ஞாயிறு, 17 ஜூன், 2018

பயிற்சியமா அல்லது பரிச்சயமா?


பயிற்சி என்பதனோடு அம் என்ற விகுதியைச் சேர்த்தால் அது பயிற்சியம் என்றாகிவிடுமென்பது உங்களுக்கு எந்தப்  பேராசிரியனும் சொல்லிக்கொடுக்காமலே நன்றாகத் தெரியும்.  அம் விகுதிபெற்ற சொல் அப்படி உருக்கொள்ளுமென்பது சொல்லித் தெரிவதில்லை.  உங்கள் செவிகளே உங்கள் எசமானன் ஆகிவிடும். பேராசிரியனோ என்றால் அவன் அரிதின் முயன்று அறிந்தவற்றை எல்லாம்  அள்ளித்  தந்துவிடமாட்டான்.  வியக்கச் சிறிது சொல்வான்.

ஒரு குரு எல்லாவற்றையும் சீடனுக்கு அள்ளித்தருவதில்லை.

எசமான் என்பதையும் சீடன் என்பதையும் யாம் விளக்கியதுண்டு.  இப்போது அவை ஈண்டில்லை என்பதால் விரைவில் அவற்றையும் இடுகை செய்வோம்.

இனிச் சொல்லாய்வுக்கு வருவோம்.

சொல்லமைப்புகளில் எழுத்து நிரல்மாற்று அமைப்பும் ஒன்று உண்டு.  இதை எழுத்து முறைமாற்று என்றும் கூறுவதுண்டு.  இது எப்படி வருமென்றால் காட்டுதும்.  ு.

விசிறி  >  சிவிறி என்று வரும்.

இச்சொல்லில் விசி என்பது சிவி என்று வந்தது.

சில குழுவினர் நாத்தடுமாற்றத்தில் இப்படிப் பேசி நாளடைவில் நிரல்மாற்றுச் சொற்களும் மொழியி லிடம்பெற்றன என்பதே சரியானதாகும்.

மதுரை என்ற சொல்லும் இப்படி அமைந்ததே என்பதை இப்போது பலர் உணர்ந்துள்ளனர்.

பல மருத நிலத்தூர்கள் சூழ அமைந்த பெருநகரமே மதுரை.

அது மருதை ( மருத நிலம் சூழ் நகர்) என்று அமைந்து பின் மதுரை என்று திரிந்தது என்பதே சரி.  ~ ருதை என்பது ~துரை என்று எழுத்து முறைமாறி அமைந்தது.

விகடகவி என்ற சொல் மட்டும் இருபக்கமும் இருந்து படிக்க நன்றாகவே வரும். இதுபோலும் வேறு சொற்களைக் கண்டுபிடித்துப் பட்டியலிட்டுக்கொள்ளுங்கள்.

இனிப் பயிற்சி என்பதோ பயில் என்பதினின்று சி விகுதி பெற்று அமைந்தது.

பயில்+சி =  பயிற்சி.
அம் சேர்க்க:  பயிற்சியம்.
நிரல் மாற்றில்:

பயிற்சி  >  பறிய்ச்சி  ஆகும்.   ற்  என்பது றி ஆனது.  யி என்பது ஒற்று  (ய்)  ஆனது.
சற்று வெளிப்படையாய் அமையாத நிரல்மாற்று.

பறிய்ச்சி என்பதில்  ய் - ச்  என்ற இரண்டு ஒற்றுக்களும் தேவைக்கு அதிகம்.  அவற்றை வெட்டுக.

இப்போது பறிய்ச்சி என்பது பறிச்சி ஆகிறது.

இப்போது பறிச்சி என்பது எதையோ பறிகொடுத்ததுபோல் அமைந்து தொல்லை தருவதால்பறி என்பதை பரி ஆக்கிக்கொள்க.

பரிச்சி என்பதனோடு அம் சேர்க்கப் பரிச்சயம் ஆகிறது.  சி என்பதை ச என்று மாற்றின் இனிதாகும்.  (  இனிதாக்கம் )

இதன் அடிச்சுவடுகளை மறைக்க:

பரி என்பதை முன்னொட்டாக ஆக்கி, சயம் என்பதை நிலைச்சொல் ஆக்கிடுக.

சொற்களை அமைப்பது என்றால் எவனும் உணராவண்ணம் பயன்படுத்தமட்டும் செய்தளிக்கவேண்டும்.

ஒரு சொல்லைப் பயன்படுத்தும் சின்னவனுக்கு அது எப்படி அமைந்தது என்று ஏன் தெரியவேண்டும்!வேண்டாமே.

ஆனால் இவ்வளவு மறைமாற்றுக்கும்  பொருள் மாறவில்லை.  ஒருவன் எதில் பயிற்சி பெறுகிறானோ அதில் அவனுக்குப் பயிற்சியம் > பரிச்சயம் ஏற்படும்.


சனி, 16 ஜூன், 2018

இலாவகம்


அந்த ஓடைக்குள் கால் போய்விடாமல் வெகு  இலாவகமாகவே குதித்துத் தாண்டிவிட்டான்.

இது வாக்கியம்.  ஓடையருகில் வந்தவுடன் எப்படித் தாண்டுவது, எப்படி அப்பால் செல்வது என்றெல்லாம் சிந்திக்கவுமில்லைஓடை எவ்வளவு அகலம், தாண்டமுடியுமா என்று அளவு எடுத்துக் கணக்குப் பார்க்கவில்லை; அகத்தில் ஒரு சிந்தனையுமின்றி, விழுந்தால் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டுமே என்ற அச்சமும் இன்றிஅணிந்திருப்பதெல்லாம் நனைந்துவிடுமோ என்ற தயக்கமும் இன்றி, ஒரே தாண்டு; தாண்டிவிட்டான்.

இதுதான் இலாவகம்.  இது லாவகம் என்றும் எழுதவும் சொல்லவும் படும்.

இந்தக் கூட்டுச் சொல்லில் இரு சிறு சொற்கள் உள்ளன.

ஒன்று:  இல்லா;   இன்னொன்று அகம்.

ஒருவன் ஒரு காரியத்தைச் சற்றும் தயக்கமில்லாமல் ஆய்ந்து பார்க்காமல் செய்து முடிக்க வல்லனாயின் அது பெருந்திறம் ஆகும்.  "அருந்திறல்" என்றும் சொல்வோம்.

இல்லா  என்பது இலா என்று குறைந்து நிற்கின்றது.

அகம் என்பது சிந்தனை, தயக்கம் முதலியவற்றையும் முன்னேற்பாடு ஆகிய ஆயத்தங்களையும் குறிக்கும்.

ஆக,   " அகம்" செலுத்தாமல் என்று பொருள்.

இலா+ அகம் =  இலாவகம்.

அரங்குபோன்ற ஆற்றிடைக்குறையில் அமர்ந்துள்ள கடவுளின் இடம் -   அவருக்குப் பெருஞ்சீரான இடம்.  அது சீர்+அரங்கம் என்ப்பட்டது.  சீரங்கம் ஆகி, அங்குள்ள சாமி அரங்கசாமி ஆனார்.  பின் "ரங்கசாமி" ஆனது.  அகரம் குறைந்து சொல் தலைக்குறை ஆனது.

அதுவேபோல். இலாவகம் என்பதும் முதற்குறையாகி  லாவகம் ஆயிற்று.

அறிவீர்; மகிழ்வீர்.

(சில வேளைகளில் எங்கோ செப்பனிடும் பணி நடைபெறுகிறது போலும். இணையம் கிட்டுவதில் இடையீடு உள்ளபடியால் இன்றுகாலை இதை மேலேற்ற முடியவில்லை.)


எழுத்துப் பிழைகள் இருப்பின் பின் சரிசெய்யப்படும்.

பூத்த மலர்கட்குள்

பூத்த மலர்கட்குள் பொங்கி வழிவண்னம்
ஊற்று மழைநீர்  ஒலிபோலும் செய்கின்ற
எந்திரம்நீ இங்குப் பளுவுந்தே ஏற்றினைநீ
செந்தண் மழையொலி என்றுயான் மாலாய்
விழித்தேன் உணர்ந்து படுத்தேன் விரைந்தே
கழிப்பேனோ அல்லை இனி.

அதிகாலை சாமான்கள் இறக்குவதற்காக வந்த பளுவுந்து
செய்த ஒலி மழைநீர் ஊற்றுதல் போல் ஒலி செய்தது
கேட்டுப் பாடினது. 
ஊற்று = ஊற்றுகின்ற;  பளுவுந்து =  லாரி
ஏற்றினை =  செவிக்குள் ஏற்றினாய்;
செந்தண் = நன் கு குளிர்ந்த;
மாலாய்  =  மயங்கி; 
அல்லை =  இரவினை.

தடைக்கல் : சொல்லின் அணியியற்பொருள்.

இப்போது தடைக்கல் என்னும் சொற்றொடர்ப் பயன்பாடு மிகுந்து வருகிறது நம்
தமிழில்.   ஓர் அரசின் அலுவலர் ஒரு திட்டம் தீட்டுகிறார்.  அது நிறைவேறுவதில் சில சிக்கல்கள் புலனாகின்றன.   சுருக்கமாக   " அலுவலரின் கனவில் சில தடைக்கற்கள் ஏற்பட்டுவிட்டன"  என்று  ஒரு தாளிகை எழுதுகின்றது.  திட்டம் பெரிதும் எதிர்காலத்தில் நடைபெறுவிக்கவே போடப்படுதலால்,  அதைக் கனவு என்ற சொல்லால் தாளிகை குறிக்கின்றது.  ஏற்பட்ட சிக்கல்கள் தடைக்கற்களாக உருவகம் பெறுகின்றன.

உண்மையில் திட்டம் என்பது கனவு அன்று.  திட்டம் தாளில் வரைந்து முன்னிடப்படுவது.  சிக்கல்களும் கற்கள் அல்ல.

இங்ஙனம் ஒன்றைப் பொருத்தமான இன்னொன்றாக உருவாக்கம் செய்வதே உருவகம் ஆகும்.  பெரிதும் கவிதைகளிலே இவ்வுருவாக்கங்களைக் காணலாம்.  இப்போது உரைநடைக்கும் இத்தகைய அழகு ஊட்டப்படுகின்றது.  நாளடைவில் மொழியில் பல உருவகங்கள் உண்டாகிவிடுகின்றன.

உருவகங்கள் பல துறைகளில் ஊடுருவியுள்ளன.  எடுத்துக்காட்டாக கடவுள் என்பது ஆணுமில்லை; பெண்ணுமில்லை.  அதற்குப் பால்காட்டும் தன்மை இல்லை.  எனினும் மிகப் பழங்காலந்தொட்டே பல நாட்டுப் பழமதங்களிலும் கடவுள் ஆணாகவும் பெண்ணாகவும் சித்திரப்படுத்தப்ப்டுகிறது.  அல்லது சித்தரிக்கப்படுகின்றது.

உருவகமின்றி எம்மொழியும் நிறைவுபெறுவதில்லை.  பழைய மொழிகளில்தாம் உருவகங்கள் நிறைந்துள்ளன.  சீனமொழியில் " நாய் "  என்பது அதிகாரியைக் குறிக்க வழங்கப்படுகிறது.   பெரியநாய் என்றால் மேலதிகாரி என்று பொருள்படும். மலாய்மொழியில்  "வீடுவாசற்படி"  என்று சேர்த்துச்சொல்லும்போது அது குடும்பம் என்ற பொருளை அடைகிறது. "கைகால்" என்ற இரண்டையும் இணைத்துச்சொல்லும்போது அது " அலுவலகப் பணியாளர்கள்"  என்று பொருள்படுகிறது. நீங்கள் வாழும் இடத்தில் வாழும் வட்டாரத்தில்  உள்ள மொழிகளிடை இத்தகைய தன்மைகள் உள்ளனவா என்று ஆராய்ந்து ஓர் ஆய்வுக்கட்டுரையை நீங்கள் படைக்கலாம். அதன்மூலம் பல உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவரலாம்.  ஆங்கிலத்திலும் "கேபினட்" என்ற பெட்டி என்னும் பொருள் அமைச்சரவையைக் குறிக்கிறது.   அவர் கேபினட்டில் இருப்பவர் என்றால் மந்திரி யவையில் உள்சுற்றில் இருப்பவர் என்று பொருள். பெட்டிக்குள் இருப்பவர் என்று பொருள் இல்லை.  "ஸ்டாஃப்" என்றால் தடி என்றோ குச்சி என்றோ பொருள். ஆனால்  அந்த அலுவலகத்தில் நான் ஒரு ஸ்டாஃப் என்றால் நான் ஒரு குச்சி  என்பது பொருளன்று.  நான் அங்கு ஒரு வேலைஆள்  என்பதே பொருள்.

எல்லா மொழிகளிலும் பல சொற்கள் அடிப்படைப் பொருளினின்றும் வேறுபட்டு அர்த்தப்படுத்தப்படுகின்றன.

வாயினின்று வெளிப்படுவதே வார்த்தை.   வாய் > வார் > வார்த்தை.  வேறு விதமாகவும் காட்டலாம்.  வாய்> வாய்த்தை > வார்த்தை என அமையும். வாயினின்று வெளிப்படுவது என்னிலும்  அது வார்க்கப்பட்டு வழங்கப்படுவதும் ஆகும். இவ்வகையில் அணியியல் பொருண்மையைப் பெறுகிறது.  வார்க்கப்பட்டுத் தரப்படுவது வார்த்தை என்று இருபிறப்பி ஆகும்.

அர் என்ற  அடிச்சொல்  ஒலியைக் குறிப்பது.  அரட்டுகிறான்  ( மிக்க ஒலி செய்கிறான்);  அரற்றுகிறான் ;  அர் >  அர்ச்சிக்கிறான்  ;  ஆராதிக்கிறான்;   ஆரத்தி எடுக்கிறாள்; ஆலத்தி எடுக்கிறாள்,   என்றெல்லாம் வழங்கும்  சொல் நிலைகளைக் காண்க.  அர்த்தம் என்பதன் மூலப்பொருள்  ஒலிசெய்தல் என்பதே. ஒரு சொல்லின் பொருள் அதன் ஒலியில் அடங்கியுள்ளபடியால்  அர்த்தம் என்ற சொல்லுக்குப் பொருள் என்பது பொருளாயிற்று,   ஒலியில் ஒன்றும் பொருள் இல்லை. அது வெறும் ஒலிதான்.  ஒலிக்குப் பொருள் மொழிமரபினால் ஊட்டப்படுகிறது. ஓரொலியுடையது ஒரு மொழியில் ஒரு பொருளும் இன்னொரு மொழியில் இன்னொரு பொருளும் கொள்வதற்கு இதுவேகாரணமாகும்.  ஒரு  சொல்லும் பொருளை "  அருந்துகிறது"  அல்லது உள்வாங்குகிறது,  அருந்து+அம் =  அருத்தம் என, சொல் பொருளை அருந்திச் சுமந்துகொண்டு வாழ்கிறது  என்றும் "அருத்தம்"  என்ற சொல்லுக்குப் பொருள் அமையும்,  அல்லது பொருள் அருத்தப்படுகிறது:  அருந்தும்படியாக ஆக்கப்படுகிறது எனினும் ஆகும்.  இவ்வாறு உரைக்கின்,  அது ஓர் அணியியல் வழக்கு ஆகிவிடும்,

வல்லோனொருவன் எவ்வாறு உரைக்கின்றான் என்பதனோடு பொருந்தியே சொல்லும் பொருளும் அமைகின்றது,  அவற்றுள் அணியியற் பொருளை விலக்குதல் ஆகும் காரியமன்று.

தடைக்கல் என்னும் அணிவழக்கு இப்போது தமிழில் வழக்குக்கு வந்துள்ளது இவ்வாறுதான் என்று அறிந்து மகிழ்க.

பிழைகள் காணப்படின் பின் திருத்தம்பெறும்.

வெள்ளி, 15 ஜூன், 2018

விலைவசமும் இலவசமும் : மற்றும் தொடர்புடையவை.

இலவசம் என்ற சொல்லை மறுநோக்குச் செய்வோம்.

இது இலாவண்யம் என்ற சொல்லை ஒத்த பாணியில் பின்னாளில் ஆக்கப்பட்ட சொல்லே ஆகும்,

இலாவண்யம் என்பது "ஊரில் இல்லாத  அணியை உடையது" என்று பொருள்படும்.  அணி என்பது அழகு ஆகும்.

இலாவணியம் என்பது இலாவண்யம் என்றும் தன் தலை இழந்து லாவண்யம் என்றும் பெயரானது,  ஈண்டு இறுதியில் வரும்  யா என்ற இறுதி,   ஆயா(ள்) என்பதன் முதற்குறை,  இங்கு ஈற்றில் வந்தது,  அம் விகுதி பெறாது வரின், யா என்று முடிந்து பெண்பெயராகும்.

விலைவசமும் இலவசமும்

இலவசம் என்பது விலையின்றி வசமாவது என்று பொருள்தரும்,  இல -  விலை கடன் முதலியன இலவாக;   வசம் -   ஒருவற்கு வசப்படுவது.  ஆகவே இலவசமாயிற்று.

லாவணியம் என்பது  இகரம் இழந்தமை போல, இலவசமென்பது தன் தலையை இழக்கவில்லை.

இந்தியத் தேர்தல்களின்போது " இலவசம்"  என்ற சொல் பெரிதும் வழங்கியது,
நுழைவு இலவசம், அனுமதி இலவசம் என்பன காண்க.

அனுமதி என்பதில் அனு என்பது அண் என்ற சொல்லிற் பிறந்தது.   அனு எனில் அண்மி நிற்பது.  திரிபுச் சொல்.  அனுபந்தம் என்ற சொல்லில் இதன்பொருள் தெளிவாகிறது.  அணுகிப் பற்றி நிற்கும் பகுதி.    மதி என்பது ஏற்றுக்கொள்ளுதல் குறிக்க ஆளப்படுகின்ற சொல். அண்மி வர ஏற்பதென்பது பொருள்.

அண்மி வருகையில் சரி என்று ஏற்பது அனு + சரி + அணை.  சரி என்பதில் இகரம் கெட்டது.  அனுசரணை.

எழுத்தறிஞனைக் கொன்ற எதிரிகள்.

சரிதானே    என்றாலும் இல்லைதான்  என்றாலும் என்னவம்மா
நரியாக   இல்லாமல் நல்ல  தெழுதிய ஆய்வெழுத்தன்
குறியாக வைத்திட்டுக் கொல்லுவ தென்பதிங்  கென்னஞாயம்?
மறியினைக் கொன்றுணும் மாந்தரின் கீழ்ப்பட்ட திச்செயலே.

ஒவ்வோர் எழுத்தாளனுக்கும் அவனுடைய சொந்தக் கருத்துகள் இருக்கும்.  அதாவது அதை எழுதும்போது அது அவனுக்குச் சரியாகத் தோன்றுகிறது. ஆனால் பிறருக்கு அது சரியில்லை என்று தோன்றலாம். சரியென்றும் தோன்றக்கூடும். அது சரியில்லை என்றால் அவன் ஆய்வு நல்லதா அல்லது ஏதும் தந்திரம் செய்கிறானா, உள்ளத்தில் பட்டதை உண்மையாகச் சொல்கிறானா என்று பார்க்கவேண்டும்,  அதற்காக அவனைக் கொல்வதென்பது அன்முறை ஆகும்.  அது ஓர் ஆட்டை கொன்று உண்ணும் செயலினும் கீழ்ப்பட்டதே ஆகு.,  அதில் இரக்கம் இன்மையினால். பிடிக்கவில்லையானால் ஆடு ஏதோ கத்துகிறது என்று நீங்கள் போய்க்கொண்டிருப்பதே நன்னெறியாகும். அவன்மேல் குறிவைத்து அவனைக் கொல்லலாகாது.

இது ஓரு நாட்டில் நடைபெற்ற நிகழ்வினைப் பற்றிய பாடல்.

நரியாக -  தந்திரமாக.
ஆய்வெழுத்தன் -  எழுத்தாளன்.
குறியாக -  குறிவைத்து.
மறியினை -  ஆட்டினை.
கொல்வோன் வருகையில் தன்னைக் காத்துக்கொள்ளத் திறனற்றது ஆடு.








புதன், 13 ஜூன், 2018

மாடி - தமிழ்ச்சொல்.

மாடி என்ற சொல் வழக்கில் உள்ளதாகும். மாடி என்பது வீட்டின் இரண்டாம் அடுக்குக்கும் அதற்குமேலும் உள்ள அடுக்குகளையும் குறிப்பதாகும்.

வீடுகட்டும் பாட்டாளி
வீதியிலே தூங்குகிறான்
கூடியந்த மாடியிலே
கும்மாளம் போடுகின்றார்

என்றொரு திரைக்கவிஞர் எழுதினார். திரைக்கவி யானாலும் நல்ல எதுகை மோனைகளுடன் எழுதி மகிழ்த்துவதில் நம் தமிழ்க்கவிகள் பண்பட்டவர்கள் ஆவர். தாம் வேலைக்கமர்த்தும் தொழிலாளர்களுக்கும் குடியிருப்பு வசதிகள் செய்துதருவது கட்டுமானக் குத்தகையாளர்களின் சட்டப்படியான கடமை என்று சிங்கையில் சட்டமிருப்பதாகத் தெரிகிறது.  வீதியிலே தூங்குவோரை இங்குக்  காண்பதரிது.

அடுக்குமாடி என்பது பல அடிக்குகள் உள்ள கட்டடங்களுக்கு வழங்கும் சொல்.

புடவையில் விளிம்பு மடிக்கப்படுவதால் அதையும் மாடி என்று சொல்லும் வழக்கு உள்ளது.  சிற்றூரார் தெய்வத்துக்கும்  மாடன் என்ற பெயருண்டாதலால் அதன் பெண்பால் மாடி எனவரும். மாடத்தி எனினுமாம். பலரைப் பலிகொண்ட காவல்தெய்வம் மாடன்.  இவன்பெயர் மடி என்ற சொல்லடியாக அமைகிறது. மடி+அன் = மாடன் என்பது முதனிலை நீண்டு விகுதிபெற்ற ஆண்பாற்பெயர். பின்னர் இவனுக்கு மாடு ஒரு வாகனமாய் ஆக்கப்பட்டதென்று தெரிகிறது.  பிணம் தின்னும் மாடன் ஆதலின் இவன் சுடலைமாடன் என்பர்.

"மாடனை வேடனைக் காடனைப் போற்றி
மயங்கும் அறிவிலிகாள் ....." 

என் கின்றார் பாரதி.  இவன் மனிதக்குருதி கேட்பானாம்.

மாடி என்பது இடர், இக்கட்டு, சினம் என்றும் பொருள்படும்.

மாடி - மடத்தின் தலைமையையும் குறிக்கும்.

மாடி  கூரையில்லாத கட்டிடத்தில் மேலடுக்கையும் குறிக்கும்.

மடி என்பது வினையடிச்சொல் ஆகும்.  இது முதனிலை நீண்டு  மாடி ஆகும்.
(தொழிற்பெயர்.)

மாடி+அம் =  மாடம்.    (  எழுநிலை மாடம்,  வழக்கு நோக்குக).

கட்டிடத்தின் ஒரு நிலை அல்லது அடுக்கு    அதன் தரை ஈறு மேலே எழுந்து,  மடிந்து திரும்பி எதிர்ச்சுவருடன் இணைந்து நிற்பது  போல் இருப்பதால்  அது மாடி எனப்பட்டது. மடி -  மாடி.  ஒவ்வொரு நிலையும் ஒரு மடிப்பாகிறது.  பன்னிலை மாடமென்பது பன்னிலை மடி ஆகும். புடவை மடிப்பும் மாடியே.

மடி என்பது திரும்புதல். இடர் என்பது மாறிமாறிவருவது.  ஒருமுறை வந்து பின் மாறி மறுமுறை வருகையில் அது மாடி ஆகிறது,  இப்படி அது இடர், இடுக்கண் என்ற பொருளை அடைகிறது,





செவ்வாய், 12 ஜூன், 2018

மா, மகா, இர்> இரு பெரிது கருமைப் பொருள்.

கருமை:

ஒளி இல்லாத விண்ணிலே இருப்பது கருமை மட்டுமே.  விண் எவ்வளவோ பெரியது.  மாணப் பெரிது.  ஆரளவில்லாதது. எங்கும் கருமை. எதிலும் கருமை. இதைத்தான் விண் என்றனர் தமிழர்.  விண் என்பது இயற்கை இருள். ஒன்றுமற்ற இடம்.  பெரிதாகிய விண், தமிழர்களால் பெரிதும் கொண்டாடப்பெற்றது.  இது பிற்காலத்தில்   விண்ணு > விஷ்ணு ஆனது.

விண்ணில் சூரியனும் உடுக்களும் தோன்றின. ஓளி தந்தன.  சூரியன் ஒளியும் வெம்மையும் தந்து உயிர்கள் குளிரில் வாடுவதை விலக்கிற்று.  இது செவ்விய ஒளி. செம்மை சிவப்பு. செங்கதிரோன் எனப்பட்டான் சூரியன்.  விண்ணும் சூரியனும் தோற்றமளித்த காலை நாமில்லை.  ஆகையால் இவை எப்படித் தோன்றின என்பதை நாம் அறியோம்.  நாம் பிறந்த் பின் நோக்குங்கால் இவை இருக்கின்றன.

விண்ணு  -  விஷ்ணு - அகண்ட ஆகாய வெளி. கருமை அல்லது நீலம் அதன் வண்ணம்.

செங்கதிர் -  சிவப்பு - சிவம்.  ஒளி.  ஆகாயத்தில் தோன்றும் ஒளி.

இவற்றைத் தமிழர் வணங்கினர்.

இவற்றுள் மிக்க விரிவானது விண்ணு என்னும் விஷ்ணுதான்.  இது மகா விஷ்ணு எனவும் பட்டது.   மக -  பிறத்தல்.   மக -  மகன்; மகள்;  மகார் - பிள்ளைகள்; மக்கள்.   மகம் என்ற உடு அல்லது நட்சத்திரம்.  பிறந்தவற்றுள் எல்லாவற்றையும் உள்ளடக்கி நிற்பது விண்ணு என்ற விஷ்ணுதான்.  இது இயற்கை.  மிகப் பெரிதும் பரிதுமாதலின் மகாவிஷ்ணு ,  (மகவிண்)  ஆனார்.
இது இயற்கையை உருவகப்படுத்தியது ஆகும்.

பிறந்தவற்றுள் விஷ்ணுவே விரிவாதலால் மக (பிறத்தல்)   என்ற சொற்கு பெரிது என்ற பொருள் மொழியில் ஏற்பட்டது.   மக - பிறந்தது; மக >  மா: பெரிது; மக > மகா:  பெரிது.  

இருளே எங்கும் பரந்து கிடப்பது.  தாமேயாய் எங்கும் பரந்து கிடந்த இருள்,  பரந்தாமன் ஆனான். (தாமே எங்கும் பரந்து கிடந்த இருள் -   தாமே பரந்து > பரந்தாமன். 

(தாமம் : கயிறு.  கயிற்றால் உரலில் கட்டப்பட்டவன் என்பது தொன்ம விளக்கம்.)

சிவமென்பது இருளில் ஒளி.  ஒளியும் ஓரிடத்திலிருந்து புறப்பட்டு எங்கு தன் கதிர்களைப் பரப்பி,  இருளை விலக்கிற்று.  ஒளி மறைந்தக்கால் இருள் கவியும்.  இருள் கப்பிக்கொள்ளும்.  இப்படி செவ்வொளி பரப்பி நிற்பது, இருள் கடிவது  சிவமே.  சே என்றாலும் சிவப்பு.  சேயோன்.  சிவப்பன். சிவந்தான். சிவன்.

எல்லாம் அழகுதான். அழகே முருகு.  முருகன் எனப்பட்டான்.

விண்ணு, சிவம். முருகு என்பன மனிதர்களல்லர்.  இருந்தாலும் அன் விகுதி கொடுத்துச் சொல்வது மொழிமரபு. அல்லது உருவகம்.

பரந்து நிற்போன் பரமன்.  விண்ணு என்னும் விஷ்ணு பரமன்; சிவம் பரமன்.

இருளே பெரிதாதலின்  இரு என்ற அடிச்சொல்லுக்கு: பெரிது என்ற பொருள் மொழியில் ஏற்பட்டது.   இர்> இருள். உள் என்பது விகுதி. கடவுள், இயவுள் என்ற சொற்களிலும் உள் என்பது விகுதியே. அடிச்சொல் வினையாயினும் அன்றாயினும் வரும்.

மக என்ற அடிச்சொல் மா என்றும் திரிந்தது.  தலையெழுத்தை அடுத்து நிற்கும் ககரத்தால் தலையெழுத்து நீளும்.  பகு > பா என்று திரிந்தாற்போலும்.  பகுதி> பாதி. மிகுதி > மீதி.  இதுபோலவே மக என்பது மா ஆனது. பிறந்த விண்ணு பெரிதாதலின்,  மக என்பது மகா என்றும் திரிந்தது.  பெரிது என்பதே பொருள். பொருள் மாற்றம் ஏதுமில்லை. ஒலித்திரிபுகள்தாம்.

இரு பெரிது.  இருள் பெரிது.
மக பெரிது; மா பெரிது.  மகா பெரிது.

விண் கருமையாதலின்   மா என்பது  பெரிதென்றும் பின்னும் கருமை என்றும் இருபொருளும் தரும்  என்பதுணர்க.

மா என்பது கருமை.  அழுக்கும் கருப்பு.  ஆகையால் மா என்பதிலிருந்து ஒரு சு விகுதி சேர்ந்த சொல் உருவாகி மாசு என்று அழுக்கைக் குறித்தது.   அழுக்கு கருப்பு என்றால் கருப்பெல்லாம் அழுக்கன்று.  அழுக்கு வகைகளில் கருப்பு அழுக்கு மாசு எனப்பட்டது.

மா> மை:  கருப்பு நிறமான ஒரு பொருள்.

மை > மை+ இல்:  மயில். ( ஐகாரக்குறுக்கம்).  இல் = இடப்பெயர்.  கருப்பிடங்களை உடைய பறவை மயில்.

மை> மையில் > மயிலை.     (  மயிலைக் காளை).  மயிலைநாதன்:  மயிலை நிறத்தோனாகிய பரம்பொருள். 

இவற்றிலிருந்து விண் மா மகா இர் என்பவை உணர்க. இதில் சொல்லப்பட்டாதவை இன்னும் உள.  அவை விடப்பட்டன.




மன்மதன் ....நிறைச்சொற்களான குறைச்சொற்கள்.

ஒரு சொல்லின் எழுத்துக்களில் ஒன்றையோ இரண்டையோ சிலவற்றையோ எடுத்துவிட்டு மீதமுள்ள எழுத்துக்களைக் கொண்டு ஒரு சொல்லை அமைப்பதென்பது தமிழ் இலக்கணியர் பண்டைமுதல் அறிந்தும் பின்பற்றியும் வந்த ஓர் உத்தியே ஆகும்.  முதற்சொல்லில் எழுத்துக்கள் கெட்டிருந்தால், அச்சொல்லை குறைச்சொல் என்பர்.  சொல்லின் எப்பகுதியில் எழுத்துக்கள் கெட்டன என்பதுபற்றி ஒன்றை முதற்குறை, இடைக்குறை, கடைக்குறை என்று வகைப்படுத்துவர்.  தமிழிலக்கணியர் போற்றிய இவ்வுத்தி, பிறமொழியாரும் பின்னர் ஏற்றுக்கொண்ட ஒன்றுதான் என்பது யாவரும் ஒருவாறு உணர்ந்ததே ஆகும்.

மழுங்குதல் என்பதில் இடையெழுத்தாகிய ழுகரத்தை எடுத்துவிட்டால் அது மங்குதல் ஆகிவிடுகிறது.   ஒளிமழுங்குதல் >  ஒளிமங்குதல் என்ற சொல்லாட்சியில் இதனை உணர்ந்துகொள்ளலாம்.

மயங்குவது  என்பதில்  "யங்குவ" என்ற இடையில் நிற்குமெழுத்துக்களை நீக்கிவிடில் அது ம~து என்றாகி ஒரு புதிய சொல்போல் தோன்றுகிறது. மேலும் மது என்பது வேறுசொல்போலும் தோன்றும். உலகவழக்கிலும் செய்யுள்வழக்கிலும் இத்தகு குறைச்சொற்கள் நன் கு பயன்படுவனவாகும்.  இனிக்  குறைச்சொல்லை மீண்டும் விகுதி முதலியவற்றால் நீட்டித்துப் புதுச்சொற்களையும் படைத்துக்கொள்ளலாம்.  மது> மதம் என்று அம் விகுதி புணர்ந்து புதுச்சொல் ஆனது.

ஒரு கொள்கையில் ஊறி நிற்பவர்,  அதனில் நீங்காது நிற்பவரே.  "கள்ளால் மயங்குவது போலே, அதைக் கண்மூடி வாய்திறந்தே கேட்டு நிற்போம்"  என்று பற்றின் மயக்க நிலையைப் பாரதி பாடியது முற்றிலும்  ஒப்புதற்குரித்தே ஆகும்.  இத்தன்மையாலே சமயத்தை மதமென் `கின்றோம்.  மயங்குதல்:  பழம்பொருள் கலத்தல் என்பது. தன் சொந்தக் கருத்தின் நிலையினின்று திடமிழந்து நெகிழ்வுற்றுப் பிறர்கூறு நிலையில் சென்று கலத்தல்.

மதம் என்ற சொல்லின் அடிப்படைச் சொல்லமைப்புப் பொருள்:  மயக்கம் என்பதே.  மதம்: பற்றுமயக்கம்;  கொள்கைப்பிடி.

மயங்குவது என்பது மது என்று குறுக்கம்பெற்று மீண்டும்  ஒரு பு என்னும் விகுதி பெற்று மதப்பு என்று வந்து இன்னொரு சொல்லானது.  எனினும் பொருள் பெரிதும் மயக்கம் தொடர்பான நிலையிலே நின்றது. மயக்கம் மட்டுமின்றி, கொழுப்பு என்றும் செருக்கு என்றும் வழக்கில் புதிய பொருண்மை பெற்றது. மது என்பது மீண்டும் ஓர் அர் இறுதி பெற்று மதர் என்றாகி   செருக்கு, மகிழ்ச்சி , மிகுதி என்ற பொருண்மைகளையும் அடைந்தது.  இந்நிலையில் நின்றுவிடாதபடி அது ஒரு வினைச்சொல்லாகி  "  மதர்த்தல் " ஆனது.  இது செழித்தல், களித்தல் (கள்ளுண்ணுதல் ) மிகுதி என்று பொருள் விரிந்தது.

இனி மதர்ப்பு என்பதும் அமைந்தது.  மது > மதப்பு.   மது>  மதர்ப்பு.   மதர்வு என வடிவ வேறுபாடுகள் காண்க.  இன்னொன்று:  மதர்வை ஆகிற்று.

மதனா என்பது எவ்வளவு அழகிய சொல்.    மது > மது+ அன் > மதன் > மதனன். இங்கு மது + அன்+ அன் என்று அன் விகுதி இரட்டித்து மக்களை மயக்கிற்று.

எண்ணம் நிறை மதனா,  எழில்சேர் ஓவியம் நீர் மதனா, பஞ்ச பாணன் நீரே என் மதனா ---- என்றெல்லாம் கவிஞர் கண்ணதாசன் பாடலில் சொற்களைப் புகுத்தியுள்ளார்.

மதன்+  மதன் = மன்மதன் என்ற வடிவும் வழக்கில் திண்ணிய இடனுள்ளதே ஆகும்.  முதல் அசையாகிய மதன் என்பது தன் தகரத்தை இழந்து மன் என்று நின்றது.   மன்னுதல் எனில் நிலைபெறுதல் என்று இன்னொரு சொல்லுமிருப்பதால் நிலைமொழி "மன்" என்பது  நிலைபெற்ற என்று பொருள்படுமென்றும் விளக்குதல் கூடும்.

மது+ மது + ஐ  என்று புணர்த்தி,   மதுமதை ஆக்கி,  இடையில் உள்ள து எழுத்தை விலக்கி மமதை என்று முன்வைத்தால் அது இனிதாகவே உள்ளது.  ஏனை மொழிகளில்போல  மது+ மது + இ என்று புணர்த்தி மதுமதி என்றால்     மிகுந்த மயக்கம் என்றும்  மயக்கத்தைத தரும் நிலவு என்றும் இருபொருளும் தமிழால் கூறலாம்.

உன்:  முன்னிருப்பது என்னும் சுட்டடிச்சொல்.  உன் என்னும் வேற்றுமைப் பொருளிலும் வரும்.   உன் மகன் எனக்காண்க.  உன் - உன்னுதல் என்னும் வினையடியாயும் கொள்ளுதல் கூடும்.  உ என்பது முன்னுள்ளது என்று பொருள்படுவதால்  உன்+ மது+ அம்=  உன்மத்தம்  ( மயக்கத்துக்கு உள்ளான அறிவு )  எனக்காண்க.   மத்தம் என்பது மயக்கம்,  வெறி, செருக்கு, பைத்தியம், களிப்பு அல்லது கள்ளுண்ணுதல்.   வெறி முன்வருமாயின் அதுவே உன்மத்தமாகும்.  உன்னுவதெல்லாம் வெறியாகிவருதல்.

தமிழ்ச்சொற்களையே மேற்கொண்டு தமிழ் விகுதிகளையே புணர்த்தி புதிய இனிய பல சொற்களைப் படைத்துக்கொள்ளும் வசதியைத் தமிழ் தனக்கும் பிற அயன்மொழிகட்கும் வழங்கியுள்ளமை கண்டு மகிழ்வு அடைவீராக. 

திங்கள், 11 ஜூன், 2018

வரும் தேர்தலில் தமிழ்நாடு நிலை.

மனிதன் எப்போதும் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதைப் பற்றிக் கவலைப் படுபவனாகவே இன்றுவரை புவியில் வாழ்ந்துவந்துள்ளான்.  இந்த எதிர்காலக் கணிப்பென்பது ஒரு தனிமனிதன் பற்றியதாக இருக்கலாம்.  இதை "ஜாதகம்" என் கிறோம்.  ஜாதகம் என்பது சோதிடத்தின் ஒரு கூறு.  அதேபோல்  ஊருக்கு என்ன நல்லது நடக்குமென்றும் அரசுக்கும் நாட்டுக்கும் என்ன நல்லது நடக்குமென்றும் அறிந்துகொள்வதிலும் பலர் ஈடுபாடு காட்டுவதில் வியப்போன்றுமில்லை.  ஒரு சிறுபான்மையினர் சோதிடம் பொய் என்று கூறிக்கொண்டிருந்தாலும் அவர்களிலும் பலர் இவற்றைப் பார்த்து மகிழ்வதுமுண்டு.

எதிர்காலத்தை முற்றாக அறிந்துகொள்வது இயலாத காரியம் என்றாலும் ஓரளவாவது தெரிந்துகொள்வது நலம் என்போர் பலராவர்.

தேர்தல் முன் கணிப்புகள் இப்போதெல்லாம் இயல்பாகிவிட்டன,  அந்த வகையில் தமிழ் நாட்டு அரசியலில் எத்தகைய மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்று அறிந்துகொள்ளப் பலருக்கும் கொள்ளை ஆசையிருக்கலாம்.

தமிழ்நாட்டில் அரசு மாற்றம் முன்னுரைக்கப்பட்டுள்ளது. இங்கு சென்று அதனைத் தெரிந்துகொள்ளுங்கள்.

https://www.nationalheraldindia.com/india/election-survey-suggests-tamil-nadu-will-favour-dmk-punish-aiadmk

யார் அரசு அமைப்பார்கள் என்று முன்னுரைக்க இயலாது என்றாலும் ஒவ்வொரு கட்சியும் எத்தனை இடங்களில் வெற்றிவாகை சூடக்கூடும் என்பதையாவது இக்கணிப்புகள் நமக்குக் காட்டவல்லவை ஆகும்.

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டு நிகழ்வு  சில பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கலாம்.

 

இலாவண்யம் இலாபம் லேகியம் லாகிரி சொற்கள்

சொற்களைப் பற்றிய ஆராய்ச்சியைப் பல ஆண்டுகளாக ஈண்டு மேற்கொண்டு வருகின்றோம்.  நாம் ஆய்ந்து வெளிப்படுத்திய சொற்களும் பலவாகும்.

எடுத்துக்காட்டாக ஊர்ஜிதம் என்ற சொல்லை விளக்கினோம்.  உறுதிதம் என்பதினின்று  உறுஜிதம் > ஊர்ஜிதம் என்பது படைக்கப்பட்டது என்பதை எடுத்துக்காட்டினோம்.     இரு > இருத்தல் > (  இருத்தித்தல்) என்ற புனைவிலிருந்து சிருத்தித்தல்> சிருஷ்டித்தல் என்று புனைவுசெய்து,  இருக்கும்படி செய்தல், உண்டாக்குதல் என்ற பொருளில் சொல் உலவ விடப்பட்டது என்பதை விளக்கினோம்.  சொற்களைச் சிந்தனைக்குட்படுத்தி அவை எங்கனம் புனையப்பட்டன என்பதை அறிந்து விளக்குதல் எளிதானதே ஆகும்.  ஒன்றை உருவாக்கி அது இருக்கும்படி செய்தலே சிருஷ்டித்தல். செய்த  எதவும் இல்லாமலாய்விடுமானால்  அதனைச் சிருட்டித்தல் என்று சொல்லமாட்டோம்.

இன்றும் பல சொற்கள் புதிதாகப் படைக்கப்பட்டு வழக்குக்கு வந்துள்ளன. எடுத்துக்காட்டு: " இணையம்"  என்பது.  இணையம் ஏற்பட்டவுடன் தமிழர் இச்சொல்லைப் படைத்துக்கொண்டது மகிழற்குரியதே ஆகும்.  ஆனால் நம் ஆராய்ச்சியில் இன்று நாம் படைத்துக்கொண்ட சொற்களைவிட  ஏறத்தாழ் ஆயிரமுதல் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்புவரை இருந்த இந்தியர்கள் படைத்தளித்த சொற்கள் மிகப்பலவாகும்.  தாமே திரிந்த வடிவங்களிலிருந்தும் தாம் திரித்த வடிவங்களிலிருந்தும் அவர்கள் நம்முன் வைத்த சொற்கள் கண்டு வியக்கத்தக்க எண்ணிக்கையில் உள்ளன என்பதை நாம் மறுக்க ஒண்ணாது என்பதறிக.  அவர்கள் பல புதுமொழிகளைக் கூடப் படைத்து அளித்துள்ளனர். பல எழுத்துருக்களையும் படைத்துள்ளனர்.  அவர்கள் செய்துமுடித்த பணி மிகப் பெரிது ஆகும்.

பல சாதிகளைப் படைத்துக்கொண்டு பிரிந்து நின்றது போலவே இந்திய மக்கள் பல மொழிகளை உருவாக்கிக்கொண்டனர் என்று கூறின் அது ஓரளவு உண்மையே ஆகும்.  மலைகள், மடுவுகள், காடுகள், தொலைவு என்ற பல காரணங்களால் ஓரிடத்தில் இருப்பவர் பேச்சுக்கும் இன்னோரிடத்தில் இருப்பவர் பேச்சுக்கும் இடையில் வேறுபாடுகள் தோன்றி மிகுவது மொழிகள் மாத்திரத்தில் இயற்கையாகும்.  ஆனால் அவற்றை  அடிப்படையாக்கிப் புதுமொழிகள் பலவற்றைப் படைத்துக்கொண்டதில் நன்மையும் இருக்கலாம் தீமையும் இருக்கலாம்.

இனி வெறும் தத்துவங்களை மட்டும் பேசிக்கொண்டிருக்காமல், இரண்டு மூன்று சொற்கள் அமைந்தவிதம் காண்போம்.

இலாவண்யா என்றது அழகு என்று பொருள்.   இலாவண்யா என்பது ஊரிலே எங்கும் காணற்கியலாத  அழகு.  இலா:   ஊருக்குள் இல்லாத;  அணி -   அழகு.
யா என்பது  ஆயா என்பதன் முதற்குறை.  இந்தப் புனைசொல்லை ஒரு பெண்ணுக்குப் பெயராய் இட்டால்,  அதற்குப் பொருள் ஊருக்குள் இல்லாத அல்லது காணமுடியாத பேரழகி என்று பொருள் கூறவேண்டும்.  எப்படிச் சொல்லை சுருக்கி எழுத்துக்களை வெட்டி வீசினாலும்  இலா (  இல்லாத ); அணி = அழகு என்பவற்றை மறைத்தல் இயலாது.

இதேபாணியில் அமைந்த இன்னொரு சொல் இலாபம் என்பது.  இலா -  முன் இல்லாத அல்லது கிட்டாத;  பம் -   பயன்.  பயன் என்ற சொல் பயம் என்றும் வரும்.   அன்  ஈற்றுச்சொற்கள் அம் ஈற்றிலும் வரும்.  அறம் அறன்;  பயம் - பயன்.  இவை பல வுள.    முன் கிடைக்காத பயன் இப்போது கிட்டினால் அல்லது முன் இல்லாத பயன் இப்போது வந்தால் அதுவன்றோ லாபம்.  இங்கு பயம் என்பதில் யகரத்தை வீசிவிட்டு,  இலா+பம் =  இலாபம் என்று புனைந்தனர்.

கட்டியாக இல்லாமல் இளகிய நிலையில் குழைக்கப்படும் மருந்து லேகியம்.
இளகு > இளகியம் > லேகியம் ஆனது,  லேகியம் என்பது இரசியாவிலிருந்து வந்த சொல் என்று எண்ணுவோன் ஆய்வுமூளை சற்று குறைந்தவன்.

மதுவை அருந்தியபின் மனிதன் சற்று இளகிய, திடம் கரைந்துவிட்ட நிலையை அடைவதுண்டு.  இதைத் தரும் மது   உண்மையில் இளகி இருக்கச் செய்வது ஆகும்.  இளகு+ இரி=  இளகிரி >  இளாகிரி > லாகிரி ஆனது.

இரு என்பது இரி என்று வருவது மலையாள வழக்கு.
லகர ளகர வேறுபாடு சில சொற்களில் கடைப்பிடிக்கப்படா.  இலக்கண நூல் காண்க.  எடுத்துக்காட்டு:  செதில்  -   செதிள்.
இளகு என்பதே இலகு என்றும் லகு என்றும் திரியும்.
இவை மொழிகளில் காணப்படும் திரிபுகளும் மாற்றங்களும்தாம்.

அறிந்து ஆனந்தம் காண்க.


ஞாயிறு, 10 ஜூன், 2018

சேனை என்னும் சொல்.

சேனை என்ற சொல்லுக்கு அடிச்சொல்  சேர்தல்,  கூடுதல் என்பதே என்பதை ஆய்ந்தறிவோம்.

சேனை என்பது பலர் சேர்ந்த கூட்டம் என்பது முன்னர்ப்  பொருளாகும்,  அல்லது பிற பொருளிற் பல எண்ணிக்கை என்றும் கொள்ளலாம்,

"இந்த ஊருக்குக் குடிபெயர்ந்து வந்து சேனை நாட்கள் ஆகிவிட்டன."  இந்த வாக்கியத்தை வாசித்தால் சேனை என்பது பல என்று பொருள்படுதல் தெரியும்.  இது பேச்சு வழக்கில் உள்ள சொல். இன்று மறக்கப்பட்டு வருதல் அறியலாம்.

சந்தையையும் சிலர் சேனை என்பதுண்டு என்று அறிகிறோம்.  "சேனைக்குப் போய் வந்தாள்"  என்பது காண்க.

 சேனை என்பது உறவினர் நட்பினரையும் குறிக்கும்.  "  அந்தத் திருமணத்துக்கு அவர் தம் சேனையுடன் போயிருக்கிறார்"  என்பது இப்பொருளது ஆகும்.

இப்பொருளில் இது கம்பராமாயணத்திலும் வந்துள்ளது.   ( கம்ப. தைலமா.8)

பிங்கலந்தையில் இது தெரு என்று பொருள் தெரிக்கப்படுகின்றது.

சேனை என்பது படையையும் ஆயுதத்தையும் குறிக்கும்.

இருபது கவளி வெற்றிலைக்கு ஒரு சேனை என்பதுமுண்டாம்.

சேனை என்பது நண்பர்கள் என்றும் பொருள்படுதலால்  "கூடாச்சேனை"  என்பது கூடாநட்பு என்றும் பொருள்படும்.

சேனை என்ற சொல் தமிழிலக்கியத்தில் இடம்பெற்ற சொல்லே ஆகும். இதன் அடிச்சொல் சேர்தல் என்பதே.  இது பலர் என்றும் சேர்க்கப்பட்டவர்கள் என்றும் நன்  கு பொருள்தருவது ஆகும்.

சேர் >  சே+ன் + ஐ என்று அமைந்துள்ளது.  ரகர ஒற்று வீழ்ந்து சே ஆனது. பின்  -0னகர ஒற்று இடைநிலையாய் நின்று ஐகாரம் என்னும் தொழிற்பெயர் விகுதி பெற்றது.

இதைப் பானை என்ற சொல்லுடன் ஒப்பு நோக்குக.  பா என்பது விரிவு குறிக்கும் சொல். வாய் விரிந்த வனை ஏனத்துக்குப் பானை என்று சொல்கிறோம்.  விரித்துப்போடும் ஓலைப் பின்னலுக்குப் பாய் என் கிறோம்,
படுக்கைவாட்டத்தில் உள்ளதைப் பட்டை என் கிறோம். ப> படு > பட்டை.
பலகை என்பது விரிந்து சப்பட்டையாக உள்ள மரத்தின் அறுத்த பகுதி.
அதாவது ப > பா என்ற வரிசையில் இப்படி பரந்து விரிவுடைய பல பொருள்களின் பெயர்கள் வருகின்றன.  பார்த்தல் (see ) என்ற வினை,  பொதுவாக கண்ணால் புலப்படுத்திக்கொள்வது.  நோக்குதல்   (look  ) என்பது குறுக்கமாக ஒன்றைக் கட்புலப்படுத்திக்கொள்வது ஆகும்.   பா> பார் என்பதையும் பார் என்று பொருள்படும் விரிந்த உலகையும் சிந்திக்கவும்.

பா> பானை;   சே> சேனை.  இரண்டிலும் இடைநிலை 0னகர ஒற்று ஆகும்.

சேர் என்பது ரகர ஒற்று இழத்தலை சே  >  சேமி என்பதில் அறிக.1


எனவே பலர் என்றும்  கூடுதலென்றும் சேர்க்கப்படுதல் என்றும் பொருள்படும் சேனை  என்பதன் சொற்பிறப்பு அறிந்து மகிழ்வீராக.

அடிக்குறிப்பு:

1  சேகரன் :  அடிச்சொல்:  சேர் > சே.  சேர் + கரன்  =  சேகரன்.  பொருள்:  நிலவைச் சேர்த்துவைத்திருப்பவன்.  சே என்பது சிவப்பு என்றும் பொருளாம்.  சிவந்தான் ,  சிவன்.  இருபிறப்பிச் சொல்.    சேர்  + கு + அரன் =  சேகரன் எனினுமாம். ரகர ஒற்று  வீழ்ச்சியும் கு இடைநிலையும் காண்க .

2  சேர் + நர்  = சேர்நர் >    சேர்நை>  சேனை .  This accounts for the appearance of the intermediate ந் ( ன் ) resulting in  னை .    








மோடியைக் கொல்லத் திட்டம்,

மோடியைக் கொல்லவோர் திட்டமாம் --- ஓர்
மூலை நகரத்தில் கொட்டமாம்!
ஓடியும்  ஓடி உழைக்கிறார் --- இந்தியா
ஒட்டுக்கும் பல்லோர் பிழைக்கிறார்.

பல்லோர் பிழைக்க நலம்நண்ணும் ---இந்தப்
பாரிலூ ழல்கெடப்  பலம்பண்ணும்,
நல்லோனாம் மோடியைக் கொல்வதோ?---இது
நல்லோர்தம் நெஞ்சமும் சொல்வதோ?

செய்தநன் மைகளை மாய்ப்பதா?  --- பாரில்
சீரில் இடுக்கண்கள் சேர்ப்பதா,
உய்தநற் பாரதம் தேய்வதா ---  நலம்
ஓங்கிய பின்பின்னே போவதா?


https://www.google.com/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=1&cad=rja&uact=8&ved=0ahUKEwj69N66hMnbAhVHVrwKHd0uCYIQqUMILjAA&url=https%3A%2F%2Ftimesofindia.indiatimes.com%2Findia%2Fanother-rajiv-gandhi-type-incident-maoist-letter-exposes-plan-to-kill-pm-modi%2Farticleshow%2F64505905.cms&usg=AOvVaw3gUXuR_hQo4_JkxlDWg8z8 

வெள்ளி, 8 ஜூன், 2018

இல் மற்றும் அல் என்னும் சொற்கள்.

இன்று இரு சிறு சொற்களை ஆய்ந்து அவை எப்படி மாற்றமடைந்து புதிய பொருண்மை பெற்றன என்பதைத் தெரிந்துகொள்வோம்.

இல் என்பது ஓர் அடிச்சொல். இதற்குப் பொருள் பலவாகும்,  இல் என்றால் வீடு என்றொரு பொருள் இருக்கின்றது.  இது அம் விகுதி பெற்று இல்லம் என்று வடிவு கொள்ளும். இல்லம் என்பதும் வழக்கில் குடியிருக்கும் வீட்டையும் குறிக்கும்.  முதியோர் இல்லம், அனாதை இல்லம் என்று சற்று வேறுபட்ட இல்லங்களையும் குறிக்கும் என்றாலும்,  அவையும் மக்கள் தங்கும் இடங்களே  ஆகும்.

இல் என்பது இவற்றினின்று வேறுபட்ட பொருளையும் குறிக்கும்.  அது என்னவென்பது உங்களுக்குத் தெரியும்.  அது இல்லை என்ற பொருள்.   ஒன்றை இல்லை என்பதானால் அப்பொருளின் பெயரைச் சொல்லித்தான் அதை இல்லை என்று சொல்லவேண்டும்.  வெறுமனே இல்லை இல்லை என்றால் எது இல்லை,  என்ன இல்லை என்ற கேள்விகள் எழுகின்றன.  ஆகவே பேய் இல்லை, பிசாசு இல்லை என்று சொன்னால் நீங்கள் சொல்வது என்ன என்பதைப் பிறர் புரிந்துகொள்ள முடிகிறது.

பிசாசு என்ற சொல்லை எப்படி உருவாக்கி உலவ விட்டனர் நம் முன்னோர் என்பதை இங்குக் காணலாம்:

http://sivamaalaa.blogspot.com/2018/01/blog-post_20.html

பேய் என்ற சொல் பே பே என்றும் உளறும் அச்சக்குறிப்பு ஒலியினின்று அமைந்தது என்று தமிழறிஞர் பிறர் கூறியுள்ளனர்.  அது சரியாகவே தெரிகிறது.

இன்று இல்லை என்ற சொல் ஒரே முற்றுச்சொல்லாக வழங்குகிறது. எடுத்துக்காட்டாக:

அது இல்லை;
அவள் இல்லை;
அவன் இல்லை;
அவர்கள் இல்லை;
அவர் இல்லை;
கந்தன் இல்லை

என்று எல்லாவற்றுக்கும் பொருந்திவருகிறது.  பழந்தமிழில்  அது இலது;
அவள் இலள்; அவன் இலன்; அவர் இலர்; அவர்கள் இலர்; கந்தன் இலன் என்று பல முற்றுக்கள் வழக்கில் இருந்தன.  தமிழ் மொழியானது இப்போது மிக்க எளிமை அடைந்துள்ளது.  வேறு சில இறந்த மொழிகளில் இக்கடுமை இன்னும் தொடர்கிறது.

ஒன்று இல்லாமற் போவதானால் அது முடிவை எட்டியபின்புதான் இல்லாதது ஆகும்.  கஞ்சி இல்லை என்றால் கஞ்சி அளவில் தன் இறுதியை அடைந்து விட்டது என்று பொருள். இறுதி என்பது முடிவு.  இறு + தி = இறுதி.  இந்த இறு என்பது முடி ( முடிதல் ) என்ற பொருள் உடைய சொல்.  தன் முடிவுநிலை எய்தி இல்லாமல் போய்விட்டதைக் குறிக்கிறது.

சொல்வளர்ச்சியில் இல் என்பதிலிருந்து இறு என்ற சொல் வந்துள்ளது.

இருக்கும் ஒரு பொருள் இல்லாமலாவதென்றால் இது இற்றது;  அல்லது இறுதி அடைந்தது என்பது நாம் அறிதற்குரியதாகும்.

பாட்டி பழைய சட்டியை எடுத்துவைத்துக்கொண்டு பேசுகையில் சட்டியில் தூர் இற்றுப்போய் விட்டது என்று சொன்னால்  இறு > இற்று ( வினை எச்சம்)  என்பதை உணரவேண்டும்.  பாட்டியிடம் தமிழைப் படித்துக்கொள்ள வேண்டியது கடனே.

" இற்ற மூவசைச்சீர்"  என்று இலக்கணப்பாவில் வந்தால் " அவ்வண்ணம் முடிந்த மூவசைச்சீர்"  என்று பொருள்.

இல் என்பதிலிருந்து இறு என்ற சொல் வளர்ந்து தோன்றிற்று.

இல் > இறு.

இதில் சொல் வளர்ச்சியும் கருத்து வளர்ச்சியும்  அறிந்து மகிழலாம்,.

இறு என்பது முதனிலை திரிந்து அதாவது இங்கு நீண்டு ஈறு என்றானது.
ஈறு எனினும் இறுதியாகும்.  ஈற்றசை:  கடைசி அசை.

இல் இறு என்பன சுட்டடிச் சொற்கள். இதனை பின்னொருகால் விளக்குவாம்.
( விளக்குவோம் என்பதை விளக்குவாம் என்றும் சொல்வோம்.  ஆம் ஓம் என்பன விகுதிகள்).

விளக்குவாம் என்று எழுதினால் தெரியாதவன் எழுத்துப்பிழை என்று எண்ணக்கூடும்.

இனி,  அல் என்பதும்  இல் போன்றே வடிவுகொள்ளும் சொல்லாகும்.

அல் என்பது இல்லை என்னாது மறுப்பது ஆகும்.   அது அல்ல நான் சொன்னது என்று இன்று புலவர் சொல்லலாம்.  ஒருவாறு இதுவும் ஒத்துக்கொள்ளப்படுகிறது.  பழந்தமிழில் அது அன்று என்றுதான் சொல்லவேண்டும்.

அது அன்று; அவன் அல்லன்; அவள் அல்லள்; அவர் அல்லர்; நீ அல்லை; ஆய் அலன்; கந்தன் அல்லன்; என்றிவ்வாறு பலவடிவு கொள்ளும்.

 அறவிலை வணிகன் ஆய் அலன்;  இரவலை புரவலை
நீயும் அல்லை என்று வந்தால் எப்படி இருக்கிறது?

பழந்தமிழில்:  நீ ஓர் இரவலன் என்று சொன்னால் தப்பு ஆகிவிடும். 

நீ இரவலை என்றால்தான் சரி.  மறுப்பதாயின் நீ இரவலை அல்லை என்று
சொல்லவேண்டும்.  இந்தக் கடுமை இப்போது இளகிவிட்டது.

அது அன்று என்பது இப்போது சரி. ஆனால் இதிலும் ஒரு குழப்பபடி உள்ளது.
அது என்பதில் து என்ற அஃறிணை விகுதி வருகிறது,  அதே விகுதி அன்று என்பதிலும் மீண்டும் வருகிறது:  அல்+து = அன்று.  ஏன் இருமுறை இந்த அஃறிணை விகுதி வரவேண்டும்?   ஓர் அஃறிணைப் பொருளைப் பற்றித்தான் பேசினேன் என்று கேட்பவனுக்குத் தெரியாதா என்ன?  உலகில் உள்ள புது மொழிகளில் இத்தகைய ஏற்பாடு இல்லை.  விகுதிகளை அம்மொழிகள் முற்றிலும் அகற்றிவிட்டன அல்லது விகுதிகள் வளர்ச்சி பெறவில்லை,

எடுத்துக்காட்டாக:  நீங்கள் அறிந்த மலாய் மொழியில்  டியா டாத்தாங்க் என்பதில் டியாவிலும் விகுதி இல்லை;  டாத்தாங்கிலும் விகுதி இல்லை.
சீன மொழி பண்டைக்காலமுதலே சொற்களை நீட்டவில்லை.

அது அன்று என்பது  அது அல் என்றே இருந்திருந்தால் இந்தக் குழப்பம் இராது. ஆனால் அல் என்பது ஒரு முற்றுச்சொல்லாகத் தமிழில் வருவதில்லை. இது மொழிமரபு ஆகும்.

நம் மொழியே சிறந்தது என்று நாம் சொன்னாலும் வேறுமொழியும் வேறு காரணங்களுக்காக உயர்ந்தே நிற்கிறது.  யாவும் வாழ்க.

அது வந்தது என்பதில் வந்தது என்று ஏன் சொல்லமைகிறது.  அதில் மீண்டும் அது ஏன் வரவேண்டும்.   வந்து+அது!   இதைப் பவணந்தியார் நன்னூல் வேறுவகையாகக் காட்டும்.   த் என்பது இறந்தகால இடைநிலை என்னும்.

அது வன்னு என்ற மலையாளத்தில் மீண்டும் அது வரக் காணோம்.

சில மொழிகள் அ  வா என்று சுருக்கமாக முடித்துவிடும்.

எல்லாம் நல்லதுதான்.

அல் என்பதிலிருந்து அறு என்று சொல்லமைந்தது.  அல்> அறு.  இது இல்> இறு போன்றதே.  அல் >  அறு > அற்ற > அற்றது.  அறு என்பது அன்மையுடன் அறுத்தலையும் உணர்த்தும்.  ஒன்றை அறுக்கும் போது அது ஒன்றாக இருந்த நிலை மாறி அறுபட்டு இரண்டாகிவிடும்.  அது அப்புறம் ஒன்று அன்று; இரண்டு ஆம். ஒன்று அற்றது.

இச்சொற்களின் வடிவங்கள் பற்றிய உரையாடலை இத்துடன் நிறுத்தி நாம் மீண்டும் சந்திப்போம்.

அனைத்து மொழிகளும் வாழ்க வாழ்க.
 

வியாழன், 7 ஜூன், 2018

சுடர்தரும் திரம்ப் கிம் மாநாடு.சிங்கையில்

அமைதிக்  கனாக்காண  ஆர்நகரம் சிங்கை;
சுமையாய்  உலகுறுத்தும் குண்டை=== தமைக்கண்ட
மாத்திரத்தில் மாற்றம் நினைக்காமல் பாத்திரத்தில்
கீழ்த்தளத்தில் ஓட்டையோ வீசுதல்போல்  ===நேர்த்திறமாய்
கிம்மை எதிர்கொண்ட கேடில்லா மாநாட்டில்
நம்முன் உலகின்முன் நன்மனத்தால் ==== செம்மையாய்த்
தூக்கி  எறிந்திடுவார்  தொல்லை களைந்திடுவார்
நாக்கில் செழுந்தேனர் நம்திரம்பும் ----நோக்குங்கால்
வெற்றியே கொள்வாரே வீரமாய் நின்றிடுவார்
சுற்றுலகில் எல்லாம் சுடர்.


இதன் பொருள் :

அமைதிக் கனா  காண  ---   சமாதானக் கனவு மேற்கொள்ள;
ஆர்  நகரம் --- நிறைவான நகரம்;   சிங்கை ---  சிங்கப்பூர் ஆகும்;

சுமையாய் -- -    ஒரு தலையின்பாரமாக;
உலகுறுத்தும் --  உலகத்தை உறுத்திக்கொண்டுள்ள;
குண்டை --- (  உலகை அழிக்கும் )  வெடிகளை;


தமைக்கண்ட மாத்திரத்தில் மாற்றம் நினைக்காமல் --
கிம் என்பவர்    டிரம்ப் தம்மைக் கண்டபொழுது  தம்
எண்ணத்தை மாற்றிக்கொள்ளாமல்;


பாத்திரத்தில் கீழ்த்தளத்தில் ஓட்டையோ வீசுதல்போல்--
ஓர் ஏனத்தில் அடியில் ஓட்டையானால் வீசுவதைப்போல;

தூக்கி எறிந்திடுவார் ---   வைத்துக்கொள்ளாமல் அப்புறப்
படுத்திவிடுவார்;

தொல்லை களைந்திடுவார் -  உலகிற்கு அதை
வைத்திருப்பதனால் வரும் தொல்லையைக் களைந்து
விடுவார்;

நேர்த்திறமாய் -   நேர்முகமாய்;

கிம்மை எதிர்கொண்ட - வடகொரியத் தலைவர் கிம்மைச்
சந்தித்த

கேடில்லா மாநாட்டில் --  கோளாறு இல்லாத கூட்டத்தில்;

நாக்கில் செழுந்தேனர்  திரம்பும்  --  இனிப்பாகப் பேசும்
ஆற்றல் வாய்ந்த அதிபர் டிரம்பும்;

நோக்குங்கால் --  நாம் கணக்கிடும் இவ்வேளையில்;

நம்முன் -  மக்களாகிய நம் முன்பாகவும்;

உலகின்முன் --  உலக  நாடுகளின்முன்னும்;

நன்மனத்தால் -  உலக அமைதி நாடும் நல்ல உள்ளத்தினால்;

வெற்றியே கொள்வார்  --  வெல்லும் தரமே அடைவார்;

வீரமாய் நின்றிடுவார்  -  பேச்சில் பின்வாங்குதல் செய்யார்;

சுற்றுலகில் --  நம்மைச் சுற்றியுள்ள இவ்வுலகில்;

எல்லாம் சுடர் --  அனைத்தும் ஒளியாகவே நிறைவாகும்.


பிற்குறிப்பு:  13 சூன் மாதம்:

நம் கவிக்கனவு போலவே திரம்பும் கிம்மும் இணக்கமான முறையில் அணுவாயுதக் களைவுக்கு ஒப்பிய நிலையில் மாநாடு முற்றுப்பெற்றது
உலகுக்குக்கும் மகிழ்ச்சி.  சிங்கைக்கும் மகிழ்ச்சி. இருதலைவர்களுக்கும் நம் பாராட்டுக்கள் உரித்தாகுக. வையகம் வாழ்க.






ஆத்தா - மாதா ஓர் ஒப்பாய்வு.

இங்கு முதலில் ஆத்தா என்ற சொல்லை ஆய்ந்துகாணுவோம்:

தமிழில் "ஆய்"  என்ற ஈரெழுத்துச் சொல்  அம்மாவைக் குறிக்கும்  இது சிற்றூர்ப் புறங்களில்   "ஆயி"  என்று நீண்டொலிக்கும்.  இதன் நீட்சி ஆய் என்பதனுடன் இறுதியில் ஓர் இகரச் சாரியை வந்து சேர்வதால் ஆவது. யகர  ஒற்று இல்லாமல் ஆ என்று மட்டும் வந்தால் அது பாலம்மையைக் குறிப்பது என்பது நீங்கள் அறிந்ததே.

தாய் என்ற ஈரெழுத்துச் சொல்லும் அம்மாவைக் குறிப்பதே ஆகும். இதுவும் சிற்றூர்ப் பக்கங்களில் "தாயி" என்று நீண்டொலிப்பதே.  இகரச் சாரியை பெற்றது.  இது யகர ஒற்று இன்றித் தமிழில் தனிச்சொல்லாய் அமைவதில்லை.  எனினும் இணைச்சொற்களில் இறுதியில் நின்று "  அம்மா" என்று பொருள்படுவதாகும்.  எப்படி என்பதைப்  பின்னொருநாள் காண்போம்.

ஆய் என்ற சொல்,  தாய் என்பதனுடன் இணைந்து,  ஆய்தாய் அல்லது ஆய்த்தாய்  ஆகும்.  இதுபின் தன் யகர ஒற்றுக்களை இழந்து,  ஆத்தா என்று வரும்.  இருமுறை அம்மை என்று பொருள்தரும் சொல் அடுக்கிவந்தமையானது  தமிழர்களிடைத் தாய்க்கு மிகுந்த பணிவன்பைக் குறிக்கவருவது ஆகும்.

இப்படி யகர ஒற்றுக்கள் மறைந்து திரிந்து சொற்கள் அமைவது தமிழில் உண்டா என்று கேட்கலாம்.  கேட்பவர்  முதன்முறையாக இதை எதிர்கொள்பவராயின் அவர் நம் முன்இடுகைகளை நன் கு  கவனிக்கவேண்டும்.  இதன்மூலம் தமிழில் இஃது பெருவழக்கு என்பதை
உணரலாகும்.  சொல்லி முடித்தவற்றையே மீண்டும் குறிப்பிடுதல் நலமன்று எனினும் சில எடுத்துக்காட்டுகள்  இங்கு தரப்படுகின்றன:

வாய்ப்பாடம் சொல்லிக்கொடுப்பவர்:

வாய் + தி =  வாய்த்தி >  வாத்தியார் ( இது பணிவுப் பன்மை ஆர் விகுதி)

உப அத்தியாயி என்ற சொற்புணர்வில் தோன்றிய உபாத்தி ( உபாத்தியாய) என்ற சொல் வேறு.)  முன் இடுகைகள் காண்க.

இன்னொரு சொல்: 

வாய் + தி =   வாய்ந்தி  > வாந்தி.

தின்றது வாய்வழித் திரும்பி வருவது.  கக்கல்.

பூந்தி என்ற சொல் பூ + தி என்று புணர்ந்து  மெலிந்தது  ஆகும்.  யகர ஒற்று இல்லாததெனினும் வாந்தி என்பதனுடன் எதுகைபோல் அமைந்தது. (பூவைப்போல் பொரிந்து வருவது )

மற்றுமொன்று:

வேய்ந்தன் >  வேந்தன்.   முடி வேய்ந்துகொண்டவன்.

ஆனால் வேயி என்ற பெண்பால் சொல் பல அணிகளும் உடையும்  வேய்ந்து கொண்டு அழகு காட்டுபவள் என்றாலும்  அதில் யகர ஒற்று மறைதற்கு வழியில்லை. பின் அது வேசி என்று திரிந்தது.  யி>சி திரிபு.  வழக்கம்போல.

இவை எல்லாம் ஆய்த்தாய் என்பது ஆத்தா   என்பதில் யகர ஒற்று வீழ்ந்ததை
உறுதிப்படுத்தும்.  ஆத்தா என்பது பாட்டியையும் குறிக்க வழங்கக் கூடும்.

இனி மாதா என்ற சொல்லும் இப்படியே அமைந்துள்ளதை அறிந்து மகிழலாம்.

மா என்பது அம்மா என்பதன் இறுதி எழுத்து.

தா என்பது தாய் என்பதன் முதலெழுத்து.

இரண்டையும் சேர்க்க, மா+தா =  மாதா ஆயிற்று.

இரண்டடுக்கி வந்து பணிவுமிகுதல் குறித்தது.

ஆத்தா என்பது இறுதி  எழுத்துக்களை நீக்கி உருவாக, மாதா என்பது சொற்களின் இறுதி-முதலெழுத்துக்களை இணைத்து அமைந்துள்ளது. அதாவது மாதாவில் அம்மும் யகர ஒற்றும் முறையே வீழ்ந்தன.

புதுச்சொற்களைப்  படைக்கக் கையாண்ட உத்திகளை அறிந்து மகிழுங்கள்.

மறுபார்வையில் பிழைகள் இருப்பின் திருத்தம்பெறும்.



புதன், 6 ஜூன், 2018

பணம்பெற்று நடந்த ஆர்ப்பட்டம்

ஓரிடத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த தொன்று:
போராட்டம் ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம்  என்றார்:

ஆக்கியதோ  ஓஓஓ ஆஆஆ என் கின்ற  ஒலிகள்
ஊக்கமுடன் அனைவருமே ஒன்றெனவே நின்றார்.

பார்க்கின்ற  பொழுதினிலே பகலோனின் ஒளிபோல்
வேர்க்கடியில் பணம்பெற்று விளைத்ததென்று கண்டார்.

வீட்டுக்குப் போவென்று வெள்ளையப்பன் தன்னைப்
பாட்டுக்குத் தந்தார்ஆர்ப் பாட்டத்தை வென்றார்.


பணம் பெற்றுக்கொண்டு நடத்திய ஆர்ப்பாட்டம்;
பணம் பெற்றுக்கொண்டே கலைந்தது, 
அதுதான் மக்களாண்மை!


(மக்களாண்மை -  ஜனநாயகம்.)

திங்கள், 4 ஜூன், 2018

பால் ஊற்றிப் போராட்டம்.

உண்பதற் குரியவை  பால்காய் கறிகள்
ஊற்றியும் வீசியும்  வீண்செய லாமோ?
பண்படும் அறிவினர் கண்கெடப் பலரும்
பார்த்திடச் செய்தனர் பாழ்படு செயலே.

கட்சி  காரர்கள்  உச்சியின் அடியில்
கருத்துகள் நல்லன உருத்துவ ராதோ?
இச்சைப் படுவன எதனையும் இயற்றி
இறக்கம் கண்டிடக் கிடைக்குமப்  பலனே.


உச்சி :  மண்டை உச்சி.
அடியில்: உச்சியின் அடி:  மூளைப்பகுதி.
உருத்து =  தோன்றி

பொறாமை வண்டு,

அடுத்தகத்துக்  குடியிருக்கும் மாந்த குமாரி
அழகியஎம் மலர்களையே தொட்டாய் கேட்டுக்
கொடுத்ததுபோல் தடவிவிடும் பாங்கு கண்டு
குமுறுதெங்கள் மென்மனங்கள்  கொத்து வேன்நான்!

என்றபடி என்னருகில வந்த வண்டே
என் கையில் கொட்டியதே!  புண்ணு மாச்சே.
இன்றதுவும் பெரியபுண்ணாய் என் தே கத்தில்
இருக்கிறதெ...வலிகொஞ்சம் இ ருக்கு தம்மா.

மலருக்கு மலர்தாவும் சிறிய வண்டே
மனிதர்வந்து மலர்தொடவும்  மறுப்ப தென்னே?
சிலமனிதர்க் கிருக்குமொரு குறுக்குப் புத்தி
சேராத உனக்கிருத்தல் தேரச் செல்வாய்.


அடிக்குறிப்புகள்:

மாந்த குமாரி   =  மனித குமாரி.
சேராத =  மனித இனத்திற் சேராத.

சொல்லாய்வுக் குறிப்புகள்:

தேகம் :  தேய் >  தேய் + கு+ அம் = தேய்கம்
தேய்கம் > தேகம்.    தேய்தல் அல்லது அழிதலை
உடையதாகிய உடல். இது காரணப் பெயர்.

மன் > மன்+தன் = மாந்தன்:  இங்கு முதனிலை
நீண்டு சொல் அமைந்தது.  தன்: து+அன்.
மன்+ இது+ அன் = மனிதன்.
இதில் முதனிலை நீளவில்லை.  இது என்ற
முழுச் சுட்டுச் சொல்லும் இடைநிலையாகப்
பயன்பட்டுள்ளது.   மன் என்பது அடிச்சொல்.