புதன், 5 ஜூன், 2019

விபத்து

இது சில ஆண்டுகட்கு முன் எழுதிய கவிதை. பழைய கையெழுத்துப் படிகளை எடுத்துக்கொண்டிருந்தபோது கிடைத்தது.

ஒரு விபத்தில் நண்பர் இறந்துவிட்ட துயர நாளில் பாடப்பெற்றது. பழங்காலத்தில் இது போலும் பாடலை " கையறு நிலை" என்பர்.

"மரணம் வருவது காப்பதில்லை === நம்
மரணப் படைக்கலன் மாற்றியுள்ளோம்;
கரணம் தப்பின் மரணமென்பார் === அந்தக்
காரியம் மாறுமோ யாண்டுமில்லை.

" விபத்தில் இறந்தார் எவரெனினும் ===நெஞ்சு
விம்மும் துயரால் விடைபகர்வோம்;
சிவத்தில் இணைந்தார் இன்னவர்கள் == இவர்(கள்)
சீர்சால் உலகின் முன்னவர்கள்.

உந்துருளிகள் (மோட்டோர்பைக் ) ஓட்டுவோர் அன்புகூர்ந்து கவனமாய் இருங்கள். அதுவே நீங்கள் எங்களைப் பிரியாமல் இருக்கும் வழியாகும்.

மரி + அணம் = மரணம்.
விழு+ பற்று > வி+ பத்து >விபத்து. விழுந்து சாதலைக் குறித்த பழயை புனைவு இன்று பொதுப்பொருளில் வழங்குகிறது. என்ன ஆச்சு என்பதை மலையாளத்தில் " எந்து பற்றி ? " என்பர். விபத்து என்பது நம்மைப் பற்றிக் கொள்ளும் நிகழ்வு.

குறிப்பு: முன்னைய இடுகையில் ஒரு தப்பு இருந்து அதைத் திருத்த முனைந்தபோது மென்பொருள் ஒத்துழைக்கவில்லை. அதுபின் திருத்தப்பெறும்.

கருத்துகள் இல்லை: