ஞாயிறு, 8 மே, 2022

கோபமும் சிவப்பு நிறமும் தொடர்புடைய கருத்துகளும்.

 இவை விளக்கி உணர்த்தற்கு எளிதான கருத்துகள்தாம்  என்றாலும் ஒரு சுருக்கமான வரைவாக்கி முன்வைத்தலுக்கே முதலிடம் தருதல் வேண்டும். அதை இங்கு எவ்வாறு நிறைவேற்றலாம் என்று  எண்ணியவாறே தொடங்குகிறோம்.

கோபம் என்பது நல்ல தமிழ்ச்சொல் என்று இலங்கைப் பெரும்புலவர் ஞானப்பிரகாச அடிகளார்  முடிவு செய்தார். இவர் எழுதிய ஒரு நூற்படி  ( 1 copy of his treatise )  நிறைதமிழ்ப் புலவர் மறைமலையடிகளிடம் இருந்ததாகத்  தெரிகிறது. உங்களிடம் அது இருக்குமானால் அந்நூலையும் பார்த்துக்கொள்ளுங்கள்.

கோபம் மிகுதியானால் மனிதனின் முகம்,  கூம்பிவிடும்.  கோபம்  கொண்டமுகம் சிவந்துவிடுதலும் இயற்கையாகும். 

கோம்பு என்பது சினக்குறிப்பும்  ஆகும்.

கூம்பு என்பதும் கோம்பு என்பதும் தமிழில் தொடர்புடைய சொற்கள். இதற்கு மாறாக  கோபமின்மையில் முகமலர்ச்சியைக் கவிஞரும் எழுத்தாளரும் குறிப்பிடுவர்.  மக்களும் அவ்வாறே குறிப்பர்.

கூம்பு(தல்) >  கோம்பு(தல்) >  ......

கோம்புதல் என்றால் சினத்தல். 

கோம்பு + அம் =  கோம்பம் , இவ்வமைப்பு  இடையில் ஓர் மெய்யெழுத்தை இழந்து  கோபம் என்று அமைந்தது,   இது இலக்கணத்தில் இடைக்குறையாகும்.

இன்னோர் இடுகையில் இவ்விடைக்குறைகள் எவ்வாறு தமிழை வளமாக்கி உள்ளன எனற்பால அமைப்பைக் கொஞ்சம் விரிவாகக் கவனிக்கலாம்.

இனி, முதனிலை குறுகிச் சொற்கள் அமைதலும் இங்கு வேறு இடுகைகளில் விளக்கப்பட்டுள்ளது.   கூம்பு(தல்) >  கூம்பு > கூம்பு + அம் > கும்பம்.

இன்னொன்று:  கூடு(தல்) > குடு+ பு  >  குடும்பு + அம் >  குடும்பம்.  இங்கு கூடு என்ற வினை குடு என்று குறுகியவாறு,  பு என்ற இடைநிலையையும் அம் என்ற இறுதியையும் பெற்று  தொழிற்பெயராயிற்று.

விகுதி என்பது சொல்லின் மிகுதி.    மிகுதி > விகுதி. இன்னொரு திரிபு இதுபோன்றது:  மிஞ்சு> விஞ்சு.

சொல்லாற்றலில் இந்தப் பொழிவு செய்தவர் பிறரை விஞ்சிவிட்டார் என்ற வாக்கியத்தினைக் கவனித்துக்கொள்ளவும். 

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்


கருத்துகள் இல்லை: