செவ்வாய், 21 ஏப்ரல், 2020

பத்திரம் - பற்றி நிற்க வேண்டிய ஓலை.

பத்திரம் என்பது பலபொருளொரு சொல் ஆகும்.

உலகின் பொருள்கள் பல உருவின.  சில சப்பட்டை அல்லது பட்டையாக இருக்கும்.   பட்டை, பட்டயம் என்பவை பட்டை வடிவினவாய் இருத்தலால் வந்த பெயர்.

இலையும் பட்டைவடிவில்தான் உள்ளது.  பத்திரம் என்பது இலை.  பட்டைவடிவம் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

இலை என்பது கொடியை அல்லது மரக்கிளையைப் பற்றிக்கொண்டு இருக்கிறது.  அதற்கு இந்தப் பற்றைத் தருவது காம்பு என்பது அறிந்ததே.

கொடியானது இலையைத் தருகிறது.  அதனால்  இலை+ தா > இலைதா > இலதா என்றொரு சொல் அமையலாயிற்று.  இது தன் தலையெழுதிழந்து லதா ஆகிவிட்டது.  இலதா :  இலைதருவது கொடி என்பது இதன் அமைப்பு.ப்பொருள்.

இனி மரக்கிளையைப் பற்றி நிற்பதை விளக்குவோம்.

பற்று + இரு + அம் =  பத்து + இரு+ அம் =  பத்திரமாகிறது.

மரக்கிளையைப் பற்றிக்கொண்டு இருப்பதனால் பத்திரம்.

0"ற்று" என்பது த்து என்று திரிந்தது பல சொற்களில். பழைய இடுகைகள் காண்க.

அத்தியாயம் என்ற சொல்லும் இவ்வாறு   அற்று என்ற சொல் அத்து என்று மாறி அமைந்தது தான்.

சிற்றன்னை > சித்தன்னை> சித்தி என்ற திரிபும் காண்க.

அத்தியாயம் என்பது முடிந்து இன்னொரு அத்தியாயம் தொடங்கும்.  அது அற்று இயைகிறது.   அற்று + இயை + அம் = அத்தியையம் > அத்தியாயம். இதில் ஐகாரம் குறுக்குற்றது.  ஐகாரக் குறுக்கம் கவிதையில் வருவது. சொல்லாக்கத்திலும் வந்து உதவியுள்ளது. இயை > இயா. ஐகாரம் குறுகிப் பின் நீண்டுள்ளது. சுருங்கக் கூறின் இயையம் > இயாயம் ஆனது.  தமிழ்சொற்களைக் கொண்டே இதை யாத்துள்ளனர்.

ஒப்பந்தப் பத்திரத்தில் கைச்சாத்து இடுகிறவர்களும் அதைப் பற்றி நிற்கவேண்டியவர்களே. அவ்வகையிலும் இது பொருத்தமாகவே உள்ளது:  பத்திரம்

அறிக மகிழ்க.

தட்டச்சுப் பிறழ்வு பின் திருத்தம்.

கருத்துகள் இல்லை: