வெள்ளி, 7 ஜூன், 2019

தயங்கு தயை என்னும் சொற்கள் தொடர்பு


இன்று தயை என்ற சொல்லை ஆய்வு செய்வோம்.

இச் சொல்லினோடு தொடர்புடைய சொல் தயங்கு என்பது. தயங்கு, மயங்கு, இணங்கு என்பவற்றிலெல்லாம் ஈற்றில் நிற்கும் கு என்பதை சொல்லாய்வு அறியாதாரும் எளிதில் அறிந்துகொள்ளலாம். அஃது ஒரு வினையாக்க விகுதியாகும்.

மய என்ற அடிச்சொல்லோடு கு சேர்கையில் அஃது தன்வினையில் மெலிந்தே வரவேண்டும். எனவே மயங்கு என்றே வரும். அதாவது தயங்கு என்றே வருவதல்லால் தயக்கு என்று வலித்தல் ஆகாது. வலிப்பின் பிறவினை ஆய்விடும்.

தயங்கு என்பதில் தய (தயா) என்பதே அடிச்சொல். இஃது எவ்வாறு பிறந்தது என்பதை இன்னொரு நாள் இன்னோர் இடுகையில் சொல்வோம்.

நீ ஏன் நீரைத் திருடினாய் என்று அரசன் கேட்குங்கால் நான் ஓர் ஆவினைக் காப்பாற்றுவதற்காக அதைத் திருடினேன் என்று திருடன் சொல்கிறான். அரசனோ காரணம் கேட்பவனே அன்றித் திருடனின் சொற்களைச் செவிமடுப்பவன் அல்லன். மேற்கொண்டு வினா எழுப்பாமல் உடனே கையை வெட்டிவிடுவது அவன் வழக்கம். ஆனால் அவன்முன் திருடன் " ஆவிற்கு" என்று விளக்கியவுடன் அரசன் தயங்கி விடுகிறான். ஒரு நிமையம் சிந்தித்தபின் "மன்னித்தேன் போ" என்று விடுதலை செய்கிறான். இந்தத் தயக்கமே தயை ஆகும். தய+கு = தயங்கு; தய + = தயை.
எவனிடம் இத்தகு தயை நிலைபெற்றுள்ளதோ அவனே தயை உடையோன் - தயை நிதி. (தயா நிதி ). நில்+ தி > நி+ தி > நிதி. நில் என்பது நி என்றுமட்டும் வந்தது கடைக்குறை. தயையில் காரணமாக ஒன்றைக் கொடுக்கலாம்; அல்லது தண்டிக்காமல் விடலாம்; அல்லது நன்மை யாதாகிலும் செய்யலாம். தயை எவ்வுருக் கொள்கிற தென்பது வேறாகும்.

தய எனற்பாலதையும் தயங்கு என்ற பாலதையும் ஒன்றாய் வைத்து அவற்றின் பொருள் தொடர்பும் அடிச்சொல் உறவும் காட்டுகிறோம். அவற்றுள் நுண்பொருள் வேறுபாடில்லை என்பது இதன் பொருளன்று.

தய என்ற அடி, மன ஒன்றுபாட்டினையும் காட்டும். ஆவிற்கு நீரெனின் தன்னைத் தண்டிக்கலாகாது என்பது திருடனின் மனக் கிடக்கை; அதை அவன் அரசற்குத் தெரிவித்த மாத்திரத்தில் அவனும் அதே மனக்கிடக்கை உடையவனாய் ஆனான். இதுவே இங்கு மன ஒன்றுபாடு. தய என்ற அடியின் மூலத்திலிருந்து உண்டான பிற சொற்கள் உள. அவற்றை ஈண்டு காட்டுகின்றிலம்.

தய என்பது ஆ என்னும் தொழிற்பெயர் விகுதி பெற்று தயா என்று பெயராகும். நில் என்ற வினையில் ஆகார தொழிற்பெயர் விகுதி ஏறி நிலா என்றாயது போலுமே இது என்பதறிக. இனித் தயாநிதியே என்ற விளியில் அயல்வழக்கு வடிவம் காண்போம்.

தயா + நிதி + = தயாநிதியே!
தயா + நிதி + = தயாநிதே.

இரண்டாவது புணர்ச்சியில் நிதி என்ற சொல்லில் ஈற்று இகரம் கெட்டு நித் என்று நின்று ஏகாரம் ஏறி, நிதே என்றாயது காண்க. முதல் வடிவத்தில் வந்த - ஈற்று இகரத்தை அடுத்து வந்த யகர உடம்படு மெய், இரண்டாவது வடிவத்தில் வரவில்லை. தமிழ் வடிவத்துக்கும் அயல் வடிவத்துக்கும் உள்ள வேறுபாடு ஒரு யகர உடம்படு மெய்தான். தயாநிதே என்பதில் வந்த யாகாரம் புணர்ச்சியில் தோன்றிற்றென்பது அயல்விளக்கம் ஆகும். தாயா என்பதைத் தொழிற்பெயராக்கினும் அதுவும் அம்முடிபே கொள்ளும் என்பதுணர்க.

பதியே எனற்பால விளியைப் பதே என்பதும் நிதியே எனற்பலதை நிதே என்பதும் ஒரே சுவரில் காணப்படும் வெவ்வேறு வண்ணப்பூச்சுகள் போல்வன. எனினும் செந்தமிழியற்கை யகர உடம்படு மெய் புணர்த்துதலையே உகக்கும் என்பது அறிக. அதுவே மொழிமரபும் ஆம். அதனாலேதான் அது செந்தமிழ் ஆகிறது.
-----------------------------------------------------------------------------

திருத்தம் பின் தேவை காணின்.



கருத்துகள் இல்லை: