சனி, 13 ஜூலை, 2019

ஆரூடம் என்பதென்ன? சொல் அமைப்பும் உண்மையும்

இன்று ஆரூடம் என்பதென்னவென்று அறிந்துகொள்வோம்.

ஆர்தல் என்ற தமிழ்ச்சொல்லுடன் ஊடு, அம் என்ற பிற தமிழ்ச்சொற்களும் இணைந்து உருவான சொல்லே ஆரூடம் ஆகும்.  இவற்றுள் ஊடு என்பது துருவிச் செல்லுதல்போல புகுந்து செல்லுதலைக் குறிக்கும்.  ஊடகம் என்ற சொல்லில் இந்த ஊடு என்ற சொல் முன் நிற்பதை அறிந்திருப்பீர்கள்.  ஊடுருவுதல் என்ற சொல்லிலும் இச்சொல் இருக்கின்றது.

அம் என்பது பல சொற்களில் இறுதிநிலையாய் இருப்பதனால் அதை விளக்கத் தேவையில்லை என்று நினைக்கின்றோம்.

ஆர்தல் என்பதை அறியவேண்டியது அகத்தியமாகிறது.

நுகர்தல் அல்லது அனுபவித்தல்;
அன்புகாட்டுதல்
நிறைதல்
உண்ணுதல்
பொருந்துதல்
அடைதல்
குடித்தல்
ஒத்தல்
தங்குதல் 
அணிதல்

இதன் பிறவினை ஆர்த்தல் என்பது.  இது அணிதல், ஆட்டுதல், ஆரவாரம் செயல், ஒலித்தல். கட்டுதல் , பொருதல், பொருத்துதல், தொகுத்தல், ஒளிவீசுதல், மின்னுதல் என்றும் பொருள்தரும்.

மொத்தத்தில் ஆர் என்பது உயர்செயல்களைக் குறிக்கும்.  ஆரியர் என்ற சொல்லும் இதனின்று வந்ததாக பிற தமிழறிஞர் கூறியதுமுண்டு.

வந்தார், சென்றார் என்பன போலும் வினை முற்றுக்களில்  வரும் ஆர் விகுதி இச்சொல்லே ஆகும்.  ஒரு வினைச்சொல் விகுதி என்னும் தகுதி பெறுவதென்றால் அச்சொல் மொழியில் மிக்கப் பழமை தொட்டே வழங்கி வந்துள்ளது என்பது சொல்லாமலே புரியும்.  

ஆரியர் என்ற சொல் ஆங்கிலத்திலுள்ள "ஏரபல்"  என்ற சொல்லுடன் இலத்தீன்வழித் தொடர்புடையது என்று வரலாற்றாசிரியர் ரோமில தாப்பார் கருதுகிறார்.  ஏர்த்தொழில் தொடர்புடைய ஏர் என்ற தமிழ்ச்சொல்லும் ஆர் என்பதனுடன் தொடர்புடையதாய் இருந்தால் அதில் வியப்பில்லை.  ஏர்த்தொழில் ஒரு காலத்தில் மிக்க உயர்வானதாகக் கருதப்பட்ட தொழில். இதற்குக் காரணம் அது மக்களுக்கு உணவளிக்கும் தொழில். உணவின்றேல் மனிதர் மடிவர்.

ஆர் என்ற சொல் தரும் பல பொருள்களில் பொருந்துதல் அல்லது நிறைவு என்ற பொருளைக் கருதுவோம்.  ஆர  ( நிறைவாக ) ஊடு சென்று கண்டுபிடித்துச் சொல்லும் திறனே ஆரூடமாகும். ஆரூடத்திலுள்ள மூன்று  துண்டுச்சொற்களும் தமிழே ஆகும். உதாரணமாக வீட்டில் கெட்டுப்போன சாமான்`களை வைத்திருந்தால்  அவற்றிலுள்ள ஒரு மறைவான ஆற்றல் வெளிப்பட்டு நன்றாக இயங்குபவையும் கெட்டுப்போகும் என்பது ஆரூடம்.  இது சீனாவில் "ஃபோங்க்  ஸ்வே" என்று சொல்லப்படுகிறது.  இதைப்பற்றி எழுதப்பட்ட நூல்களும் உள்ளன. உங்கள் உந்துவண்டியின் கெட்டுப்போன பகுதிகளை அதன் பின்னடைப்பில் போட்டு வைத்துக்கொண்டிருந்தால் உங்கள் வண்டி மேலும் மேலும் கெட்டுப்போகும் என்பது  சொல்லப்படுகிறது.  இது மூட நம்பிக்கை என்று நீங்கள் நினைத்தால் நாலைந்து கெட்டுப்போன சாமான்`களை வண்டியின் பின்புறத்தில் போட்டுவைத்து ஓட்டிக்கொண்டிருங்கள்.  அடிக்கடி கெட்டுப்போனால் அது ஆரூடத்தில் ஏதோ உண்மை இருப்பதைப் புலப்படுத்தக்கூடும். இன்றிலிருந்து இதை நீங்கள் ஆய்வுசெய்யுங்கள். அப்புறம் முடிவு மேற்கொள்ளுங்கள். வீட்டில் மின்`குமிழ் எரிந்துவிட்டால் உடனே சிலர் மாற்றிவிடுவர். இதுதான் காரணம் என்று சொல்வர்.  கெட்டுப்போவதைச் சீர்ப்படுத்தி வைத்துக்கொள்ளவேண்டும் என்பதை ஆரூட அறிவாளிகள் சொல்கிறார்கள்.  நாம் முற்றிலும் அறியாதவையும் உலகில் இருக்கக்கூடும் அன்றோ?   அம்மையார் ஒருவர், கோவில் பூசைக்காக நூற்றைம்பது வெள்ளிகள் கேட்டார். என்னையும் சேர்ந்துகொள்ளும்படி கேட்டார்.  நான் உடனே அதைக் கொடுத்துவிட்டேன். அது அப்படி இது இப்படி என்று சாக்குப்போக்குச் சொன்னால் நாளை ஒரு சளிக்காய்ச்சல் வந்து அது செலவாகிவிடத்தான் போகிறது.  ஆகும் என்பதுதான் ஆரூடம். நோய்க்குச் செலவிடுவதைவிட ஒரு பூசைக்குச் செலவிட்டால் நன்மை விளையும் என்பதும் ஒருவகை ஆரூடமே.  கடன்பத்திரங்களைச் சேமித்து வைத்துக் கணக்குப் பார்த்துக்கொண்டிருந்தால் மேலும்  கடன்பல வரக்கூடும்.  இதுவும் ஆரூடமாகும்.

இப்போது ஆரூடம் என்பதை நன்றாக விளக்கிவிட்டேன் என்று நினைக்கிறேன்.இவற்றிலெல்லாம் சிந்தனை செலுத்தி அதை  ஓர் ஆய்வுக்கலையாக்கி உள்ளனர்.

எனவே  ஆர = நிறைவாக;  ஊடு = உள் நுழைந்து மறைந்துள்ள ஆற்றல்களை;  ----அறிந்துகொள்வதே ஆரூடம் .  அம் விகுதி என்பது முன்னரே சொல்லப்பட்டது. 

வீழ்ச்சி வருவதாயின் அது வரத்தான் செய்யும். சில முன்னறி குறிகளைக் கண்டு அவற்றை விலக்கிக் கொள்வது அறிவுடைமையே ஆகும்.

சில பொருள்கள் நிறைவலைகளை ஏற்படுத்துகின்றன;  சில பொருள்கள் அழிவலைகளை ஏற்படுத்துகின்றன.  இவை கண்காணா அலைகள். இப்போது இவற்றை உணரத்தான் முடிகிறது.  பின்னொரு காலத்தில் கண்டுபிடித்துப் பயன் பெருக்கும் அறிவை மனிதர்கள் அடையக்கூடும்.  யான்  அறியேன். இன்று நாமறிந்துள்ள பலவற்றை ஆயிரம் ஆண்டுகட்குமுன் வாழ்ந்த மனிதர் அறிந்திருக்கவில்லையே.


வெள்ளி, 12 ஜூலை, 2019

தவளையும் தவணையும்

உலக வழக்கில் தவளைக்கும் தவணைக்கும் ஒரு தொடர்பும் இல்லைதான்.

தவளை என்பது தாவித் தாவி நகர்கின்ற அல்லது செல்கின்ற ஓர் உயிரி ஆகும்.  இவ்வுயிரியின் தாவுகின்ற செயலாலே அதற்குப் பெயரும் ஏற்பட்டது. இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை.  நாவு தொங்குவதனால் நா >  நாய் என்று பெயரமைந்தது போலவே தாவுதலால் தவளைக்குப் பெயர் வந்தது. இது ஒரு காரண இடுகுறிப் பெயரே.  தாவும் வேறு எதற்கும் இப்பெயர் பொருந்துமாறு இல்லை.  தாவிச் செல்லும்  பைம்மா என்னும் கங்கருவுக்கு இப்பெயர் வழக்கில் வருவதில்லை.

தாவு + அளை =  தவளை.

இங்கு தாவு  அ என்பன தவ என்று திரிந்தமையின் நெடில் குறிலாய்த் திரிந்தது. இதுபோலும் நெடில் குறிலான இன்னொரு சொல்:  தோண்டு > தொண்டை.  தோண்டியதுபோல நீண்டு செல்லும் உணவு மற்றும் மூச்சுக் குழல்.

அளைதல் என்பது கலத்தலும் தழுவுதலும் குறிக்கும் சொல்.  குதித்துப் பின் தரைதழுவி மீண்டும் குதித்து நகர்தலை உடையது தவளை.

இச்சொல் பின் பிறமொழியாளராலும் ஏற்கப்பட்டுப் புழங்கப்பட்டது.

தவணை என்பது ஒரு செயலை ஒரே அடியாய்ச் செய்துமுடிக்காமல் விட்டுவிட்டுத் தொடர்தல். இன்று ஒரு பகுதி பணம் செலுத்திவிட்டு, அப்புறம் தாவி அடுத்த மாதம் ஒரு தேதியில் அப்பணத்தைச் செலுத்தி மீண்டும் தாவி இன்னொரு மாதத்திற்குச் செல்வதாதல் தாவித் தாவிக் காலத்தை அணைத்துச் செல்லும் முறையாகும்.

தாவு + அணை = தவணை ஆயிற்று.

முன் தந்த சொல்லில் போலவே இங்கும் தாவு  என்ற சொல்லின் முதலெழுத்துக் குறுகிச் சொல் அமைந்தது.

இனித் தவம் என்ற சொல்லுடன் உறவு உண்டோ என்று சிந்தித்துத் தெரிவியுங்கள்.

தவளைக்கும் தவணைக்கும் தாவலில் தொடர்பு உண்டு அன்றோ?

பிழை புகின் பின் திருத்தம்.

வெள்ளி, 5 ஜூலை, 2019

பாசுரம்

பாசுரம் என்ற சொல்லை முன் யாம் விளக்கியதுண்டு எனினும் இது வேறு ஒரு வலைப்பூவிலிருந்து போந்தது என்பது நினைவில் உள்ளது. 

பாசுரம் என்னும் சொல் பற்றிய சிந்தனையை ஈண்டு பதிவு செய்வாம்.

பா என்பது பாட்டு என்று பொருள்படும் தமிழ்ச்சொல் தான்.

சுரத்தல் என்பது வெளிப்படுதல் என்று பொருள்படும்.  அதாவது ஒரு பெரும் பற்றாளரின் வாய்மொழி மூலமாகவோ அவர்தம் எழுத்துக்களின்  மூலமாகவே இறைப்பற்று மேலவாக எழுதரும் பாடல்களே பாசுரம் எனத்தக்கவை.

பா+  சுர +  அம் =  பாசுரம்.

இதில் ஓர் அகரம் வீழ்ந்தது  .  சுர என்பதன் ஈற்றில் அகரம்;  அம் என்பதன் தொடக்கத்தில்  ஓர் அகரம்.   ஓன்று மறைதல் வேண்டும்.  இல்லையேல் ஒரு வகர உடம்படு மெய் தோன்றும்.

மறம் > மற + அர் >  மறவர்.    மற + வ் + அர். 

--  என அறிக.

தாயுமானவர்,   அருட்பிரகாச வள்ளலார் ஆகியவர்கள் பாசுரங்களின் ஊற்றுக்கள் ஆயினர்.

எழுத்துப்பிழைத் திருத்தம் பின்.

பசுவுக்கும் பழைய புதிய சொற்கள்.

பஷ்த்தவ என்பது பசுவைக் குறிக்கும் சமஸ்கிருதச் சொல்.

ஆனால் தமிழில் பசு என்ற சொல் வழங்கிவருகிறது. இதற்கு நேரான நல்ல தமிழ் ஆ என்பது.

அடினும் ஆவின்பால் தன்சுவை குன்றாது.
ஆவிற்கு நீரென இரப்பினும் நாவிற்கு  ........

தமிழிலக்கியத்தில் வரும் இவ்வரிகளைத் தமிழறிந்தோர் மறத்தலும் ஒண்ணுமோ?

ஆவிற்கு இன்னொரு பெயர் உண்டாக வேண்டுமானால் அதை மிக்க எளிதாகவே உண்டாக்கி விடலாம்.  இதோ ஒரு புதிய சொல்:

பால் + சுரப்பது :
பா + சு    =  ப + சு   =  பசு ஆகிறது.

இதற்குப் பா என்ற நெடிலைக் குறிலாக்கிவிடுதலும்,  சுரத்தலுக்கு   ஒரு சு என்ற குறியை மட்டும் இட்டுக்கொள்வதும் போதும். ஒரு புதிய சொல் கிட்டிவிடுகிறது.

சொல்லொன்று புதிது கிட்டினால் சோறு கொஞ்சம் குழம்புடன் கிட்டினது போலுமே யாம்.

ஒரு சொல் வேண்டுமானால் அதைப் படைக்க, ஒரு குறிலை நெடிலாக்கலாம்;  நெடிலைக் குறிலாக்கலாம். ஒரு முழுச்சொல்லை தலையையும் வாலையும் கிள்ளிவிட்டுக் கூடையில் போட்டுக்கொள்ளலாம்.
ஒன்றுமே இப்படி நிகழ்த்தக்கூடாதாயின் எதையும் உண்டாக்க முடியாது.

புதிய சொற்களைப் படைத்தளிக்க முயல்வோர் ஏனிந்தத் தந்திரத்தைக் கையாளவில்லை?   அறியாமைதான்.

பால் தருவது பசு /  ஆ.

பால்த் தருவ    ல் >ஶ்;    தருவ > தவ    ரு > 0
= பாஷ்த்தவ

=  பஷ்த்தவ.

ஆக, இவ்வாறு சொற்களைப் படைக்க அறிவது திறமை ஆகும். 

எழுத்துப்பிழைகள் இருப்பின் பின் திருத்துவோம்.

புதன், 3 ஜூலை, 2019

ஈனம் ( இழிவு) சொல் தொடர்புகள்.

தமிழில் இகரமும் ஈகாரமும் இழிவு காட்டும் பொருளிலும் வழங்கிவந்துள்ளன.   இழிவு என்பது இளிவு என்றும் எழுதப்படுதல் உண்டு.

இழிவு என்பதன் அடிக்சொல் இள் என்பதுதான்.  இள் என்பது பிற்காலத்து  இழ் என்று மாறிற்று. இதற்கு ஓர் உதாரணம் சொல்லவேண்டுமானால்:

பா + தாள் + அம் =   பாதாளம்,  இதில் தாள் என்பது தாழ் என்ற சொல்லின் முந்து வடிவம் ஆகும்.   மேலும் தாள் என்பது கீழிருக்கும் கால்பகுதியையும் குறிப்பதை உணர்க.   பா-   பரந்து ,   தாள் = தாழ்வாக அமைந்துள்ள நிலப்பகுதியையே பாதாளம் என்று சொல்கின்றோம்.  கொள்நன் எனற்பாலது கொழுநன் என்று மாறினமையையும் கண்டு தெளிதல் வேண்டும். ழகர ளகர வேறுபாடின்றி வழங்குவனவாய சொற்களின் பட்டியலும் வரைந்துகொள்க.

இர (  இரத்தல் )  என்ற சொல்லும் ஈ  (  இரத்தற்கு ஈதல் ) என்ற சொல்லும் தொடர்புடையன.  இவை இங்கனம் மாறி ஈவோனின் செயலையும் இரப்போனின் செயலையும் முறையே குறித்தன.   இதன் திரிபு செல்நெறியை  இர >  ஈர் >  ஈ என்று அறிக.  ஈர் என்பது இழுத்தல்;  ஈ என்பது மனம் இரங்கித் தருமாறு ஒருவனை இழுத்தல் என்று உணரவே,  இவற்றின் தொடர்பு புலப்படுவதாகிறது.

உயரத்திலிருந்து நீர்போலும் போலும் பொருள்  இறங்குதல் அல்லது கீழிறங்குதல்  இழிதல் ஆகும்.  தாயின் கருப்பையிலிருந்து அவள் ஈனும் குழந்தையும்  அவணிருந்து கீழிறங்குவதே என்பதைச் சிந்தித்து உணர்தல் வேண்டும்.  ஈ > ஈன்:   கீழிறக்கம் உணர்த்தின.   இதை உணரவே ஈனம் என்னும் இழிவு குறிக்கும் சொல்லும்  கீழிறக்கமே.  இப்போது ஈன் > ஈனு(தல்) ;  ஈன் > ஈனம் (  இழிவு )  - கீழிறங்கிய தரம் குறிப்பது,  என்ற பொருண்மைச் சாயல்களை உணர்ந்துகொள்க.

சிந்திக்காதவன் இதை உணர வழியில்லை.   ஆதலின் தொடர்புகளை நன்`கு சிந்தித்து ஈனம்  என்பது தமிழிற் போந்த சொல் என்பதை உணர்ந்துகொள்க.
இதை ஹீனம் எனல் மெருகுசேர்த்தலே  அன்றிப் பிறிதில்லை.

பிழைகள் பின்விளை திரிபுகள் பின்  சரிசெய்யப்படும்.

ஞாயிறு, 30 ஜூன், 2019

fraction of your most valued time....



Only a   fraction of your most valued time
To glance here at literary Tamil;
In return get the pleasure of your lifetime;
And escape from usual run of the mill.

Walk through to your heart’s content
Raise your afterglow index.  

சனி, 29 ஜூன், 2019

சங்கிலியும் கைலியும்.இவற்றில் இல்லாதவை

பழங்காலத்தில் கழுத்தணியில் பெரும்பாலும்   சங்குகளையே கோத்துப் போட்டுக்கொண்டனர். பின்னர்  சங்குக்குப் பதிலாக பல வடிவங்களில் வேறு துளைத்திரட்சிகள் பயன்படுத்தப்பட்டன.  அதனால் கழுத்தணிகளில் உண்மையான சங்குகள்   இல்லை.  சங்கினை விரும்பியோருக்கு இது ஓர் ஏமாற்றமே.  அவர்கள் காலத்தின்பின் சங்கில்லாத தொங்கணிகள் விரும்பி  ஏற்றுக்கொள்வன ஆயின.  சாமிக்கு வலம்புரிச் சங்கில் நீர் சாத்துதல் இன்னும் நம் பூசைகளில் நடைபெறுவதால் சங்கின் பெருமையும் மகிமையும் உணரலாகும்.  சங்கின் பிற இறைப்பற்றுத் தொடர்புகளும் உண்டு.  சங்கின்மை ஒரு காலத்தவர்க்குக் கவலும் புதுநிகழ்வு. இக்காலத்தவர்க்கு இஃது இல்லை. இவ்வரலாற்றினால் சங்கில்லாத கழுத்துத் தொங்கணிகள்  சங்கிலிகள்  எனப்பட்டன.

பிற்காலத்தில் ஒருவனைக் கயிற்றால் கட்டிவைப்பதைவிட இரும்புச் சங்கிலிகளால் பிணைத்து வைப்பது நடப்புக்கு வந்தது. இது கட்டிப் பூட்டி வைப்பதற்கு எளிதானது.  இக்காலத்திலெல்லாம் சங்கில்லாதது சங்கிலி என்பதை மக்கள் மறந்து அதை வெறும் இடுகுறியாகப் பயன்படுத்தினர்.

மனிதன் மேலே மாட்டிக் கொள்ளும் சட்டைக்குக் கைகள் இருந்தன. அரைக்குப் போர்த்திய கைலிக்கு கையோ இடைப்பட்டையோ பொருத்தப்படவில்லை.  இடைப்பட்டையைத் தனியாகப் போட்டுக்கொண்டனர்.  அல்லது கைலியை இறுக்கிச் சுருட்டி இடையில் நிறுத்தினர்.  கையில்லாத இந்த அரையாடை "கைலி"  எனப்பட்டது.  இதன்
திரிபு:

கை >  கய்  >  கய்+ இலி >  கயிலி (கைலி).

இது  அய்யர் > ஐயர் போன்ற திரிபு..

அறிந்து மகிழ்வீர்.

எழுத்துப் பிழைகளுக்குத் திருத்தம் பின்.

வெள்ளி, 28 ஜூன், 2019

திராவிடர்: புதிய அல்லது சில சொல்லாய்வுகள்.

துலகு என்ற சொல்லில் இறுதிக் குகரம் வினையாக்க விகுதி.  துல என்பதே அடியாகும்.

துலகு என்பதிலிருந்து துலங்கு என்பது அமைந்தது.   அவள் கைபட்டால் எல்லாம் துலங்கும் என்று வரும் வாக்கியத்தைக் கவனிக்கவேண்டும்.

துலகு  என்பதிலிருந்தே திலகு >  திலகம் என்ற சொற்கள் அமைந்தன.  துலங்குவதற்குத் திலகம் அணிதல் வேண்டுமென்பது தமிழர் பண்பாட்டு நம்பிக்கை.  திலகம் என்பதற்கு மற்றொரு சொல்: பொட்டு என்பது.

இதில் நீங்கள்  குறித்துக்கொள்வது   து > தி திரிபு.  இது உகர இகரப் பரிமாற்றத் திரிபின்பாற் படுவதே.

இனித் "திராவிடர்கள்"  ' 'திராவிடம்" என்ற சொற்களைக் கவனிப்போம்.  இவை பலராலும் பலவாறு மூலம் காண முனையப்பட்டவை   . திராவிடம்   சங்க நூல்களில் இல்லாத சொல்.  ஆனால் வழக்கில் இருந்திருக்கக் கூடும்.  வழக்கின் அனைத்தையும் சங்க நூல்கள் கொண்டிருக்கவில்லை.   இப்போது இது சங்கத நூல்களிலிருந்து கிட்டுகின்றது.

ஒரு காலத்தில் தமிழர்கள் அல்லது திராவிடர்கள் துணைக்கண்ட முழுமையும் பரவி இருந்தனர்.   கதை என்னவென்றால் பின்னர் அவர்கள் தென்னாட்டுக்குப்  புலம் பெயர்ந்து  அங்கேயே தங்கிவிட்டனர்.  தென்னாட்டிற்குத் துரத்தப்பட்டனர் என்பது பல கதைகளில் ஒன்று.

துர >  திர > திரவிடன்  (  துரத்தப்பட்ட இடத்தில் இருப்போன்)

ஈங்கு  து என்பது தி என்றானது ஏற்கத்தக்கதே.  ஆனால் திராவிடன் என்ற சொல்லுக்கு இதுதான் சொல்லமைப்பா என்று உறுதிப்படுத்த முடியவில்லை.

சில அறிஞர் பெருமக்கள் வேறு வரலாறு கூறுவர்.   முப்புறமும் கடல்சூழ்ந்த நிலத்திக்குச் சொந்தக்காரர்கள் எனவே

திரி :   மூன்று.
விடு:  விடர். (  இடர்:  இடத்தினர்;   விடர்:  வகர உடம்படுமெய்த் திரிபு.  அல்லது விடப்பட்டோர்.)

திரி என்பதி திர >  திரா என்று திரிந்தது என்ப.

சரிதான்.

விடம்/ இடம் என்பது கடலைக் குறிக்கவேண்டும்; குறிக்கவில்லை.


இதைவிட,   திரை> திர > திரவிடர்:   பொருள்:   கடல் இடம்பெற்ற நாட்டினர்.  இது பரவாயில்லை;  ஆனால் முடிவாகக் கூறுதற்கில்லை.

நமக்குத் தெரியவரும் இவ்வாய்வுகள் தழுவத்தக்கன என்பதற்கு இன்னும் ஆய்வு தேவை.

அறிந்த ஆய்வு முடிவுகள் இங்கு மீண்டும் கூறப்படவில்லை.

திருத்தம் வேண்டின் பின்.

செவ்வாய், 25 ஜூன், 2019

மந்தையும் மன்றமும் - ஆய்வு

மன்றம் என்பது உயர்ந்த அறிவாளிகள் கூட்டத்தைக் குறிக்கும் ஒரு சொல். எடுத்துக்காட்டு:  ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு மன்றம் அல்லது அவை.

அவை என்ற சொல் மிக்க எளிதாய் அமைந்த சொல்லென்பதை முன்பு விளக்கியுள்ளோம்.  இச்சொல்லில் வையென்பது வைக்கப்பட்டது, நடைபெறுமாறு நிறுவப்பட்டது என்னும் பொருட்டு.  அங்கு புலவர் கூடுமாறு வைக்கப்பட்டுள்ளது.  அது   " அ ( அங்கு ) +  வை ( நடைபெறுமிடம் )"    எனவே அவை ஆகிறது.  இது மிக்க எளிமையாய் அமைந்ததும் எளிமையாய் விளக்கத்தக்கதுமான ஒரு சொல்.  இதை அமைத்தவர்கள்  அக்கூட்டத்தைச்  சுட்டிக் காட்டுதற்குரிய இடத்திலும் வேலையிலும் இருந்தவர்களே.  எனவே இது புலவர் அமைத்த சொல்லன்று.  அரண்மனைக் காவலர்களோ வழிகாட்டுநரோ அமைத்த சொல்லென்பது கடின சிந்தனை ஏதுமின்றி எளிதில் புரிந்துகொள்ளக்கூடியது ஆகும்.  எல்லாச் சொற்களையும் ஒரு மொழியில் புலவர்களே அமைத்தனர் என்பது மடமைக் கருத்தே என்பதுணர்க.  எங்கும் பொறுக்கி எடுத்த சொற்களே ஆங்காங்கு எல்லா மொழிகளிலும் கிடைகின்றன.  அவை பலவேறு வகை மக்களால் அமைத்துப் புழங்கப் பட்டவை.

அவை என்ற சொல் பின் பல மொழிகட்குச் சென்றிருக்கலாம்.  அது இயல்பு.
சவை சபை சபா என்றும் திரிந்திருக்கலாம்.  உயர்தரச் சொல்லாய் இன்று கருதப்படலாம்.  தொடக்க நிலை வேறு.  அடைவு நிலை வேறு.

மன்றம் என்ற சொல்லோவெனின்,  மன்றுதல் என்னும் வினைச் சொல் அடியாகப் பிறந்தது. புலவர் அமைத்த சொல்லாக இருக்கலாம்.  மன்றுதல் எனின் கூடியிருப்பது;   சேர்ந்திருப்பது என்பது ஆகும்.   ஆணும் பெண்ணும் கூடும் வாழ்க்கைத் தொடக்க விழவுக்கும் மன்றல் என்ற சொல் வருகிறது. இதுவும் மன்று என்பதனடிப் பிறந்ததே.

மன்று என்ற வினையை மன்+ து என்று பிரிக்கவேண்டும்.   மன் து என்பது மன்று என்று புணர்ந்து சொல்லாவது தமிழின் இயற்கைக்கு ஒத்ததே ஆகும்.

மன் து என்ற அடியும் விகுதியும் இணைந்து இரண்டு சொற்களைப் பிறப்பித்தன.

மன் து என்பது புணர்ச்சித் திரிபு எய்தி  மன்று என்று ஆகி மன்றம் ஆனது.

இனி :

மன் து என்பதே  மந்து என்று மேற்கண்டவாறு திரிபு எய்தாமல் விகுதி இன்னொன்று  ஐ என்பதைப் பெற்று மந்தை என்று  ஆனது.

மன் என்பது கூட்டம் குறிக்கும் என்றோம்.  இரண்டும் கூட்டமே.  ஒன்று மனிதர்கள் கூட்டம் ( மன்றம்).  இன்னொன்று:  விலங்குகள் கூட்டம். மன் து ஐ ( மந்தை ).

ஒரே அடிச்சொல்லைக் கொண்டும்  அதே விகுதியைக் கொண்டும் இருவேறு சொற்களை உருவாக்கி உள்ளனர் பண்டைத் தமிழர்.  இறுதிநிலையாக ஒன்றில் அம் இட்டனர்.  இன்னொன்றில் ஐ இட்டனர்.

மொழிக்குச் சொல்லைப் படைப்பதென்றால் இப்படியன்றோ திறம்படப் படைக்கவேண்டும்.

சந்தி விதிகள் என்பவை உரைநடை  செய்யுள் முதலியவற்றுக்குரியவாம். சொல்லாக்கத்திற்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.. அந்த விதிகள் வேண்டியாங்கு பயன்படும். பயன்பாடின்றியும் ஒழியும்.  இங்கு விதிகளினும்  சொல்லமை வசதிகளே மேல்வருவன காண்க.

கூட்டம் என்பதே உள்ளுறை பொருளாயினும்  ஒன்று மனிதர்க்கும் இன்னொன்று விலங்குக்கும் ஒதுக்கம் பெறுவது இடுகுறி ஆகும்.


திங்கள், 24 ஜூன், 2019

தேனிரும்பு பெயர் வந்த வகை

தேனிரும்புக்கும் தேனுக்கும் என்ன தொடர்பு?

ஆங்கிலத்தில் "ரோட் அயன்"   (wrought iron ) என்று சொல்லப்படும் இந்த இரும்பு  ,  கலவை இரும்பு ஆகும்.

தமிழர்கள் இது தேய்ந்துபோய்விடும் என்று அஞ்சினர்.  அதனால் இதைத்
"தேயனிரும்பு"  என்றனர். இது ஒரு பேச்சுவழக்குப் பெயர்.   இது எழுத்தில் புகுமுன் தேனிரும்பு என்று திரிந்துவிட்டது.

இது யகரம் வீழ்ந்த இடைக்குறைச் சொல்.

இடைக்குறைகளால் மொழி வளம் பெற்றுள்ளது.

யகரம் குன்றிய   இடைக்குறைச் சொல் இன்னொன்று:-

வியத்தல்  ( மூல வினைச்சொல்).

விய  + தை =  வியந்தை ( மெலித்தல் விகாரம் ) >  விந்தை.

இங்கும் யகரம் வீழ்ந்தது

சனி, 22 ஜூன், 2019

பாக்டீரியா ( சின்`கோலிகள்)பால் வீழ்ந்து விடாதீர்: கவனம்.

தசைதின்னிச்  சின்`கோலிகள்.

'Flesh-Eating' Bacteria

இதுபற்றிய பல கட்டுரைகள் வெளிவந்துள்ளன.  அவற்றை நீங்கள் வாசித்திருப்பீர்கள்.   இப்போது இன்னொன்று.

https://www.medicinenet.com/script/main/art.asp?articlekey=222329&ecd=mnl_day_061919 

 

 உருப்பெருக்கியில்   (நுண்பெருக்காடியில் ) நோக்கினால் இந்தச் சின்`கோலிகள்  சின்னக் கோல்கள் போல் காணப்படும்.   ஆதலின் இவற்றுக்கு இப்பெயர் தமிழில் பொருத்தமானது.   இது "பாக்டிரியா" என்னும் ஆங்கிலச் சொல்லின் ஏற்கத் தக்க தமிழாக்கமாகும். பாக்டிரியா எனின் சின்னக் கோல்கள் போல் தோன்றுவன என்பதே பொருளாகும்.

வியாதி என்று தமிழில் வழங்கும் சொல் மிக அருமையாய் அமைந்தது.

விய என்றால் பெரிது என்பது பொருள்.  விய+ ஆதி :  பெரிதாகிக் கொண்டு செல்வது.   அதுதான் இந்த நுண்ம உயிர்களின் நடவடிக்கையால் இப்போது நடைபெற்றுக்கொண்டு உள்ளது காண்பீர்.  வியத்தல் என்பது வினைச்சொல்.  வியந்தேன் -  பெரிதாகக் கண்டேன் அல்லது உணர்ந்தேன் என்பதே பொருள்.   விய -  வியப்பு என்றுமாகும்.

வியனுலகு என்ற குறள் சொற்பயன்பாட்டில் பெரிதான உலகு என்று பொருள்.

பலர் இறந்துபோவதைக் கண்டு கண்டு பழக்கப்பட்ட ஒரு மனிதன், இறப்பது வழக்கமாக நடைபெறுவது என்ற நிலைக்கு வந்துவிடுகிறான். இவன் " ஆறிலும் சாவு நூறிலும் சாவு"  என்ற பழமொழியைப் புனைந்ததில் யாதொரு வியப்புமில்லை.  ( பாருங்கள்: வியப்பு என்ற சொல் வந்துவிட்டது ).   பண்டிருந்த கற்காலத்துக்கும் முற்காலத்தில் காடுமலைகளில் வாழ்ந்த மனிதன்,  சாவின் தன்மையைச் சிந்திப்பவனாய்,  ஏதோ பெரிதொன்று நடைபெறுகின்றது என்று நினைத்தான்.  நன்றாக இருந்தவன் கோணல்கோணலாய்ப் பிடித்துக் கைகால் இழுத்து விழுந்து இறக்க,   அதேபோல் நிலைமை பிறருக்கும் பரவி அவர்களும் இறக்க,  சாவுக்களம் விரிவுபடுவதை மனிதன் உணர்ந்தான்.   விய ஆதி  (  பெரிதாக ஆகுதல் ) நடைபெற்றது கண்டான். இதை விளைவிக்கும் அந்த ஏதோ ஒன்றுக்கு வியாதி என்று பெயரிட்டான்.

பரவுவதே வியாதி.  நாளடைவில் அதிகம் பரவாமல் ஒருத்தனைக் கொன்ற நோய்க்கும் வியாதி என்றே கூறப்பட்டது இச்சொல்லின் பொருட்குறுக்கம் ஆகும்.   அடிச்சொல் விய என்பது பெரிதாவது என்று பொருள்தருவதே இதற்குக் காரணம்.

சாவு நிகழ்ந்தே தீருமென்பது மிக்கத் தெளிவான பின்னர்:

"நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்திவ் வுலகு"

என்பது உலகின் பெருமை என்பது உணரப்பட்டது.

இன்றைய நிலையில் சாவைத் தருவது எது?   அது சாதாரணமானதுதான். எப்படியும் நிகழ்ந்தே தீரும்.  இறைவன் ஒருவனே நித்தியன் என்று நினைத்தான் ,  உணர்ந்தான் மனிதன்.

சா -  சாவை,

தார் =  தருவது.

அண் =   அடுத்து

அம் :  அமைந்தே தீரும் என்னும் பொருளை உணர்த்தும் விகுதி.

தரு : தாராய்,  வரு : வாராய் என்றும் திரியும். இது எதிர்மறைப் பொருளும் தரும்.

வாராய்:  வருவாய்,

வாராய்:  வரமாட்டாய்

இவற்றின் பொருளை வாக்கியத்தை நோக்கி அறிக.

சாவு என்பது சாய்தல் என்னும் அடிச்சொல்லின் பொருள் வளர்ச்சி ஆகும்.

சின்`கோலிகள் விளைப்பது விய ஆதி ஆகிய வியாதிதான். வியாதியால் மரணம் ஏற்படுவதும் சாதாரண நிகழ்வுதான் .  சா- சாவை தார் ( தரு) தருகின்ற அண் - அடுத்த அம்: நிகழ்வுதான்.  அல்லது சாய்வு தரும் நிகழ்வுதான்.  நடந்தே தீர்வது.

இவைகளெல்லாம் எப்போதும் ஆவது என்று 

வேதம் உணர்ந்தார் வியக்காமல் உரைப்பினும்---  தம் மக்களுக்குச்

சாதம்  அளிக்கும் உயர்ந்த உழைபாளிகள் கவனம் கொள்வதே கருதத் தக்கது ஆகும்.






வெள்ளி, 21 ஜூன், 2019

மாது - தவறான சொல்!

மாது என்ற சொல் பேச்சு வழக்கில் அவ்வளவாக வருவதில்லை. அதற்குப் பதிலாகப் பெண்பிள்ளை என்ற சொல்லின் திரிந்த வடிவத்தையே கையாள்கின்றனர்.

பெண் என்ற சொல் பொம் என்று திரிவது வேடிக்கைதான்.   எகரத் தொடக்கம் ஒகரமாகவும் ணகர ஒற்று மகர ஒற்றாகவும் மாறிவிடும் நிலையில் திரிபுகளுக்குப் பெயர்போனவர்கள் தமிழ்ப்பேசுவோர் என்பது தெளிவாகவே தெரிகிறது.

இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருப்பது தமிழர் தம் நெறியாம்.

இலக்கணப் படி அம்மாவை அவள் என்றுதான் குறிப்பிட வேண்டும்.   உயர்வுப் பன்மையில்  அவர் என்று  சொல்லலாம்.   ஆனால் பலர் அது என்றும் சொல்வதுண்டு.   அம்மா அஃறிணை ஆக்கப்பட்டாலும்,  அது என்பதன் உள்நோக்கம் பணிவு குறித்தலே ஆகும்.

அருகில் நிற்கும் அம்மாவைக் குறிக்க:

என் அம்மா அது.....

என்பதுமுண்டு.  நாளடைவில் அம்மா போலும் உயர்வுக்குரியவர்களையும் என் என்ற சொல்லைத் தவிர்த்து   "  அம்மா அது "   அல்லது  "  மா து " என்றனர்.

அம்மா என்ற விளி வடிவச் சொல்லின்  இறுதி:  மா.
அது என்பதன் இறுதி:   து.   து என்பதோ அஃறிணை விகுதி.

மா+ து  =   மாது;   பெண் என்ற பொதுப்பொருளில் இப்போது வழங்குகிறது.

மாது என்பதில் து என்பதாம்  அஃறிணை விகுதியை வைத்துக்கொண்டவாறே,   அர் விகுதிப் பன்மையும் பெற்று மாதர்  என்று ஆகிவிடுகிறது.

மாதர்தம்மை இழிவு செய்யும் என்ற வரி வரும் பாரதி பாடலில்  இஃது  உயர்வான பொருளுடன் மிளிர்கின்றது.

மாது என்பது ஒரு பகவொட்டுச் சொல்  அல்லது போர்மென்டோ ஆகும்.  இதன் ஆதிப் பொருள்  அது அம்மா என்ற பணிவான குறிப்பே.   உயர் வினால் அஃறிணை வடிவில் அமைந்துவிட்ட வழுவமைதிச் சொல் ஆகும்.

து விகுதி பெற்ற அஃறிணைச் சொற்கள் பல. இச்சொற்களில் திணை வலிமை பெறவில்லை.   கைது என்பது கையகப் படுதல் என்னும் தொழிலைக் குறித்து நிற்கின்றது.    விழுது என்பது சினைப் பெயர்.

பல சொற்களில் இது அது என்பன சொல்லாக்க இடைநிலையாக வரும்.  எடுத்துக்காட்டு:

பருவதம் :   பரு+  அது + அம் =  பருவதம் > பர்வதம்.   பருமை உடையதாகிய மலை.

இப்போது இன்னும் படைக்கப்படாத இரண்டு புதிய சொற்களை மேற்கண்ட பாணியிலே அமைத்துக் காண்போம்.

அம்மா அவள் >   மா + அள்=    மாவள்.
அப்பா அவன் >  பா + அன் =  பாவன்.

அப்பா அம்மா இவர்களை அவன் அவள் எனல் ஏற்றுக்கொள்ள இயலாதவை,
இற்றை நிலையில்.  இருப்பினும் அமைத்துப் பார்த்தோம்.


அறிந்து மகிழ்க.

திருத்தம் வேண்டின் பின்.

புதன், 19 ஜூன், 2019

மோடியை ஏசித் தோற்றவர்கள்.

எதிர்க்கட்சிகள் மடமை.

மோடியே மோடியென்று முக்காலும் ஏசினர்காண்
மோடியே வேண்டுமென்று நாடினரே-----நாடுடையோர்!
ஓரள வின்றியே ஊடுசென்றால் கேடுறுமே
நீரளவு நீந்துக கண்டு .

செவ்வாய், 18 ஜூன், 2019

பீரங்கி என்ற சொல்.

இன்று பீரங்கி என்ற வெடியெறி கருவியைக் குறிக்கும் சொல்லினை ஆய்ந்து இன்புறுவோம்.

பீச்சுதல் என்ற சொல் தமிழில் நன்`கு பயன்பாடு கண்ட ( அதாவது வழக்குப் பெற்ற )  சொல்லாகும்.  இது ஒரு கடைக்குறைச் சொல்.  இறுதி எழுத்து மறைந்த சொல்.  இது முன்வடிவில் பீர்ச்சுதல் என்று இருந்தது.  பீர்ச்சு என்ற வினையில் பீர் என்பதே மூலவினை.  இறுதி  ~சு என்ற ஒலியானது வினையாக்க விகுதி.   புட்டியைத் திறந்தவுடன் உள்ளிருந்த நீர் பீரென்ற அடித்துவிட்டதென்பதைக் கேட்டிருக்கலாம்.  பீர் என்னாமல் பிர்ர் என்று அதை ஒப்பொலி செய்வோரும்  உளர்.   அதுவே விரைவைக் குறிப்பதாயின் விர்ர்ர் என்று ஒப்பொலி செய்தலும் உண்டு. இதுபோன்ற உண்மை ஒப்பொலிகளும்  போலி ஒப்பொலிகளும் இல்லாமல் மொழி முழுமை பெறுவதும் சிறப்பதும் இல்லை.

விர் விர்ர்ர்ர்ர்  >    விர்+ ஐ =  விரை >  விரைதல்.
இந்த ஒலிக்குறிப்பிலிருந்து விரை என்ற வினைச்சொல் கிட்ட, அதனால் மகிழ்ந்தோம்.

இதுபோலவே

பிர்ர்ர் > பீர்ர்ர் > பீரிடுதல்;  பீர்தங்குதல் முதலிய சொற்கள் உருக்கொண்டிருத்தலும் அறிதலாகும்.

பீர்பீராய் வெளிவந்தது என்பதும் சொல்வதுண்டு.  ஒரே நீட்சியாய் வெளிப்படுதலின்றி   பல நீட்சிகளாய் வெளிவருதலையே பீர்பீராய் என்பர்.

தாய்ப்பால் பீரம் எனவும் படும்.  பீச்சிச்  சிறிது  நெட்டெறிதல் உண்டாவதால்  பீர் > பீரம்  என்ற சொல்லமைந்தது.

இவைகளை நல்லபடி உணரவேண்டும்.

பீர் >  பீர்ச்சு >  பீச்சு.

பீர் + அங்கு  + இ =  பீரங்கி:   பீச்சி  இங்கிருந்து அங்கு வீசும் கருவி  பீரங்கி ஆகிறது.

அங்கம் என்ற சொல்லும் இடைக்குறைச் சொல்லே.   ஏனை  உறுப்புகள் எல்லாம் அடங்கிய   அடக்க உருவே   அங்கம்.   அடங்கு >  அடங்கம் > அங்கம் என்று டகர வல்லெழுத்து வீழ்ந்து அங்கம் ஆயிற்று.  இவ்வாறு விளக்கி ஒரு படையணியில் அடங்கிய ஒரு குண்டெறி கருவி எனினும் ஏற்கத்தக்கதே ஆகும்.  ஆகவே இஃது இருபிறப்பிச் சொல்.

பீர்தங்கு என்ற வினைச்சொல் சீவக சிந்தாமணியிலும் வருகிறது,

பீர்தங்கிப் பொய்யா மலரிற் பிறிதாயினாளே  ( சீவகசிந். 1960 )

பீர் என்ற அடிச்சொல் பல நூல்களில் வந்துள்ள சொல்லே.

பீரிட்டது என்பதும் இயல்பு வழக்குச் சொல்லே  ஆகும்.

பீரிடும்படி ஆங்கு  வெடியை வீசும் சுடுதுளைவியே  பீரங்கி ஆகும்.

திங்கள், 17 ஜூன், 2019

வாழ்க்கையை எளிதாய்க் கொள்ளுங்கள்.

வாழ்க்கை  எளிதென்   றுளம்கொண் டியங்குவதும்
நாட்கள் நடந்திடவே நன்றாகும் ----  கேட்காமல்
யாதும் பெரிதே  கடிதென்றும் கொண்டாலோ
சாதலே முன்நிற்  பது.


இந்த நிகழ்வுகள் ஏனோ நடந்தன.  படித்துத் துயர்படவோ......

http://theindependent.sg/police-officer-dies-from-gunshot-wound-to-the-head-at-yishun-police-centre/

சிங்கப்பூர் நடப்புகள்.

இறந்தோர் அமைதியுலகில் உலவுக.

கரு என்ற அடிச்சொல். also மயானம்

கரு என்ற அடிச்சொல்லைப் பற்றி உரையாடுவோம்.  இதிலிருந்து சிந்தித்து அறியத்தக்கவை பல.  அகரவரிசை அல்லது அகர முதலாய் ஆதலுற்ற  சொற்சேமிப்பு நூலிலிருந்து  ( அகர ஆதியிலிருந்து_) அறிய முற்பட்டால் கோழிமுட்டையேனும் கிட்டுவதில்லை.

கரு >  கருது > கருதுதல்.  ( ஒலி எழுப்பாமல் உள் எண்ணி அறிதல் )
கரு >  கரைதல்  (   மாவு கரைதல்,  மண் கரைதல்,  காக்கை கரைதல், )  கரு + ஐ..

கரு+  இ +  அம் =   காரியம்  (  கருதிச் செய்யும் செயல் )

கரு + அண் + அம் =  காரணம்

கரு +  அண் +  இ =   காரணி.

கரு என்பது இச்சொற்களில் பலவினும் கார் என்றும் திரிந்தது.

கருமேகம் =  கார்மேகம்.
கார்முகில்;  கார்காலம்.
கார்மழை

ஒன்றைக் கருதி உள் நெய்போலும் உருகினால்

கரு +  உள் + நை   கருணை.  இது ஒரு புனைவுச்சொல்.

நெய் =  நை.
நெய் +  அம் =  நேயம்.   நெய் போலும் உருகி இணைதல்.

நெய் என்ற சொல் உருகி இணைதலையே குறிக்கும்.  நெய்யும் அப்படி இணைவதாலே அப்பெயர் பெற்றது.
 

நீரால் கரைதல் உடைய நிலங்களும் நெய்தல் எனப்பட்டன.

1.  https://sivamaalaa.blogspot.com/2019/02/blog-post_54.html

2   https://sivamaalaa.blogspot.com/2017/07/blog-post_15.html

3  https://sivamaalaa.blogspot.com/2018/04/blog-post_87.html  கருணை.

இவற்றையும் வாசித்து  (  வாய் > வாயித்தல் >  வாசித்தல்:  யி > சி. )  அறியவும்.

நெய் >< நை போலும் உறவு உடையதே  மய் > மய > மை என்பதும்.  இரு அல்லது மேற்பட்டன மயங்கிக் கலப்பதால் உருவாவதே மை.

மய+ ஆன + அம்=   மயானம்  ( புனைவு)
பலரும் கலந்து உறங்கும் அல்லது எரியூட்டப்பெறும் இடம்.

மய் > மய > மை.   மையம் என்பதும் அது.

இனி மாய் + ஆன + இடம்=  மயானம்.  மாய்ந்தோரை இடும் இடம்.  மாய் என்பது மய் என்று குறுகிற்று எனினும் அமைவதால் இது இருபிறப்பி

சொற்களிடை உள்ள உறவினை ஆய்ந்தறிவோனே அறிஞன்.

நெயவு?

பிழைத்திருத்தம் இனி. வேண்டின்.



சனி, 15 ஜூன், 2019

அந்தித்தலும் சந்தித்தலும்.

அகர வருக்கச் சொற்கள் சகர வருக்கமாகத் திரியும் என்பதைப் பல இடுகைகளில் முன்னர் கூறியுள்ளாம். இவை மறுதலிக்க இயலாச் சான்றுகள் உடையவை.

எடுத்துக்காட்டு:   அமணர் >   சமணர்.
அட்டி >  சட்டி.  அடுதல்:  சுடுதல். சமைத்தல்.   அட்டி என்பது வழக்கிறந்த சொல்.

அந்தித்தல் என்பது சுட்டடிச் சொல்.   இதில் அகரம்  அ எனற்பாலது,  அங்கு என்று பொருள்படுவது.

இங்கிருப்பது அங்கு சென்றால் அங்கிருப்பதனோடு கூடுதலும் உளது. அங்கு ஏதுமின்றி எதிலும் கூடாமல் ஒழிதலும்  அதாவது முடிதலும் உண்டு.

எதையும் சொல்பவன் அங்கு என்பதுடன் வேறு எவ்விடத்தையும் மேலும் குறிக்காமல் கருத்தினை முடித்துவிடுதலும்  இறுதியையே அறிவிக்கும்.

அ >  அன் >  அன்+ து >    அன்று ( உண்மையில் இது அந்து என்பதன் வேறன்று, சொல்லாக்கத்தில்.)

அ > அன் து :  அந்து ( புணர்வற்ற  எழுத்து மாற்று ).
அ > அன் து :  அன்று  ( புணர்வின் காரணமான திரிபு).

அந்து என்பதை ஆங்கில எழுத்துக்களால் வரைந்தால் அன்`து என்றே வரும்;  அந்து என்பதும் வேறன்று.   0ன் =  ந்.

அங்கு போய் மற்றொன்றுடன் இணைந்தால்  அதுவே  அந்தித்தல்.  இதுபின் சந்தித்தல் என்று மாறிற்று.

அங்குபோய் எதனுடனும் கூடாமல் முடிதல் அந்துதல்.    அன்றுதலும் அது.

அன்று என்பதும் முடிந்த நாள்.  இந்நாள் எதனுடனும் கூடாமல் முடிந்தது.

அ இ என்பன சுட்டுக்கள்;  அன்,  இன் என்பன சுட்டு வளர்ச்சி.   இன்னென்னும் இறுதி ஏற்றன.  இது  (ன் என்பது மொழியில் பண்டை விகுதியாகும்).

நீ > நீன்  > நீனு என்பதில் 0ன் என்பது ஒரு விகுதி.   0னுவில் ஏறிய உகரம் ஒரு சாரியை.

யா >  யான் என்பதிலும் இன்னொற்று ஒரு விகுதியே.

மா =  விலங்கு;
மா > மான் என்பதில் 0னகர ஒற்று விகுதியாகி ஒரு புதிய சொல்லைப் பிறப்பித்தது.

கா =  காடு;   கா> கான் ( காடு என்பதே).  விகுதி பெற்றும் பொருள் மாறாமை.

சந்தித்தல் என்பதன் சொல்லாக்கம் உணர்க.

பழைய இடுகை அந்து என்பதையும் வாசிக்கவும்.  https://sivamaalaa.blogspot.com/2017/10/blog-post_70.html


பிழைபுகின் திருத்தம் நிகழும்.

வெள்ளி, 14 ஜூன், 2019

வீட்டுக்குச் செலவு மனத்துக்கு அமைதி.

வீட்டு  முகப்பு  நாட்டும் அழகை நல்கிடாவிடில்
காட்டும் பணத்தைக் கணக்கி னின்று வெளிக்கொணர்ந்திடாய்.

ஓட்டில் புதுமை சுவரில் புதுமை ஓங்கும் புதுமைகள்
கூட்டும் வண்ணம் கட்டு மானம் உதிக்கச்செய்திடாய்

கனிந்த மனத்துத் திணிந்த அமைதி காலம்காலமாய்த்
தணிந்தி டாமல் தகுதி காணச் செலவுசெய்குவாய்.



செவ்வாய், 11 ஜூன், 2019

பிரிதலும் பிரியமும்

இப்போது பிரியம் என்ற சொல்லினை ஆய்வு செய்வோம்,

பிரிதல் என்ற தொழிற் பெயரும் பிரியோம், பிரியேன் எனவரும் வினைமுற்றுக்களும் இன்ன பிற வடிவங்களும் வேறாகுதல் கருத்தை உடையனவாய் உள்ளன. ஆயின் அயலென்று கணிக்கப்பெற்ற விருப்பம் குறிக்கும் பிரியம் என்ற சொல்லானது எதிர்மறைப்பொருளை உடையதாய் உள்ளது.

பொருண்மையில் எதிராயினும் இரண்டும் ஓரடியிற் றோன்றிய சொற்களாய் உள்ளன. உடன்பாடும் எதிர்மறையும் குறிப்பினும் ஆணும் பெண்ணும் ஒரு கருவறையினில் தோன்றியதுபோலவே இச்சொற்கள் தோன்றியுள்ளன.

காதலர் பிரியோம், பிரியோம் என்பதிலிருந்தே அவர்கள் " பிரியோம்" என்னும் உறுதி உடையவர்கள் என்று பிறர் அறிந்துகொண்டனர். பிரியோம் என்னும் உறுதியே பிரியம் ஆனது.

இது அடிச்சொல்லினின்று அமைந்த ஓர் எதிர்மறைப் புனைவு ஆகும். மொழி என்றால் பலவகைகளிலும் சொற்கள் ஏற்பட்டுப் பயன்பாட்டுக்கு வருவதே இயல்பு நிலை ஆகும். எல்லாச் சொற்களிலும் பகுதி விகுதி இடைநிலை என்று வரவேண்டுமென்பது உலக இயல்பும் சொல்லமைப்புச் சூழ்நிலைகளும் அறியான் ஒருவனின் கருத்தன்றிப் பிறிதில்லை. சில குழந்தைகள் அறுவையின் வழிப் பிறந்தவர்களாய் இருப்பதுபோலும் இது. எல்லோருக்கும் இயல்புவழி வாய்ப்பதில்லை.

இவ்வாறு எதிர்மறையின் காரணமாய் அமைந்த இன்னொரு சொல் தீட்டு என்பதாகும். தீண்டுதலால் ஏற்படுவதே தீட்டு ஆகும். தீண்டுதலால் ஏற்படும் குற்றம் என்ற பொருளில் தீண்டு என்பது வலிமிகுந்து தீட்டு ஆயிற்று. தீண்டுதல் குற்றம் எனவே தீண்டாமல் இருக்கக் கடவது என்ற குறிப்புப் பொருளும் இதனின்றே தோன்றிடு மென்பது காண்க. ­இதன் அடிச்சொல் தீள் என்பதே.

தீள் + து = தீண்டு> தீண்டுதல். ( வினையாக்கம் ) மெலித்தல் புணர்வு.
தீள் + து = தீட்டு ( வலித்தல் விகாரம் ).
தீள் + து + அல் = தீட்டுதல் ( வினையாக்கம். வலித்தல் புணர்வு )
தீள் + சை = தீட்சை ( நெற்றியில் தீட்டித் தகுதி வழங்குதல் ). இதில் சை என்பது தொழிற்பெயர் விகுதி. இதுபோல் அமைந்த இன்னொரு சொல்: திரள் + சை = திரட்சை > திராட்சை. ( கொடிமுந்திரிப் பழம்) திர என்பது திரா என்று திரிந்தது.
பரீட்சை என்ற சொல்லும் சை விகுதி உடையதே.

பரி + இடு + சை = பரிச்சை ( பரிந்து இடப்படும் தேர்வு ). பேச்சுமொழிச் சொல்.
பரி + ட் + சை = பரிட்சை ( இடு என்பது ட் என்று மட்டும் குறுகிற்று ). > பரீட்சை. ( அயல் திரிபு ) ரிகரம் ரீகாரமானது. திரட்சை எனற்பாலது திராட்சை என்று போந்தது போலும்.

பெரும்பாலும் வல்லெழுத்துக்கள் நீக்கம்பெறும். கேடுது > கேது. பீடுமன் > பீமன்.

இவை எல்லாம் எண்ணி மகிழத்தக்க ஆடல்கள்.

பிழைத்திருத்தம் பின்னர்.






ர்

திங்கள், 10 ஜூன், 2019

Improvised writing style

Improvised writing style
Utterly inspiring;
Rules we follow every mile
Never conspiring.


Kindred thought brings some fun -
Ease and confidence;
Service is inventive
Intimate and dense.


Makes you head for your books
At home . in library;
Soaks you in Tamil poetry
At all times, but it's free.








வெள்ளி, 7 ஜூன், 2019

தயங்கு தயை என்னும் சொற்கள் தொடர்பு


இன்று தயை என்ற சொல்லை ஆய்வு செய்வோம்.

இச் சொல்லினோடு தொடர்புடைய சொல் தயங்கு என்பது. தயங்கு, மயங்கு, இணங்கு என்பவற்றிலெல்லாம் ஈற்றில் நிற்கும் கு என்பதை சொல்லாய்வு அறியாதாரும் எளிதில் அறிந்துகொள்ளலாம். அஃது ஒரு வினையாக்க விகுதியாகும்.

மய என்ற அடிச்சொல்லோடு கு சேர்கையில் அஃது தன்வினையில் மெலிந்தே வரவேண்டும். எனவே மயங்கு என்றே வரும். அதாவது தயங்கு என்றே வருவதல்லால் தயக்கு என்று வலித்தல் ஆகாது. வலிப்பின் பிறவினை ஆய்விடும்.

தயங்கு என்பதில் தய (தயா) என்பதே அடிச்சொல். இஃது எவ்வாறு பிறந்தது என்பதை இன்னொரு நாள் இன்னோர் இடுகையில் சொல்வோம்.

நீ ஏன் நீரைத் திருடினாய் என்று அரசன் கேட்குங்கால் நான் ஓர் ஆவினைக் காப்பாற்றுவதற்காக அதைத் திருடினேன் என்று திருடன் சொல்கிறான். அரசனோ காரணம் கேட்பவனே அன்றித் திருடனின் சொற்களைச் செவிமடுப்பவன் அல்லன். மேற்கொண்டு வினா எழுப்பாமல் உடனே கையை வெட்டிவிடுவது அவன் வழக்கம். ஆனால் அவன்முன் திருடன் " ஆவிற்கு" என்று விளக்கியவுடன் அரசன் தயங்கி விடுகிறான். ஒரு நிமையம் சிந்தித்தபின் "மன்னித்தேன் போ" என்று விடுதலை செய்கிறான். இந்தத் தயக்கமே தயை ஆகும். தய+கு = தயங்கு; தய + = தயை.
எவனிடம் இத்தகு தயை நிலைபெற்றுள்ளதோ அவனே தயை உடையோன் - தயை நிதி. (தயா நிதி ). நில்+ தி > நி+ தி > நிதி. நில் என்பது நி என்றுமட்டும் வந்தது கடைக்குறை. தயையில் காரணமாக ஒன்றைக் கொடுக்கலாம்; அல்லது தண்டிக்காமல் விடலாம்; அல்லது நன்மை யாதாகிலும் செய்யலாம். தயை எவ்வுருக் கொள்கிற தென்பது வேறாகும்.

தய எனற்பாலதையும் தயங்கு என்ற பாலதையும் ஒன்றாய் வைத்து அவற்றின் பொருள் தொடர்பும் அடிச்சொல் உறவும் காட்டுகிறோம். அவற்றுள் நுண்பொருள் வேறுபாடில்லை என்பது இதன் பொருளன்று.

தய என்ற அடி, மன ஒன்றுபாட்டினையும் காட்டும். ஆவிற்கு நீரெனின் தன்னைத் தண்டிக்கலாகாது என்பது திருடனின் மனக் கிடக்கை; அதை அவன் அரசற்குத் தெரிவித்த மாத்திரத்தில் அவனும் அதே மனக்கிடக்கை உடையவனாய் ஆனான். இதுவே இங்கு மன ஒன்றுபாடு. தய என்ற அடியின் மூலத்திலிருந்து உண்டான பிற சொற்கள் உள. அவற்றை ஈண்டு காட்டுகின்றிலம்.

தய என்பது ஆ என்னும் தொழிற்பெயர் விகுதி பெற்று தயா என்று பெயராகும். நில் என்ற வினையில் ஆகார தொழிற்பெயர் விகுதி ஏறி நிலா என்றாயது போலுமே இது என்பதறிக. இனித் தயாநிதியே என்ற விளியில் அயல்வழக்கு வடிவம் காண்போம்.

தயா + நிதி + = தயாநிதியே!
தயா + நிதி + = தயாநிதே.

இரண்டாவது புணர்ச்சியில் நிதி என்ற சொல்லில் ஈற்று இகரம் கெட்டு நித் என்று நின்று ஏகாரம் ஏறி, நிதே என்றாயது காண்க. முதல் வடிவத்தில் வந்த - ஈற்று இகரத்தை அடுத்து வந்த யகர உடம்படு மெய், இரண்டாவது வடிவத்தில் வரவில்லை. தமிழ் வடிவத்துக்கும் அயல் வடிவத்துக்கும் உள்ள வேறுபாடு ஒரு யகர உடம்படு மெய்தான். தயாநிதே என்பதில் வந்த யாகாரம் புணர்ச்சியில் தோன்றிற்றென்பது அயல்விளக்கம் ஆகும். தாயா என்பதைத் தொழிற்பெயராக்கினும் அதுவும் அம்முடிபே கொள்ளும் என்பதுணர்க.

பதியே எனற்பால விளியைப் பதே என்பதும் நிதியே எனற்பலதை நிதே என்பதும் ஒரே சுவரில் காணப்படும் வெவ்வேறு வண்ணப்பூச்சுகள் போல்வன. எனினும் செந்தமிழியற்கை யகர உடம்படு மெய் புணர்த்துதலையே உகக்கும் என்பது அறிக. அதுவே மொழிமரபும் ஆம். அதனாலேதான் அது செந்தமிழ் ஆகிறது.
-----------------------------------------------------------------------------

திருத்தம் பின் தேவை காணின்.



புதன், 5 ஜூன், 2019

விபத்து

இது சில ஆண்டுகட்கு முன் எழுதிய கவிதை. பழைய கையெழுத்துப் படிகளை எடுத்துக்கொண்டிருந்தபோது கிடைத்தது.

ஒரு விபத்தில் நண்பர் இறந்துவிட்ட துயர நாளில் பாடப்பெற்றது. பழங்காலத்தில் இது போலும் பாடலை " கையறு நிலை" என்பர்.

"மரணம் வருவது காப்பதில்லை === நம்
மரணப் படைக்கலன் மாற்றியுள்ளோம்;
கரணம் தப்பின் மரணமென்பார் === அந்தக்
காரியம் மாறுமோ யாண்டுமில்லை.

" விபத்தில் இறந்தார் எவரெனினும் ===நெஞ்சு
விம்மும் துயரால் விடைபகர்வோம்;
சிவத்தில் இணைந்தார் இன்னவர்கள் == இவர்(கள்)
சீர்சால் உலகின் முன்னவர்கள்.

உந்துருளிகள் (மோட்டோர்பைக் ) ஓட்டுவோர் அன்புகூர்ந்து கவனமாய் இருங்கள். அதுவே நீங்கள் எங்களைப் பிரியாமல் இருக்கும் வழியாகும்.

மரி + அணம் = மரணம்.
விழு+ பற்று > வி+ பத்து >விபத்து. விழுந்து சாதலைக் குறித்த பழயை புனைவு இன்று பொதுப்பொருளில் வழங்குகிறது. என்ன ஆச்சு என்பதை மலையாளத்தில் " எந்து பற்றி ? " என்பர். விபத்து என்பது நம்மைப் பற்றிக் கொள்ளும் நிகழ்வு.

குறிப்பு: முன்னைய இடுகையில் ஒரு தப்பு இருந்து அதைத் திருத்த முனைந்தபோது மென்பொருள் ஒத்துழைக்கவில்லை. அதுபின் திருத்தப்பெறும்.