சனி, 12 அக்டோபர், 2024

சலசல ஒலியெழுப்பிய மரம் அடர்ந்த காடு. (அ.மா.மணிப்பிள்ளை)

 ஏறத்தாழ எனக்கு 23 அகவையாய் இருக்கும்போது, எனக்கு வயிற்றில் ஒரு வலி ஏற்பட்டு,  அது குடல்வால் நோய் என்று அறியப்பட்டு, அறுவை சிகிச்சை  நடந்தது. முடிந்த பின்,  என் காவல்துறை பயிற்சியாளர்கள் இல்லத்திற்குத் திரும்பினேன்.  அந்த இல்லத்தில் அன்றிரவு யாரும் இல்லை.  நான் ஒருவனே இருந்தேன். ஏறத்தாழ எட்டரை மணி இரவில், அந்த இல்லத்தின் பின்புறமிருந்து மிகக் கடுமையான சலசல ஒலி கேட்டது.  இது ஏதோ நீர்வீழ்ச்சியின் ஒலிபோல இருந்தது   தொடராகக் கேட்டுக்கொண்டிருந்தது.

அப்போது அறுவைக் காயங்களின் கட்டு இன்னும் அவிழ்க்கப்படவில்லை.  என்ன இவ்வளவு சத்தம் என்று கவலை கொண்டு, ஏதோ தண்ணீர்க் குழாய்கள் உடைந்துவிட்டனவா என்று அறிய மெதுவாக நடந்து பின்னே இருந்த நிலப்பகுதிக்குச் சென்றேன்.  அது ஒரு மரம்  அடர்ந்த காடு.  

பின்னால் சென்ற பின் கடுமையான ஒலி இன்னும் அதிகமானது.  அங்கிருந்த மரங்களிடை நடந்து மெதுவாகப் போய்,  நின்றுவிட்டேன். உயரமான மரங்கள். ஒலியின் சலசலப்பு நிற்கவில்லை.  கொஞ்சம் நேரம் ஆனவுடன் அந்த ஒலி நின்றுவிட்டது. 

ஒரே இருட்டான இடம் ஆதலால் அங்கிருந்து மெதுவாக வந்துவிட்டேன். நான் என் இல்லத்து அறைக்கு வந்து சேர்ந்ததும் மீண்டும் முன் போல ஒலிக்கத் தொடங்கிவிட்டது.

பின்னர் சுமார் பத்துமணி இருக்கும்  இரவு.  உடன் வேலைசெய்யும் ஒரு பயிற்சியாளர் திரும்பிவந்திருந்தார்.  அவரிடம் சொல்லி, இருவரும் போய்ப் பார்க்கலாம் என்று கேட்டுக்கொண்டேன். அவர் இது பேய் உள்ள காட்டுப்பக்கம்,  நீ போய் படுத்துத் தூங்கு,  அடித்துவிடும் என்றார்.  அப்புறம் நான் உறங்கிவிட்டேன்.

மறுநாட் காலையில் அங்கு ஏதும் நடைபெறவில்லை.  விசாரித்தபோது,  முஸ்லீம்களின் நோன்புக்  காலத்தில் இரவில் பேய் இருக்கும் என்றனர்.  வினோத ஒலிகள் கேட்கும் என்று சொன்னார்கள்.அங்கு யப்பானிய காலத்துப் புதை குழிகளும் இருந்தன என்றனர்.

பேய் பிசாசு பற்றி அறிந்தவர்கள் இது என்னவாயிருக்கும் என்று உங்கள் கருத்துகளைத் தெரிவிக்கப் பின்னூட்டம் இடுங்கள்.

இந்தக் காட்டில் ஒலி எழுப்பக்கூடிய எதுவும் இருக்கவில்லை.

மெய்ப்பு பின்னர்.

கருத்துகள் இல்லை: