந்த பாடலர்களின் மொத்தத் தொகை 50 அல்லது 100 என்றால்,  தமிழுலகு என்பது அவ்வளவுதானா? பரங்குன்றில் ஒரு பாடலன் இருந்தானாம்.    (தேவாரம் 876.1).  அவன் முருகனாக இருந்திருப்பான். அவன் மனிதனானால் பரங்குன்றம் அனைத்துக்கும் பாடலன் ஒருவன் தான் என்று பொருள்படும். அல்லது பா இயற்றுவோர் ஓரிருவர்  அங்குச் சென்று பாடிவிட்டு இறையுணவு (பிரசாதம் ) உண்டு திரும்பி இருப்பர். ( பாடல் பெற்றவன் முருகப் பெருமான் என்று வைத்துக்கொள்ளுங்கள். மறுப்பொன்றும் இல்லை ).  எனவே உலக வழக்கு  என்று சொன்னது மக்கள் மொழியைக் குறித்ததென்பதில் ஐயமொன்றும் இல்லை. ( கருத்தை மறுத்துப் பின்னூட்டம் செய்க. ) அது பரவலாக எழுத்திலாயினும் பேச்சிலாயினும் பயன்பட்ட மொழி.

காந்தருவம் என்ற சொல்.

காந்தருவம் என்ற சொல்லை இன்று ஆராய்வோம்.  காந்தருவ மணத்தில் ஆடவனும் பெண்ணும் பெற்றோர் ஏற்பாடும்  அறிதலும் யாதுமின்றி, காதல் வயப்படுகின்றனர்.  பின்னர் யாரிடமும் அறிவிக்காமலே மணந்துகொண்டு சகுந்தலை போல் வாழ்க்கையைத் தொடங்கிவிடுகின்றனர்.  இத்தகைய மணத்தைப் பழைய இலக்கியங்கள் காந்தருவம் என்று குறிக்கின்றன.

காந்தருவம் என்பதைச் சில வகைகளில் ஆராய்ந்து வெவ்வேறு முடிவுகளை எட்டலாம்.  சில நூல்களிலும் பிறராலும் சொல்லப்படுவன  அவை.  இவற்றுள், யாம் கண்டு விதந்து முன்வைப்பது இதுவாகும்:  வருமாறு.

காண்  தருதல்  -  கண்டவுடன் தன்னைத் தந்துவிடுதல். மணந்தோர் இருவரும் அவ்வாறு ஒருவரை ஒருவர் தந்து இணைகின்றனர்.

காண்தரு + அம் >  காண்தருவம் > காந்தருவம்.

அதாவது கண்டதும் காதலும் மணமும்.

அடங்குரை

இச்சொல் தமிழ் மூலங்களை உடையதாகவே முன் நிற்கின்றதென்பதை அறியலாம்.

இதை முன்னும் சொல்லியுள்ளோம். அவ்விடுகை இங்குக் கிட்டவில்லை.

காந்தம் என்ற சொல்லுடன் தொடர்புறுத்துதல் கூடுமெனினும் அது அணிவகையாய் முடியும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.. 


2 கருத்துகள்:

SIVAMALA சொன்னது…

பின்னூட்டமிடுதலும் சிந்தனையைத் தூண்டித் தமிழ் வளர்ச்சிக்கு உதவும். ஒத்துக்கொளளாமையைத் தெரிவிக்கவும் பின்னூட்டமிடலாம். யாம் பல இணையத் தரவுகளில் பின்னூட்டம் இட்டுள்ளோம். யாரையும் புண்படுத்தாமல் கருத்துக்களைச் சொல்வதில் தயக்கம் காட்டவேண்டியதில்லை. சட்டத்துக்கு எதிரான நடவடிக்கையில் நாம் ஈடுபடவில்லையே.

SIVAMALA சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.