செவ்வாய், 22 டிசம்பர், 2020

அண்டிரண்டு பட்சி

 நம்மிடம் உள்ள கதைகளில் சிலவாவது அகவை குறைந்த அருங்கனிக் குழந்தைகளிடம் அவர்களில் சிலர் உண்டாக்கிய கதைகளாக இருந்து, பிற்பாடு அவை கற்பனையும் கேட்டுமருள் தன்மைகளும் ஊட்டப்பெற்று வயதுமிக்கப் பெரியோரிடமும் பெருமிக்கும் *1 வண்ணமாக வழங்கத் தலைப்பட்டவையாய் இருக்கவேண்டுமென்பதைச் சிலர் ஆய்ந்து கருத்துகள் வழங்கியிருக்கலாம். ஆனால் அவை நம்மை எட்டவில்லை.

அவற்றுட் சில தெய்வ நம்பிக்கையுடன் விரவி,  ஆய்வுரி நிலையினின்றும் எழுந்து தொடாமைத்திறம் அடைந்துவிட்டனவாய் இன்றிருத்தல் கூடும். அவற்றை யாம் ஈண்டு கருதாமை அறிவுடமையாகும்.

ஆயினும் அண்டிரண்டு பட்சிகள் பற்றிய கதை அவற்றுள் இன்னும் கருதற்குரித்தாகவே உள்ளது.  உலகிற் சிலவிடத்து வானிலிருந்து வந்து இறங்குவன இப்பட்சிகள் என்றும், காட்சிக்கு மருட்சி விளைக்கும் தகையனவாய் அவை விளங்குமென்றும் கூறுவர்.  இக்கதை கேட்ட சிறுவர், தாம் வளர்ந்துவிட்ட நிலையில் அவற்றை மறந்துவிடுதல் பெருவரவாகும்.

இப்போது " அண்டிரண்டு" என்ற சொற்றொடர் காண்போம்.

இதை அண்டு இரண்டு என்று பிரிக்க.

இது வினைத்தொகை.  அண்டும் இரண்டு பட்சிகள் என்று விரிக்கலாம்.

ஒன்றை ஒன்று அண்டும் இரண்டு பறவைகள்,  உண்மையில் காதற்பறவைகள். இவற்றை உருவிற் பெரியன என்று கற்பித்து,  ஒன்றாக வந்து இறங்குவன என்று கூறினமை,  இவைபோலும் காதலாய்க் கூடித்திரியும் பறவைகளை சிறு குழந்தைகள் காணாமை வேண்டும், அப்போது ஒழுக்கம் கெடாது வாழ்வர் என்ற கருத்தினடிப்படையில் கதையின் சிறப்பியல்புகளைக் கூட்டியுள்ளனர் என்பதன் உண்மை புலப்படுகின்றது.

எனவே அண்டு இரண்டு என்பது அண்டும் இரண்டே ஆகும்.

குறிப்புகள்

*1 பெருமிக்கும் -  பிரமிக்கும், கண்டு பெரியதாய் வியக்கும்.

*2 https://sivamaalaa.blogspot.com/2017/02/bird.html பட்சிபற்றி.

*3 பகு+இ = பக்கி.  ககரம் இரட்டிப்பு.  பக்கி> பட்சி. க்ஷ = ட்ச. எனினுமாம்.


மெய்ப்பு பின்.



கருத்துகள் இல்லை: