ஞாயிறு, 10 மார்ச், 2019

சொற்சிந்தனைகள். சித்து விளையாட்டும் சித்தரும்.


இந்தியச் சமய வரலாற்றில் இறைப்பற்று மேலீட்டால் ஒழுக்கமுடைய பெரியோர் இருவகையானோர் தோன்றினர். ஒருவகையினர் மிகப் பெரியோர் என்று எண்ணப்பட்டனர். இவர்கள் மாமுனிவர்கள். அண்டமா முனிவர்கள் என்றும் குறிக்கப்பெற்றனர். சங்கதத்தில் மகரிஷிகள் என்றும் தமிழில் பேரிருடிகள் எனவும் சொல்லப்பட்டனர். பிறவிப் பெரியோர் என்றும் சொல்லலாம். “ மக " என்பதும் " மகா" என்பதும் இவர்களுக்கு அடைமொழிகளாய் வந்தன.

இந்த மாமுனிகளுக்குக் கோட்டுக்கு இணைகோடுபோல வேறு இறைப்பற்றுச் சிந்தனையாளர்களும் தோன்றினர். மன்பதையினுள் இல்லறம் நடத்தித் திடீரென்று தோன்றிய உணர்வு வேறுபாட்டினால் அவ்வில் வாழ்வினைக் களைந்தெறிந்து துறவியானவர்கள் இவர்களிற் பெரும்பாலோர். இத்தகையோர் மாமுனிவர்கள் ஆகாவிட்டாலும் சிறுமுனிவர்கள் ஆயினர். இவர்களை மக்கள் அப்படிக் கருதியதால் சிறு என்ற சொல்லினின்றே தோன்றிய சொல்லினால் இவர்கள் சுட்டப்பட்டனர்.

சிறு + அர் = சிற்றர் > சித்தர்.

இவர்கள் மாமுனிவர்கள் போல் பெருந்தவம் இயற்றாமல் அவ்வப்போது அறிவுரைகளை நடப்பிற்கேற்பவே உதிர்த்தனர். இவை " சிந்தனை" எனப்பட்டன. இதுவும் சிறு என்பதனுடன் தொடர்புடைய அடிச்சொல்லாகிய சிந்து என்பதிலிருந்து பிறந்ததே.

சில் = சிறியது.
இதற்கு எதிர்ச்சொல் பல் என்பது.

சில் > சில; பல் > பல.
சில் என்பது உருவிற் சிறியதும் எண்ணிக்கையிற் சிறியதும் என இருவேறு விதமானவை.

இவர்கள் வியக்கும்படியான சில சொன்னோராவார்.

சில் > சின் > சிந்து. ( லகர 0னகரப் போலி )
சில்+து > சிற்று > சித்து ( திரிபு ) > சிந்து ( மெலித்தல் விகாரம்).

இவை இருபிறப்பிகள்.

சிந்து > சிந்தி > சிந்தித்தல் ( வினையாக்கம் ).
சிந்தி + அன் + = சிந்தனை. அன்: சொல்லாக்க இடைநிலை. : விகுதி.

அவ்வப்போது நிகழ்வுக்கு ஏற்ப எண்ணிச் சொல்லுதல்: சிந்தனை. சிறு சிறு மன உணர்வு வெளிப்பாடுகள்.

இப்போது இது (சிந்தனை ) தன் சிறுமைப் பொருள் இழந்துவிட்டது.

இந்தச் சிற்றர்கள் (சித்தர்கள் ) செய்த வியக்கத் தக்க செயல்கள்: கசக்கும் கரும்பை இனிக்கச் செய்வது; வாழைமட்டையில் நெருப்பு எரியவைப்பது போலும் செயல்கள்: ----- வியன்செயல்கள் ----- சித்துகள் என்றே சொல்லப்பட்டன. சிறிது நேரத்தில் கண்டு வியந்து போற்றத்தக்கவை இவையாம்.

தன்வினை தன்னைச் சுடும்
ஓட்டப்பம் வீட்டைச் சுடும்

என்று கூறிய மாத்திரத்தில் கூரைமேலெறிந்த அப்பம் தீப்பற்றி எரிகிறது. இதுவும் சித்து ஆகும். ஊர்மக்கள் இவை போல்வன சித்துவிளையாட்டு என்றனர்.

நந்த வனத்திலோர் ஆண்டி --- அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
கொண்டுவந்தானொரு தோண்டி --- அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி.

தோண்டி: தோண்டப்பட்டது போன்ற உள் குடைவான மண்பானை.

சொல்லமைப்பு முறையில் சித்தர் என்ற பெயர் எப்படி ஏற்பட்டது என்பதே விளக்கம். பின் வழக்கில் அது வேறு பொருள் எல்லைகளைத் தாண்டிச் செல்லவும் கூடும்.

சிந்து: அளவடி யல்லாத சிறிய கவி.

அறிந்து மகிழ்க.

பிழைபுகின் திருத்தம் பின்.

கருத்துகள் இல்லை: