புதன், 25 மே, 2022

காட்டம் - சொல்லின் வினை எது?

அவர் காட்டமாகப் பேசினதால் சுற்றி  இருந்தவர்கள்  ஆடிப்போய்விட்டார்கள்  என்று பேச்சுவழக்கில் வருவது காண்கிறோம்.  சுற்றியிருந்தவர்கள் ஆடிப்போனதால் பேசியவர் மந்திரிபோன்றவராக இருந்திருக்க வேண்டும்.  இதைப் பற்றிக்  கவலைப்படாதீர்கள். காட்டம் என்ற சொல்லைத்தான் நாம் எடுத்துக்கொண்டுள்ளோம்.

நீங்கள் நினைப்பதென்ன?  காட்டம் என்பது  காட்டுவிலங்கு என்பதில் உள்ள காடு என்ற சொல்லோடு தொடர்புடையது என்பதா?  அதை உங்களுடன் யாமும் இணைந்து இப்போது ஆய்வு செய்ய  முனைவோமாக. 

கடுமை என்ற சொல்லே காட்டம் என்பதனுடன் உறவுகூறப் பொருத்தமான சொல். கடுத்தல் என்ற வினையும் இச்சொல்லுக்குப்  பொருட்பகிர்வு உடையதேயாகும். 

கஷ்டம் என்ற சொல்  அன்றாட வழக்கிலுள்ள தென்றாலும்,  காஷ்டம் என்பதை அண்மையில் கேள்விப்பட்டு ஆனந்திக்க இயலவில்லை.

காட்டம் என்பதற்குரிய பொருளாவன:

விறகு;

நாவிற்கு அல்லது மோந்துபார்க்க ( முகர்தல்) ,  கடுமையானதாய் இருத்தல்

வெண்கலப் பொருள்

கோபம். மிகுதி.

இவையே அறியப்பட்டுள்ளன.


விறகு என்பது கடிய பொருள்.  வெண்கலமும் கடியது.   கோபம் ஒன்றே மனவுணர்ச்சியைக் குறிப்பது  இந்தப் பொருளில் இது வழக்குவிரிவான சொல்.

காஷ்டம் என்ற சொல்லும் விறகுகட்டையைக் குறிக்க உதவும்.


கடு அடிச்சொல்.

கடு+ அம் - காட்டம் ( முதனிலை நீண்டு திரிபுறுதல் ).


இதுபோல் திரிந்த இன்னொரு சொல் தோட்டம் என்பது.

தொடு(தல்) வினைச்சொல்.

தொடுதல்:  பொருள்  தோண்டுதல்.  ( தொட்டனைத் தூறும் மணற்கேணி , குறள்.  தோண்டியவுடன் நீர் ஊறும்.....)

தொடு + அம் >  தோட்டம்.   ஒருவன் தோண்டி நட்ட செடிகொடிகள் மரம் உள்ள நிலம்).

ஆகவே ஒப்பாய்வில் புரிந்துகொள்ளுங்கள்.

காட்டம் என்பதற்குரிய வினைச்சொல் என்ன என்பது இப்போது நேரடியாகச் சொல்லாமலே புரிந்திருக்கும்.

அறிக மகிழ.

மெய்ப்பு பின்.


--------

இவற்றை ஆய்வில் ஈடுபடுத்துங்கள்:

ஆனந்தித்தல்.

தொடர்புடையவை:  பிரம்மானந்தம்:  https://sivamaalaa.blogspot.com/2015/05/blog-post_10.html

ஆனந்தம்:  https://sivamaalaa.blogspot.com/2019/05/blog-post_10.html

விகாரம் https://sivamaalaa.blogspot.com/2018/10/blog-post_25.html

கருத்துகள் இல்லை: