வெள்ளி, 3 ஏப்ரல், 2020

நோய்கள் பரவினாலும் தமிழ்ப்பற்று.

நோயணுக்கள் விஞ்சி  நுழைவரும் எவ்விடத்தும்
பாயடைவு கூட்டும்‌  மகுடமுகி ---- தூயரையும்

விட்டுவைத்தல் இல்லையே வேறிருந்து   காக்கதனை
குட்டறிந்  திந்நாள்  குலவாமல்  ----- மட்டுறுத்திப்


பட்டறிவா   ளர்வாழ்வார்  பாட்டும்  தமிழுமே
எட்டுவதால் மேன்மையே என்றென்றும்   -------ஒட்டியிங்கு

வந்தே மகிழ்கின்றார்  வாழ்க தமிழன்பர்
தந்தேம் இடுகைகள்  இங்கு.


பொருள்

நுழைவரும் எவ்விடத்தும் --  புகுவதற்கு இயலாத
எந்த இடத்திலும்.  (நுழைவு அரும்)

பாயடைவு -  பாய்ந்து சென்று அடைந்துகொள்ளுதல்.

மகுடமுகி  -  கொரனாவைரஸ்.  (கோவிட் 19)


காக்கதனை -  தன்னைக் காத்துக்கொள்க.


குட்டறிந்து  -   மறைதிறவுகளை அறிந்து

குலவாமல் -  நெருங்கிப் பழகாமல்.

பட்டறிவாளர்  -   அனுபவசாலிகள்

எட்டுவதால் -  (வருவோரைச் ) சென்று சேர்வதால்;

தந்தேம்  -  தந்தோம்

நோய்ப்பரவலால் பல இன்னல்களை அடைந்தாலும்
பாட்டுக்காகவும் தமிழுக்காகவும் அன்பர்கள் வந்தே மகிழ்கின்றனர்
என்பது கருத்து.  வாழ்க தமிழ்


கருத்துகள் இல்லை: