வியாழன், 10 ஆகஸ்ட், 2017

விருத்தத்தை வெண்பாவாய் மாற்றுவது ...எப்படி?




ஆங்கில மொழியில் ஒரு பழமொழி இருக்கின்றது. ஒன்றைப் பலவழிகளிலும் செய்யலாம் என்ற பொருளுடையது அது.  இப்போது இந்தப் பாடலைப் பாருங்கள்.  இது அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்போல் புனையப்பட்டுள்ளது.  பாடுபொருள் அருள்மிகு துர்க்கையம்மன்.


என்றும் சுமங்கலி துர்க்கையம்மன்
இணையில் துணையென நிற்பவளே
வென்று மகிழ்வுறு வாழ்வினிலே
வினைகள்


இந்த வரிகளிலிருந்து சீர்களை எடுத்துக் குறள்வெண்பா போல் அமைக்கலாம்.


சுமங்கலி துர்க்கையம்மன் என்றும் இணையில்
துணையென நிற்பவளே வென்று.


வெண்டளை மட்டுமே வந்துள்ளது.  வேற்றுத் தளை விரவாமல்
தொடுக்கப்பட்டுள்ளது.  சொற்களை மாற்றிப் போட்டால் குறள் போல
ஒலிக்கிறது.  என்ன ஆனந்தம்.  இதைக் குறளாக மாற்றுவதற்கு
இன்னொரு மாற்றம் செய்யலாமே:


இணையில் சுமங்கலி துர்க்கையம்மன் என்றும்
துணையென நிற்பவளே வென்று.


சீர்களை மாற்றிப் போட்டதில் எதுகைகள் வந்துவிட்டன.  மோனையை
வரவழைக்கச் சில மாற்றங்கள் தேவை.


இணையில் சுமங்கலி துர்க்கையம்மன் இன்றும்
துணையெனத் தோன்றுவளே வென்று.


இப்போது ஒரு குறள்போல மாறிவிட்டது. (குறள்வெண்பாதான்).  (தொல்காப்பியர் குறளைக் குறுவெண்பாட்டு என்பார். ) மேற்கண்ட விருத்தத்தை வெண்டளையில், செப்பலோசையில் அமைத்துப் பாடியதால் எளிதாக மாற்றிவிட்டோம். மிச்சமிருப்பதை நீங்கள் மாற்றி விளையாடி மகிழுங்கள்.

ஸ்ரீ சிவதுர்க்கா துணை.


கருத்துகள் இல்லை: