செவ்வாய், 11 ஜூன், 2019

பிரிதலும் பிரியமும்

இப்போது பிரியம் என்ற சொல்லினை ஆய்வு செய்வோம்,

பிரிதல் என்ற தொழிற் பெயரும் பிரியோம், பிரியேன் எனவரும் வினைமுற்றுக்களும் இன்ன பிற வடிவங்களும் வேறாகுதல் கருத்தை உடையனவாய் உள்ளன. ஆயின் அயலென்று கணிக்கப்பெற்ற விருப்பம் குறிக்கும் பிரியம் என்ற சொல்லானது எதிர்மறைப்பொருளை உடையதாய் உள்ளது.

பொருண்மையில் எதிராயினும் இரண்டும் ஓரடியிற் றோன்றிய சொற்களாய் உள்ளன. உடன்பாடும் எதிர்மறையும் குறிப்பினும் ஆணும் பெண்ணும் ஒரு கருவறையினில் தோன்றியதுபோலவே இச்சொற்கள் தோன்றியுள்ளன.

காதலர் பிரியோம், பிரியோம் என்பதிலிருந்தே அவர்கள் " பிரியோம்" என்னும் உறுதி உடையவர்கள் என்று பிறர் அறிந்துகொண்டனர். பிரியோம் என்னும் உறுதியே பிரியம் ஆனது.

இது அடிச்சொல்லினின்று அமைந்த ஓர் எதிர்மறைப் புனைவு ஆகும். மொழி என்றால் பலவகைகளிலும் சொற்கள் ஏற்பட்டுப் பயன்பாட்டுக்கு வருவதே இயல்பு நிலை ஆகும். எல்லாச் சொற்களிலும் பகுதி விகுதி இடைநிலை என்று வரவேண்டுமென்பது உலக இயல்பும் சொல்லமைப்புச் சூழ்நிலைகளும் அறியான் ஒருவனின் கருத்தன்றிப் பிறிதில்லை. சில குழந்தைகள் அறுவையின் வழிப் பிறந்தவர்களாய் இருப்பதுபோலும் இது. எல்லோருக்கும் இயல்புவழி வாய்ப்பதில்லை.

இவ்வாறு எதிர்மறையின் காரணமாய் அமைந்த இன்னொரு சொல் தீட்டு என்பதாகும். தீண்டுதலால் ஏற்படுவதே தீட்டு ஆகும். தீண்டுதலால் ஏற்படும் குற்றம் என்ற பொருளில் தீண்டு என்பது வலிமிகுந்து தீட்டு ஆயிற்று. தீண்டுதல் குற்றம் எனவே தீண்டாமல் இருக்கக் கடவது என்ற குறிப்புப் பொருளும் இதனின்றே தோன்றிடு மென்பது காண்க. ­இதன் அடிச்சொல் தீள் என்பதே.

தீள் + து = தீண்டு> தீண்டுதல். ( வினையாக்கம் ) மெலித்தல் புணர்வு.
தீள் + து = தீட்டு ( வலித்தல் விகாரம் ).
தீள் + து + அல் = தீட்டுதல் ( வினையாக்கம். வலித்தல் புணர்வு )
தீள் + சை = தீட்சை ( நெற்றியில் தீட்டித் தகுதி வழங்குதல் ). இதில் சை என்பது தொழிற்பெயர் விகுதி. இதுபோல் அமைந்த இன்னொரு சொல்: திரள் + சை = திரட்சை > திராட்சை. ( கொடிமுந்திரிப் பழம்) திர என்பது திரா என்று திரிந்தது.
பரீட்சை என்ற சொல்லும் சை விகுதி உடையதே.

பரி + இடு + சை = பரிச்சை ( பரிந்து இடப்படும் தேர்வு ). பேச்சுமொழிச் சொல்.
பரி + ட் + சை = பரிட்சை ( இடு என்பது ட் என்று மட்டும் குறுகிற்று ). > பரீட்சை. ( அயல் திரிபு ) ரிகரம் ரீகாரமானது. திரட்சை எனற்பாலது திராட்சை என்று போந்தது போலும்.

பெரும்பாலும் வல்லெழுத்துக்கள் நீக்கம்பெறும். கேடுது > கேது. பீடுமன் > பீமன்.

இவை எல்லாம் எண்ணி மகிழத்தக்க ஆடல்கள்.

பிழைத்திருத்தம் பின்னர்.






ர்

கருத்துகள் இல்லை: