திங்கள், 13 ஏப்ரல், 2020

சொர்க்கமும் ஆத்மாவும் ஆன்மாவும் சொரூபமும்

சொரூபம் என்ற சொல்லை இப்போது அறிந்துகொள்வோம்.

அதற்குமுன் சொருகுதல் என்பதன் பொருளைப் பார்த்துக்கொள்ளுதல் நல்லது.

முந்தானையைச் சொருகிக்கொள், மேல்சட்டையைக் கால்சட்டைக்குள் சொருகி இடைவாரைப் போடு, கண்கள் உறக்கத்தில் சொருகும் வேளையில்
வானொலியைத் திறக்காதே என்றெல்லாம் இச்சொல் வழக்கில் வருதலைக் கண்டிருக்கலாம். சொருகுதலாவது உட்செலுத்தி மாட்டிவிடுதலைக் குறிக்கிறது. முந்தானை காற்றில் பறக்கக் கூடாது என்று கூறுகையில் அது மாட்டி இறுக்கமானால் அல்லது முறையாகச் சொருகப் பட்டால் பறக்காது என்பது பொருள்.

செருகுதல் என்ற சொல்லும் உள்ளது. வயிற்றுச் செருகல் ஒருபுறமிருக்க, இது நுழைதல், நுழைத்தல், கண்சொருகுதல் என்ற பலநிலைகளை உட்படுத்தும் சொல்லாகும்.

எகர ஒகரப் போலிச்சொற்களில் செருகுதலும் சொருகுதலும் அடங்கும். இதனால்தான் பேச்சுத் தமிழில் எழும்பு என்பதை ஒழும்பு என்றும் சிலர் சொல்கின்றனர். ஒரு கூட்டத்தாருக்கு இன்னொரு கூட்டத்தார் பேச்சு வேறுபாடு வியப்பாக இருக்கலாம். ஆய்வாளருக்கு இது பெரிதன்று. மக்கள் பல்வேறு காரணங்களால் பிரிந்துவாழ்ந்த நிலையில் வேறுபாடுகளே இல்லையென்றால் அதுதான் எமக்கு வியப்பாக இருக்கும். இப்போது தொலைத்தொடர்பு மிக்கிருப்பதால் இவற்றை அறிந்து நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொள்கிறோம்.

இப்போது சொருக்கம் என்பதை ஆய்வோம். சொருகுதல் என்பதும் ஓரிடத்தைல் உள்ளதை இன்னோரிடத்தில் உள்நுழைத்தல் என்பதே. இஃது மேலே கூறினோம். எடுத்துக்காட்டுக்குக் காற்றிலாடும் முந்தானை. இதைச் சொருகுவதென்றால் எடுத்து சேலைக்கட்டின் இன்னோரிடத்தில் ஆடாமல் பிடிப்பாக நுழைத்தலே. சொருக்கமென்பது என்ன? இறந்தபின் அலையும் ஆன்மாவை / ஆத்துமாவை மேலே நாமறியாத வானில் எங்கோ சொருகி வைப்பதே ஆகும். சொருகு+ அம் = சொருக்கம். இதுபின் எழுத்துக்கூட்டலில் சொர்க்கம் என்று திருத்தமாக்குதலாக எழுதப்பெற்றது. சொல் ஆக்கப்பட்டு வழக்கில் உலவியகாலை, சொருக்க மென்பது ஒலியழகின்மையினால் சொர்க்கம் என்றாயது எனினுமது. ஒலியழகுக்காக இவ்வாறு திருந்தியமைந்தவை பல. சொருகுதலென்ற பழங்கருத்து ஒரு தடை எண்ணத்தை உருவாக்கியதால் சொர்க்கமென்று அது  மேம்பாடு கண்டது. இதனைச் சொன்னாகரிகம் எனினுமாம்.

உடலின் அகத்து, அதாவது உள்ளில், உடலினும் பெரிதான ஆன்மா அல்லது ஆத்துமா அமர்ந்திருந்தது. அகம்> அகத்து: உள்ளில். மா- பெரிது, எதனினும் பெரிதென்றார்க்கு அஃது உடலினும் பெரிது என்றலே விடை. எனவே அகத்து + மா = அகத்துமா > ஆத்துமா > ஆத்மா. இவ்வடிவங்களில் இறுதி வடிவமே சுருங்கிநின்றமையில் ஏற்புடைத்தென்று கொள்ளப்பட்டதில் வியப்பு ஒன்றுமில்லை. ஆத்துமாவோ உடலினும் மிக்க விரிவானது என்ற கருத்து எழுந்தது. என்வே சிலர் அகல்+ மா = அகன்மா > ஆன்மா என்றனர். அகன்றதும் பெரிதுமானது. இறைவனாகிய பேராத்துமா அல்லது பேராத்மாவினைப்போன்ற சிற்றாத்துமா மனித உடற்கண் இருப்பதாய் உணரப்பட்டது.

அகத்துமா என்றது ஆத்மா ஆனதுபோலும் திருந்தியதாய் எண்ணப்பட்ட வடிவமே சொருக்கமென்ற சொருகிடமாகிய சொர்க்கமும். சமயம் பற்றிய கருத்தாக்கங்கள் மேன்மை பெறவே, சொருகுதல் முதலிய கரட்டு எண்ணங்கள் விலக்கப்பட்டன. Crudeness in the formative thoughts became refined as matters of thought progressed.

ஆன்மா என்பதில் ஆன் என்பது பசுவென்னும் ஆனைக் குறிக்கும் என்று விளக்கினோரும் உளர்.

நாம் முதலின் விளக்க எடுத்துக்கொண்டது சொரூபமே. ஒன்றன் உருவம் என்பது இன்னொன்றில் சொருகப்பெறுவது அல்லது இணைந்தியல்வதுதான் சொரூபம். இஃது உண்மையில் சொருகு உருவம்தான். இங்கு உருவம் என்ற சொல் வரினும் அருவம் என்பதும் அதில் அடங்கும். சொருகு உருவம், சொருகு அருவம் என விரித்தறியத் தக்கது இது.

உருவம் > ரூவம் > ரூபம். அல்லது அருவம் > அரூபம்
சொருகு + ரூவம் > சொரூவம் > சொரூபம்.
இது பகவொட்டுச் சொல். அறிந்து மகிழ்க.

தொடர்புடைய மற்ற இடுகைகள்:

https://sivamaalaa.blogspot.com/2019/08/blog-post_20.html 

(தாமம்,  தாமான் ). அகத்து மா > ஆதமா இன்னொரு விளக்கம்.
ஆத்மா ஓர் இருபிறப்பி. 

 
தட்டச்சுப் பிறழ்வுகள் பின் கவனிக்கப்பெறும்


கருத்துகள் இல்லை: