சனி, 16 செப்டம்பர், 2017

பாடாண் திணை; விறலியாற்றுப்படை. சிறு விளக்கம்.

விறலியர் என்போர்  பண்டைக் காலத்து கலைச்செல்விகள்.  நாட்டியமணிகள். கலைநுணுக்கங்கள் அறிந்த வித்தகிகள். என்றாலும் அவர்களில் எல்லோரும் செல்வச் செழிப்பில் திளைக்கவில்லை. சிலருக்குச் சாப்பிடக் குழம்புடன் கூடிய சோறுகூடக் கிடைக்கவில்லை.  நாட்பொழுதில் நடித்துவிட்டு, இரவில் வீட்டுக்கு வந்து  நன்றாகத் தண்ணீர்விட்ட சோற்றை உண்டு உறங்கினர்.  ஊறுகாய் போன்றவற்றைக் கடித்துக்கொள்ள கிட்டுமானால் அது நல்ல இரவுதான். பிள்ளைகுட்டிகளும் கணவனும் வீட்டிலிருந்தால்,  நீர்ச்சோற்றை அவர்களுக்கு அளித்துவிட்டு எஞ்சியதை உண்டு உறங்குவதைத் தவிர வேறு வழியில்லை. என்னே இவ்விறலியர் வாழ்ந்த வாழ்க்கை.

நடிகைகள் நடனமணிகள் ஆனோர் சிலர் திரைப்படங்கள் கொழிக்கும் இக்காலத்திலும் நாமறியாமல் வறுமையில் வாடினோருமுண்டு. அவர்களின் கதைகள் வெளிப்படுங்காலை அவை அறிந்து வருந்துவோர் என்போலும் பலராவர். எதைத்தான் எழுதினாலும் கதறினாலும் நம்மாலும் ஏதும் முடியவில்லை.

இன்னாரைப் போய்ப்பார்! !  உன் துன்பமெல்லாம் தோற்றோடிவிடும் என்று வழிப்படுத்தலாம்.   அதுவும் ஒரு தொண்டுதான். எங்கு சென்றால் வறுமை தீரும் என்று தெரிந்திருந்தாலும், அஞ்சி அடங்கிக் கிடப்பாருமுண்டு. அவர்களுக்கும் வேண்டிய பிறருக்கும் வழியுரைப்பதே சங்ககாலத்தில் விறலியாற்றுப் படை எனப்படும்.  ஆற்றுப்படுத்தியவர் உடன் வந்தாலும் வராவிட்டாலும் சென்று தன் வறுமையைப் போக்கிக்கொள்ள முயல்வது கடன். இவற்றைக் கூறுபவை விறலியாற்றுப் படை நூல்கள். அல்லது பாடல்கள். விறலியாற்றுப்படைத்துறை பாடாண்திணையில் அடங்குபவை.
அறிந்து இன்புறுக.

கருத்துகள் இல்லை: