சனி, 29 ஜூன், 2019

சங்கிலியும் கைலியும்.இவற்றில் இல்லாதவை

பழங்காலத்தில் கழுத்தணியில் பெரும்பாலும்   சங்குகளையே கோத்துப் போட்டுக்கொண்டனர். பின்னர்  சங்குக்குப் பதிலாக பல வடிவங்களில் வேறு துளைத்திரட்சிகள் பயன்படுத்தப்பட்டன.  அதனால் கழுத்தணிகளில் உண்மையான சங்குகள்   இல்லை.  சங்கினை விரும்பியோருக்கு இது ஓர் ஏமாற்றமே.  அவர்கள் காலத்தின்பின் சங்கில்லாத தொங்கணிகள் விரும்பி  ஏற்றுக்கொள்வன ஆயின.  சாமிக்கு வலம்புரிச் சங்கில் நீர் சாத்துதல் இன்னும் நம் பூசைகளில் நடைபெறுவதால் சங்கின் பெருமையும் மகிமையும் உணரலாகும்.  சங்கின் பிற இறைப்பற்றுத் தொடர்புகளும் உண்டு.  சங்கின்மை ஒரு காலத்தவர்க்குக் கவலும் புதுநிகழ்வு. இக்காலத்தவர்க்கு இஃது இல்லை. இவ்வரலாற்றினால் சங்கில்லாத கழுத்துத் தொங்கணிகள்  சங்கிலிகள்  எனப்பட்டன.

பிற்காலத்தில் ஒருவனைக் கயிற்றால் கட்டிவைப்பதைவிட இரும்புச் சங்கிலிகளால் பிணைத்து வைப்பது நடப்புக்கு வந்தது. இது கட்டிப் பூட்டி வைப்பதற்கு எளிதானது.  இக்காலத்திலெல்லாம் சங்கில்லாதது சங்கிலி என்பதை மக்கள் மறந்து அதை வெறும் இடுகுறியாகப் பயன்படுத்தினர்.

மனிதன் மேலே மாட்டிக் கொள்ளும் சட்டைக்குக் கைகள் இருந்தன. அரைக்குப் போர்த்திய கைலிக்கு கையோ இடைப்பட்டையோ பொருத்தப்படவில்லை.  இடைப்பட்டையைத் தனியாகப் போட்டுக்கொண்டனர்.  அல்லது கைலியை இறுக்கிச் சுருட்டி இடையில் நிறுத்தினர்.  கையில்லாத இந்த அரையாடை "கைலி"  எனப்பட்டது.  இதன்
திரிபு:

கை >  கய்  >  கய்+ இலி >  கயிலி (கைலி).

இது  அய்யர் > ஐயர் போன்ற திரிபு..

அறிந்து மகிழ்வீர்.

எழுத்துப் பிழைகளுக்குத் திருத்தம் பின்.

கருத்துகள் இல்லை: