திங்கள், 7 டிசம்பர், 2020

அதிகாரம் இச்சொல்லின் உள்ளுறைவு.

அதிகாரம் என்றால் என்ன என்பதை உணர்த்தும் வரையறவுகள் சட்டநூல்களிலும் ஆட்சியமைப்பு பற்றிக் கூறும் நுல்களிலும் கிடைக்கும். என்றாலும் நாம் " அதிகாரம்" என்ற சொல்லினமைப்பையும் அது போந்தமைந்த வழியில் கண்டுணரக் கிடக்கும் தெளிவுகளையும் ஆய்ந்து அறிந்து,  அதன் பின் அதிகாரம் என்பது எதைக்குறிக்கும் என்று உணர்ந்துகொள்வோம்..  

பெரும்பாலும் இச்சொல் அதி + காரம் என்று பிரிக்கப்படும்.  அதிகம் என்பதன் பகுதியே அதி என்றும் அது மிகுதிப்பொருள் உணர்த்துமென்றும்  அடுத்துக் காரம் என்பது சொல்லிறுதி என்றும்.  காரமெனின் செயல் என்று பொருள்படுமென்றும் கூறப்படுவதுண்டு. இவ்வாறு கூறின்.  அதிகாரமென்பது ஓர் மிகுசெயல் என்று முடிப்பதே பொருண்மை அறிதிறன் என்னலாம்.

சொல்லில் மூன்று உள்ளுறுப்புகள் இருக்கின்றன என்னலாம். அவை, 1. அகம்,  2. திகை  3.ஆரம் என்பன .

 அகம் என்பது எக்காரியத்திலும் உட்சுற்றில் உள்ள மனிதர்களை (இச் சொல்) குறிக்கிறது. இவ் உட்சுற்றில் ஒரு மனிதரோ ஒருவருக்கு மேற்பட்டவர்களோ இருக்கலாம். அவர்களிடம் ஒன்று திகைவுறுகிறது.   திகைதலாவது தீர்மானப்படுதல்.  இத்தீர்மானத்தின்பின்,   ஆரம் என்பது  அது சூழ இருப்போரிடம் சென்று சேர்கிறது. சூழ இருப்போர்  அதனை ஏற்றுக்கொண்டு நடைபெறுவிக்கின்றனர்.  அதனால் உட்சுற்றில் உள்ளவர்களிடம் நடப்புறுத்தும் திறம் உணரப்படுகிறது.  அத்திறமே " அதிகாரம்"  ஆகிறது. ஆர்தல் - சூழ்தல். பரவுதல்.

அகம் + திகை + ஆரம் =  அகதிகாரம் , இது இடைக்குறைந்து,  அதிகாரம் ஆம்.  அகம் > அக என்பதில் ககரம் இடைக்குறைந்தால்,  மீதமிருப்பது {அ+ திகை} என்பதுடன் ஆரம் சேரத் திகாரம் ஆகும்.   அ + திகாரம் -  அதிகாரம் ஆகும்.  ஒருவன் தீர்மானித்தாலும் ஒன்றுக்கு மேற்பட்டோர் தீர்மானித்தாலும், அது சேர்விடத்தில் நடப்புக்கு வருகிறது.  அதி என்பது உட்சுற்றில் தீர்மானப்படுவது.  எனவே அதி என்பது மிகுதி என்று உணரப்பட்டதில் பெரிய தவறில்லை.

அறிக மகிழ்க.

குறிப்புகள்

அகரம் ( அ ) என்பதும் ஒரு சுட்டடிச்சொல் தான்.

ஆயின் அகம் என்ற சொல் முன் இடுகையில்

விளக்கம்பெற்றுள்ளது. (  அ+கு+ அம்).

 இவற்றுள் அ என்பதை மட்டும் வைத்துக்கொண்டு

திகைதல் என்பதன் தி (முதலெழுத்தை) மட்டும் அதனுடன்

பொருத்தினால்,   அதி என்ற "காரண இடுகுறி" கிட்டிவிடும்.

அகத்துத் திகைந்தது என்னும் தொடருக்கு அதி என்பது

முதற்குறிப்பு ஆகிவிடுகிறது.

அதிகாரம் என்பது முன் பலவாறு விளக்கப்பட்டுள்ளது.

அவற்றுள் இவண் கூறப்பட்டது சரியானது.

அகத்து -   அரண்மனைக்குள்.  திகைதல் - முடிவுசெய்யப்பட்டது.

இது அரண்மனைக்கு வெளியிலிருந்த சிற்றதிகாரிகள்  புனைந்த

சொல் என்பது தெளிவு.

அதி என்ற முன்னொட்டும்  அகத்துத் திகைந்தது என்ற 

சொற்றொடரின்  சுருக்கமே  ஆகும்.  அதன்பின் என்ற தொடரின்

முதலெழுத்துச் சுருக்கமாகிய அபி என்பதும் முன்னொட்ட்டாகவே

கொள்ளப்பட்டது.  எ-டு:  அபிவிருத்தி.   [  அபி - அதன்பின்  விருத்தி - இது

விரித்தி என்பதன்  திரிபு.]  

மெய்ப்பு பின்.

கள்ளப்புகவர் நுழைவித்த சில எழுத்துப்பிறழ்வுகள்

திருத்தம் பெற்றன. 1235 08122020

        


கருத்துகள் இல்லை: