புதன், 10 பிப்ரவரி, 2016

ஆயிரம்

பத்து என்ற சொல் பல் ( பல,  பன்மை)  என்னும் சொல்லினின்று தோன்றியது. ஒன்று முதலாக எண்ணக்கற்றுக்கொண்ட மாந்தர்க்குப்  பத்தை எட்டியவுடன் அது மிகப்பலவாகத் தோன்றியதே,  பல் என்பதன் அடிப்படையில் பத்தை எண்ணியதற்குக் காரணம் ஆகும்.  இன்று மனிதன் ஆயிரங்  கோடிகளாகக் கணக்கிடுகின்றான்.
ஐந்துக்கு அப்பால் பெரியதாவது  ஆறு ;  இது நதி என்றும் பொருள் படுகிறது.  ஐந்துக்கு அப்பால் செல்வது ஆறுபோல் நீள்வது என்று அயர்ந்தான்  அவன். அந்த நீட்சி குறிக்க  ஆறு என்றே  கூறினான்.  அதிலிருந்து மேல் இன்னொன்றைச் சேர்த்தால்  அது  ஓர் எழுச்சி ஆகிவிட்டது .....எழு > ஏழ் > ஏழு  என்று அதைக் குறித்தான்.

இங்ஙனமே  ஆயிரத்தை அடைந்த போது  அவன் எண்களை  எண்ணுவது  "ஆகிவிட்டது -   இறுதி  ஆகிவிட்டது  -  இனி ஏது பிறவென்ற நிலைக்கு வந்து
அதை  "ஆய்  + இரு +  அம்  -=  ஆயிரம்  என்று கூறினான்.  எண்ணிக்கை முடிவாகி இருக்கின்றது  என்று  கருதினான்.

இன்னும் சென்ற காலை   இனி முடியுமோ -   திரும்பவன்றோ வேண்டும் என்ற கவலை.  கோடு  என்றால் மலையுச்சி.   கோடு என்றால் வளைந்து திரும்புதல்.   இதை  அடிப்படையாக ஏற்று,   கோடு> கோடி  என்றான். கோடி என்பதோ  முடிவு என்றும் பொருள்.  தெருக்கோடி என்ற வழக்கை உன்னுக.

ஆயிருக்கும் ஆயிரமும்  கோடுயர்ந்த கோடியும் கண்டு மகிழ்ந்தோம்.


கருத்துகள் இல்லை: