வெள்ளி, 12 பிப்ரவரி, 2016

இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா?

=== இத்தலைப்புடைய நூலை கவி கா.மு. ஷெரீப் எழுதியுள்ளார். இது கலாம் பதிப்பகம். 6 இரண்டாவது பிரதான சாலை, சி ஐ டி காலனி மயிலாப்பூர் சென்னை 600 0024 என்ற முகவரியில் கிடைக்கிறது. தொ.பே. 044 2499 7373 ஆகும்.

ஒளியச்சு, வடிவழகு, வெளியீடு என்றெலாம் நூல் முன் பக்கங்களிலேயே காணப்படுகிறது. வெளியீட்டாளர்தம் தமிழ்ப்பற்றினை இது தெளியக் காட்டுகிறது.

இந்நூலாசிரியர் சிறந்த கவிஞர், சீறாவின் உரையாசிரியர், தமிழ் முழக்கம் என்னும் இதழாசிரியர், பல இனிய திரைப்பாடல்களை ஆக்கியவர் என்று இவர்தம் பெருமையை அடுக்கலாம். வாராய் வாராய் (மந்திரிகுமாரி), பாட்டும் நானே (திருவிளையாடல் ) என்று பல பாடல்களை எழுதியவர். எழுதிய பாடல் சில வேறு கவிஞர்களின்  பெயரில் வெளிவரவும்  வழிதந்தவர்.


இவர்தம் திரைப்பாடல்களில் "முடிவிலா மோன நிலையை நீ மலை முடிவில் காணுவாய் வாராய்' என்றும், "அலைகள் வந்து மோதியே ஆடியுன்றன் பாட்டுக்கென்றே தாளம் போடுதே." "உயர்ந்த மலையும் உமது அன்பின் உயர்வைக் காட்டுதே" என்றும் வரும் வரிகள் கேட்போரின் செவிகளை இன்புறுத்தும் சொல்லினழகும் கருதினாழமும் கொண்டவை. தெளிந்த நீரைப் போன்ற காதல் என்பது இவர்தம் ஒப்பீடு.  " பாடும் உனை  நான் (கடவுள்)  பாட வைத்தேனே .... என்னிடம் கதை சொல்ல  வந்தாயா?"  என்பது நகைச்சுவையுடன் இறையாற்றலைப் புலப்படுத்தும் வரிகள். .

இஸ்லாம் ஒரே கடவுட் கொள்கையுடைய மதம். இதில் மறுபேச்சுக்கு என்றும் இடமில்லை. இந்து மதத்திலும் ஒருகடவுட் கொள்கை, நூல்களில் பரக்கக் காணப்படுகிறது.வேதங்கள், உப நிடதங்கள், குறள் எனப்பல. பல் பெயரும் பல் வடிவுமும் ஒரு குறியதே என்பது இந்து மதம். இவற்றில் பல ஒற்றுமைகளை எடுத்துக்காட்டி ஆசிரியர் இம்மதங்கள் ஒன்றுக்கொன்று மாறுபடுவன அல்லவென்று நிறுவுகிறார். கொள்கைவிளக்கில் ஒருதன்மையன எனினும் கடைப்பிடியில் வேறுபடுவன என்பதைக் குறிக்கிறார். ஓர் உயர்கொள்கையை யாண்டும் நிலவுமாறும் மாறுபடுதல் சிறிதுமின்றியும் நிலை நிறுத்திய பெருமைத்து இஸ்லாமியமென்று இவர் கூறுகையில் அஃது மறுக்கொணா உண்மையென்றே ஒப்புவோம். நாள்தொறும் பயில்முறையில் இந்து மதம் வேறுபடினும் இந்துக்களும் முஸ்லீம்களும் காலகாலமாய் ஒன்றுபட்ட நாட்டுவாழ்வினரென்பதைச் சுட்டுகின்றார். தம் ஆட்சி நிற்கவைக்க, முஸ்லீம்கள் இந்துக் கோயில்களை இடித்தனரென்று பரப்புரைத்த 1   ஆங்கிலேயன் புனைகதையை ஆசிரியர் அம்பல மாக்கியுள்ளார்.


செந்தமிழ்க்  கவியின் இந் நூல் படிக்க இனியதே.  


அரிதின்  முயன்றார்  அழகுத் தமிழில் 
இனிதே புனைந்த கவிஷரீபின்  இன்னூல் 
பலரும் படித்துநயம் பண்பொடு பெற்று 
குழறு   படிதீர்வர் கூறு.   ---  Sivamala,


1  Much of the theories in history concocted during the British Raj by British historians and researchers seem intended to retain India in their possession.   Examples are the Aryan Invasion
Theory and Aryan Migration Theory. That Muslims were against Hinduism was a similar theory. In any case, the British were successful in dividing India and causing rifts. The author Sheriff pointed out that Muslim rulers including  Aurangzeb  had donated extensively even for the building of Hindu temples. Many Hindus were also in their employ.

கருத்துகள் இல்லை: