திங்கள், 4 மார்ச், 2019

தலைமாற்றும் மாற்றாமையும் : சொற்புனைவு.

வாக்கியங்களில் வரும் ஆற்றொழுக்கினைப் பின்பற்றாமல் மறுதலையாகச் சொற்களைப் போட்டுச் சொல்லமைப்பை மேற்கொள்ளுவது ஒன்றும்  புதிய உத்தி அன்று.

அல்+ திணை =  அஃறிணை என்பதிலே திணை அல்லாதது என்ற வாக்கியத்தில் வரும் சொற்களைத் தலைமாற்றிப் போட்டுப் புனைந்திருத்தலைக் காணலாம். பிற்காலத்தில் இந்த உத்தியை மேலும் மேலும் கையாண்டனர் என்பதே உண்மையாகும்.  எடுத்துக்காட்டு:

கருத்து வாக்கியம் :  தாய்க்குப் பின் தந்தை
இதைத் தலைமாற்றி:
பின் + தாய்  >   பிதா

பின் என்பதில் உள்ள  0னகர ஒற்று விலக்கப்பட்டது:  எடுத்துக்கொண்டது: பி என்ற முதலெழுத்து மட்டுமே.

பின் > பி.   ( கடைக்குறை).
தாய் > தா  (  கடைக்குறை ).

அஃறிணை என்ற மறுதலை அமைப்பைப் போல இன்னொரு சொல்லமைப்பு:

கருத்து வாக்கியம்:   தாரம் தப்புதல்.  ( வாழ்க்கைத் துணையை இழத்தல் )
இதைத் தலைமாற்றி:
தப்புதல் தாரம்.
தப்பு + தாரம் =  தப்புத்தாரம்
மெய்யெழுத்துக் களைதல்:
தபுதாரம்.
இறுதி மகர ஒற்று களையப்படவில்லை.
இதைத் தொல்காப்பியனார் பயன்படுத்தியுள்ளார்.   அவரே புனைந்ததா என்று தெரியவில்லை.

கருத்து வாக்கியம்:  அது அம்மா (  பணிவினால் அஃறிணைப் பயன்பாடு)
மா +  (அ)து  >  மாது.  ( அம்மையார்).


இன்னும் சில: (தலைமாற்று இல்லாதவை).

அகத்திலே இருக்கவேண்டியது:   இரு+ அக(ம்) + சி + அம்=  இரகசியம்.
அவிழ்க்கும் இரு கைகள் உடைய மேலணி:    இரு + அவிழ் + கை > இரவிக்கை.
ழகர ஒற்று நீக்கம். இரு அவிழும் கைகள் உள்ள உடை.

கருத்து:  விழுமிய புலம்.  இதைப் பார்ப்போம்.
சுருக்கினால்  விழுபுலம்.
இதில் தலைதிருப்பு உத்தி எதுவும் கையாளாமல்:

விபுலம்.

புலம் என்பது நிலம் காட்சி என்ற பல்பொருளொரு சொல்.

விபுலம் என்பது அதன்படியே பல பொருள் தரும்.

விழுமிய புலம் -  சிறந்த காட்சி என்றும் பொருள்படும்.


கெட்டுப் புன்மையாகியாகிவிட்ட நிலைமைக்கு ஒரு சொல்.
சொல்:  நபுஞ்சகம்.

நலிபு உச்சு  அகம்.

நலிபு  :>   நபு.  (  இடைக்குறை )  அல்லது நவு(தல்) > நபு  வகர பகர மாற்றீடு.
உச்சு  >  உஞ்சு   ( மெலித்தல் ).   இலக்குக்குச் செல்லுதல்.  வினை: உச்சுதல்.
அகம் :  உள்ளதாதல் குறிப்பு.

நபு உஞ்சு அகம் >  நபுஞ்சகம்.(  பேடித்தன்மை)

இவ்வமைப்பில்  சொற்கள் தலைமாற்று  ஏற்படவில்லை.

நண்பர் >  நபர்.  இடைக்குறை. இந்த இடைக்குறை மூலமாக நட்புக்குறிப்பு
விலகிற்று.

திருத்தம் பின்

கருத்துகள் இல்லை: