செவ்வாய், 26 செப்டம்பர், 2017

சென்னை சேர்ந்த ரோகிங்க்யாக்கள் பெருமகிழ்ச்சி.



சென்னைக்கு உரோகிங்கியா வரவு.

கவிதை.


சென்னைக்கு ரோகிங்கியா வந்து  சேர்ந்தார்;

சீரான மறுவாழ்வால் உந்தப் பெற்றார்;

தொன்னைக்குள் கஞ்சிகண்ட நெஞ்சம் கொஞ்ச,

தொல்லையிலா இங்குதானே தூய வாழ்வே;

இந்நாளே போலஇனி எந்நா  ளேனும்

இனிவருமா என்றுரைகள் மலர்ந்த வாய்கள்;

மண்ணுலகில் இங்குபோல்முன் மகிழ்ந்த தில்லை!

மகிழ்தலமேல் துன்பமிலை மான்கள் துள்ளும்.



அதுதானே தமிழர்தம் விருந்தே ஓம்பல்;

அதற்கீடாய் அகிலத்தில் நாடொன் றில்லை.

----------------------------

மகிழ்தலமேல் :   மகிழ்வுக்குரிய  இடமானால் அது 
மேலானது என்பது  பொருள்.  -  மகிழ் தலம்: 
வினைத்தொகை. 
மகிழ்தலமேல் என்ற தொடரில்  மகர ஒற்று (தல(ம்) )  
தொக்கது.



(குறிப்பு:  இவர்கள் இங்கேயே வைக்கப்படுவரோ - 
தெரியவில்லை.
நல்லபடி சாப்பிட்டு நன்றாக இருக்கட்டும்.) 

இலக்கணக்குறிப்பு:


"இங்குதானே" :   தமிழாசிரியர் சிலர் “இங்குத்தானே” 
என்று வல்லெழுத்து மிக்கு வரவேண்டும் என்று 
வேண்டுவர்.  அதுவே இலக்கணம் என்றாலும் 
இவ்விடத்து இங்கனம் மிகின் ஒலி கெடும்; ;   
இங்குத்தானே என்பது நாலசைச்சீராய் வந்து 
பாட்டும்  கெடும் என்று அறிக. ஆதலின் 
“இங்குதானே” என்பதே சரியாகும். மேலும் 
பாட்டில் வேண்டும்வழி தொகுக்கலாம் 
(ஓலிகளைக் குறைக்கலாம்) என்பதே  யாப்பின் முறை.  
 அந்த இலக்கணம் உரைநடைக்கு உதவும்.  
 இங்கு பொருந்தாது.
மேலும் பேச்சு வழக்கில் “ இங்குத்தானே”  
 என்று யாரும் பேசுவதில்லை. ஆகவே அவ்விலக்கணம் 
இப்போது பொருந்தவில்லை. எனினும் “இங்குத்தானே” 
என்பதுபோலும் தொடர்கள் பயன்படும் இடங்களும் 
பாட்டில் உளவென்று அறிக.  இங்குப்போல் என்று 
ஈண்டு வராமையும் அன்னதே. 

கருத்துகள் இல்லை: